Monday, February 10, 2020

நாம்தேவ் தாசல்


Image result for namdeo dhasal
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களின் வரிசையில் 
இடம் பெற்றிருப்பவர் நாம்தேவ் லக்‌ஷ்மண் தாசல்
மராத்திய கவிதையை நோக்கி உலகக்கவிஞர்களைத் திரும்பிப்
 பார்க்க வைத்த அதிசயம் அவரும் அவர் கவிதைகளும்
அவர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று
 திலீப் சித்ரேயால் வாசிக்கப்பட்ட போது அயல்தேச இலக்கிய வட்டத்தில்
 ஏற்பட்ட அதிர்வுகளின் அலைகள் இன்னும் அடங்கவில்லை.
 மராத்திய கவிதை மொழியை மாற்றி
அமைத்தது மட்டுமல்ல, அவர்  கவிதையின் பாடுபொருள்கள் 
ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து இலக்கிய பிதாமகன்கள்
 இன்னும் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்ந்தக் காலத்திலும் மறைந்தப் பிறகும் நாம்தேவ்
 ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் பார்வையில்  
தன் விசவரூபத்தைக் காட்டுகிறார். நான் நாம்தேவ் தாசலை
 அறிந்தப் போது அவர் நான் விரும்பாத ஒரு கூடாரத்தில் இருந்தார்
அதனாலோ என்னவோ அவரை எளிதில் பார்க்கவும் பழகவும்
 கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த தவறிவிட்டேன்
(காலம் கடந்து அதற்காக வருத்தப்படுகிறேன்.)

இலக்கிய விமர்சனங்கள் ஆகட்டும் 
அரசியல் விமர்சனங்கள் ஆகட்டும் அவற்றை வாசித்துவிட்டு 
ரசித்துவிட்டு தன் போக்கில் தனக்கு சரி என்று படுவதை 
தொடர்ந்து எழுதியும் செயலாற்றியும் வந்தார்
தலித்துகளைப் பற்றிய எழுதிய, தலித்துகளுக்காக 
எழுதிய தலித் கவிஞர் என்று கவிதை விமர்சகர்கள் 
அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட
முயற்சி செய்தார்கள்
எப்போதும் ஜொலிக்கும் மும்பையின் கண்கூசும் வெளிச்சம்
பலதரப்பட்ட இன மொழி மக்களின் வாழ்விடம் மும்பை.
வானுயர்ந்தக் கட்டடங்களுடன் கம்பீரமாக நிற்கும் 
மும்பையின் அடிவயிற்றிலிருந்து அலங்காரங்கள்
 எதுவுமின்றி மும்பையின் ரவுடிகளை,
தாதாக்களை கஞ்சா அபின் கடத்தல்களை, குவிந்து கிடக்கும் 
குப்பைகளைகுப்பைகளின் ஓரமாக களவில் ஈடுபடும் காதலை
 எப்போதும் அணையாத சிவப்பு விளக்கின் காமட்டிபுரத்தை என்று... 
நாம்தேவ் தன் படைப்புலத்தின் காட்டிய மும்பை 
கற்பனை அல்ல. அது நிஜம்
அந்த நிஜங்களைக் கண்டும் காணாது நடந்து சென்ற
 படைப்புலகம் நாம்தேவின் கவிதைகளை அணுக
இப்போதும் அச்சம் கொள்கிறது என்பது தான் உண்மை
நாம்தேவுடன் அரசியல் பேசுபவர்களும் தலித் இயக்கம் குறித்து 
பேசுபவர்களும் கூட அவர் கவிதைகள் குறித்து பேச முன்வரவில்லை 
என்பதற்கு அவர் கவிதைகளின் பயங்கரமான
நிஜம் மட்டுமே காரணம்.

மராத்தி இலக்கிய உலகம் தாண்டி நாம்தேவின் படைப்புகள் குறித்து 
எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் 
கணக்கில் கொண்டால் அது ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை
அதற்குநாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் 
செய்த திலீப் சித்ரே
சொல்லும் காரணத்தையும் புறம்தள்ளிவிட முடியாது.
"நாம்தேவின் கவிதைகள் மொழியாக்கம் செய்பவரை மருட்டும்
அந்த தலித் மொழி, குறிப்பாக மொழியாளுமை அப்படி" என்கிறார்.

நாம்தேவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களான 
அருண் கொலட்கர், கிரண்நகர்கர், விலாஸ் மற்றும் திலீப் சித்ரே 
போன்றவர்கள் மராத்தி மொழியில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் சர்ரியலிஸமும் எக்ஸிஸ்டென்டலிஸமும் 
நாம்தேவின் கவிதைகளில் தான் மிக இயல்பாகவும் சுயமாகவும்
 இடம் பெறுகின்றன. . நாம்தேவுக்கு மராத்தி மொழி தவிர 
பிற மொழிகள் எதுவும் தெரியாது என்ற உண்மையை அறிய வரும் போது
அவர் கவிதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன
பிறமொழி கவிஞர்களின்  மராத்தி மொழியாக்க கவிதைகளை
 அவர் தொடர்ந்து வாசிக்கும் வாசகனாக இருந்தார் 
என்பதையும் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

