Sunday, August 1, 2010

மித்திநதிக் கரையில்


வணக்கம்...

தமிழ்மணம் நட்சத்திர வலைப்பதிவாளராக எனக்கு வாய்ப்பு
கொடுத்திருப்பதற்கு நன்றி.

இனி நான் உங்களுடன்....




மித்திநதிக் கரையில்
-------------------------------------------





கடலலையின் ஈரம் காயாமல்
கண்ணில் கனவுகளுடன் காத்திருக்கும் நாட்கள்
அம்ச்சி மும்பை, எங்கள் மும்பை மாநகரம்..
இந்தியா ரூபாயின் மதிப்பை எங்கள் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் தான்
இன்றுவரை ஆட்சி செய்கிறது.
இந்த மாநகரத்தின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு குடிசைகளில் வசிக்கிறார்கள்.
(2001 மக்கள் கணக்கெடுப்பு). அந்த 48 விழுக்காட்டில் 60 விழுக்காடு குடிசையில் '
வசிப்பவர்கள் தமிழர்கள்தான். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக
இன்றும் சொல்லப்படும் தராவி பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்கள்.

எப்போது நடந்தது இந்த புலம்பெயர்ந்த வாழ்க்கை?
இப்போதுதான் நடந்தது என்று எவரும் எழுதி வைக்கவில்லை.
பல்லவ அரசன் நரசிம்ம பல்லவன் வாதாபி கொண்டதும் பரஞ்சோதி கணபதி
கண்டதும் வெறும்கதையல்ல. அவை வரலாற்று நிகழ்வுகள்.
ஆனாலும் வென்ற பகுதிகளில் தன் சொந்தங்களுடன் வாழ்க்கையைத் தொடரவில்லை
அன்றைய தமிழன்.

தமிழ்நாட்டையும் மராத்திய மண்ணையும் இன்று இணைத்து நிற்கும் இந்தியா என்ற
தேசத்தின் பிறப்பும் அரபிக்கடலோரம் தமிழனின் வருகையும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவை.

>அன்றைய ஆங்கிலேய அரசின் வெள்ளைத்துரைமார்களுக்கு
சமையல் வேலை செய்யும் "பட்லராக' பல தமிழர்கள் இருந்தார்கள்.
அந்த துரைமார்களும் குடும்பத்துடன் இந்தியாவின் எங்கு சென்றாலும் தங்களுடன் தங்கள்
பட்லரையும் அழைத்துச் சென்றார்கள். இப்படி பட்லராக வந்தவர்களில் பெரும்பாலோர்
ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

>இந்து மதமும் அதன் சாதியக் கொடுமையும் தெருவில் நடப்பதற்கும் அனுமதி மறுத்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தில்
இடமளித்தது. அதன் விளைவாகவும் பலர் புலம்பெயர்ந்தார்கள்.

> மும்பையில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அன்றிலிருந்து இன்றுவரை
குடிசைத் தொழிலாகவே நடந்து வருகிறது. சுகாதாரமில்லாத சூழலில்
மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இக்குடிசைத் தொழிலில்
வேலைச்செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் தினக்கூலிகளாக தமிழகத்திலிருந்து
கொண்டுவரப்பட்டனர். தாராவி பகுதியில் இக்குடிசைத் தொழில் நடத்தியவர்கள்
சேட் என்றழைக்கப்பட்டார்கள். அங்கிருந்த சால் வீடுகள் மனிதர்களின் குடியிருப்புகள்
அல்ல. பதனிடப்பட்ட காய்ந்த தோல்களை அடுக்கிவைக்கும் சேமிப்பு அறைகளாக
(godown) இருந்தவைதான் காலப்போக்கில் தோல்பதனிடும் தொழிற்சாலையில் வேலை
செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளாக சேட்டுகள் வழங்கினார்கள். (கவனிக்க: விற்பனை அல்ல)


> பருத்தி அதிகம் விளையும் மராட்டிய மாநிலத்தில் துறைமுகமான மும்பையிலிருந்து
அதிகமான துணிகள் ஏற்றுமதி/இறக்குமதி நடைபெற்றது. அப்போது கொள்ளை
லாப நோக்கில் நூற்பாலைகள் நிறுவப்பட்டு பருத்தி நூல்கள் இங்கிலாந்துக்கு
ஏற்றுமதியானது. அந்த நூற்பாலைகளில் வேலைத்தேடி வந்து குடியேறியவர்கள் பலர்.

> வானம் பார்த்த பூமி, மழையை நம்பிய விவசாயம். இந்த வறுமையில்
வயிற்றுப்பிழைப்புக்காக கூலிகளாக தமிழர்கள் மும்பைக் கடலோரம் வந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் அரசுப்பணிகளில் அமர்ந்த தமிழர்கள் அரசு பணிகளில்
இடமாற்றம் ஏற்பட்ட போது அதிகாரமிக்க தங்கள் பதவியை விடாமல்
மாற்றலாகிய இடங்களுக்கு குடிப்பெயர்ந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் இரயில் போக்குவரத்து, துறைமுகத் தொழில், சிகிரெட்,
புகையிலை தொழிற்சாலைகள்.. இவற்றில் எல்லாம் கிடைத்த வேலைவாய்ப்புகள்
தமிழர்களை இக்கடலோரம் ஈர்த்தது.

