Wednesday, August 25, 2021

பாலியல் வறட்சியில் ? தமிழ் சமூகம் !!

 பாலியல் வறட்சியில்.. தமிழ்ச்சமூகம் !!

எல்லோரும் 'சுள்ளிக்காடு" ஆக முடியுமா என்ன?
கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,
தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன்
சபலம் குறித்து எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும்
ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும்
சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார்.
அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள்.
“தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால்
ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை”
என்று சீறுகிறாள்.
பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு
என்று அடையாளம் காண்கிறாள்.
தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி
இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.
அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன்
என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதைச்
சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள்.
பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட
சுள்ளிக்காடு செல்கிறார். ஓர் ஆணாக தன் சபலத்தை
வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. .
இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்?
சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும்,
அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும்
சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம்.
மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும்
அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய
நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது.

No means NO.
வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்
சொன்னால் ஆண் பெண் உறவில்
அதிகாரமிக்க ஆணுலகம் அதைக் கேட்டாக வேண்டும்.
தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.
பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை
இதுவரை ஆண் சந்திக்காத பெண்ணுலகம்,
பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.
ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.
ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்
வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.
அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.
அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக
ஆக்கிக்கொள்ள முடியாது.
நம் சட்டங்களும் நீதிமன்றங்களும்
சாட்சிக்கூண்டுகளில் சிறைப்பட்டிருக்கின்றன. .
எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்
நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான்
எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு
மட்டுமே இருக்கும் மனசாட்சி செய்துவிட முடியும்
என்று நம்புகிறோம்.
நடந்தது என்ன?
சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி
மட்டுமே அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள்
செயல்களுக்கான தண்டனைகளையும் நியாயங்களையும்
மனசாட்சியின் முன்னால் வைக்கட்டும்..
நாமும் தான்.
ஆணுலக அதிகாரமையத்தின் பாலியல் சுரண்டல்களை
வன்மையாக எதிர்க்கிறோம்.
பாலியல் அத்துமீறல்கள் ..????
இது தனிமனிதர் விருப்பம் சார்ந்த து.
மனித சமூகத்தில் உறவுகள் நிறுவனமயமான
காலத்திலிருந்தே விதிக்கப்பட்டிருக்கும்
பாலியல் விதிகளை மீறுகின்ற செயல்பாடுகள்
தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.
இங்கே எந்த ஒரு தலைமைப்பீடமும்
இதில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றெல்லாம்
யாரும் கனவு காண வேண்டாம்.
எந்த ஒரு கட்சி அரசியலும் இதை எல்லாம்
பேசு பொருளாக , விவாதமாக மாற்றியதில்லை
என்பதில் இருக்கிறது எல்லோரின் யோக்கியதையும்!
இங்கே உள்பெட்டிகள் வெளிச்சமானால்
அவ்வளவுதான்! !!!!
ஆண் பெண் பாலியல் உறவில்
சபலங்கள், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் சுரண்டல்கள் ...
மூன்றும் ஒன்றல்ல.
இதில் பாலியல் சுரண்டல்களை
காதல் என்ற பெயராலும்
அதிகாரம் கொண்ட ஆண்மைய சமூகம்
காதலித்தப்பெண்ணை மனப்பிறழ்வுக்குள்ளாக்கி
மீண்டும் இன்னொரு பெண்ணிடம் சென்றுவிடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள்
வெளியில் சொல்ல முடியாமல் அனுபவிக்கும்
மன அவஸ்தைகள் .. இன்று அதிகமாகி இருக்கின்றன.
ஆள்பலம் பணபலம் அதிகாரபலமிக்க ஆண்களின்
பாலியல் சுரண்டல்கள் இன்று அதிகரித்திருக்கின்றன.!
இவை பிரேக் நியுஸ் அல்லது யுடூயுப் வைரலாகி
அதன் பின் அதுபோல இன்னொரு வைரலுக்கு
சமூகம் தயாராகிவிடுகிறது.

ஆண் பெண் உறவில் சமூகம்
இன்னொரு தளத்திற்குப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆண் அச்சத்துடனும்
பெண் அடங்காத ஆவேசத்துடனும்
இருக்கிறார்கள்.
மொத்தத்தில் நம் சமூகம் பாலியல் வறட்சியில்
சிக்கித்தவிக்கிறதோ..??!!

Wednesday, August 11, 2021

பாரதி மஹாகவியா..??

 


பாரதி மஹாகவியா இல்லையா

என்று ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.


இதற்கு நடுவில் பாரதி ஏன்
செங்கோட்டை ஆவுடையக்காவைப் பற்றி
எங்கும் குறிப்பிடவில்லை
என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்பவர்கள்
யாரை மஹாகவியாக கொண்டாடுகிறார்கள் என்பதையும்
அதற்கான அளவுகோலாக எதை வைத்திருக்கிறார்கள்
என்பதையும் தெளிவுப்படுத்திவிட்டால்
அவர்கள் ஏன் பாரதியை மஹாகவியாக
ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது
தெள்ளத்தெளிவாகிவிடும்.
பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்லும்
அவர்களின் விமர்சனம் மகாபாதகமல்ல.
அது அவர்களின் உரிமை.
இதற்கு மேல் இதில் சொல்ல எதுவுமில்லை.
எனக்கு பாரதி மஹாகவியா இல்லையா என்ற
கேள்வி இல்லை. விமர்சனமும் இல்லை.
காரணம் பாரதியை “மக்கள் கவி” என்று சொல்வதில்
பெருமைஅடைகிறேன்.
என்னளவில் அதுவே மஹாகவிக்கான
முக்கியமான அடையாளமாகவும் இருக்கிறது.
பாரதிதான் தமிழ்க்கவிதையை பொதுஜன வெளிக்கு
எடுத்துவந்தவன். அவன் எழுதியப்பிறகுதான்
கவிதை உலகம் இருட்டறையிலிருந்து விடுதலை பெறுகிறது.
அதற்காக அவன் கவிதையின்
தரம் ஈரம் ஜீவன் எதுவும் குறைந்துவிடவில்லை.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
எல்லோருக்கும் புரிகின்ற வரிகள்..
நிராகரிப்பு, ஒதுக்கிவைத்தல், தீண்டாமையை
அனுபவிக்கும் மனித உள்ளம்
இன்றும் முணுமுணுக்கும் கவிதைவரிகள்.
“பாடிக்கலந்திடவே தவம் பண்ணியதில்லையடி..’
என்று அவன் சொல்லும் போது
அது பாட்டை ரசிப்பதும் பாடிக்கலப்பதும்
அதுவே தவமாக மாறும் மன நிலையும்....
காதலுக்கும் நட்புக்கும் அன்புக்கும் ஏங்கும்
அனைத்து ஜீவராசிகளுக்குமான வரிகளாக மாறிவிடுகிறது.
&&
பாரதிக்கு ஒரு குழப்பம் இருந்த து.
அந்தக் குழப்பமான மன நிலையில் அவனுக்குள்
இருந்த இன்னொரு மனமும் அவ்வப்போது
அவன் எழுத்துகளில் விழித்துக்கொண்ட து.
அறிவுப்பூர்வமாக அவன் அதிலிருந்து விடுபட
போராடி இருக்கிறான். அந்தப் போராட்டம்
அவனளவில் அவ்வளவு எளிதானதல்ல.
சாதிப்படி நிலையில் உச்சத்தில் இருந்தவன்.
அது அவன் குற்றமல்ல.
அவன் வாழ்ந்த காலத்தில் அச்சூழலில்
இந்திய விடுதலைப் போராட்ட களம்
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக
இந்தியச் சமூகத்தின் வேதக்கலாச்சாரத்தை
முன்னிறுத்துகிறது.
அதில் முதன்மையானவர் திலகர்.
விடுதலைப் போராட்டத்தில் திலகர் போன்றவர்களின்
எழுத்துகளின் தாக்கம் பாரதியின்
எண்ணங்களிலும் பிரதிபலிக்கிறது.
வேத இந்தியா, ஆர்ய தேசம், ஆர்ய ராணியின் வில்,
என்ற பிம்பங்கள் அவனுக்குள் இருக்கும்
இன்னொரு பாரதியை எழுப்பித்தான் விடுகின்றன.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது
என்று சொன்னவனும் அவன் தான்.
காக்கை குருவி எங்கள் சாதி என்றவனும் அவன் தான்.
அவனைப் புரிந்து கொள்ளவும்
அவனுக்குள் வாழ்ந்த இன்னொரு பாரதியுடன்
அவன் போராடிக்கொண்டே இருந்தான்
என்பதைப் புரிந்து கொள்ளவும்
தமிழ்ச்சமூகம் மறுக்கிறது.
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இன்றும்
ஒரு சாதித்தமிழன் முழுமையாக
செத்துவிடாமல் இருக்கத்தான் செய்கிறான்.
இதில் பாரதி மட்டும் என்ன விதிவிலக்கா?!!