"
எனக்கென்று எந்தச் சொத்துகளும் இல்லை, என் கவிதைகளைத் தவிர.
என் கவிதைகளை கற்களைப் போல வீசி இருக்கிறேன், குவித்து வைத்திருக்கிறேன் உங்களுக்காக, தெருச்சண்டைகளுக்கு ஆயுதங்களாக"
என்று தன்னைப் பற்றியும் தன் கவிதைகள் குறித்தும்
 அறிமுகப்படுத்திக் கொண்டார்
கவிதை என்பது அழகியல் சார்ந்தது, அழகியல் சார்ந்தது தான்
கலை, கலை கலைக்காக மட்டும் தான்... என்றெல்லாம்
 தலையில் ஒளிவட்டத்துடன் திரியும் அறிவுஜீவிகள் 
இன்றும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள்
இலக்கியம் அவர்களுக்கும் அவர்களின் அடிவருடி  
வாரிசுகளுக்கும் பட்டா போட்டு எழுதிவைத்த சொத்து போல
ஒரு பாவனை! தலித் கவிதைகளின் உரத்தக் குரல்கள் அவர்களை
முகம் சுளிக்க வைக்கிறது. அரசியல் பேசிவிட்டால் 
கவிதை தற்கொலை செய்து கொள்ளும் என்று
 அந்தப் பிதாமகன்கள் பயம் காட்டுகிறார்கள்.
நாம்தேவ் தாசல் தான் 
" என் கவிதை என் அரசியல், என் அரசியல் என் கவிதை"
என்று கடைசிவரை உரக்கச் சொல்லி உண்மையாகவே
வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார்.

நாம்தேவ் தாசலின் கவிதை 


கொடூரம்
------------------

மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்.
துன்பம் மிகுந்த கருணைத்ததும்பும்
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விழிகளில்
வாழ்வின் ஜீவன் எட்டிப்பார்க்கிறது.
அந்தப் பார்வை என்னை அதிரவைக்கிறது.
எனக்குள் இருக்கும் கலகக்காரன்
எனக்குள் வெடிக்கிறான்.
என்னைச் சிதைக்கிறான்.
எங்கும் இல்லை  நிலவின் வெளிச்சம்.
எங்கும் இல்லை தண்ணீர்.
வெறிப்பிடித்தக் குள்ளநரி தன் பற்களால்'
என் சதைகளைக் கிழிக்கிறது.
என் குரங்கு எலும்பிலிருந்து பரவுகிறது
பயங்கரமான விஷம் போன்ற கொடூரம்.

வெறுக்கத்தக்க என் அடையாளங்களிலிருந்து
என்னை விடுதலை செய்யுங்கள்.
நட்சத்திரங்களைக் காதலிக்க விடுங்கள்.
மலரும் ஊதா ஒன்று தொடுவானம் நோக்கி நகர்கிறது.
வறண்ட வெடிப்புகள் நிறைந்த முகத்திலிருந்து
ஒரு பாலைவனச்சோலை  எழுகிறது.
சூறாவளி ஒன்று தணியாத யோனியுடன்
முதலிரவு நடத்துகிறது.
பூனை ஒன்று தாங்கொணா வேதனையின் கூந்தலை
வருடத்துவங்குகிறது.
இரவு என் குமுறல்களுக்கு இடமளிக்கிறது.
சன்னல்களின் கண்களில் தெருநாயின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
நெருப்புக்கோழி தன் அலகுகளால் குப்பையைக் கிளறுகிறது.
எகிப்திய கேரட் தேகத்தின் உண்மையான நறுமணமாகிறது.
கவிதை ஒன்று பிணத்தைக் கல்லறையிலிருந்து எழுப்புகிறது.
சுயத்தின் கதவுகள் மோதி திறக்கின்றன.
எல்லா பெயர்களின்  ஊடாகவும் பரவுகிறது ரத்த ஓட்டம்.
இலக்கண மதில்களைத் தாண்டி மேல் எழுகிறது
எனக்கான நாள்.
படைப்புகளின் படுக்கையில் கடவுளின் மலம்
ஒரே அடுப்பில் சுடப்படுகிறது
வேதனையும் ரொட்டியும்.
ஆடைகளற்ற அக்னி புராணங்களிலும்
நாட்டுப்புறக்கதைகளிலும் வாழ்கிறது
பின்பற்றி சோரம்போன பாறைகள் வாழ்வின் வேர்களைச் சந்திக்கின்றன.
நொண்டிக்கால்களின் மீது நின்று கொண்டிருக்கிறது பெருமூச்சு.
சாத்தான் நீண்ட வெறுமையின் பறையை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஆசைகளின் கதவில் ஊசலாடுகிறது அந்தப் பச்சை இளந்தளிர்.
நிராசைகளின் பிணம் சேகரிக்கப்படுகிறது.
அழிவற்ற நித்தியத்தின் சிலையை ஒரு சைக்கோ மனநிலை
நெருக்கித்தள்ளுகிறது.
தூசி கவசத்தை தோலுரிக்கிறது.
இருட்டு தலைப்பாகை வருகிறது.
நீ... உன் கண்களைத் திற.
இவை எல்லாம் பழைய வார்த்தைகள்.
இந்த ஏரி ஆர்ப்பரிக்கும் அலைகளால் நிரம்பிக்க்கொண்டிருக்கிறது.
கரையோரங்களைத் தொடுகிறது அலைமுறி
இருந்தாலும்,
என் குரங்கு எலும்பிலிருந்து
பரவுகிறது நச்சுப்போன்ற கொடூரம்
நர்மதா நதியின் நிர்மலமான நீரைப்போல தெளிவாக.

No comments:

Post a Comment