Tuesday, April 5, 2011

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி



28 வருடங்கள் காத்திருந்து இறுதியாக கிடைத்த உலகக்கோப்பைக்காக
நான் நன்றி சொல்ல வரவில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஊடக
வெளிச்சம், பாராட்டு பரிசு/பணம் மழையாகக் கொட்டுகிறது. உங்களைப் போன்ற
சக விளையாட்டு வீரர்களான ஹாக்கி விளையாடு வீரர்களுக்கு பொருத்தமான
காலணி கூட கிடைப்பதில்லை. இன்னும் 25 வருடங்களுக்கு நீங்கள் இந்தக்
கோப்பையை முத்தமிட்ட கனவுகளைக் கண்டே ஒரு தலைமுறை வாழ்ந்துவிட
முடியும். இதைக் காட்டிக் காட்டியே விதம் விதமான விளம்பரங்களில்
உங்கள் அனைவரின் முகமும் வரப்போவதை நினைத்து இப்போதே எனக்குப்
பயமாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் பணத்தில் மற்ற விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு ஏதாவது செய்தால் என்ன? என்றெல்லாம் கிறுக்குத்தனமாக உங்களிடம் நான் கேட்கப்போவதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் எங்க ஊரு பெரிசு
பால்தாக்கரே சத்தம் போடுவது வாடிக்கை. எனக்கு அப்போதெல்லாம் கோபம்
வருவதும் உண்டு.
விளையாட்டை விளையாட்டா பாருங்கய்யா.. என்று அறிவுரை எல்லாம்
சொல்லி இருக்கேன்! இந்து முஸ்லீம் என்று ஒரு வட்டத்தை என் பார்வை
தாண்டியதில்லை. ஒரு முறை பாகிஸ்தான் அதிபர் இந்தியா வந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் படை ஊடுருவி தாக்க ஆரம்பித்தது எனக்கும் நினைவிருக்கிறது என்றாலும் அதற்கு பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள் என்று நியாயம் பேசி இருக்கிறேன்.

இலங்கை அதிபர் மும்பை வருகிறார் என்றவுடனேயே டென்ஷன் அதிகமானது.
எதுவும் எங்களால் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் அந்த இயலாமை
இன்னும் கொஞ்சம் எங்கள் எண்ணத்தைக் கொடூரமாக்கியது.
இலங்கை வீரர்கள் வெற்றிப் பெற்று அந்த வெற்றிப்புன்னகையுடன்
ராஜபக்சே .. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!
இதற்காகவாவது இந்தியா வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று
நான் நினைத்தது நியாயமற்ற உணர்வாக இருக்கலாம், என்னிலிருந்த
கொடூர எண்ணமாக இருக்கலாம். நான் எந்த மகாத்மாகவும் என்னை
நினைத்துக் கொள்ளவோ ஏமாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களே... உங்களுக்கு நன்றி..
உங்கள் வெற்றி .. என்னை என் காயத்தை...
மயிலிறகாய்த் தடவிக் கொடுத்தது.
என்னால் செய்ய முடியாததை உங்கள் பந்தும் மட்டையும்
செய்ததற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.

2 comments:

  1. இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராசபக்சே
    அதற்க்கு தேவையான பொருள் உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு, இதே இலங்கை அரசு இந்திகாரனுங்கள கொன்று குவித்திருந்தால் சும்மா இருந்திருக்குமா இந்திய அரசு,வெறும் இரண்டு கோடி மக்கள் தொகையுள்ள இலங்கைக்கு தனி கிரிக்கெட் டிம் உள்ளது ஆனால் ஏழு கோடி மக்கள் தொகையுள்ள தமிழகத்துக்கு ஒரு தனி கிரிக்கெட் டிம் கிடையாது, எவனோ பெத்த பிள்ளையை தான் பெத்த பிள்ளைனு நினைச்சிகிட்டு ஏமாந்து வாழ்ந்துகிட்டுயிருக்கான். என்ன கொடும சார்யிது.
    மண் மன்மோகன், காட்டேரி சோனியா இவர்களுக்கு கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கு ஆனா தமிழக மீனவர்கள் படுகொலைக்கு பதில் அடி கொடுக்கவோ இல்ல கண்டனம் தெரிவிக்கவோ நேரம் இல்லை, மட தமிழர்கள் இருக்கும் வரை இது தொடரும், தமிழன் இந்தியாவை ஒரு தலையாக காதலிக்கிறான் ஆனால் இந்தியாவோ தமிழனையும் தமிழ் மொழியையும் முற்றிலுமாக புறக்கணிக்கிறது இதை என்று உணர்கிறானோ அன்றுதான் தமிழனின் வாழ்வு வளமாக அமையும்.
    இலங்கை தமிழ் மக்களின் எதிரி
    இந்தியா தமிழ் மக்களின் துரோகி

    ReplyDelete
  2. புகல், நன்றி.
    உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அதே நேரத்தில் கனவுகள் எட்டும் தூரத்தில் இல்லை என்கிற யதார்த்தத்தையும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நகர்வுகளிலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் உணர்ந்தே இருக்கிறேன்.
    எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்!
    துரோகிகளை என்ன செய்வது?

    ஒரே ஒரு தமிழினத் தலைவனைக் கூட
    அடையாளம் காணமுடியாத ஏழரைக் கோடித் தமிழர்கள்! வெட்க கேடு.

    அன்புடன்,

    புதியமாதவி

    ReplyDelete