&&&
ஆவுடையக்கா விவகாரம்..
நீண்ட புகழ் வாணாள் கேட்டவன் பாரதி. ஆனால்
அது எதுவும் அவனுக்கு வாய்க்கவில்லை.
தலைவலி காய்ச்சலையும் எழுதிவிடும்
சமூக வலைத்தள வசதிகள் அவனுக்கில்லை.
அவன் ஆவுடையக்காவின்
வாழ்க்கையை பாடல்களை வாய்மொழிக்கதைகளைத்
தேடிக்கொண்டுதான் இருந்தான் என்பதை
ஆவுடையக்காவின் பாடல்கள் தொகுப்பில்
செல்லம்மா பாரதியின் சகோதரி மகள்
கோமதியம்மாள் குறிப்பிடுகிறார்.
பாரதியும் அவன் கவிதைகளும்
வாழ்க்கையின் ஓரு பகுதியாக நம்மோடு பயணிக்கின்றன
. நாம் அழும்போதும் சிரிக்கும் போதும்
காதல் வசப்படும் போதும் ரெளத்திரம் கொண்டு
சீறி எழுந்து நிற்கும்போது
நமக்குள் அவன் உயிர்ப்புடன் வாழ்கிறான்.
ஒரு கவிஞனுக்கு இதைவிட என்ன வேண்டும்?!!

வாழ்க எம்மான்!



19 comments


Wednesday, July 28, 2021

சார்பட்டா பரம்பரை தலித் படமா?



 சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக பா.ரஞ்சித்

அவர்களுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன்.

என் வாழ்த்தும் விமர்சனமும் அவருக்கு முக்கியமா இல்லையா

என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

வாழ்த்துவதில் மகிழ்ச்சி. நமக்கு மகிழ்ச்சி தரும்

சின்ன சின்ன விஷயங்களையும் உடனுக்குடன்
செய்துவிட வேண்டும். அதுதானே முக்கியம்.

அப்புறம்… சார்பட்டா பரம்பரை தலித் படம் என்று சொல்கிறார்கள்.
அப்படியா..? அப்படித்தான் என்றால் இன்னும் அதிகமாகத்தான் கொண்டாடவேண்டும்.
இருந்தாலும் எனக்கு இந்த வகைப்படுத்தல் புரியவில்லை.
சாதிப்பெயரோடு திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
சாதிப்பெயரின் பெருமையைக் கொண்டாடும்
திரையிசைப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
அப்போதெல்லாம் ,
அந்தப் படங்களுக்கெல்லாம்
இல்லாத சாதி அடையாளம் இந்தப் பட த்திற்கு மட்டும்
கொடுக்கப்படுகிறது!!
அந்தப் படங்கள் எல்லாம் கிராமத்தின்
மண்வாசனை வீசும் படங்கள் என்றும்
ஏன் தமிழ்க்கலாச்சாரத்தை பிரதிபலித்த
யதார்த்தமான கதைகள் என்றும் சொல்லப்பட்டன.
நாங்களும் அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டோம்..
ஆனால் சார்பட்டா பரம்பரை மட்டும் தமிழ்ச் சமூகத்தின்
கதையாக இல்லாமல் தலித் கதையாக மாறுகிறது..
இது நல்லா இருக்கு…
பா ரஞ்சித் மிகவும் நுணுக்கமாக வைத்திருக்கும் காட்சிகள்..
அதில் காட்டப்படும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், நீல நிறம்
இதிலெல்லாம் இருப்பது அந்த மக்களின் வாழ்க்கை அடையாளம்.
அந்த மக்கள் தலித்மக்கள் என்பதால் இது தலித் படம்..
இப்படியாக பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..
இதில் உண்மை இருக்கிறது. ஆனால் இதுமட்டுமல்ல உண்மை.

விளிம்புகள் மையத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன.
கதையின் களமும் காட்சிகளும் சமகால அரசியலின்
புனைவுகளைக் கடந்து நிஜங்களுடன் வருகின்றன.
இந்த மாற்றத்தை கையாண்டிருப்பதில்
பா. ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார்.
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இனி, சார்பட்டா கதையின் நாயகனாக நடிக்கும் ஆர்யாவை விட துணைப்பாத்திரங்கள் ஓவர்டேக் செய்துவிடுகின்றன.
அது என்னவோ தெரியவில்லை.. ஆர்யா இந்த வாய்ப்பை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ
என்று ஓர் எண்ணம் வருகிறது... ..
சம்திங்க் இஸ் மிஸ்ஸிங்க் இன் ஆர்யா..
ஆர்யாவின் உடல்வாகு ஒத்துழைத்த அளவுக்கு
நடிப்பு ஒத்துழைக்கவில்லை..! இந்தப் படத்திற்கான
பிரத்யோகமான நடிப்பை அவர் தரவில்லை.


