Saturday, November 3, 2007

26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்



26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்
உங்களுக்கான பதில்களும்.
----------------------------------------------------

பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது?
> ஓர் இனிய அனுபவம்.
மறக்க முடியாத நிகழ்வு.

நிகழ்வின் சிறப்பம்சம்?
> ஜோடனைகள் விலக்கிய கருத்துச் செறிவுள்ள
அவர்கள் பேச்சுகள்

நிகழ்வில் ரசித்தது ?
> ராஜி அக்காவின் கூஃபி நடனம்தான்!

தவிர்த்திருக்க வேண்டியது?
>என்னைச் சிறப்பிப்பதாக நினைத்து
அரைகுறையாக அவர்கள் வாசித்த என் படைப்புகள் குறித்த அறிமுக உரைகள்தான்! (விமர்சனங்கள்..!!??).
நேரமின்மையைக் கருத்தில் கொண்டு நீக்கியிருந்தால்
நிச்சயமாக வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்பதை
அவர்கள் உணரவில்லையே என்பதுதான் என் வருத்தம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு?
>விஜி & றஞ்சிக்கு என் வாழ்த்துகள். எனினும்
> இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க
முடியும்.
சரியான திட்டமிடலும் நேரம் ஒதுக்குவதும்
வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும் நிகழ்வை
இன்னும் சிறப்பாக்கும். குறிப்பாக இளந்தளிர் ஆரதி மிகவும் சிரத்தையுடன் தயாரித்து கொண்டுவந்திருந்த
அமெரிக்கா ஆவணப்படத்தை கூட்டம் களைந்த பிறகு
திரையிட்டது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.

உங்கள் கட்டுரைகள், பேச்சு எப்படி இருந்தது?
> இந்தக் கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்..!
எனக்கு கொடுக்கப்பட்ட காலவரையறை மீறாமல்
எதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டும்
சொன்ன நிறைவு எனக்கிருக்கிறது.

நிகழ்வில் உங்களை மகிழ்வித்தது/கவுரவித்தது?
> நிச்சயமாக கைதட்டல்கள் அல்ல. ஊடறு வெளியிட்டிருக்கும் " இசை பிழியப்பட்ட வீணை" மலையக பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு நூலை
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் வெளியிட
நான் முதல் நூலைப் பெற்றதுதான்.

நிகழ்வில் "இதைத் தவிர்த்திருக்கலாம்" என்று எதை
நினைக்கிறீர்கள்?

தனிப்பட்ட முற்போக்கு கருத்து கொண்டவராக தன்னைக்
காட்டிக்கொண்டிருக்கும் பாரிஸில் வாழும் ஓர் எழுத்தாளர்
தன் இளம் மனைவியை விலக்கி வைத்திருப்பதும்
அதற்கான காரணங்களும் அதிக நேரம் பேசு பொருளானதைத் தவிர்த்திருக்கலாம்.
அவர் செயலுக்குப் பெண்கள் சந்திப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அடுத்த நிகழ்விற்கு சென்றிருக்க வேண்டும்.

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
26-வது சந்திப்பு இந்நிகழ்வு. நீங்கள் இருப்பதோ
ஐ.நா.வுக்கு மிகவும் அருகில். எந்த இயக்கமும் அரசியலும்
சாராமல் உங்கள் கருத்துகளை முன்வைக்கும் பட்சத்தில்
உங்கள் தீர்மானங்களை அம்னெஸ்டிக் அமைப்பு,
ஐ.நா.சபையின் மனித வள மேம்பாட்டு அமைப்புகளுக்கு
அனுப்பவதற்கு ஆவண செய்யுங்கள். மொழிப்பிரச்சனையும் இல்லை என்பதால் உங்களால் இதை செய்ய முடியும்.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இந்த அமைப்பிலிருந்த தற்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வேறு சில பெண்களும் என்னைச்
சந்தித்தார்கள்.
ஒருவர் முன் நின்று நிகழ்வை நடத்துவதால் எந்த அமைப்பும் அந்த தனிப்பட்ட நபரின்
அமைப்பாகிவிட முடியாது. தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விலக்கி எல்லோரும் கலந்து
கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கிறேன்.
கருத்து வேற்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
பல இலட்சம் நம் உறவுகளை விதைத்த யுத்தபூமியின்
ரத்தக்கறைகளைக் கூட அமைதிப் பேச்சு வார்த்தைகளில்
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் காலத்தில்
தனிப்பட்ட நம் விருப்பு வெறுப்புகளைப் பேசித் தீர்த்துக்
கொள்ள முடியாதா?

பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நிகழ்வின்
உயிர்நாடி அவர்கள் தான்.

--------------------------------------

No comments:

Post a Comment