Sunday, July 19, 2015

காமராஜரைப் பற்றி யார் பேசலாம்?



நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தீவிர காங்கிரஸ் காரராக
இருந்த நேரம்.
அவருடைய பிறந்த நாளில் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்கள்.
ஜெயகாந்தன் பேசியதாவது:
"இது காங்கிரஸ்காரர்கள் நடத்தும் சிவாஜிகணேசன் விழாக்கூட்டம். சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரரா?
 எப்படி இவர்கள் விழா நடத்தலாம்?
நல்ல காங்கிரஸ்காரன் குடிக்கமாட்டான்
இவர் பெர்மிட் வைத்து குடிக்கிறார்.
நல்ல காங்கிரஸ்காரன் கறுப்புபணம் வாங்க மாட்டான்.
 இவர் ஒரு படத்துக்கு எவ்வளவு கறுப்பு பணம்
வாங்குகிறார் தெரியுமா?"
சிவாஜி ரசிகர்கள் கலாட்டா செய்ய விழா ரகளையுடன் முடிந்தது.
(ஆதாரம் காவ்யா சண்முகசுந்தரம் - காவ்யா இதழ் ஜூலை செப் 2015)
இதே ஜெயகாந்தன் பிற்காலத்தில்
முரசோலி அறக்கட்டளை விருது பெற்று
சூரியநமஸ்காரம் செய்தது தனிக்கதை!!
இப்படி ஜெயகாந்தன் பாணியில் காங்கிரசுக்காரர்களை
 விமர்சிக்க ஆரம்பித்தால் யார் தேறுவார்கள் ?
எனக்கு இடதுசாரிகளில் ஒரிருவர் முகம் மட்டும் தெரிகிறது..
காமராஜரின் 113வது பிறந்தநாள் கூட்டம் அமோகமாக
 தமிழகம் எங்கும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தலைவர்களும்
தலைவர்களின் வாரிசுகளும் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி
 போற்றிப் புகழ்ந்து பிறந்தநாள் விழாவில் சிறப்புரை ஆற்றுவது கண்டு மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சின்ன பரீட்சை...
காமராஜரைப் பற்றிப் பேச இவர்களில் யாருக்குத் தகுதி இருக்கிறது
 என்பதை அறிய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல சொல்லுங்கள்:
இவர்கள் / இவர்கள் குடும்பம் அரசியலில் நுழைவதற்கு முன் இருந்த சொத்தின் மதிப்பு என்ன?
இன்று அவர்களுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு என்ன?
எப்படி எந்த தொழில் செய்து எவ்வளவு வருமான வரி கட்டி இவ்வளவு
பெரிய கார்பரேட் சாம்ராஜ்யத்தை /
சொத்தை உருவாக்க முடிந்தது?..
இந்தக் கேள்விக்கு நேர்மையாகவும் சரியாகவும்
 பதில் சொல்லும் அருகதை
கொண்ட ஒருவரைக் கொண்டு அடுத்த 114வது
 காமராஜரின் பிறந்தநாளைக்
கொண்டாடுங்கள்..

No comments:

Post a Comment