Sunday, June 17, 2018

காலாவில் பயணித்த அப்பாக்கள்...

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள்
"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு
விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என்
அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறது!
காலாவை திரையில் பார்த்தேன். (Norwalk AMC IMAX )
நேற்றிரவு தூக்கம் வரவில்லை. காலாவின் வசனங்களில் மட்டுமல்ல
போராட்டங்களிலும் ரத்தங்களிலும் என் அப்பாக்கள் …
அவர்களின் முகம் என்னருகில் வந்தது. அவர்களின் சில பக்கங்களை
நானே புரட்டாமல் இருக்கவே நினைக்கிறேன். அந்தப் பக்கங்களை
காலா என்னைப் புரட்ட வைத்தது. திரையரங்கிலிருந்து வெளியில்
வரும்போது தலை வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கண்பதி உற்சவம்
கடைசி நாள் .. கையில் ஈரக்குலையை ஏந்திக்கொண்டு
 (ஈரக்குலை என் அம்மாவின் மொழி) இருக்கும் பெண்கள். 
யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது!
பெண்கள் அச்சத்துடன் விழித்திருப்பார்கள்.
விடிவதற்குள் அந்தச் செய்தியும் வந்து தொலைக்கும்.
இன்னார் கொலை செய்யப்பட்டார் என்று.
கலவரங்கள் கலவரங்கள் கலவரங்கள்..
எங்கள் வீட்டில் பெரிய சிலம்பு கம்பம் 
நாங்கள் பெரியவர்களாக வளரும் வரை கபோடின் 
மூலையில் சாய்ந்திருக்கும்.. அது எதற்காக என்று
பல  நாட்கள் நான் அறிந்ததில்லை.
ஒரு நாள் அந்தக் கம்பை எடுத்துக் கொண்டு
கை பனியனுடன் ஓடிய என் அப்பா .. 
அதுவரை நான் பார்த்திராத அப்பா. 
அப்பாவுக்கு சிலம்பம் தெரியும் என்பதும்
வர்ண அடிகள் தெரியும் என்பதும் 
அவருக்கு சண்டியர் என்று ஒரு பெயருண்டு என்பதும் 
அதன் பின் அறிந்தக் கதை.
பிரிட்டிஷ்காரன் வங்கியில் வேலை. 
அதற்குரிய மிடுக்கான உடை. 7 மொழிகளைச் சரளமாகப் பேசும் அப்பா... 
இப்படியாகவே இருந்த அப்பாவை அவர்கள் தெருவில் இறங்கிச்
சண்டைப் போட அனுமதித்ததில்லை. 
நீங்க எதுக்கு அண்ணே.. இங்கேல்லாம்? நாங்க பார்த்துப்போம்..
என்பார்கள். கருக்கலில் அப்பாவை வந்து சந்திப்பார்கள்.
இதெல்லாம் அப்பாவின் அரசியலுக்கும் அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
அப்பாவின் தம்பி பி.எஸ்.கோவிந்தசாமி சேட் .. 
என் சித்தப்பா தான் அன்றைய கள நாயகன்.
நூறு பேரு கையில் கம்பு அரிவாளுடன் வந்தாலும் 
அதே புன்னகையில் .. 
ஒரு கையில் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு 
“ஏலே.. எங்கல வந்து காட்டறீங்க!”
என்று நிற்பார் பாருங்கள்.. அவர் தான் அன்றைக்கு குட்டிவாடி
 பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதவன்.. 
எங்களுக்கு சொந்த ஊர் பத்தமடை.
அப்பா சிவப்பு சித்தாந்தம் படித்தவர் . கறுப்புச்சட்டைப் போடாத பெரியாரிஷ்ட்.
கறுப்பு சிவப்புக் கொடியை (திமுக )மும்பையில் ஏற்றியவர்.
சித்தப்பா முழுக்க முழுக்க நீல வண்ணத்தில் .. குடியரசுக் கட்சி தலைவர்.
தாராவி கணேசர்கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். ..
எஸ்.கே.இராமசாமி.. (பத்தமடை இவர் தாய்மாமா ஊர். இவர் தம்பிகள் தங்கை
படித்ததெல்லாம் பத்தமடை ஸ்கூலில் தான்)ர்இவரும் என் உறவினர். இன்னொரு சித்தப்பா முறை.
இவர் தாதா தான். இவருடைய முதல் மனைவி இறந்தவுடன் அன்றைக்கு இவர்
குரூப்பில் இருந்த 500 பேருக்கும் மேலான அடியாட்கள் மொட்டைப் போட்டுக்கொண்டார்கள்.
என் சித்தியின் கணவரும் அதில் ஒருவர். “எங்களுக்கெல்லாம் அன்னமிட்ட அன்னலட்சுமி
போயிட்டாளே “ என்று அவர் தண்ணி அடிச்சிட்டு வந்து எங்க அம்மாவிடம் அழுதது
கதைகள்.. .. அப்படியே பால்தாக்கரேயின் முகம் .. நிழலாக கூடவே பயணிக்கிறது.
உற்பத்தி சார்ந்த சமூகம் உருவாகி வந்தக் காலக்கட்டத்தில் சொத்துக்களையும்
அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் ஏன் தான் சம்பாதித்த எதையுமே
தன் வாரிசுகளுக்கு என்று ஒதுக்கத்தெரியாத என் அப்பாக்கள்
எல்லாவற்றையும் தன்னுடனும் தன்னுடன் வாழ்ந்த சமூகத்திற்கும் என்று
வாழ்ந்த என் அப்பாக்கள்..
என் அப்பாக்கள் நல்லவர்கள்.வல்லவர்கள். 
அவர்கள் போராட்டங்களை கலவரங்களை
அடிதடிகளை நான் என் படிப்பின் மோஸ்தரில் 
புரிந்து கொள்ள மறுத்தேன்.
அவர்களை விட்டு நான் விலகி விலகிப் போனேன்.
காலம் செல்ல செல்ல சமூகம் எனக்கு அவர்களின் உசரங்களை
உணர்த்திக் கொண்டே இருக்கிறது..

