Wednesday, December 21, 2011

மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள்







பெயரிடாத நட்சத்திரங்கள் - ஓர் அறிமுகம்
----------------------------------------------

மும்பை , சயான் தமிழ்ச்சங்கத்தில் கடந்த ஞாயிறு 04/12/2011 மாலை
6.30 மணிக்கு தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமத்தின் 13ஆம் அமர்வு
நடைபெற்றது. வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்
இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்
தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.
போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன்
அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை
தனியாக...)
ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன்
அதன் பின் பேசினார்: அவர் பேச்சில் சில கருத்துகள்...
தோழி புதியமாதவி, உயிருடன் வாழும் இன்றைய போராளிகளின் நிலை
என்ன வாக இருக்கிறது என்கிற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். அவர்களை
இன்றைய தமிழ்ச்சமூகம் குறித்து அவர் அறியாதவர் அல்ல.
ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் தங்கள்
வருங்கால துணைவர் என்னவாக இருக்க வேண்டும் என்று
படித்த இளம்தலைமுறையைச் சார்ந்த இன்றைய பெண்கள் பேசினார்கள்.
அனைவருமே தங்களுக்கு ஏ.டி.எம் மிஷின் போல ஒரு கணவன் வேண்டும்
என்று தான் விருப்பப்பட்டார்கள். ஒரு mediocrity சமூகத்தில் ,அறிவியல் ரீதியான பார்வைகளை தொலைத்து விட்ட சமூகத்தில் ,விளம்பரங்களை அலசல்கள் இல்லாமல் ஏற்றுகொண்ட சமூகத்தில் இம்மாதிரியான ஒரு படித்த இளம்
தலைமுறையை உருவாக்கி இருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில்
போராளிகளைப் பற்றியோ நம் விழுமியங்கள் குறித்தோ
எம்மாதிரியான அக்கறைக் கொண்டிருபார்கள் ! அவர்களிடம்
நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இதற்கெல்லாம் யார் காரணம்?
என்ற தொடர் கேள்விகளை நான் வைக்கிறேன்.
பெண்கள் இன்று நேற்றல்ல,யுகங்களாக போர்க்களத்தில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆயுதம் தாங்கியும் ஆயுதம் தாங்காமலும்.
போர் என்று சொல்வது தேசியம் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால்
உருவாக்கப்பட்டது. அதனால் தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் மகள்
தன் பிறவியை வெறுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு
"தம் நண்பருக்கு எழுதிய கடிதமாக" மன அழுத்தத்துடன் வாழ்ந்த நெருக்கடிகளை
வெளியிட்டிருக்கிறார். சாதியமும் மதச் சடங்கு சம்பிரதாயங்களும் எப்போதும்
எல்லா நாடுகளிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதில்
மிகவும் கவனமாக இருந்தன, இருக்கின்றன. ஆவணப்படங்களை
எடுப்பது என் தொழிலாகவும் நான் விரும்பும் செயலாகவும் இருப்பதால்
இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களை நானறிவேன்.
ஒருமுறை தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில், அங்கு ஒதுக்கப்பட கிராமப்புறங்கள் இருந்தன, நான் காலில் செருப்பணிந்து
அவர்கள் தெருவழியே நடந்து சென்றுவிட்டதால் (நான் அப்போது அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்பது வேறுவிஷயம். இப்போது போனாலும் அப்படித்தான் நடந்துக்கொள்வேன்
என்பதும் உறுதி) ஒரு நாள் முழுவதும் நான் அங்கிருக்கும் உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து பலவிதமான தொல்லைக்கும் ஆளானேன் .. இம்மாதிரியான பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு.
அம்மாதிரியான சூழலில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் அதை மவுனத்தில்
ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து குரல் கொடுக்கும் கலகக்குரலிலும் நாம் இன்னும்
அறியாத பெண் போராளிகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேசவிடுதலையின் ஊடாக பெண்விடுதலையைக் கனவுக் கண்ட போராளிகள்
இந்தப் பெண்கள் என்பதை அவர்களின் கவிதைகளைப் புரட்டிப் பார்த்த
இந்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க முடிந்தது.
பெண்களுக்கு என்று தேசமில்லை, நாடில்லை, மொழியில்லை,
எங்கெல்லாம் மனிதம் கொலைசெய்யப்படுகிறதோ அங்கெல்லாம்
முதலில் ஒலிக்கும் கலகக்குரலாய் இருப்பதும் பெண்ணின் குரல்தான்
என்பதையும் இக்கவிதைகள் உணர்த்த தவறவில்லை. பெண் எப்போதும்
இரண்டால் பால்நிலையில் வைத்து தான் பார்க்கப்படுகிறாள் (second sex).
ஈழத்திலோ இரண்டாம் குடிமகனாக்கப்பட்ட தமிழ் ஆண்களின் சமூகச்சூழலில்
இவளின் பால்நிலை எம்மாதிரி இருந்திருக்கும் என்பதையும்
கணக்கில் எடுத்துக்கொண்டு இக்கவிதைகளை வாசிக்கும் போது
இப்பெண்கள் ஆயுதம் ஏந்தியதும் களத்தில் ஆணுக்கு நிகராக
நின்று சமர் புரிந்து வெற்றிகள் பல கண்டதும் இந்தப் பயணங்களின்
ஊடாக பெண்விடுதலையைப் பேசியதும் கனவு கண்டதும்
இக்கவிதைகளை வாசிக்கும் போது நான் கண்ட பல்வேறு
தளங்களாக விரிகின்றன.

போரிலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
war literature, warring literature, literature under war.
பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பு literature under war எனப்படும்
போர் நெருக்கடியில் எழுதப்பட்ட இலக்கியவகையைச் சார்ந்ததாகவே
நான் கருதுகிறேன்.

அடுத்துப் பேசிய திரு ராஜாவாய்ஸ் அவர்கள் இக்கவிதைகளுக்கு
முன்பாக படைக்கப்பட்ட ஷோபாசக்தி கொரில்லா, இம் ஆகிய
படைப்புகளிலிருந்து ஈழப் போரிலக்கியங்களைப் பேச ஆரம்பித்தார்.
இப்பெண் போராளிகளின் கவிதைகள், இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல
சமூகத் தளத்திலும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியதுடன்,
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் இப்பெண் போராளிகளால் பெருமை
அடைகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் தான்
இப்பெண்கள் வீடுகளைத் துறந்து சமூகவெளிக்குள் வர
மிகப்பெரிய காரணிகளாக இருந்திருப்பதை அறிய முடிகிறது.
பகைவன் இப்படித்தான் இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்ட
நம் பெண்களால் அவர்கள் நம்பிய பெரிய அண்ணனின்
துரோகம் அந்தத் தூரிகைகளைத் துப்பாக்கி ஏந்த வைத்தது.
இந்தப் போராளிகள் பிறந்த தமிழ்ச் சமூகத்தில் தான்
நாம் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவும் அவர்கள்
வாழ்ந்தக் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்காகவும்
இப்போதைக்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்வோம்.
கையறுநிலையில் வாழும் நமக்கு சின்ன ஆறுதலாக இருக்கிறது
என்ற ஆதாங்கத்துடன் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

கவிஞர் தமிழ்நேசன் பெயரிடாத நட்சத்திரங்கள் குறித்த தன் பார்வையைக்
கீழக்கண்டவாறு பதிவு செய்தார்.

போரிலக்கிய வரலாற்றில்... என்று அறிக்கை அழைப்பு வந்தது. புத்தகம் கைக்கு வந்தவுடன்
இது போரிலக்கியமாக மட்டுமல்ல, பேரிலக்கியமாகவும் திகழ்கிறது என்பதை இத்தொகுப்பில்
உள்ள ஒவ்வொரு கவிதையின் கனமும் உணர்த்துகிறது.

எழுத்து என்பது போராட்டத்தின் ஒரு வடிவம் , ஒரு முகம் என்பதை மறந்துப் போன
மறத்தமிழனுக்கு நினைவூட்ட வந்த நட்சத்திரங்கள் இவை.
இத்தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இதயத்தை இனம்புரியாத கனம்
ஆட்கொண்டுவிட்டது. முதல் கவிதையைப் படிக்க ஆரம்பித்த வுடன் என்ன பேச
வேண்டும் என்பது மனசிற்குள் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல ஓட் ஆரம்பித்தது.
இரவும் பகலும் மனசை நிலை கொள்ள இயலாத தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன
இக்கவிதைகள். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடிக்க வெகுநேரம் தேவைப் படுகிறது.
ஒவ்வொரு வரியும் அது ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீண்டு, அடுத்த வரி அடுத்த கவிதை
செல்வதற்கு நம்மை ஆசுவாசபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு கவிஞைகளின்
படைப்புகள் கால வரிசையில் முன்னும் பின்னுமாக இருந்தாலும் கூட ஒரு கவிதையின்
தொடர்ச்சியாக அடுத்த கவிதையையும் நாம் காணமுடிகிறது.

அம்புலியின் "நாளையும் நான் வாழ வேண்டும்" என்ற கவிதை சம்மட்டி எடுத்து நம்
நம் நெற்றியில் ஓங்கி அடித்ததைப் போல உணர்கிறேன். கவிதையின் அத்தலைப்பிலிருந்து
மீளவே வெகுநேரம் ஆனது.

நான் எப்போதும் மரணிக்கவில்லை என்பதிலும் யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற
வரிகளிலும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வுகளின் பிரதிபலிப்பே. யுத்தம் எமக்குப்
பிடிக்கவில்லை எம்மீது திணிக்கப்பட்டது என்பதையும் சேர்த்தே ஆவணப்படுத்தி
இருக்கின்றன இக்கவிதைகள்.


இந்தப் பெண்ணின் மனசைத்தான் கடும்போக்கு உடையவர்கள் என்று விமர்சிக்கப்பட்டதையும்
நாம் அறிவோம். உங்களைப் போலவே எனக்கும் வாழ்க்கையின் சுகமான நிமிடங்களை
அனுபவித்து வாழ ஆசை உண்டு. நான் வெறும் ஆயுதம் தாங்கியவள் மட்டுமல்ல,
ஆயுதம் தாங்கியதாலேயே நான் முரடும் அல்ல, எனக்குள் ஈரம் உண்டு, அந்த ஈரம்தான்
என் மக்களின் வாழ்க்கைக்காக என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. ஆயுதம் ஏந்தியதால்
எனக்குள் ஆசை, காதல், அன்பு, கருணை, பாசம் எல்லாம் மரணித்துவிட்டதாக
எண்ண வேண்டாம், நான் அதே உயிர்த்துடிப்புடன் தான் வாழ்கிறேன், இன்றுமட்டுமல்ல,
என்றும் எப்போதும் என்னை நான் , என்னுள் இருக்கும் என்னை நான் இழந்துவிட மாட்டேன்'
என்று அடித்து சொல்வது போல சொல்கிறார், 'நான் இன்னும் மரணிக்கவில்லை' என்று.

எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்ற காப்டன் வானதியின் தொடர்ச்சியாக
தொடங்கும் நாதினியின் 'உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.. உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது,
எங்கள் கைகளுக்கு வந்த உந்தன் பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை" என்ற வரிகள்
ஆய்தங்கள் மவுனமான இக்காலத்தில் மிகவும் பொருள் பொதிந்தவை.

இப்படி எழுதப்பட்ட கவிதை இன்று காலச்சூழலில் சிக்கி சிதைக்கப்பட்டுள்ளது, வரலாறு
நெடுக யுத்தமும் சிதைவுகளும் நீண்டு கிடக்கின்றதெனினும் நம் கண்முன்னே ஒரு
கனவு தேசம் களவாடப்பட்டு விட்டதை நினைக்கும் போது இக்கவிதை வரிகள்
எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை உணர முடிகிறது.

கிழிந்த காற்சட்டை ஒன்றை தைத்தவாறிருந்தாள் ஒருத்தி, ஊசியால்
நூல் கோத்தவாறு அவள் மெல்ல சொன்னாள், 'வானமும் பீத்தலாய்
போய்ச்சுது, இது முடிய அதையும் நான் பொத்தி தைக்க வேண்டும்
என்ற கவிதையில் காற்சட்டை பூமி மிகச்சிறந்த குறியீடாகி
கவிதையைக் கனமுள்ளதாக்குகிறது.


நிகழ்ச்சியின் இடையில் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகத்திலிருந்து
கவிதைகளை அ.ரவிச்சந்திரன், கவிஞர் ஜெயகாண்டீபன் ஆகியோர்
வாசித்தார்கள். தமிழ்ச் சங்கத்தின் சிற்றரங்கம் தமிழ் ஆர்வலர்களால்
நிரம்பி இருந்தது. நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார்கள் ராஜாவாய்ஸும், கராத்தே முருகனும்.






நட்சத்திரங்கள் தெரியாத மும்பை இரவு
வழக்கமான இலக்கிய கூட்டம் அல்ல இது என்பதற்கு சாட்சியாக
அன்று தூங்காமல் விழித்திருந்தது.






















No comments:

Post a Comment