Tuesday, December 23, 2014

விறலியின் சபதம்

(ஓவியம் எம். எஃப் ஹூசைன்)


சிவப்பு மையால் எழுத முடியாத
விறலியின் சபதத்தை
கறுப்பு வானத்தில் எழுத வந்த சூரியனும்
தோற்றுப்போனது.

அலைகள் எல்லாம் சந்திரனைக் கண்டு
ஆர்ப்பரிக்கின்றன
எங்கிறார்கள் கடற்கரைவாசிகள்.
அலைகள் அற்ற நடுக்கடலின்
அமைதியை மறந்தப்படி...


பவுர்ணமி மட்டுமல்ல்
அமாவாசையும் சந்திரனுக்குத்தான்
உண்மையைச் சொன்ன
பாய்மரக்கப்பல்கள்
உடைந்துப் போயின.
இது நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்த
பரம் ரகசியம் அல்ல.
விறலியின் விளக்கவுரை தேவையில்லை.

முல்லைக்கொடிக்காக தேர்க்கொடுத்த பாரியைப்
பாடிப் பாடியே பரிசில்கள் பெற
பாணர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த விறலியை விட்டுவிடுங்கள்.
அவர்கள் பாடல்களுக்கு ஆடி ஆடியே
களை இழந்துவிட்டது விறலியின்  கலை.

காட்டில் காய்ந்து கிடக்கும்
கம்புகளை வெட்டி
முல்லைக்கொடிக்கு
பந்தல் போடத் தெரியாதவன அவன்
தேரில் படர்ந்த முல்லைக்கொடியை
பத்திரமாக எடுத்து
பந்தலில் விடத் தெரியாதவன அவன்.
ஓடுவதற்காகவே தச்சர்கள் உருவாக்கிய
தேர்ச்சக்கரத்தை
முடக்கிப்போட்டவன அவன்.

எதை எதற்கு எப்படி கொடுக்கவேண்டுமோ
அதை அதற்கு அப்படி கொடுக்கும்
கொடை கூட பாராட்டப்படலாம்
கொடைமடம் ?

இரண்டு கைகள் கொடுத்தால்
இரண்டாயிரம கைகள் பிச்சைப்பாத்திரமாகிவிடும்.
அமுதசுரபியைத் தூக்கி எறிந்த
மணிமேகலைக்குத் தெரியும்
கொடுப்பதில் இருக்கும் சுகத்தைவிடக் கொடியது
வாங்குபவன் மனக்கண்ணின் வாட்டம்.

விறலியின் சபதமிது
வள்ளல்களைப் பாடி
பரிசுகள் குவிக்கும்
பாணர்களின்  பாடலுக்கு
இனி விறலி ஆடப்போவதில்லை.



1 comment:

  1. ///கொடுப்பதில் இருக்கும் சுகத்தைவிடக் கொடியது
    வாங்குபவன் மனக்கண்ணின் வாட்டம்.///
    அருமை

    ReplyDelete