Saturday, August 17, 2024

அவன் சொல், அவள் ஒலி

 


தமிழில் பின் நவீனத்துவ படைப்புகள் என்றால் ரமேஷ் பிரேதன் எழுதி இருக்கும் 

" அவன் பெயர் சொல்" என்ற புதினம்தான்

முதலிடம்.

எல்லாத்தையும் கலைத்துப் போட்டு அடுக்கி மீண்டும் கலைத்துவிட்டு அடுக்கி..

கடற்கரையில் ஒரு மணல்கோட்டையாக மனித உறவுகள்.

நெய்தல்தான் எனக்கும் பிடித்தமான முதற்பொருள்.

மரகதங்கள் ஒட்டகக் குட்டியைப் பெற்றெடுக்கிறார்கள்.

மூர்த்திகளுக்கு பைத்தியம் பிடிக்கிறது.

மழை.. ஒதுங்க இடம் கேட்கிறாள்.

பிரஞ்சு வம்சாவளி மனைவிக்கு அவன் ஒத்துவராத கருப்பன்.

அவன் உடலுக்கு அடையாளங்கள் திணிக்கப்படுகின்றன.

அவன் மனம் அடையாளங்களுடன் முரண்பட்டுக் கொண்டே..

அடையாளமான உடலைத் தூக்கி சுமந்து கொண்டு அலைகிறது.

அந்த உடல் மரணித்தப்பிறகு

அது விரும்பிய

அடையாளமற்று போதலுடன்.. விடை கொடுக்கிறாள்

அவன் உடலின் உயிர்த்துளி அடையாளமாக அவன் விட்டுச் சென்றிருக்கும் அவன் " மகள்".

***

ஒட்டகம் மேய்த்தவளுக்கு ஒட்டகக்குட்டி..

பன்றி மேய்ப்பவளுக்கு?

நேற்று  புலிமாதிரி உறுமிக்கொண்டு திமிறும் இரண்டு நாய்களைப் பிடித்துக் கொண்டு மரகதம் என் எதிரே வந்தாள்.

அவள் வயிறு இறங்கி

இருந்தது.

குறைந்தது இரண்டு மூன்று குட்டடிகளாவது அவள் ஈனுவாள். 

நான் நாய்களுடன் வலம்வரும் அவள் பின்னால் கையில் ப்ளாஸ்டிக் பையுடன் நாயின் _ அள்ள தயாராக மூச்சிரைக்க ஓடி வந்துக் கொண்டிருக்கும் அவள் புருஷனை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இவன் மூர்த்தி போல பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொள்வதோ

கொலை செய்யப் படுவதோ சாத்தியமில்லை

என்ற நம்பிக்கையில் 

ஒரு புன்னகையுடன் 

அவனைக் கடந்து சென்றேன்.


"அவன் பெயர் சொல்" என்றால்

அவள் பெயர் என்னவாக

இருக்கும்?

சொல்லுக்கு முன் இருந்த

ஒலி அவளாகத்தான் இருக்கும்.!

அவள் ஒலி.

சொல்லை 

சொல்லின் வடிவத்தை

சொல்லின் மாத்திரையை

ஏன் சொல்லின் அடையாளத்தை

அர்த்தத்தை

அவள்தான் தீர்மானிக்கிறாள்.

ஒலியாக அவள் இருக்கும்வரை அடையாளமற்று

வாழ்ந்தவள்.

நீ சொல்லாக மாறிய பிறகுதான்

அடையாளங்களை அவள் பிரசவித்தாள்.

அது ஒட்டகக் குட்டியாக இருந்தால் என்ன?

பன்றி குட்டியாக இருந்தால்தான்

என்ன?

சொல்.. ஒலிகளால் ஆனதுதான்.

ஆனால் மீண்டும் அது

ஒலியாக முடியாது!

அடையாளமும்

அர்த்தங்களும்

சொல்லின் வன்முறை அல்லாமல்

வேறென்ன?!


" அவன் பெயர் சொல்"

வாசிப்பனுபவம்.

வாழ்த்துகள் Ramesh Predan .

வெளியீடு: யாவரும் பதிப்பகம்.


No comments:

Post a Comment