Sunday, November 30, 2014

நெல்லிக்கனி

என் நண்பனே...
எங்கே நீ ஒளிந்துகொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.
சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம் - என்றாய்.
பூமி உருண்டை என்பது உண்மைதான்.
ஆனால்
நம் சந்திப்பு மட்டும் எப்படி பொய்யானது?.

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்
பெரியவர்கள் சிறியவர்கள்
எல்லோருடனும் பேசி சிரித்து
உண்டு உறங்கி
ஏறி இறங்கி
பயணம் செய்து
களைத்துப்போய் கண்மூடிக்கிடக்கிறேன்.
கனவில் என்னுடன் நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.
.
"ராக்கி"கட்டி
நம் நட்பை சகோதரப்பாசமாக
பரிணாமம் செய்து தொடர நினைத்தேன்.
நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.
நட்பு மேலானது என்பதால் தான்
எட்டாத உயரத்தில் நீ.
உன்னை எட்டிவிடும் கனவுகளில் நான்.
....
நான் அவ்வை
நீ என் அதியமான் என்றேன்.
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.
தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்...
("ஹேராம்" கவிதை தொகுப்பில் நெல்லிக்கனி என்ற நீண்ட கவிதையின் சில வரிகள்....)

1 comment: