Friday, March 1, 2024

இராசேந்திரசோழனின் "பெண்கதைகள்"

 

இது அஞ்சலி கட்டுரை அல்ல.

ஒருவரின் மறைந்த நாளில் அவர் குறித்தப் பதிவுகளைப் போடலாம்.

ஆனால் விமர்சனங்களை வைத்தால் அதை நெருடலின்றி

அணுகும் மன நிலை இன்றுவரை நமக்கு வாய்க்கவில்லை.

மரணத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றே வைத்துக் கொள்வோம்.

இராசேந்திர சோழன் தன் கதைகளைப் பற்றி சொல்ல வருகிறபோது
என் எழுத்தில் எதாவது செல்வாக்கு தென்படுமானால் புதுமைப்பித்தனும் தி.ஜானகிராமனும் தான் என்று சொல்வேன். அவர்கள் இரண்டு பேரைத்தவிர
மற்றவர் யாரும் என்னைக் கவரவில்லை” என்று தன் படைப்புலகம் பற்றி சொல்லுகிறார். ஆனாலும் புதுமைப்பித்தனின் “காலனும் கிழவியும்” கதையில்
வரும் ஒரு கிழவி கதைப் பாத்திரத்தை நாம் இராசேந்திர சோழனின் கதை பெண்களிடன் காண முடியாது. தி. ஜானகிராமனின் பெண்கள், அவர்களின் பாலியல் மீறல்களை இவரும் தன் கதைகளில் எழுதினார். (தி..ஜாவின் கதை பெண்களின் பாலியல் மீறல்கள் vs இராசேந்திர சோழனின் கதை பெண்கள் பாலியல் மீறல்கள் ஓர் ஒப்பீட்டு ஆய்வுக்குரியது )

இவர் கதைகள் பெண் உடலின் இச்சைகளையும் சந்தர்ப்பம்
கிடைத்தால் எவனுடன் வேண்டுமானாலும் படுத்து தன் உடலின்
பசித் தீர்க்கும் இரவு மிருகமாக பெண்ணுடல் அலைவதை
எழுதி இருக்கிறார். பெண்ணின் காம ம்
கட்டுப்படுத்த முடியாதது என்றும் அதை எதிரில் இருக்கும்
அனைத்தையும் உடைத்துப்போடும் என்றோ
கதை மையத்தில் வைப்பதில் நமக்கும் உடன்பாடுதான்.
ஆனால் பெண்ணுடல் மீறும் தருணங்களும்
பெண் தேர்வு செய்யும் ஆண்கள் யார்? என்பதுடனும் இராசேந்திர சோழன் எழுதிய கதைகள் அபத்தமானவை. காரணம் முன்பின் தெரியாத எவனுடனும் பெண்ணுடல் புணர்வதில்லை. காமத்தின் பசித் தீர்க்க அவள் பிச்சை எடுக்கும்போதும் பிச்சை இடும் கதவுகளையும் கைகளையும்
அவள் தேர்வு செய்து கொள்வாள். அதற்கான பல்வேறு
உளவியல் காரணங்கள் இருக்கும்.
அது மெல்ல மெல்ல கூடி வந்து ஒரு தருணத்தில்
அவள் உடல்வழி ஆண்மையத்தை சிதைக்கும்.
இதில் படித்தவள் படிக்காதவள் மேற்கத்திப் பெண்,
கீழைத்தேசப் பெண் என்ற வேறுபாடில்லை.
அது என்னவோ தெரியவில்லை.. இந்த ஒரு மிக முக்கியமான பெண்ணுடல் மையத்தை இராசேந்திர சோழனின் கதைப் பெண்கள்
அறிந்திருப்பதாகவே இல்லை. காரணம் அவர்கள்
அனைவருமே ஆண் பாலியல் உலகம் உருவாக்கிய பெண்ணுடல்களாகவே மட்டும் இருந்தன. அவர் கனவுகள் கூட இதை நெருங்கவில்லை! அவை பெண்ணுடலையோ அப்பெண்ணுடலின் காமத்தைத் தூண்டும்
உள்ளத்தையோ அதற்கான எந்த ஒரு காரணத்தையோ
காணுவதற்கு சின்னதாக கூட பிராயத்தனப்படவில்லை.
அதனால்தான் அவர் கதையின் பெண்கள் முன்பின் தெரியாத
ஆணிடம் கூட தன் காமம் தீர்க்கும் பெண்களாக வருகிறார்கள்.
'புற்றிலுரையும் பாம்புகள்' கதையில் வரும் பெண்ணை எடுத்துக் கொள்வோம்.
.அவள் ஆண்கள் முன்னால் வரவே மாட்டாளாம். சரி,
அப்படிக் கூட இருக்கலாம் , ஆனால் கதையின் விவரிப்போ
அக்கதை நடக்கும் பின்புலமோ அவள் ஆண்களின்
முன்னால் வராதப் பெண்ணாக இருந்திருப்பாள்
என்று நம்பக் கூடியதாக இல்லை! அதிலும் குறிப்பாக
உழைக்கும் சம்சாரி வீட்டுப் பெண்கள், இப்படி இவர்
கதைகளில் வருகிற மாதிரி ஆணின் முன்னால் வருவதற்கே
மராப்பை இழுத்து விட்டுக் கொள்வதும், கதவோரத்தில்
நிற்பதுமாக இருப்பதில்லை.
பெண்களின் பாலியல் மீறல்கள் ஆண்மையத்தைச் சிதைக்கும்
என்பதற்காக இக்கதைப் பாத்திரங்களை எழுதி இருக்கும்
அஷ்வகோஷ் தன் கதைகளில் படைத்தப் பெண்கள்
எல்லாம் ஆணுலகம் தன் பாலியல் பார்வையில்
படைத்தப் பெண்களே தவிர , பெண்களின் பாலியல் மீறல்களைப்
புரிந்து கொண்ட கதைகள் அல்ல. வேறென்ன சொல்ல?!!!

மற்றபடி, அவருடைய மார்க்ஸ் சாராம்சத்தில் ஒரு கலைஞன்,
தத்துவத் தேடலும் மனிதாபிமானமும் விடுதலை வேட்கையும்கொண்ட கலைஞன், என்பதிலும்
அரசியல் செயல்பாட்டாளனாக எனக்கு முன்னால் புனைவு, அ புனைவு என்பதா என்ற தேர்வு என்முன்னால் இருந்தது. நான் அபுனைவை நோக்கிச் சென்றேன் என்று அவர் நகர்ந்து அவர் எழுதிய அபுனைவுகள் முக்கியமானவை.

எனவே இராசேந்திர சோழனின் பெண்களும்
அவர்களின் பாலியல் மீறல்களும் ஆண்மையம் உருவாக்கிய
பெண்ணுடல்களாகவே இருந்தன. அவை நிஜமான வாழ்க்கையின்
களத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் கூட
அவர்களின் பாலியல் மீறல்களை ஆண்பார்வையிலேயே
கடைசிவரை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
அவரால் பெண்ணுடலின் காம உள்ளத்தை
அதன் மடிப்புகளை அதன் சின்னச் சின்ன அசைவுகளைக்
கண்டறியமுடியவில்லை. எனவே பெண்ணுடலின் அருகில்
அவர் கதைகள் நெருங்கவே இல்லை,
கனவுகளிலும் கூட அவருக்கு அது சாத்தியப்படவில்லையோ!

No comments:

Post a Comment