Friday, July 29, 2016

தலவிருட்சம்




அந்த விதை முளைத்துவிட்டது
ஆகாயத்தைப் பார்த்து கொழுந்து இலைகளை
அசைத்து அசைத்து நடனமாடியது.
அதைப் பார்த்த மரங்களும் செடிகளும்
இனம்புரியாத ஏக்கத்தில்.
இன்னும் சில செடிகளுக்கு
அதன் உச்சத்தைக் கண்டு பொறாமை.

எல்லோரும் கூடினார்கள்
கோபுரத்தில் செடி முளைப்பது
கோபுரத்திற்கு நல்லதல்ல என்றார்கள்
வேர்கள் கருவறையை ஆக்கிரமிப்பதற்குள்
அகற்றிவிடுவதுதான்
தர்மம் என்றார்கள்
கோபுரச்செடிக்கும் இவர்களின் படையெடுப்பு
ஆத்திரமூட்டியது.
மூடப்பட்ட கருவறையின் கதவுகளை
தட்டி தட்டி 
சோர்ந்துப்போன நள்ளிரவில்
மின்னலுடன் இடி இடித்தது.
பெருமழையில் சரிந்தது கோபுரக்கலசம்.

அவர்கள் மீண்டும் கூடினார்கள்.
குலத்திற்கு கேடுவரும் என்றார் நிமித்திகர்.
தெய்வக்குற்றம் என்றார் பூசாரி.
கோவில் வாசலின் தலவிருட்சங்கள்
தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டன.
செடி மரமாகி கோவிலாகி தெய்வமாகி..
வரமாகி ... சிவ சிவா..

No comments:

Post a Comment