Monday, January 23, 2012

ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்





ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும்
தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது ..
இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி
அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன்.
அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு
ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது?
இக்கேள்வி மிகவும் சரியானதாகவே மேம்போக்காக இப்பிரச்சனையை
அணுகுபவர்களுக்கு தோன்றலாம். இம்மாதிரியான பார்வை சமூகப் பிரச்சனைகளை
எப்போதும் வர்க்கப்பிரச்சனையாக மட்டுமே அணுகும் ஒரு வட்டத்தை
உருவாக்கி இருக்கிறது. இந்தியச் சமூகச் சூழல் என்றைக்குமே இந்த
வட்டத்துக்குள் சிக்குவதில்லை என்பது தான் சாதியத்தின் அடிப்படை
வெற்றியாக இருப்பதை ஏனோ அறிவு ஜீவிகளும் எடுத்துச் சொல்ல
முன்வருவதில்லை. வர்க்கம் தாண்டிய சமூகத்தின் அடித்தளம் வரை
கெட்டிப்பட்டிருக்கும் சாதியத்தின் ஆணிவேரை , பிரச்சனைகளின்
மையமாக காட்டுவதைக் கூட அறிவுஜீவிகள் வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ
என்ற ஐயம் ஏற்படுகிறது.

சமூகப்பிரச்சனைகளின் மையமாக எப்போதும் பிசகாத நூலிழையாக இருக்கும்
சாதிப்படிநிலையை எடுத்துச் சொன்னால் கூட முகம் சுளிப்பதும்
'இவர்களுக்கு வேறு வேலையில்லை' என்று ஒதுக்கி வைப்பதும்
இன்றும் தோழமை வட்டங்களில் கூடத் தொடரத்தான் செய்கிறது.


இந்தியாவில் டில்லிக்கு அருகில் உ.பி மாநில எல்லையில் நொய்டாவில் இரண்டாயிரத்து ஐநூறு ௦௦ ஏக்கர்
பரப்பில்இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கார் பந்தய சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை அனுமதிக்கும் அரசு நடுத்தர வர்க்க , கிராமப்புற மக்களின் ஜல்லிக்கட்டை மட்டும் விமர்சிப்பதும்
கோர்ட் வாசல் வரை இழுத்திருப்பதும் சரியா ? என்ற
கேள்வியின் ஊடாக நாம் எதை எதிர்பார்க்கிறோம்?
பார்முலா ஒன கார் பந்தயங்கள் போல ஜல்லிக்கட்டும் ஆக வேண்டும் என்றா?
அப்படி ஆக வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமும். அதாவது ஜல்லிக்கட்டும் இனிமேல்
மல்லையா ஜல்லிக்கட்டு. ஜெபி குருப் ஜல்லிக்கட்டு, டாட்டா ஜல்லிக்கட்டு என்று முதலாளிதுவமாகி
அதன் பின் உலக மயமாக வேண்டும் என்பதே அரசின் நேக்கமும் ஆகும்.

ஜல்லிக்கட்டு ஒரு மிருகவதை என்று பேசும் கருணா மூர்த்திகளும் சரி,
ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்று பேசும் நாகரிக தலைமுறையும் சரி,
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக எப்போதும் கள்ளமவுனமே சாதித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நாகரிகமாகவும் மனிதாபிமானம் மிக்கதாகவும் மாற்ற நினைப்பவர்கள்
ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு,
தமிழர் பண்பாடு என்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் வீர வசனங்கள் இன்னொரு பக்கம்.

உரக்கச் சொல்லும் பொய்யும் உண்மையாகிவிடும் என்ற யதார்த்தநிலையை
நன்குத் தெரிந்தக் கொண்டவர்களே மேற்சொன்ன தமிழ் பண்பாட்டுக் காவலர்கள்!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் வீர விளையாட்டு
என்றும் பலரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பரவியதே நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தான்
என்பதே வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் ”மஞ்சு விரட்டு” அல்லது “”எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.


நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “”மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்( புதிய ஜனநாயகம் 2008)

இன்றைக்கு தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலின் போது எங்கள் தென்மாவட்டங்களில் (நெல்லை)
இப்போதும் மஞ்சு விரட்டு நிகழ்வு மட்டுமே நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கின்ற தமிழகப் பகுதிகளில்
அந்த விளையாட்டு ஆதிக்கச் சாதியின் அடையாளமாகவும் நிலவுடமை சமூகத்தின் முகமாகவுமே
இருப்பதையும் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தங்கள் பாரம்பரியமாக
கொண்டாடுபவர்களும் அந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்துடனேயே இருப்பதையும் அடையாளம்
காண முடிகிறது.

இந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்தை வளர்த்தெடுத்ததில் நம் தமிழ் திரைப்படங்களுக்கு
மிக முக்கியமானப் பங்குண்டு. ஜல்லிக்கட்டு காளை எப்போதுமே அந்த ஊர்ப் பண்ணையாரின்
காளையாகவே இருக்கும்.

பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் என்று கொண்டாடுவதையும் நாம் கேள்விக்குட்படுத்த
வேண்டி இருக்கிறது. எது தமிழனின் பாரம்பரியம்? எது தமிழனின் பண்பாடு?
ஊர் என்றும் சேரி என்றும் தமிழன் பிரிந்திருப்பது தமிழனின் பாரம்பரியமா?
தமிழனின் பண்பாடா? என்று கேட்டால் அந்தக் கேள்வி கூட தமிழ்ப் பண்பாட்டுக்
காவலர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. இக்கேள்விகளைத் தொடுப்பவர்கள்,
தமிழினத் துரோகிகள், தமிழ்த் தேசிய விரோதிகள் என்று பார்க்கும் பார்வையும் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது
கவலைத் தருவதாகவே இருக்கிறது.

உங்கள் மொழி , சாதிக் காப்பாற்றும் மொழி
உங்கள் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
உங்கள் அரசு சாதிக் காப்பாற்றும் அரசு
என்று தந்தை பெரியார் தமிழ் மொழியையும் அதன் பெருமைமிக்க பாரம்பரியத்தையும்
கண்டு மருண்டு விடாமல் வெகுண்டெழுந்த அறச்சீற்றம் அணையாமல் அக்னிக்குஞ்சாக
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது ஜல்லிக்கட்டு காளைகளின் சீவிவிடப்பட்டிருக்கும்
கூரிய கொம்புகளுக்குப் பயப்படாமல்.

நன்றி: திண்ணை டாட் காம்

1 comment:

  1. கட்டுரை சிறப்பாய் இருந்தது.காளை வளர்த்து ஜல்லிக்கட்டுக்கு அனுப்பும் பழைய ஜமீந்தார் மனோபாவம் இன்னும் ஒட்டிக்கொண்டு வீணாய் போன விவசாய பெருங்குடி மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.காளைக்கு செலவு...காளையை பத்திரமாய் கொண்டுபோய் திரும்ப அழைத்துவர ஆட்கள்..போக்குவரத்து செலவு.....மாடு பிடிபடாமல் இருக்க அடிதடி ஏற்பாடுகள்....ஜாதிய மேலான்மைக்காய் சண்டைகள் என்று கதைகதையாய் தொடரும் ஏராளமான விஷயங்கள்......
    இதையெல்லாம் பேசினால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் ...

    ReplyDelete