இன்று நான் தற்போது இருக்கும் அமெரிக்க மண்ணில் “அப்பாக்களின் நாள்”
(17th June third Sunday).. 
தலையைத் தூக்கி அப்பாக்களைப் பார்க்கிறேன்.
How to be Black .. book ..
Baratunde Thurston of Jack & Jill Politics and the Onion 
என் மடியில் தன் கனமான பக்கங்களுடன்.
கண்களில் கண்ணீருடன்.. மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து
என் மார்புடன் அணைத்துக் கொள்கிறேன்.
காலா … பா. இரஞ்சித் தின் படம்.
இரஞ்சித்திற்கும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும்
என் அன்பு தம்பி மகிழ் நன், தோழமை ஆதவன் தீட்சண்யா..
மற்றும் திரைக்களத்தில் களமாடிய என் பிள்ளைகள்..
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

9 comments:

  1. I just watched as a movie. I felt the movie was pretty racy and entertaining. I dont have any idea about Dharavi Tamils life. Unlike me, lots of emotions come out of you as you knew lot about Dharavi people life. I did not feel anything like that.

    I recommended this to few. Some watched and told me that they DID NOT like it. People those who are somewhat religious and believe in Ramayana as a "true story" and "Rama as God" and "Ravana as Demon", could not enjoy this movie. It has been pretty consistent that "believers of Ramayana" did not like this movie. They could not accept Ravan as a hero and Rama as villain.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை.. எப்போதுமே ராமனை மட்டுமே ஹீரோவாக பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக.. மணிரத்னம் "இராவணன்" எடுத்தது மாதிரி பா.ரஞ்சித்தும் முயற்சி செய்திருக்கலாம்!!.. மிக்க நன்றி.

      Delete
  2. சகோதரி,

    நான் தற்போதைய ரஜினியின் படங்களை ரசிப்பவன் அல்ல. காலாவில் ஒன்று புரியவில்லை. ஒவ்வொரு குடும்பமும் அடுத்த தலைமுறை என்று வரும் பொது முன்னேற வேண்டும் என்று திட்டமிடுவார்கள். நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில் இருந்து மேன்மை அடைய மாட்டோம் என்று போராடுவது எதற்கு என்றே எனக்கு புரியவில்லை. இயக்குனர் ரஞ்சித் அதைத்தான் விரும்புகிறாரா? அவர் காலாவை தலித் ஆக இல்லை வேறு யாராக காட்டினாலும் சரி , இரண்டும் தப்பு தான் என்பது என் கருத்து. ...

