Sunday, May 12, 2019

கல்லறை கலாச்சாரம்


கல்லறை கலாச்சாரம்
கல்லறைகள் தமிழரின் கலாச்சாரத்தில் அதிகாரத்தின்
அடையாளமாக இருந்திருக்குமா ? 
எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள்.
இந்தியத் தலை நகரம் டில்லி கல்லறைகளால் 
நிரம்பி வழிகிறது.
மெரீனா கடற்கரையும் விதி விலக்கல்ல!
ஆனால் கல்லணைக் கட்டிய கரிகால்லுக்கு 
ஏன் தனக்கு ஒருஅழியாத கல்லறை கட்ட வேண்டும்
என்று தோன்றவில்லை?
பெருவுடையார் கோவிலைக் கட்டிய 
தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா?
 இருப்பதாக அடிக்கடி யு டியூப்பில் வெளிவரும்
செய்திகள் கூட எந்தளவுக்கு ஆதாரப்பூர்வமானவை
என்ற கேள்வி எழுகிறது. 
தமிழகத்தை ஆண்ட மூவேந்தருக்கும் கல்லறைகள் இல்லை
என்பது மட்டுமல்ல, அரண்மனைகளும் இல்லை.

வட இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில்
வாழ்ந்த அரசர்களின் அரண்மனைகள் இப்போதும்
 பளிங்குக்கற்களில் ஜொலிக்கின்றன.
இந்தி திரைப்படங்களின் கனவு காட்சிகளுக்கும் 
காதல் டூயுட்டுகளுக்கும் அந்த அரண்மனைகள்
 பெரிதும் பயன்படுகின்றன.
 உலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு கல்லறை தான் 
என்பது நாம் அறியாதச் செய்தி அல்ல.

கல்லறை கலாச்சாரம் என்பது எப்போது ஏற்பட்ட து?
கல்லறை கட்டுவது என்பது அந்த குறிப்பிட்ட 
ஆளுமையைக் கொண்டாடுவது என்பதும் 
அவருடைய முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்வது என்பதும் கூட
 ரொம்பவும் மேம்போக்கானது.
 ஒரு வகையில் இவை எல்லாமே 
ஆளுமைகளை அடையாள அரசியலுக்குள்
அடக்கு முடக்கிப் போடும் வித்தை.

பெருந்தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் 
கட்டுவது அரசியல் களத்தில் ஒரு கண்கட்டு வித்தை.  
நினைவு மண்டபங்கள் கட்டுகிறேன்
என்றுசொல்லி இயற்கையின் அழகிய கன்னியாகுமரியை
எவ்வளவு சீரழித்துவிட்டோம் என்பதைப் பற்றி நம்மில் பலர் உணர்ந்திருந்தாலும் வெளியில் சொல்வதில்லை. காரணம்… 
நாம் யாருடைய நினைவு மண்டபத்திற்கு எதிராகவோ
இதைச் சொல்வதாக புரிந்து கொள்ளப்பட்டு
அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து 
தப்பிக்கும் மன நிலை தான்
பொது ஜன உளவியலில் இருக்கிறது.

கல்லறைகள் எப்போதுமே அதிகாரத்தின் 
குறியீடாகவே இருக்கின்றன.
அரசன் என்பவன் இயற்கையை பாதுகாப்பவன்.
ஏரி தூர்வார்த்து குளம் வெட்டி நீர் மேலாண்மை 
காத்தவன் தான் தலைவன்.
விவசாயத்தை தன் வாழ்வியலாக கொண்ட
 சமூகத்தில் கல்லறை இல்லை.
வணிகத்தை முன்னிறுத்தும் சமூகம் தான்
மாட மாளிகைகள்,அரண்மனைகள், செத்தப்பின் கல்லறைகள் 
என்று அதிகாரத்தை எப்போதும் 
தன் கூடவே வைத்திருக்கிறது.

2 comments:

  1. //ஏரி தூர்வார்த்து குளம் வெட்டி நீர் மேலாண்மை
    காத்தவன் தான் தலைவன்.
    விவசாயத்தை தன் வாழ்வியலாக கொண்ட
    சமூகத்தில் கல்லறை இல்லை.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இலங்கையில் கூட முற்காலத்தில் சமுத்திரம் போன்ற மிகப்பெரிய குளங்களையும் வாவிகளையும் கட்டிய எந்த அரசனுக்கும் கல்லறைகள் இல்லை. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இவைகள் அனைத்தும் இன்றும் விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்றன.

    ReplyDelete
  2. வருகைக்கும் கூடுதலான தகவலுடன் கூடிய கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete