Saturday, May 25, 2019

மாறிய அரசியல் களமும் காட்சியும்

சிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை
என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல்
களம் நகர்ந்திருக்கிறது.
மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி
அமைத்து மூன்றாவது சக்தியாக மாற
வேண்டிய சூழல் இந்தியாவில் இல்லை.
எமர்ஜென்சி காலத்தின் நெருக்கடி போல
ஒரு சூழல் ஏற்படவில்லை.
எதிரணியினர் மோதி என்ற தனி நபரை
மட்டும் எதிரியாக நினைத்து தங்கள்
பரப்புரைகளைத் தொடர்ந்தார்கள்.
மோதி வரக்கூடாது, வந்துவிடவே கூடாது
என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்களே
தவிர அதற்கான காரணத்தை, பொது ஜனம்
 நம்பும் வகையில் முன்வைக்க அவர்களால் முடியவில்லை.
1)ரபேல் ஊழல் என்று ராகுல் சொல்லும் போதெல்லாம்
 போபர்ஸ் ஊழல் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
2) பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மோதி
அரசின் தோல்வி படித்த மத்திய தர மக்களின்
புரிதலுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட தால்
அடித்தட்டு மக்களோ உழைக்கும் மக்களோ
இதெல்லாம் பெரிய பணக்காரனுக்குத்தான்
மோதி வேட்டு வைத்தார் என்று நினைத்தார்கள்.
அவர்களை அது பாதிக்கவில்லை.
3) ஜிஎஸ்டி வரி விதிப்பு.. வியாபாரிகளைப் பாதிக்கவில்லை.
காரணம் வியாபாரிகள் அதை விற்பனையில் கூட்டி
வாங்குபவர்களின் தலையில் கட்டினார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பழக்கப்பட்டு விட்ட
பொதுஜனம் பொருட்களை வாங்கும் போது
வரி விதிப்பை எல்லோருக்குமானது நமக்கும்,
என்று எடுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒரு படி
மேலே போய் இனி, வியாபாரிகள் அரசாங்கத்தை
ஏமாற்ற முடியாது, வரி கட்டியாக வேண்டும்,
அரசு பணம் பொதுமக்களின் பணம் என்ற
இன்னொரு பக்கத்தை முன்னெடுத்து சென்றார்கள்.
மேலும் அதிகச்சம்பளம் வாங்கும் கணினித்துறை
சார்ந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே
இல்லை. இன்று புதிதாக எடுக்கும் எல் ஐ சி பாலிசி பிரிமியத்தில்
ஜி எஸ் டி சேர்த்து கட்ட வேண்டும். !
4) வேலை வாய்ப்பின்மை என்ற பிரச்சனையை
சரியான வழியில் கையாள எதிரணியினர் தவறிவிட்டார்கள்.
5)படிப்புக்கேற்ற வேலை இல்லை, விவசாயிகளின் பிரச்சனை
இத்தியாதி பிரச்சனைகள் அனைத்தும் 
வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா
 என்று மோதி முன்வைத்த இந்திய முகத்தின் முன்னால் 
சுருங்கிப் போனது.
6) இட ஒதுக்கீடு.. எப்போதுமே ஒரு சாராருக்கு வாய்ப்புகளைக் '
கொடுக்கும் என்ற நிலையில் மற்றவர்கள் முணுமுணுப்பார்கள்.
மோதி அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு அதிலும் குறிப்பாக
 10% இட ஒதுக்கீடு இந்தியாவின் இந்துக்களுக்கு ஒரு வசீகரமான
சக்தியாக மாறியது. அது தேர்தலில் ஓட்டுகளாகவும் மாறி இருக்கிறது.''
7) இன்று காங்கிரசும் காங்கிரசு கூட்டணி வைத்த
 அரசியல் கட்சிகளும் எதிர்க்கும் பல திட்டங்கள்
நீட் தேர்வு உட்பட... காங்கிரசு ஆட்சி காலத்தில்
மன்மோகன் சிங்க் கோப்புகளில் இருந்தவை தான்'
 என்பதைப் பலர் அறிவார்கள்.
8) மேற் சொன்ன அனைத்து காரணங்களையும் விட
மிக முக்கியமான இன்னொரு காரணம்.. 
மோதி என்ற நபருக்குப் பின்னால்'
 எந்தக் குடும்ப அரசியலோ வாரிசு அரசியலோ இல்லை.
இந்தியாவின் அனைத்து கட்சிகளிலும் பரவி இருக்கும்'
 வாரிசு அரசியலின் நெடி மோதியிடம் இல்லை. 
அராஜகமான வாரிசு அரசியலில் நொந்துப் போயிருக்கும்
 மக்களுக்கு அப்படியான எதுவும் இல்லாத 
மோதியின் தலைமை ஒரு பெரிய 
ஆறுதலாகத்தான் இருக்கிறது.
மோதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுப்போம்
 என்பதே மக்களின் விருப்பமாக இருந்திருப்பதை
 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஆனாலும்.. இப்படியா..????
இதை யோசிக்க வேண்டிய கட்டாயம்
காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
யோசிப்பார்களா ..?

No comments:

Post a Comment