    அன்புடன்,
    சங்கர நாராயணன். தி

    ReplyDelete
    Replies
    1. வாழ்விடம் சரியில்லை என்றால் அதை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுரை சொல்கிறீர்கள். நன்றி. ஆனால் ஏன் வெளியேற வேண்டும்? வாழ்விடத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிபப்டைத் தேவைகளை கவனிக்க வேண்டியது ஒர் அரசாங்கத்தின் கடமை என்கிறோம் நாங்கள். அதிலிருக்கும் மக்களை வெளியேற்றி கோல்ப் கிரவுண்ட் அமைத்து அவர்கள் விளையாடுவார்கள். அந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் மீண்டும் சாலையோரத்திற்கு வரவேண்டும். இதையும் முன்னேற்றம் என்ற பெயரில் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை. நானும் உங்களைப் போல எண்ணி அங்கிருந்து வந்தவள் தான். இப்போது அதற்காக வருத்தப்படத்தான் செய்கிறேன். மிக்க நன்றி.

      Delete
  3. ****நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில் இருந்து மேன்மை அடைய மாட்டோம் என்று போராடுவது எதற்கு என்றே எனக்கு புரியவில்லை.***

    அப்படி அந்தப் படத்தில் போராடினாங்களா என்ன? பள்ளீக்கூடம் கட்டக்கூடாது, டாய்லெட் வசதி செய்து தரக்கூடாதுனு போராடினார்களா?

    கால்ஃப் கோர்ட் தேவையில்லைனு போராடிய படம்தான் நான் பார்த்த காலா. நீஙக் எந்தக் காலா பார்த்தீர்கள்? இல்லை திருட்டு வி சி டி எதுவும் பார்த்தீங்களா?

    ReplyDelete
  4. ***நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில்***

    உங்க வாழ்க்கைத்தரம், ட்ராஃபிக், பொல்லுஷன் எல்லாம் அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழ்பவர்கலூக்கு நீங்க தாராவியைப் பார்ப்பதுபோல்தான் அவர்களூக்கு உம் வாழ்க்கைத் தரம் தெரியும். அதனால்? உயர்தர வாழ்க்கை இல்லைனு குடும்பத்தோட தொங்கீருவீர்களா? இல்லை தாராவி வாழ்க்கையோடு ஒப்பிட்டு பெருமையில் வாழ்வீரா? இதில் எது சரியான ஒப்பீடு??

    விபரம் சொல்லவும்?

    ReplyDelete
    Replies
    1. லுக் மிஸ்டர் வருண்..உயர்தர வாழ்க்கை இல்லைனு குடும்பத்தோட தொங்குவீர்களா என்ற மிகவும் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டதில் பயந்துப்போயி தொங்கிடுவோமோனு பயம் வந்திடுச்சி.. அப்புறம் அது என்ன அமெரிககா, பிரான்ஸ், இங்கிலாந்துனு.. பிரான்சுக்கு இரண்டு தடவை போயிட்டேன். இப்போ அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் தான் . இங்கிலாந்துக்கு போகலை. போயிட்டு வந்துட்டு தொங்கறதா இல்லையானு முடிவு பண்ணிட்டு தொங்கறதுக்கு முன் கட்டாயம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்!! நன்றி. குட் நைட்.

      Delete
    2. நான் நீங்க சொன்னதை மேற்கோள் காட்டவில்லை. நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க? உங்க சகோதரர் பதில் சொல்லட்டுமே?

      Delete
  5. அய்யோ..அப்படி வாங்க வழிக்கு.நான் கட்டாயம் டென்ஷனாகனும்னு நீங்க எதிர்பார்த்து ரொம்ப மெனக்கெடறிங்க. சரி..உங்க சந்தோஷத்திற்கு வச்சுப்போம். நான் இப்போ ரொம்ப டென்ஷனில் .. இட்லி மாவு புளிக்காம எப்படி இட்லி செய்யறது இந்த ஊரிலனு டென்ஷனிலிருக்கேன். அப்புறம் என் சகோதரர்கள் எல்லோருக்கும் சொந்த முகவரி இருக்கிறது. அவர்கள் பதில் சொல்லனும்னா அவுங்ககிட்ட தான் கேட்கனும். அப்புறம் அவுங்கெல்லாம் எப்படி ரியாக்ட் செய்வாங்கனு எனக்குத் தெரியாது.

    ReplyDelete