Sunday, July 27, 2014

பனிக்கட்டியில் உறைந்த மரணம்





மரணங்கள் புதிதல்ல.
ஆனாலும் ஒவ்வொரு மரணமும்
வெவ்வேறு முகங்களுடன்.

பனிக்கட்டியில் உறைந்துக் கிடந்த 
உன் மரணம்
உடைக்க முடியாத கூர் வாளாய்
என்னைக் கிழிக்கிறது.
உன் கைப்பிடித்து நடந்த
சிறுமியாய் 
உன் கடிதங்களில் வளர்ந்த
கல்லூரி நாட்கள் வரை
மீண்டும் உன்னோடு
மீண்டும் உன்னோடு
.............
பனிக்கட்டியில் நடக்கிறேன்.
சில்லென்று குளிரும் பனிக்கட்டி
இன்று நெருப்புக்கங்குளாய்..

நீ வாசிக்க கொடுத்தப் புத்தகங்கள்
என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம்.
நீ வாசிக்காத புத்தகங்கள்
என் வாழ்க்கையின் அடுத்தப் பக்கங்களை
தானே எழுதிச்சென்றது.
உன்னை விட்டு ரொம்ப தூரம்
பயணித்துவிட்டதாய் நீ நினைத்தாய்.
என் பயணங்களில் உன் கனவுகளைச்
சுமந்து கொண்டு  நடப்பதை
என் மெளனத்தில் எழுதிக்கொண்டே
இருந்த நாட்கள்
கருப்பு பிரதிகளாய் இப்போது...

( .மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் அமைப்பாளரும், மும்பையின் மூத்த பத்திரிகையாளருமான பெரியார் பெருந்தொண்டர் திரு சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் (வயது 80)  (23.07.2014) அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்.
பெரியார் பெருந்தொண்டர்,  உறவு முறையில் அத்தையின் கணவர்.
எனவே மாமா. ஆனால் எனக்கு என் தோழன். என் முதல் புத்தகம்.)




1 comment:

  1. ஆகா... நான் மும்பை வந்தபோதெல்லாம் சந்தித்திருக்கிறேனே!
    அந்த இனியவரின் மறைவு மிகக் கொடுமையானது. “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ“ என்னும் கண்ணதாசன்தான் நினைவுக்கு வருகிறான்.. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete