Wednesday, October 29, 2008

பிரமிடுகளும் குடிசைகளும்


எது தீவிரவாதம்?
கேள்வி ஒன்று.
பதில்கள் கோடானக் கோடி.

ஆயுதம் தாங்கிய
பாதுகாவலன்
அன்னை இந்திராவை
கொன்றது தீவிரவாதமெனில்
அந்த நள்ளிரவில்
டில்லி வீதிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
விரட்டி விரட்டி
உயிர்க்கொலைப் புரிந்ததை
.............?



அந்த சீக்கிய இனத்திலிருந்து
ஒரு தலைப்பாகை ம்னிதரை
தலைவராக்கும்
தன்னம்பிக்கை,
ஏன் பிறக்கவில்லை
தமிழ்ச்சாதியின்
பெயரால்?
ராஜிவ்
ஈழம்
தமிழர்
இந்த முக்கோணத்தில்
எத்தனைக் காலங்கள்
எங்களை
ஏமாற்ற முடியும்?

எந்தக் கொலைக்கும்
சொல்லப்படும்
காரணங்கள்
வாழ்க்கையின்
அர்த்தம் இழந்துப் போன
பிரமிடுகள்.

எங்கள் தேசத்தலைவர்களே...
பிரம்மாண்டமான
உங்கள் பிரமிடுகளின்
இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து
எட்டிப்பாருங்கள்
அப்போதுதான்
தெரியவரும்
புதைந்து போன
அரசாணைகளைவிட
மேன்மையானது
ஜீவனுள்ள
எங்கள் குடிசைகளின்
அணிவகுப்பு.

No comments:

Post a Comment