Saturday, August 7, 2010

நான் நீயானேன்


உண்ணாமல் உறங்காமல்
விரதங்கள் காத்தேன்.
கேட்டது கிடைக்க
உன்னைத் தேடி
உன் பாதங்கள் தேடி
ஓடிவந்தேன்.

கருவறையின் புழுக்கத்தில்
பக்தர்களின் பக்தி வியர்வையில்
என் குரல் அமுங்கிவிட்டது.
'தரிசனம்' முடிந்ததென்று
தள்ளிவிட்டார்கள்!

என் காலடியில்
'தாயே கருணைக்காட்டு"
உன் பிச்சையின் குரல்..
ஆத்மா... பரமாத்மா..
நான் நீயானேன்
நீ -
மீண்டும் சிலையானாய்.

No comments:

Post a Comment