Saturday, September 10, 2016

இப்படிக்கு காவிரி...


தற்கொலை தடுப்பு நாள் -செப் 10

World Suicide Prevention Day on September 10, 2016.
இந்த நாளில் என்னைப் பேசவிடுங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.



என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல்
என்றெல்லாம் எழுதி வைக்கப்போவதில்லை.
அப்படியே யார் யார் காரணம் என்று நான்
எழுதி வைத்தாலும் உச்சநீதிமன்றமே
என் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க
வேண்டும் என்று ஆணையிட்டாலும்..
என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது.??
எனக்கு உங்கள் நீதிமன்றங்கள் மீதிருந்த
நம்பிக்கை பொய்த்துவிட்டது.
எனக்கு உங்கள் போராட்டங்கள் மீதிருந்த
அபிப்பிராயங்கள் செத்துவிட்டன.
திருமணமானவுடன் என்னிடம் வந்து மலர்த்தூவி
வழிபட்டு வணங்கி செல்லும் உங்களுக்கு
கொடுப்பதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை.
என்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம்
நான் கெஞ்சப்போவதில்லை.
உங்கள் மன்னிப்பு எனக்கு எதற்கு?
என்னில் கலந்து தன்னை மறந்தக் காதல் உறவுகளை
நஞ்சூட்டி கொலை செய்த பாதகர்கள் நீங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
இனி ... நான் கடந்த காலமாக..
உங்கள் இலக்கியதில் முகநூலில் மட்டுமே
பேசப்பட்ட பாடுபொருளாக ...
என் தற்கோலைக்கு காரணமானவர்கள்
நீங்கள் உருவாக்கிய உங்கள் தலைவர்கள் என்பதால்
உங்களையும் நான் மன்னிக்கப்போவதில்லை.
தற்கொலைக்கு தயாராக இருக்கும் இத்தருணத்தில்
உங்கள் தொட்டிலில் அழும் குழந்தைகளின் அழுகுரல்
என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது.
பாலூட்டிய மார்பகங்கள் புற்றுநோயால் சிதையுண்டு
இனி.. காலம் கடந்துவிட்டது.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
என்னைத் த்டுக்கும் உரிமையை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
இப்படிக்கு ..... காவிரி.

No comments:

Post a Comment