> பிறந்த தமிழ்நாட்டில் சாதியக்கொடுமைகளால் விலங்கினும் கேவலமாக வாழ்ந்த
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவரான பாபாசாகிப்
அம்பேத்கர் பிறந்த மண்ணில் "மனிதர்கள்" என்ற முகம் கிடைத்தது. முகவரி கிடைத்தது.
அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்துடன் மராட்டிய மண்ணின் மைந்தர்களுடன் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும் சாதி மத இன அடையாளங்களுக்கு அப்பால் இவர்கள் யாருக்கும்
இந்த மண்ணில் எவ்வித உரிமையும் இல்லை. இந்த மாநில அரசின் அதிகாரங்களில்
இவர்களுக்கான பக்கங்களும் இல்லை.
நகராட்சி மன்ற தலைவர் என்ற அரசு பதவிக்கு மேல் எதையும் நினத்துப் பார்ப்பதும்
இன்றுவரை இவர்களுக்கு கனவுதான்.

இந்த மாநகரத்தின் வெளிச்சத்தில் இன்னும் இருண்டு கிடக்கிறது எத்தனையோ
கோடானக்கோடி உழைப்பாளர்களின் குடிசைகள். இந்தக் குடிசைகள்தான்
இந்நகரத்தின் வியர்வைத்துளிகள்.


இம்மாநகரத்தின் நான்காவது தலைமுறையாக இந்தக் கடலோரம் நின்று
பார்க்கின்றேன். என் கடந்த காலங்களையும் எம் தந்தையர் வாழ்ந்த வாழ்க்கையின்
சாயல்களையும் . உப்புக்கரிக்கிறது கடல் நீரும் எங்கள் கண்ணீரும்.







நட்சத்திரங்கள் இல்லாத என் வானத்தில்
கண்சிமிட்டும் அந்த வெளிச்சம்..
இப்போதும் சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கி
என்னை நோக்கி கை அசைக்கும் வெள்ளைப்பறவைகள்.
இரவைப் பகலாக்கும் வெளிச்சங்களுக்கு நடுவில்
தரையிறங்கும் விமானங்கள்.
ஆகாயத்தின் மேகங்களுக்கு நடுவிலிருந்து
மண்ணைத் தொடும் நேரத்தில்
தேடுகின்றன என் கண்கள்
இந்தக் கான்கீரிட் காடுகளில்
காணாமல் போன என் கடலலைகளை.

பெட்ரோல் டீசல் போடாத
எங்கள் மூன்றுச் சக்கர வாகனங்கள்
எங்களைப் போலவே
மேடுபள்ளம் இல்லாத புல்தரை
எங்கள் குடியிருப்புகளைப் போலவே
எங்கள் அலைகளும் கழிவுகளுடன்.
கடலுக்குள் சிப்பியாம்
மழைத்துளியே சிப்பிக்குள்
முத்துக்களாய் ஜனிக்கிறதாம்..
பருவம் தவறாமல்
பருவமடையும் எம் கார்மேகத்துளிகள்
எங்கள் சிப்பிக்குள் முத்துக்களை
விதைப்பதே இல்லை.
ஜனசமுத்திரத்தைப் போலவே
அலைசமுத்திரமும்
சிப்பிகளை விலக்கி வைத்த பாவத்திற்கும்
சேர்த்தே சிலுவையைச் சுமக்கிறது.

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!!
வாழ்க திராவிடம்!
வாழ்க பாரத மணித்திருநாடு!!
எத்தனை மேடைகள்..
எத்தனைக் கொடிகள்..
ஒலிக்குப்பைகளைச் சுமந்த
எங்கள் காற்றிடம் கேளுங்கள்..
சொல்லக்கூடும் எங்கள் குடிசைகளின்
தொடர்கதையை.

"மாடியில் இருந்து துப்பினால்
குடிசையில் விழும்
குடிசையிலிருந்து துப்பினால்
மாடியே விழும்" **
தெறிக்கும் நறுக்குகள்
எம் கடலடியில் மவுனவாசிப்புகளாய்.
தீப்பெட்டிகளாய் அணிவகுக்கும் குடிசைக்குள்
தீக்குச்சிகளாய் அடங்கிக்கிடக்கும் வாழ்க்கை.
தீக்குச்சிகள் உரசினால் தீப்பிடிக்கும்.
உரச முடியவில்லையே..

சாதி மழை
சமய மழை
அரசியல் மழை
அதிகார மழை
பதவி மழை
பண மழை
ஏதொ ஒரு மழையில் நனைந்து
உரசினாலும் தீப்பிடிக்காத
ஒடிந்தக் குச்சிகளாய்..எங்கள் தலைமுறை.
எங்கெல்லாம் குடிசைகள் இருக்கிறதோ
அங்கெல்லாம் கேட்கிறது
"செம்மொழியான தமிழ்மொழியாஆஆஆம்.ம்..."

தமிழ்ச்சங்கங்கள்
தமிழன் புகழ்பரப்பும் சண்முகாநந்தா அரங்கம்
பூ மணக்கும் மாதுங்கா
செம்பூர் முருகன் திருக்கோவில்
இதைவிட்டால்
டோம்பிவலி விரார் நவிமும்பை கல்யாண்
கிளைப்பரப்பி விரிந்திருக்கும் எங்கள் தமிழுலகம்
எப்போதும் விலக்கியே வைத்திருக்கிறது
மித்தி நதிக்கரையில்
மிதக்கும் குடிசைகளை.

----------------------

(** கவிஞர் காசி.ஆனந்தனின் நறுக்குகள்).

மித்தி எங்கள் மும்பையின் நதி.

-----------------------------------------------

1 comment: