Saturday, December 12, 2009

+ மக்கள் சக்தி _ மைனஸ்_ அரசியல் சக்தி ? ஏன் ?????



-----------------------------------------------------

டிசம்பர் 06, மும்பை தாதர், அண்ணல் அம்பேத்கரின் கல்லறை இருக்கும் இடமான
சைத்தியபூமி ..
கூடும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12, 14, 15 இலட்சம் இந்த வருடம்
15 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்கிறது மும்பை காவல்துறை.
எதற்காக இவர்கள் வருகிறார்கள்?
திருப்பதிக்கோ அய்யப்பனுக்கு மாலைப் போட்டு கூட்டம் கூட்டமாக
செல்லும் மனித மனங்களில் வேண்டுதல்களும் வேண்டியதைக் கொடுத்ததால்
அதற்கு கைமாறாக எதையாவது கொடுக்க நினைக்கும் மனித இயல்பும்,
அவனுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்துவிட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்..
எனக்கு எப்போது கொடுக்கப்போகிறாய் என்ற கேள்வியும் நீ கொடுக்கும் வரை
உன்னை நான் விடப்போவதில்லை என்ற தீர்மானமும் இப்படியாக ஏதோ ஓர்
எதிர்பார்ப்பின் உந்துதல் காரணமாகவே பக்தி என்ற பெயரில் மனிதர்கள்
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற தளம் நோக்கி லட்சக்கணக்கில் ஆண்டுதோறும்
போகிறார்கள்.
இதில் அடிக்கடி புண்ணிய தளங்களை மாற்றிக்கொண்டிருக்கும் பேர்வழிகளும் உண்டு.
நாங்கள் எதையுமே வேண்டி போவதில்லை என்று சொல்லும் ஆன்மீகப் பேர்வழிகளும்
முக்தி, தேவலோகம், சொர்க்கம் , ஆன்மவிடுதலை என்று எதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டுதான் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இத்தியாதி எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக
மும்பை தாதர் கடற்கரையிலிருக்கும் சைதன்யபூமிக்கு வருகிறார்கள் இவர்கள்.
பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 06ல் சைதன்யபூமிக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இலட்சம் இலட்சமாக டிசம்பர் 5, 6 நாட்களில் மும்பையை நோக்கி வரும் இவர்களுக்காக
மும்பையின் காவல்துறை என்னவெல்லாமோ முன்னேற்பாடுகள் செய்கிறது.
குறைந்தது 1500 தொண்டர்கள் தாதர் ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குச்செய்வதில்
காவல்துறைக்கு உதவுகிறார்கள். ஆங்காங்கே தலித் அமைப்புகள், எஸ்.சி, எஸ்.டி யூனியன்கள்
வருகின்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது முதல் உணவு வழங்குவதை வரை தங்களால் இயன்றதை
செய்து வருகிறார்கள்.

அன்றும் இன்றும்
-----------------

தொடர்ந்து இந்நிகழ்வை நான் பார்த்து வருகிறேன். பொதுவாக 5ஆம் தேதி மாலை சிவாஜி பார்க்
போனால் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியே இரவு 12 மணிவரை
கடைசி டிரெயினைப் பிடித்து வீட்டுக்கு வருகிற மாதிரி இருந்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு 6ஆம் தேதி பகல் 2 மணிக்கு புறப்பட்டால் தாதரில் இறங்கியவுடனேயே
கூட்டத்துடன் கூட்டமாக நாமும் நடந்தாக வேண்டும் என்பதை விட அந்தக் கூட்டம் நம்மை
நகர்த்திச் செல்லும் என்பதுதான் சரியாக இருக்கும்.
15 அல்லது 20 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தைக் கடக்க 2 மணிநேரமானது.
'தாயி.. இவளைப் ப்டித்துக் கொள்' என்று சொல்கிறார் ஒருவர்.
அவள் அம்மா வரவில்லை. பக்கத்துவீட்டு குழந்தை என்னை நம்பி அனுப்பியிருகிறாள்'
என்று சொன்னவருக்கு நடுத்தர வயதிருக்கும். அவர் குழந்தை என்று சொன்ன குழந்தைக்கு
10லிருந்து 12க்குள் இருக்கும். என் மும்பை மூளை தப்பு தப்பாக கற்பனைச் செய்து கொண்டு
கவலைப்பட்டது!

அன்று பார்த்தவர்களுக்கும் இன்று பார்ப்பவர்களுக்கும் இடையில் ஓர் அப்பட்டமான
வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. படித்த ஆணும் பெண்ணுமாய், தூய்மையான
உடையில், கம்பீரமாக நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருப்பதாய்ப் பட்டது.
எண்ணிக்கையில் ஆண்களுக்கு குறையாத அளவு பெண்களும். வெள்ளை நிற
புடவை/சுடிதாரில். இந்த ஆண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தையும் தாண்டியிருக்கும்
என்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்கள் வந்ததால் மும்பை நகரமே குப்பைமேடாகிவிட்டது என்று சில வருடங்களுக்கு முன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதி தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டது.
இன்று A sea of people throngs chaityabhoomni in dadar என்று எழுதுகிறது.
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது மேடைகளும் மேடையை அலங்கரிக்கும் கோஷங்களூம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் சம்பந்த மில்லாத அரசியல் தலைவர்கள் எல்லோரும் அம்பேத்காருடன்
போஸ்டரில் போஸ் கொடுப்பார்கள், நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போஸ்டர்கள் மயமாக காட்சியளிக்கும்..
சிவாஜி பார்க்கில் பெண்களும் ஆண்களூமாய் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஈவ்டிசிங், ஆண்கள் பெண்களிடம் காட்டும் சில்மிஷம், கூட்டம் அதிகமாக இருப்பதால் நடக்கும் திருட்டு,
கூட்டங்களில் குடித்துவிட்டு நடக்கும் ரகளைகள்.. இப்படியான எந்தக் குற்றங்களும் இங்கே நடப்பதில்லை.
குடிப்பதும் திருடுவதும் தலித் ஆண்களின் குணாதிசயமாக காட்டப்படும் ஊடகக் காட்சிகளை இங்கே நாம்
பார்க்கவோ படம் பிடிக்கவோ முடியாது.

அறிஞர் அண்ணாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கின்னிஸ் ரிகார்ட் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப்பின் இன்று அந்த தம்பிமார்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றுதான்
தெரியவில்லை! பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்து 53 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை மாறி இன்னொரு தலைமுறை
தன் அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு சைத்திய பூமிக்கு வருவது உலக அரங்கில் வேறு
எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.




இந்த மனித சக்தியை ஒன்று திரட்டி அரசியல் சக்தியாக ஏன் மாற்ற முடியவில்லை?

அம்பேத்கருக்குப் பின் வந்த எவருமே அம்பேத்கரின் இடத்தைப் பிடிக்க முடியாதுதான் எனினும்
தலித்துகளின் நம்பிக்கைக்குரிய ஓரு தலைமை ஏன் உருவாகவில்லை.

ஆண்டுதோறும் சைத்திய பூமிக்கு வருகின்ற வழக்கம் இந்த 50 வருடங்களில் ஒரு சடங்காக
சம்பிரதாயமாக மாறிவிட்டதா?

வந்திருக்கும் எத்தனைப் பேர் அம்பேதரின் சிந்தனைகளை கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு
வாழ்வியலாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடமும் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் உளவியலைப்
புரிந்து கொள்ளூம் முயற்சியில் அவர்களை வாசித்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும்
இருக்கிறோம் நானும் என் அரபிக்கடல் அலைகளும்.

1 comment:

  1. From: Saravana Rajendra (rajesaravana@yahoo.com)
    Sent: 14 December 2009 11:08AM
    To: Puthiyamaadhavi (puthiyamaadhavi@hotmail.com)
    இந்த கூட்டத்தில் நான் 1997‍ம் வருடத்தில் இருந்து தமிழகத்தில் இருந்து வரும் தமிழர்கள் வேண்டாம் வெகுதுரம்(மும்பை தமிழர்களாவது வருகிறார்களா என்றால் அதுதான் இல்லை) சைதன்ய பூமி அருகில் இருக்கும் தாதர் கடற்கரைக்கு சென்று தண்ணீரை தலையில் தெளித்து கண்ணில் ஒற்றீக்கொள்வானே அன்றி மாமனிதர் அம்போத்காரின் நினைவிடத்திற்கு ஒரு வினாடி மரியாதை செலுத்தமாட்டான்.
    வருகிறவர்களும் புகைப்படக்காரரையும் கூடவே கவர் வாங்கும் நிருபரையும் அழைத்துவருகிறார்

    ReplyDelete