Tuesday, August 5, 2008

சிறகு எரிந்த பறவை



சுமைகளின் பாரம் தாங்காமல்
மரக்கிளையில் அமர்ந்து
ஆகாசத்தின் எல்லைகளை
ஏக்கத்துடன் பார்க்கிறது
நேற்றுவரைப் பறந்து திரிந்த
அந்தப் பறவை.

காதல் முத்தங்களின்
கண்மூடிய தருணங்கள்
மீண்டும் மீண்டும்
பற்றி எரிய
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகுகள் எரிவது தெரியாமல்
கழிந்துப்போனது
கண்ணாடிக்கூடுகளில்
அதன் காலம்

எப்போதும்
எல்லோருக்காகவும்
எதையும் சுமக்கவே
தயாராக இருப்பதால்
வரிசைவரிசையாக
காத்திருக்கும் நட்சத்திரங்களுக்காக
சூரியனை இழந்துப் போனது
பறவையின் ஆகாயம்.

"நட்சத்திரங்களும் சூரியந்தானாம்"
ஆறுதலாய் இருக்கிறது
இப்போதைக்கு
இந்த உண்மைமட்டும்தான்.
"பறக்கும் துணிவிருந்தால்
அத்தனை சூரியனும்
என் ஆகாசத்தில் வசப்படும்"
தனக்குத்தானே பேசிக்கொள்கிறது
எரிந்த சிறகுகளை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே
அந்தப் பறவை.

No comments:

Post a Comment