Saturday, November 3, 2007

இது அறிவுரை அல்ல


இது அறிவுரை அல்ல
---------------------

என் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்?
எழுதுவேன்.
இப்போதல்ல.
எப்போதாவது.
என் கதைகளில்
என் கவிதைவரிகளில்
பட்டுத் தெறிக்கும் மின்னலாய்
கட்டாயம் எழுதுவேன்.

நான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்
பார்த்து பிரமித்த காட்சிகளை
அப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்
சிறைப்பிடித்து
என் வார்த்தை ஜோடனைகளால்
அலங்கரித்து
எழுதி எழுதி
பயணக்கட்டுரைகளில்
ஒரு புதிய அத்தியாயங்களைப்
படைத்திருப்பேன்,
நானோ வந்தது அதற்காக அல்லவே.

உங்களில் புதைந்து கிடக்கும்
என் அடையாளங்களைத் தேடி..
குளிர்ப்பிரதேசத்தில்
அக்னிக்குஞ்சுகளாய்
வலம் வரும் உங்கள்
இரஸாயண வித்தையை
அப்படியே எடுத்துவந்து
இந்த அரபிக்கடலை
அதிசயிக்கவைக்கும்
பேராசையுடன் ...
பறந்துவந்தேன்.

எப்படி நடந்தது நிகழ்ச்சி?
என்னிடமே கேட்கிறீகள்!
என்ன சொல்லட்டும் ..
சிறப்பு விருந்தினரை
அழைத்து வந்து
அவர் பேசப் பேச
கைதட்டி கைதட்டி
ஒரு கைதட்டும் கூட்டத்தை
உருவாக்கி இருக்கும்
எங்கள் கூட்டங்கள் போலில்லை
என்று சொல்லட்டுமா?
ஒலிவாங்கி நோய்வந்து
அவதிப்படும்
லோக்கல் தலைகளின்
வரவேற்புரை,
தொடக்கவுரை
அவர்களே ..இவர்களே..
எதுவுமே இல்லாமல்
யதார்த்தமாக இருந்தது
என்பதைச் சொல்லட்டுமா?
எதைச் சொல்லட்டும்?

தன் ஆதித்தாயின் மொழியை
கங்காருவைப் போல
தன்னில்
தன் கவிதைகளில்
சுமந்து திரியும் ஆழியாள்

கண்ணிவெடிகளைத் தாண்டி
களமிறங்கி
கண்ணீர்த்துடைக்கும் சாந்தி

பிஞ்சுக்கரங்கள் சுமக்கும்
பீரங்கி வெடி குண்டுகள்
தற்கொலைக்காரிகள்
இத்தியாதி ..
பட்டியலோடு வந்து
ஆயுதம் தாங்கிய
அணங்குகளின்
எதிர்காலத்திற்காய்
ஓங்கிக்குரல் கொடுத்த
லண்டன் ராஜி அக்கா

பாலியல் உறவும்
மரபணு விதையும்
வாழ்வியல் கதையில்
நடத்தும் வித்தைகளை
அறிவியல் பார்வையில்
அவைக்கு கொடுத்த
ஆற்றல்மிகு நிர்மலா..

பெரியாரைத் தெரியுமா என்று
அறியாமல் கேட்டு
அகப்பட்டுக்கொண்ட தமிழச்சி

காலையில் 'மை" எடுத்து
மாலையில் வரைந்துவிட்ட தர்மினி

ஈழத்தேசத்து
எங்கள் தமிழ்மண்ணில்
பெண்ணிய உரிமைகளை
வென்றெடுக்கும் தளம் அமைக்க
இப்போதே தயாராகும் விஜி..

பெண்கள் சந்திப்பா..?
என்ன சாதித்தார்கள்?
எவர் பணத்தில்
இவர்களின் பயணம்?
இவர்கள் என்ன போராளிகளா?
இயக்கங்களைக் குறைச்சொல்லும்
இவர்களை
இயக்குவது யார்?
அடுக்கடுக்காக ஆயிரம் குற்றச்சாட்டுகள்..
அத்தனைக்கும் ஆணித்தரமான பதில்களுடன்
பெண்கள் சந்திப்பின் தொடக்கமும் வளர்ச்சியும்
விரித்துச் சொன்ன றஞ்சியின்
மவுனத்தில் மறைந்து கிடந்தது
யுத்தங்கள் இல்லாத தேசம் கேட்கும்
ஓர் அன்னையின் குரல்...!

எப்போதும்
எல்லோரிடமும்
ஏதாவது கேள்விகளுடன்
எழுந்து நின்ற புன்னகை ஜெயா

ஜெர்மனியில் தமிழ்ப்பள்ளி
ஆரவாரமில்லாமல்
காரியங்கள் செய்யும்
இரட்டையர்

வன்கொடுமை வழக்குகளைச்
சந்திக்கும் அனுபவத்தில்
சந்திப்பில்
கிடைத்த நேரத்தில்
தேவா கொடுத்தது குறைவுதான்
ஆனால்
அவரோடு தனியாக
நான் கதைத்து கதைத்து
எடுத்தது அதிகம்.

வல்லரசுகள் எல்லாம்
நல்லரசுகளா?
குறும்படமாய்
இசையுடன் கொடுத்த
இளந்தளிர் ஆரதி

நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக
கூஃபி நடனமாடிக்காட்டிய
நடனமங்கை
ஸ்ரீஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
(அட.. நம்ம ராஜி அக்கா தான்)

சில எரிமலைகள்
மோதிக்கொண்ட
காட்சிகளுக்கும் கருத்துகளுக்கும்
சாட்சியாய் நான்..

என் படைப்புகளை
விமர்சிக்கும் நேரத்தில்
கவிஞர்களுக்குத் தண்டனையாக
அவர்கள் எழுதிய கவிதைகளை
வாசிக்கும்
அற்புதமான ஆங்கிலப்படத்தை
நினைவூட்டி
பயமுறுத்திக் கொண்டேயிருந்த
நிமிடங்கள்...

இதில் எதை எழுதட்டும்?
எழுதமுடியாதவை இன்னும் எத்தனையோ
அதை எல்லாம்
எழுதும் நாள் வரும்.
உங்களைப் போலவே நானும்
காத்திருக்கிறேன்.
கண்ணில் கனவுகளுடனும்
மண்ணில் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும்
நம்பிக்கைகளுடனும்.

மும்பையிலிருந்து
உங்கள் அன்பு,
புதியமாதவி.

No comments:

Post a Comment