Wednesday, December 21, 2011

போரிலக்கிய வரலாற்றில்..... பெயரிடாத நட்சத்திரங்கள்



போரிலக்கியம் என்ற சொல் தமிழனுக்கு ஒன்றும் புதியதல்ல. காதலும் வீரமும்
நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்ந்த நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
வீரம் மிக்க கதைகள் பல உண்டு.

"பகைவர் முன் நின்று போரில் யானையைத் தடுத்துக் கொன்று வீர மரணம்
அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர
எமக்கு வேறு வழிபாடு இல்லை" என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்டது
வெறும் கவிதை மட்டுமல்ல, அதுவே நம் வாழ்க்கை. அதுவே நம் வழிபாடு.
அதுவே நம் நம்பிக்கை. தமிழன் வாழ்க்கையில் சிரார்த்தம் செய்வதெல்லாம்
கிடையாது. அதெல்லாம் ரொம்பவும் பிற்காலத்தில் வந்ததுதான்.
நடுகல் வழிபாடாக இருந்த தமிழன் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே
திருவள்ளுவர் நம்பிய "நீத்தார் பெருமை"யும். இன்றும் கூட எம் கிராமப்புறங்களில்
தைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் அக்குடும்பத்தில் நீத்தார்பெருமையை
நினைவுகூர்ந்து அவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துப் படையலிட்டு
புதுத்துணி வாங்கி வைத்து அக்குடும்பத்தார் கூடி வழிபாடு செய்யும் நாளாகவே
இருப்பது அதன் எச்சம் தான்..

போரிலக்கிய வரலாற்றில் கலிங்கத்துப் பரணிக்கு தனி இடம் உண்டு, எனினும்
பரணியில் பெண்ணுக்கான இடம் போர்க்களத்தில் போரிட்டு இல்லம் திரும்பும்
ஆடவனை மகிழ்விப்பது மட்டுமே. அதாவது வீரனின் காதல் வடிகாலாகவும்
பசித்திருக்கும் அவன் காமத்தைத் தீர்த்து வைக்கும் நுகர்ப்பொருளாகவும்
மட்டுமே சித்தரிக்கப்படுகிறாள். போர்த்தெய்வமாக பெண் தெய்வம் வளர்த்தெடுக்கப்பட்ட
இக்காலக்கட்டத்திலும் கூட பெண்ணின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.
இதை தொல்காப்பியர் கால தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே காணலாம்.
தமிழனின் பண்பாடு என்று பேச வரும் போது அதன் முதல் அத்தியாயத்தில்
இடம் ப்டிக்கும் தொல்காப்பியமும் "போர்க்களத்தில் பெண்ணை விலக்கியே
வைத்திருக்கிறது "

"எண்ணரும் பாசறைப் பெண்ணோடு புணரார்"

"புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப "
(தொல். பொருளதிகாராம் கற். நூற்பா 34 &35)


இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றதுடன் இந்திய இனக்குழு மக்களின் வாய்மொழிப் பாடல் கதைகளில் இடம் பெற்று ஏதொ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டும் கூட என்னிடம் கேட்டால் 'போரிலக்கியம்' என்று தான் சொல்வேன். அவ்விரு காப்பியங்களிலும் 'அரக்கியர்' என்றழைக்கப்படும் பெண்கள் தான் ஆணுடன் சமமாக எதிர்நின்று சமராடிய பெண்களாக என் கண்முன் வருகிறார்கள். இந்தக் காப்பியங்கள் எல்லாம் கற்பனையே
என்று சொல்லுபவர் குறித்து நமக்குப் பிரச்சனையே இல்லை! ஆனால் காப்பிய
நிகழ்வுகள் எல்லாம் வரலாறாக நிறுவப்படும் போது இந்த அரக்கியர் யார்? என்பதும் அந்த வீரப்பெண்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான அடையாளம் குறித்தும் தொடர்புகள் குறித்துமான இந்திய இனக்குழு வரலாற்றை நாமும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இராமயணக் காப்பியத்தில் அயோத்தி இராமனின் தந்தை தசரதனின் காதல் மனைவி கைகேயிதான் மன்னனுடம் போர்க்களத்தில் அருகிலிருந்தப் பெண்ணாக காட்டப்படுகிறாள்.
தசரதன் போரிடும் போது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி முறிந்துவிட அவள் தன்
கட்டைவிரலை அச்சாணியாக்கி அவன் வெற்றிக்கு காரணமாகிறாள். அதனால்தான் தசரதன் அவளுக்கு இரு வரம் கொடுத்ததாகவும் அவள் அந்த வரங்களை தனக்குத் தேவைப்படும் காலத்தில் கேட்டுக்கொள்வேன் என்று சொன்னதும் அதன் பின் இராமனின் பட்டாபிஷேகத்திற்கு முந்தினம் அவள் வரம் கேட்டதும் அவன் கொடுத்ததும் இன்றும் நம் அயோத்தியா அரசியல் வரை விரிகின்ற இராமாயணக்கதையாக இருக்கிறது .

மகாபாரதக் கதையில் மானபங்கப்படுத்த தேவி பாஞ்சாலி கூட

ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்
பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியேன் "
என்று சபதம்தான் செய்தாளே தவிர அவள் சபதத்தை நிறைவேற்றியதும் அந்தப்
பொறுப்பும் அவள் கணவன்மாரின் செய்லபாடாகவே இருப்பதையும் பார்க்கிறோம்.

முதலாம் உலகப்போரின் மிகச்சிறந்த போர் இலக்கியமாக போற்றப்படும்
விரா மேரி பிரிட்டனைனின் தன் வரலாறு கூட ( Vera Mary Brittain's Her
Testament of youth is one of the outstanding biographies of the first world war)
நேரடியாக போர்க்களத்தில் போரிட்ட பெண்ணின் வரலாற்று இலக்கியம் அல்ல.
முதலாம் உலகப்போரில் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களைக் கவனிக்கும் செவிலிப்பெண்ணாக வேலைப்பார்த்த அனுபவமும் அப்போரில் தன் காதலனையும் சகோதரனையும் இழந்த வலியும் அவள் தன் வரலாற்றையும் போரின் கொடுமைகளையும் எழுத வைத்தன எனலாம்.

இந்த வரலாற்றின் பின்னணியில் அண்மையில் ஊடறு + விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ஈழப்பெண் போராளிகளின் கவிதை தொகுப்பு நூல்
"பெயரிடாத நட்சத்திரங்கள்' மிகுந்தக் கவனத்தைப் பெறுகிறது.

வீர உணர்வை தலைமுறை தலைமுறையாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கடப்பாடு மட்டுமே கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கான அந்த வீர உணர்வையும் கண்ணகியின் அறச்சீற்றத்தையும் தொன்மங்களிலிருந்து எடுத்துக்கொண்டு நம் ஈழப் பெண் போராளிகள் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.

கவிதைக்கான தகுதிகளாக படிமம் , குறியீடு என்ற அறிவுஜீவித்தனமான அளவுகோல்களை எல்லாம் வைத்துக்கொண்டு இக்கவிதையை அணுகுபவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடையக் கூடும்.
க்ருத்துருவாக்கங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதைகள் பிரச்சாரமாக குன்றிவிடும் என்று நவீன கவிதையின் பிதாமகன்கள் எல்லால் சொல்லியிருப்பதைப் புரட்டிப் போட்டிருக்கும் நெம்புகோல் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள். வாழ்க்கை அனுபவத்திலிருந்து
நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்பதற்கு ஈழப் பெண் போராளிகளின் இக்கவிதைகளே மிகச்சிறந்த சான்றுகளாக இருக்கின்றன.

19 வருடங்களாக நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த எம் வாச்சாத்தி பெண்களின் சோகத்தின் ஒரு துளி கூட எம் தாய்த்தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் பெண்மொழியைப் பாதித்ததில்லை. வரலாற்றுப் பார்வையோ சமகால அரசியல் பார்வையோ அது குறித்த தெளிவோ தேடலோ நம் தமிழ்நாட்டில் பெண் கவிஞர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படும்
சூழ்நிலையில் தான் ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றன.
அரசியல், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் பயணித்து பெண்ணுடலை, பெண்ணியத்தைப் பேசி இருக்கிறார்கள்.

இவர்கள் ஆயுதம் தாங்கியது காலத்தின் கட்டாயம் என்பதை அடுத்த நூற்றாண்டின் வாசகனுக்கும்
எளிதில் உணர்த்தும் வகையில் பின் இணைப்பாக யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் 1996ல்
கவிதை வடிவில் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை இணைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

தான் கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ பெண்ணியம் பேச வேண்டும் என்றோ தேச இன விடுதலையை ஆவணமாக்க வேண்டும் என்றோ எழுதப்பட்டவை அல்ல இக்கவிதைகள். ஆனால் இவை எல்லாமாக இருக்கின்றன இக்கவிதைகள். சிட்டுக்குருவிகளின்
சிறகசைப்பு போல மழைத்துளிப் பட்ட மண்வாசனைப் போல பனிக்குடம் உடைத்து மலர்ந்த குழந்தையின் அழுகுரல் போல இயல்பாக, உண்மையாக இருக்கின்றன இக்கவிதைகள்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்திய
பெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பெண் என்றால் உயிர்தரும் தாயமை
பெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறை
பெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.
இன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.
அடேல் பாலசிங்கம் அவர்கள் " women is combat belong to a totally new world, a world outside a normal woman's life. And that is what makes these women fighters so interesting and admirable.
They have taken up a life that bears little resemblance at all to ordinary existence of women'
என்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில் இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விளைவு?
இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்ற கேள்விதான்.

போர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்
பெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,
தமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.

அவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக?
அவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக?
போரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா?
போரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்
அவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக
- அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகிய
அனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.

(04/12/2011 ஞாயிறு மாலை, மும்பை தமிழ்ச் சங்கத்தில் , தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின்
13 ஆம் அமர்வில் பெயரிடாத நட்சத்திரங்கள் - ஈழப்பெண் போராளிகள் கவிதைத் தொகுப்பு
குறித்த அறிமுக உரை. )

4 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  2. //விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்திய
    பெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
    பெண் என்றால் உயிர்தரும் தாயமை
    பெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறை
    பெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.
    இன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.
    அடேல் பாலசிங்கம் அவர்கள் " women is combat belong to a totally new world, a world outside a normal woman's life. And that is what makes these women fighters so interesting and admirable.
    They have taken up a life that bears little resemblance at all to ordinary existence of women'
    என்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில் இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
    விளைவு?
    இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்ற கேள்விதான்.

    போர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்
    பெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,
    தமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.

    அவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக?
    அவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக?
    போரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா?
    போரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்
    அவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக
    - அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகிய
    அனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.
    //

    அனேகம் இதே கருத்தை உள்வாங்கியே கனடாவில் ரொரன்றோவில் நடைபெற்ற அறிமுகவிழாவில் எனது கட்டுரையையும் வாசித்து இருந்தேன்,

    http://arunmozhivarman.com/2011/11/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    ReplyDelete
  3. நன்றி. உங்கள் கட்டுரை மிகவும் நடுநிலையுடன் இருப்பது மன நிறைவாக உள்ளது.
    நம் கருத்துகள் ஓரலையில் இப்புள்ளியில் இருப்பதையும் கண்டேன்.
    வாழ்த்துகளுடன்,

    புதியமாதவி

    ReplyDelete