Saturday, July 24, 2021

அவள்மொழி - திருவந்தாதி

 கையறு நிலையில் கடவுள் தேவைப்படுகிறார்.



இங்கே தேவைகள் மட்டுமே
அதன் இருத்தலைத் தீர்மானிக்கின்றன.
தேவை ஏற்படவே இல்லை என்றால்
தேவன் எதற்கு? தேவி எதற்கு?
அவர்கள் குடியிருக்க கோவில் எதற்கு?
நேற்று தேவைப்படாத கடவுள்
இன்று தேவைப்படுகிறான்.
இன்று தேவை இல்லை என்பதால்
நாளைய தேவையை தீர்மானிக்க முடிவதில்லை.
இதில் உருகி உருகிக் கரையும் பெண்ணுக்கு
இறுதிப்புகலிடமாக இறைவனடி இருப்பதுதான்
ஆபத்தில்லாத முடிவு.
பெண்ணை ஒவ்வொரு காலக்கட்ட த்திலும்
அந்த முடிவை நோக்கி இச்சமூகம்
துரத்திக்கொண்டே இருக்கிறது.
எல்லா வாசல்களையும் அடைத்துவிட்டு
காவலுக்கு ஆயிரம் அறம்பாடி நிறுத்திவிட்டு
அவளைத் துரத்துகிறது.
அடிபட்டு அடிபட்டு கதறித்துடித்து
அவள் ஓடிவரும்போது திசைகள் தெரிவதில்லை.
வெளிச்சத்தில் அழத்தெரியாதவள் அவள்.
இருளில் ஓடுகிறாள்.
கூட்டமாக சேர்ந்து அவளை அவர்கள்
துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் பாதையில்தான் நீ சென்றாக வேண்டும்
என்று அவர்கள் சொல்வதில்லை.
ஆனால் அந்தக் குறுகலான ஒற்றைப் பாதை தான்
அவள் முன் இருக்கும்படியாக பார்த்துக்கொள்கிறார்கள்.
தப்பித்தால் போதுமென அவள் ஓடிவருகிறாள்.
அவள் ஓட ஓட .. பாதை மேலும் மேலும் குறுகலாகி
அவளை அடைத்துக் கொள்கிறது.
"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேனே"
விலகிச்செல்லும் அவனிடம் நெருங்கி நெருங்கி
வருகிறது அவள் காதல்மொழி.
"ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ…"
கதறுகிறாள் அவள்.
அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் வேதனை அவனை எதுவும் செய்யவில்லை.
அவளிருந்த இட த்தில். வேறொருத்தியை எளிதாகப்
பொருத்திவிட முடிகிறது அவனுக்கு.
“இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -..
போகட்டும அதனாலென்ன..?
அவள் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்.
"அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்…
என்று இந்தப்பிறவியில் ஆளாக முடியாமல் போன
வேதனையை ஆற்றிக்கொள்கிறாள்.
"எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று"
பேதலிக்கிறது அவள் மனம்..
இன்புற்றேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்கிறாள்.
தனக்குள் இருக்கும் அவனை
அவனே நினைத்தாலும் எடுத்துவிடமுடியாது?
அவன் எனக்குள் இருக்கிறான்.. இருப்பான்..
தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்.

இரவும் பகலும் வருகின்றன.
ஊர்க்கோடியில் அவள் ஒதுங்கிக்கொள்கிறாள்.
நினைவுகளில் வாழ்வதும் கனவுகளில் விழிப்பதும்
இரவில் எரியும் பிணங்களைத்
தொந்தரவு செய்கின்றன.
பிணம் எரிப்பவன் அருகில் வருகிறான்.
என்னவேண்டும் தாயே என்று
அவள் முகம் பார்க்கும்போது
காலத்தின் வற்றிய முலைகளிலிருந்து
பால் சுரக்கிறது..
தாகம் தணிக்கிறான்.

#அவள்மொழி_புதியமாதவி

Friday, July 23, 2021

தரவுகளின் புனைவுலகம்


 

பிரபலங்களைப் பற்றிய குறிப்புகளில்

அதீதப் புனைவுகள் . ( நாஞ்சில், அம்பை..)
நாஞ்சில் நாடன் ருத்திராட்ச மாலையுடன்
அம்பை "தண்ணியடிக்க" கதை எழுதும் அவசரத்தில்..

நாஞ்சில் நாடன்:
"சில ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கியச் சந்தையில்
மதிப்பூட்டப்பட்ட மாத இதழ் ஒன்றில் யுவ இலக்கியவாதி
ஒருவர் எழுதினார், நாஞ்சில் நாடன் முறையாக
சைவ இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த வம்சா வழியில்
வந்தவர் என்று. எனக்கு உடுத்திருக்கும் நாலு முழ வேட்டியையும்
உரிந்து போட்டுவிட்டு ஓடலாம் எனும் அளவுக்கு நகை
பெருகியது. என்னைப் பெற்ற அப்பா ஐந்தாம் வகுப்பு
தோற்ற ஓர்நேர் சம்சாரி. பாட்டம் பயிரிட்டு
ஏழு பிள்ளைகளை வளர்த்தவர். அம்மா கல்யாணமாகி
நாஞ்சில் நாட்டுக்கு வந்தபிறகு தமிழ் எழுத்துக் கூட்டி
வாசிக்கப் பழகினார். ஆனால் நினைத்துக்
கொண்டிருப்பார்கள் போலும்! நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக
என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக்
கற்றிருப்போம் என்று. கடவுளே! நாலணாவுக்கும்
எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு! வீட்டு வாசலில்
பூடம் போட்டு அமர்ந்திருந்த புலைமாடனும் புலைமாடத்தியும்
சாட்சி. எவனோ ஒருத்தன் எழுதுகிறான்,
எவனோ ஒருத்தன் வெளியிடவும் செய்கிறான்,
வெட்கமில்லாமல்."
என்ன இப்போ ...???
உங்கள் கழுத்தில் யாரோ ஆசையோடு
ருத்திராட்ச மாலை போட்டு பார்க்கிறார்..
உங்களுக்கு அந்த கெட்டப் எப்படி இருக்கும்னு
கும்பமுனியுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்..
. ஹாஹாஹா...
இது கூடப் பரவாயில்லை நாஞ்சில்..
எங்க ஊரு அம்பைக்கு வந்த நிலையைப்
பார்த்தீர்களா... ??!!
தமிழ் இலக்கியம் வளர்ப்பதற்கு இப்போ எங்கள் அம்பை
கட்டாயம் ‘தண்ணியடிக்க” என்ற கதையை
எழுதியாக வேண்டும்.
அம்பையின் முக நூல் (15 ஜூலை ) பதிவிலிருந்து
திரு. டி.வி. ராதாகிருஷ்ணன்அவர் எழுதிய
”தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்”
என்ற புத்தகத்தை அனுப்பி இருந்தார். ….
நான் எழுதாத புத்தகங்களும் உள்ளன. "பயணங்கள்"
என்ற நாடகமும் "தண்ணியடிக்க" என்ற கதையையும்
நான் இனிமேல்தான் எழுதவேண்டும்!......
இத்தனை தகவல் பிழைகளும் நாளைக்கு வேறு
யாராவது ஆராய்ச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு அது
’ஆராய்ச்சித் தரவாகிவிடும். அதைத் தடுக்கத்தான்
இந்தப் பதிவு. இதிலுள்ள மற்ற எழுத்தாளர்களும்
அவரவர் குறிப்புகளைப் பார்த்துக்கொள்ளவும்
இதைப் பதிகிறேன்.
இனி வரும் பதிப்புகளில் என் பெயரை நீக்கும்படி
திரு. ராதாகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறேன். “
அப்புறம் தமிழ்ப்படங்களில் நடித்த ஒரு சினிமா
நடிகையின் முதல் கணவர் பெயரை விக்கிப்பீடியாவில்
பார்த்துவிட்டு.. அவரிடமே கேட்டபோது….

”இனிமேதான் அந்த ஆளைக் கண்டுப்பிடிச்சி
கல்யாணம் பண்ணிக்கனும்னு ‘ சொன்னது நினைவுக்கு வருகிறது.
வரலாறு ரொம்ப ரொம்ப முக்கியம் சரவணா
மறந்திடக்கூடாது..
தமிழ் , கலை இலக்கிய உலகம் தன் அதீத புனைவுகளில்
தரவுகளைக் காப்பாற்றி வருகிறது.!