Thursday, June 24, 2010

கவிஞனைச் சந்திக்க நேர்ந்தால்.


கவிஞனின் கவிதையை ரசித்தால்
வாசியுங்கள் மீண்டும் மீண்டும்..
வார்த்தைக்கு வார்த்தை அப்படியே
மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்
திறந்த வெளியில்
மேற்கூரையில்
தனியாக நின்று
தனக்குத் தானே
சொல்லிப்பாருங்கள்

ஆனால் வேண்டாம்
அந்தக் கவிஞனை
நேரில் சந்திக்கும் முயற்சிகள்
வேண்டவே வேண்டாம்.
அப்படியே எப்போதாவது
சந்திக்க நேர்ந்தால்......
கவிதை மீதான உங்கள் ரசனை
முட்டை ஓடுகளைப் போல
உடைந்துவிடக்கூடும்!

கவிதையைப் போல
கவிஞனின் உள்ளம்
அப்படியொன்றும் அழகானதல்ல.!
அவன் இதயம்
புதுப்புனலின் அலைகளைப் போல
பொங்கி எழுவதில்லை.
சாதாரண மனிதர்களின் நடுவில்
அவன்
ரொம்பவும் சாதாரணமானவன்.

கவிதையைப் படியுங்கள்
மறந்துவிடுங்கள் கவிஞனை!
எங்கோ எப்போதோ
அவனைச் சந்திக்க நேர்ந்தால்
காதலின் வசீகரத்தையோ
கவிதையின் ஆன்மாவையோ
தேடாதீர்கள் அவனிடம்.

(Translation from Indian Literature
sahitya akademi's bi-monthly journal
May-June 2009 No:251)

oriya poet Sunanda Pradhan

No comments:

Post a Comment