Sunday, August 25, 2024

தனிமை வெளியின் மெளன மொழி



தனிமையின் மவுனம்

பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது.

தனிமைத் தேடி ஓடும் மனிதர்கள்

கண்டதில்லை தனிமையை

காட்டிலும் கடலிலும்.

கைவீசி நடக்க இடமில்லாத மனிதர்களின் சாலையில்

எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்களின் பற்களுக்கு நடுவில்

சிக்கித் தவிக்கிறது தனிமையில் ஓர் ஜீவன்.

துணை தேடும் அன்றில் பறவையாய்

உறவுகள் தேடும் காக்கையின் கரைதலாய்

காலம் காலமாய் தன் குஞ்சுகளைக்

காக்கைகளின் கூட்டில் பொறிக்கவைக்கும்

இயலாமைக்காக

ஏங்கித்தவிக்கும் குயிலின் பாடலாய்

இங்கே ஒரு மனித ஜீவன்

தனிமை கவிந்த அறையில்...

தன் தாள்களைக் கிழித்து

வாழ்வின் நாட்களைக் கடக்கிறது.

மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில்

கைப்பிடியில் தொங்கிக் கொண்டு

துணையற்ற தனிமையை

விழுங்கி செரித்து,


ஒரு ராட்சச மிருகத்தைப் போல

விழுங்க யத்தனிக்கும்

பெருநகரப் பிசாசுவிடமிருந்து தப்பிக்க

காத்திருக்கிறது கைநிறைய கவிதைப் பூக்களுடன்

உரையாடல்களின் புல்வெளியில்

உரையாடல்களின் தரிசனத்திற்காக. Is

"அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம்

வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதாக

இன்றைய கவிதை வெளிப்படுகிறது" என்றாரே ராஜமார்த்தாண்டன்..

இவர் அறையிலும் அனுபவங்கள் வாழ்க்கையின்

புதிய வாசல்களைத் திறக்கிறது.

காலங்களின் பயணங்களில்

மின்ரயில்களின்  பேரோசையில்

இதுகாறும் கேட்க மறந்துவிட்ட தன்னிசையை

அடையாளம்  காணுகிறது.

"தொட்டிச்செடிகளின் சங்கீதம்

புரியாமல் போனது இக்காலம் வரையில்

அறிந்தேனில்லை ரயிலில் பாடி யாசிக்கும்

சின்னஞ்சிறுமியின் குரலில் வழியும் தேனின்ருசி

கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது

குழல் விற்பவனின் மூங்கில் கானம்"

"கவிதை ஒரு மோகனமான கனவு "என்றார் புதுமைப்பித்தன்.

இவர் அறையின் கனவுகளில்தான் எத்தனை விதம் விதமான

மோகனப்புன்னகைகள் முகம் காட்டுகின்றன.

முரண்களின் சூழலில் மீறலும் சுகமாகும் கனவுகளில்

நனவிலி மனதின் உருவமற்ற  ஸ்பரிசத்தில்

நேரம்போவது அறியாமல் நீந்தி விளையாடியதில்

ஈரம் அழித்த கவிதைகளின் நடுவே

புதியக்கவிதைகளுக்காய் காத்திருக்கிறது

மாநகரத்தின் மனிதக் கொக்குகள்.

வயிற்றுக்கும் மனசுக்குமிடையே அல்லாடும்

மனசின் கதை

மனித வாழ்க்கையில் புதிய கதையுமல்ல

புதியத்தடமும் அல்ல.

பொருள்வழிப் பிரிவு என சொல்லிவைத்தார்கள்

அகமும் புறமும் பாடிய

நம் சங்ககாலத்து சான்றோர்கள்.

பிரிவும் தனிமையும்

கவிதை அறியாத அறிவியல் கணிதங்களையும்

கவிதை எழுத வைத்தக் கதை

கற்பனையின் ராஜ்யமல்ல.

அப்படியிருக்க,

நெருப்பில் காய்ச்சிய

செம்பழுப்பு சூரியனை

தனிமை கவிந்த அறையில்

சிறைப்பிடிக்க நினைக்கிறது காலம்.

காலத்தை தன் கவிதைகளால்

எட்டி உதைத்து

கவிதையின் திசைகாட்டியாய்

சன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டு

எட்டிப்பார்க்கிறது

கவிதைகள் மிதக்கும் பால்வீதியை

வழிதவறி வடக்கே வந்துவிட்ட

தெற்குவானத்தின் துருவநட்சத்திரம்.


கவிஞர் அன்பாதவனின் முந்தைய கவிதைகளிலிருந்து

விலகி நிற்கிறது

தனிமை கவிந்த அறை.

கவிதைக்குப் பல முகங்கள்,

பல குரல்கள்.

கவிஞனின் வாழ்க்கைப் பின்ணணி,

சூழல், காலம், வயது எல்லாம் சேர்ந்து

கவிஞனின் முகத்திற்கு

முகம் கொடுக்கிறது.

மாநகரம் மும்பை

தனிமையின் தொட்டில்களை மட்டுமே

ஆட்டுவதில்லை.

100 கோடி செலவில் வேடிக்கை விருந்துகள்

இந்த  வெளிச்சத்திற்கு நடுவில்தான்

100 பைசாவுக்கு கடலை விற்கும் கனவுகளுடன்

சிறுவனும் நடக்கிறான்.

தனிமை என்ற பெருநகரச் பிசாசை

விரட்டி,  வதம் செய்து

இந்த மாநகரத்தின் எல்லா அறைகளுக்குள்ளும்

எட்டிப் பார்க்க வேண்டும்

செம்பழுப்பு சூரியனின் வெளிச்சம்.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,

மும்பை 400 042.

14.02.06

அறையின் எதிரொலி:

தனிமை கவிந்த அறை

அவனுக்கு கவிதையின் மகுடம்!

அவளுக்கு...?

பி.கு: கவிஞர் அன்பாதவனின் 'தனிமை கவிந்த அறை'

     கவிதை தொகுப்புக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை.



1 comment:

  1. சிறப்பு, மெளனம் , வெறும் மெளனம் மட்டுமல்ல; மனத்தின் ஒலிச்சிதறல்.

    ReplyDelete