Tuesday, May 15, 2012

நான்முகன்



தோற்றுப்போவோமோ
அச்சப்படுகிறாய்
உன்னைக் கண்டு மட்டுமல்ல
உன் இரவுமுனைகளில்
அடங்க மறுக்கும்
உன் பேராயுதங்கள் கண்டு. 
தெருப்போக்கனைப் போல
என் வாசல் 
எட்டிப்பார்த்துவிட்டு
புதிய உலகம் படைத்துவிட்ட
பிரம்மனாய்
ஒளிவட்டத்துடன்
உன் படைப்பு சூத்திரத்தைப்
புதுப்பித்துக் கொண்டதாய்
நட்சத்திரங்களுக்கு நடுவில்
உலா வருகிறாய்.

பிரம்மசூத்திரத்தை
யுகம் யுகமாய்
சுமப்பவன்
நீ யாக இருக்கலாம்
ஆனால் அதை
யுகம் யுகமாய்
பிரசவித்துக் கொண்டிருக்கும்
கருவறையாய் 
கதவுகளில்லாத என் வாசல்
யாரும் காணாத
உன் நான்காவது
முகம் பார்க்கும்
தருணத்திற்காக
எப்போதும்
திறந்தே இருக்கிறது.

கீரிடங்கள் அணியாத
நான்காவது தலை
நீயே பார்க்காத'
உன் நிஜமுகம்
ஆடைகள் அவசியமற்ற
மின்னலாய்
என் பூமியில்
விழட்டும்.
புரிந்து கொள்வாய்
இன்னும்
நீ 
அறியாத
படைப்பின் ரகசியத்தை.

-------------------------------------------------------------------

2 comments:

  1. பிரம்மனுக்கும் தெரியாத ரகசியமா! அருமை.

    ReplyDelete
  2. ungal kavithaiyil uruvakam
    ithil uccham..

    ReplyDelete