Saturday, November 3, 2007

வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்



வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்
--------------------------------
இன் இனிய உறவுகளே
முகவரி மட்டுமே அறிந்த
உங்கள் முகங்களை
குளிரூட்டும் அந்த இரவில்
சந்தித்த அந்த நிமிடங்கள்
மிகவும் இனிமையானவை.
கோடைமழையைப் போல
என்னைக் குளிர்வித்த
தருணங்களை
பனிப்பிரதேசத்தில்
நெருப்பு அடுப்புகளில்
குளிர்க்காயும்
உங்களிடம்
எப்படி புரியவைப்பேன்.?

உங்களைச் சந்தித்த நிமிடங்கள்
காதலின் இனிமையை, தழுவலை
இரண்டாம் நிலைக்கு
தள்ளிவிட்ட அற்புதத்தை
என்னவென்று சொல்லட்டும்?
*
வெட்ப பிரதேசத்தின்
வியர்வைகளை விடக் கொடியது
குளிரில்
கம்பளிப்பூச்சிகளுடன்
குடும்பம் நடத்துவது.
எப்போதும்
எதற்குள்ளாவது
நம்மை, நம் உடலை
போர்த்திக்கொண்டு
திரியும் அவலம்
நிரிவாணத்தைவிடக் கொடியது.
உங்கள் புன்னகைகளை மட்டுமல்ல
உங்கள் புன்னகைக்குள்
மறைந்து கிடந்த
உறைந்த பனிக்கட்டிகளையும்
அப்படியே சுமந்து
கொண்டு வந்திருக்கிறேன்
என் வியர்வைத் துளிகளில்.
*
என் தொட்டிச்செடிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
உங்கள் மழலைகளின் முகங்கள்.
அதனால்தான்
இப்போதெல்லாம்
செடிகளின் இலைகள்
பழுத்து உதிர்ந்துவிட்டால் கூட
பதறுகிறது நெஞ்சம்.
பார்த்து பார்த்து
வளர்க்கிறேன்.
நாளைப் பூக்கும்
பூங்கொத்துகள்
நான் அவர்களுக்கு
அனுப்பும் வெறும் மலர்க்கொத்துகள்
மட்டுமல்ல.
ஆல்ப்ஸ் மலையின்
பனிக்கட்டியில்
நீர்த்துப் போகாமல்
நெருப்பு மலர்களாய்
நீங்கள் வாழ்ந்ததின் சாட்சியாய்
தலைமறைத் தலைமுறையாய்
அனுப்பிக்கொண்டிருப்பேன்.
என் தொட்டிச்செடிகளின்
வேர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நமக்கான நம் மண்ணின்
அடையாளம் இருக்கும்வரை.

*
எழுத்தும்
எழுத்து சார்ந்த என் கலகக்குரலும்
என்ன சாதித்துவிட்டது?
என்னைப் புரிந்து கொள்ளாத
மனிதர்களுக்கு நடுவில்
காயங்களுடனேயே
சுமந்து கொண்டு திரிகிறேன்
எனக்கான என் எழுத்துகளை.
மயில்களே இல்லாத
மலைவாசத்தளத்தில்
எங்கிருந்து சேர்த்துவைத்திருக்கிறீர்கள்
என்னையும் என் எழுத்துகளையும்
நேசிக்கும்
உங்கள் மயிலிறகுகளை?

-----------------------------

No comments:

Post a Comment