Monday, August 19, 2024

நடுச்சாமத்தில் ஒரு புத்தக விமர்சனம்.

 அன்புடன் புதியமாதவிக்கு



12/03 / 06 ல் டெல்லியில் இருந்து திரும்பிய பின் என் கடிதம் மூட்டையில் பார்த்த உங்கள் மின்சார வண்டிகள் நூலை இப்போ படித்து முடித்தேன். நூலுக்கு சில பல விருதுகள் பரிசுகள் பாராட்டுகள் கிடைக்கலாம், வாழ்த்துக்கள்.

எந்த வகை?

பொதுவாக பரிசுகள் சிறுகதை நாவல் என்கிற பிரிவுகளில் வரும்.

மேலும் சில சிறுகதைகளுடன் ஒரு தொகுதியும் மேலும் கொஞ்சம் விரிவாக இந்த நாவலையும் செய்து இரண்டு நூல்கள் ஆக்கி இருக்கலாமோ? இப்ப வெளிவந்ததில் என்ன தப்பு என்றால் பதில் இராது.பழக்கம் தான். முகம் மளித்தவன் தாடி விட்ட உடன் பலிக்கிறவர்கள் சேச்சே என்கிற மாதிரி சில நாள் கழித்து தாடியை எடுத்தாலும் சேச்சே!

மாறுபடச் சொல்லும் இனிமை :

நூல் முழுக்க இனிக்கின்றது. மனைவியின் மடிக்கு வேண்டும் மனசு, மடிச்சேலையை தொட்டில் ஆக்கி ஆடும் ஆட்டம் என்று இப்படி.கால் வீட்டில் வரும் மாலா - இனிமைக்குப் பதிலாக மும்பை நாற் சந்தியில் - போகும் பாதை மறந்து தவிக்கும் கிராமத்தானின் கவலையைத் தரலாம். பொருள் விளங்காமல்.

சில சொற்கள் தமிழ் தான் என்றாலும் வட்டாரத் தன்மை கருதி பொருள் தந்திருக்கலாமோ!

வம்பாங் கொள்ளை, பருவத்தின் முட்கள் என்பன. நிறைய இந்திக்கலப்பு மும்பைத் தமிழாக!அடி குறிப்பாகவாவது அர்த்தம் சொல்லப்பட்டால் படிக்கும் இந்தி அறியாத தமிழனின் ஏமாற்றம் தவிர்க்கப்படலாம். மும்பையில் வாழும் மனித தீபகற்பங்கள் (பக் 98)உண்மையில் எனக்கும் புரியவில்லை சாரம் (பக் 100)கூட பொருள் தெரியலை.

வியக்க வைக்கும் வருணனைகள்:

சில போகிற போக்கில் வந்து விடுகின்றன. "மாட்டேன்னு ¡"என்று சிஸ்டர் கேட்ட கேள்வியில் இலக்கண பிழையாக ஒரு ஆச்சரிய குறி விழுந்தது என்பது.இந்த மேதமை சிலம்பாட்டத்தை பாமர பொருள் அறியும் சிரமம் நிகழலாம் ! 'வினாத்தாளில் சாய்ஸில் விடும் கேள்வி இது - காதலர்களுக்கு' என்பதும் அப்படி. மிகவும் ரசித்தேன்.

ஓசையில்லா அழுகைகள்:

நிறைய கதைகளில் ஓசை இல்லாஅழுகைகள்.பொன்னாடையை ரிக்ஷா காரருக்கு கொடுத்துவிட்டு திரும்பும் ரசிகை -இயேசுவின் படத்தின் முன்னால் மண்டியிடும் சிஸ்டர் -தாராவியில் ஒரு தாய் -என்று பல கதைகளில் ஷெனாய் இசை மாதிரி இந்த அழுகை இனிமை இருக்கின்றது.இதுதான் படிப்போரை பாதிக்கும்.அந்தப் பாதிப்பு தான் திரும்ப படிக்க வைக்கும்.நம்ம படிக்கத் தூண்டுவது எழுத்தில் வெற்றி. அ அதுதான் இலக்கியம்.

மின்சார வண்டிகள் :குறு நாவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நவீன வாழ்வின் நிகழும் எண்ணற்ற சமரசங்களும் முரண்பாடுகளும் துரோகங்களும் அதிர்ச்சிகளும் கதையில் திணிக்கப்பட்டு ஓடுதளம் போதாமல் முள்வேளியில் முட்டி நிற்கும் விமானம் போல என்று இந்த நாவலைப் பற்றி சொல்ல வைக்கிறது. உதவி செய்வதாய் எய்ட்ஸ் நோயாளி இடம் வேலைக்கு சேர்ப்பவர்,குடிபோதையில் நிகழும் வாசனையான பணக்கார அணைப்பு -முந்திய டிரைவர் எயிட்சில் செத்தார் என்றவுடன் -வெறுக்கத்தக்கதாய் மாறுவது -ஒருத்தனை காதலித்து இன்னொருத்தனை கணவன் ஆக்கி -என் பிள்ளைக்கும் சேர்த்து பள்ளிக்கு நடை -டியூஷன் என்று அக்கா உறவாகவே வரும் சுரண்டல் என்று நிறைய சங்கதிகள் .

மின்சார வண்டிகள் என்று ஏன் பெயர் வைத்தீர்களோ? (அட்டைப்படத்தில் ஒரு வண்டி மட்டும் தான் நிற்கிறது). கவுரியின் எதிர்காலம் -அவலத்தின் உச்சம் துயரத்தின் பாதாளம்.திருடன் முரடன் வேசை வேசையன் எல்லாரும் வாழும் சாள் வீடுகள் போல -கழுதை குதிரைகளை எல்லாம் சுமந்தபடி கவலையின்றி ஓடுகின்றன மின்சார வண்டிகள்என்று சொல்வதாக இருக்கும். மிகப்பெரிய அதிர்ச்சி தந்துவிட்டு ஜெயகாந்தன் கதை ஒன்று ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன. படித்து சில மணிப் பொழுதைக் கழிக்கலாம் என்கிற வாசகனை உங்கள் மின்சார வண்டிகள் -இடித்து நசுக்கி கைமா பண்ணிவிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.அது உங்கள் இலக்கு என்றால் உங்களுக்கு வெற்றி தான்.அப்படி இலக்கு வைத்துக் கொண்டு எழுதவில்லை என்றால்,உங்கள் எழுத்துக்கு வெற்றி.இந்த எளிய ரசிகனின் அன்பான பாராட்டுக்கள்.

-

சங்கமித்ரா



















1 comment: