Friday, May 22, 2015

திருக்குறள் தமிழ்நூல் என்றால் தமிழ்நாட்டில் தண்டனை???




சென்னை, தியாகராய நகரில் (மேட்லி தெருவில் காவல் நிலையம் அருகில்) உள்ளது  சிரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசன்  சமணர்(செயின்) பெண்கள் கல்லூரி. இக்கல்லூரியில் 21.02.2015 அன்று நடைபெற்ற  கருணா பன்னாட்டுக் கலைவிழா என நடைபெற்ற விழாவில்,  ஒரு மாணவி  திருவள்ளுவர் திருக்குறளைச் சமணநூல் ஒன்றில் இருந்து மொழிபெயர்த்து எழுதியுள்ளார் எனப் பேசியுள்ளார். இதைக் கேட்டதும் கல்லூரி ஆட்சிக்குழுவினரும் முதல்வர் முதலான ஆசிரியர் கூட்டமும் கைதட்டி வரவேற்பு தெரிவித்ததும் மாணவர்களும்  கைதட்டி வரவேற்றுள்ளனர். ஆனால், பிரிதிவி என்னும் ஒரு மாணவி இதகை் கேட்டதும் அதிர்ச்சியுற்றார்.
திருக்குறளை மற்றொன்று மொழி பெயர்ப்பு நூல்  என்று  தவறாகச் சொன்னதும் உடனே மறுத்துள்ளார். ஆனால், இவரது மறுப்பைக் கல்லூரிக் குழுவினர் பொருட்படுத்தவில்லை. இவர் தகவல் தொடர்பியல் துறையின் இரண்டாமாண்டு மாணவி. கல்லூரியின் பெரும்பாலான கணிணி சார்ந்த வேலைகளையும் ஒளிப்பட வேலைகளையும் இவரின் திறமையால் இவரிடமே கல்லூரி ஒப்படைத்திருந்தது. அந்த வகையில் அந்த விழாவின் ஒளிப்படக் கலைஞராகப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். எனவே, தன் எதிர்ப்பைக்  காட்டாவிட்டால், தான் திருக்குறளைப்பயின்று பயனில்லை என ஒளிப்படம் எடுக்கும் வேலையை விட்டுவிட்டு விழா அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார்.
தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த மாணவி கல்லூரியில் இருந்தால் நல்லது  அல்ல என்ற முடிவிற்கு வந்த கல்லூரியினர்,  எவ்வாறு கல்லூரியில் இருந்து நீக்குவது என எண்ணியுள்ளனர்.  எனவே, பிற மாணவிகள்  மூலம் மாணவி பிரிதிவிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இம்மாணவியையும் இவரின் தாயாரையும் ஒரு மாணவி தகாச் சொற்களால் ஏசியுள்ளார். இது தொடர்பில் வருமாறு 11.3.15 அன்று அழைத்து மாணவி பிரிதிவியிடம் அப்பெண்ணை அடித்ததாகக் கூறியுள்ளனர்; இவரிடம் மன்னிப்பு கேட்குமாறு தெரிவித்துள்ளனர்.  திருக்குறளைப்பற்றிய தவறான கருத்திற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான் என்று கூறி, அதற்காகவும் அடிக்காததற்காகவும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். உண்மையிலேயே திட்டிய மாணவிமீது, அவ்வாறு திட்டியதை ஒப்புக்கொள்ளும் கல்லூரியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அடித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி  ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த இடை நீக்க ஆணையை அளித்துள்ளனர். அதற்கு அடுத்த இரு நாளில் முழுமையாகக் கல்லூரியில் இருந்து நீக்கித் தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
விண் தொலைக்காட்சி  வைகாசி 05, 2046 / 19.05.15 செவ்வாயன்று, நீதிக்காக  நிகழ்ச்சி மூலம் இதனை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. விண் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சி நடத்துநர் திரு துரைபாரதிக்கும் ஏற்பாட்டாளர் திரு மோனிசு கண்ணனுக்கும் தமிழ் உள்ளங்களின் சார்பில் நன்றி. எனக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று  இதன் மூலம், திருவள்ளுவர் தமிழர்க்காகத் தமிழில் எழுதிய நூலே திருக்குறள் என்பதையும்  இன்பத்துப்பால் எனத் தனியே இல்லற இன்பம் குறித்து உலகப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதால், சமணச்சார்பில்லை என்பதையும் விளக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது என்று தமிழ் உலகம் மடலாற் குழுவில் பதிவு செய்திருக்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

திருக்குறள் சமணநூல் என்று சொல்ல சமணக்கல்லூரிக்கும் அந்த மாணவிக்கும் இருக்கும் உரிமையை நான் மறுக்கவில்லை. இம்மாதிரியான கருத்துகள் திருக்குறளுக்கோ தமிழ் ஆய்வு உலகிற்கோ புதிதல்ல. ஆனால் 'திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலல்ல, அது தமிழன் எழுதிய தமிழர் வாழ்வியல் நூல் " என்று சொல்லவும் வாதிடவும்  பிரிதிவிக்கு அதைவிட அதிக உரிமை இருக்கிறது. அந்த உரிமையை மீது தன் அதிகாரத்தைக் காட்டும் கல்லூரியையும் கல்லூரி நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன். 
கல்லூரியைத்  தொடர்பு கொண்டு (044 - 2432 8506 / 2432 8507 ; 044 - 4286 8246 / 4286 8247)  கண்டனம் தெரிவித்து, மாணவியை மீளச் சேர்க்கவும் தேர்வு எழுதச் செய்யவும் வற்புறுத்துங்கள்.

சரி.. தேடுங்கள்..இப்போது

எங்கே போனார்கள்  நம் தமிழினக்காவலர்கள்?

2 comments:

  1. கல்லூரியின் செயல் கண்டனத்திற்கு உரியவது சகோதரியாரே
    கல்லூரியைத் தொடர்வு கொள்வோம் கண்டிப்போம்

    ReplyDelete
  2. எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் சகோதரியாரே

    ReplyDelete