Wednesday, May 28, 2014

காணாமல் போன தண்ணீர் கூஜா








மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வது எங்கள்

 வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிகழ்வு. எங்களில் பலருக்கு  

அந்த ஒரு சில நாட்களில்  வாழ்வதற்காகவே மற்ற நாட்கள் 

 எல்லாம் சாக்கடை ஓரத்தில்  கழிகிறது.  



எங்கள் வீடுகளில் அப்போதெல்லாம் தண்ணீர் கூஜா கட்டாயம்

இருக்கும். பெண்ணுக்குத் திருமணமாகிப் போகும் போது கொடுக்கும்

சீர்வரிசையில் இந்த தண்ணீர் கூஜாவும் இடம் பெறும் என்றால்

பார்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் கூஜாவின் முக்கியத்துவத்தை!


அப்போதெல்லாம் ஜனதா டிரையினில் பயணிப்போம். 

ஜனதா டிரெயின்  காலையில் வி. டி ஸ்டேஷனிலிருந்து  

புறப்படும்.  மூட்டை முடிச்சுகள்,    டிரங்க்பெட்டி அத்துடன்  

ஹோல்டால் என்று சொல்லப்படும் படுக்கை

மறக்காமல் தண்ணீர் கூஜா வைத்திருப்போம். அத்துடன் தண்ணீர்

காலியானவுடன் டிரையின் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி

தண்ணீர் கூஜாவை நிரப்பிக் கொள்வோம். டிரெயின் நிற்கும் போது

தண்ணீர் கூஜாவை நிரப்புவதும் ஓடி வந்து டிரையினில் ஏறுவதும்

சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். 

அந்த தண்ணீரைக் குடித்த எங்கள் யாருக்கும் 

 ஊருக்குப் போனவுடன் எந்தவிதமான உடல் நலக்குறைவும்

ஏற்பட்டதில்லை.  1



10 நாட்களுக்கு முன் நீண்ட இடைவெளியில் சென்னைக்கு

டிரெயினில் பயணித்தேன்.  ரயில் நீர் பாட்டிலில் அடைத்து

விற்பனைக்கு  வந்துவிட்டது.   நான்  பயணங்களின் போது இறங்கி

தண்ணீர் நிரப்பிய குழாய்கள் உடைந்து போயிருந்தன.

சில இடங்களில் காணாமல் போடிருந்தன.  தண்ணீர்க் கூஜாவின் நினைவு

என்னை அலைக்கழித்தது. மீண்டும் மும்பைக்குத் திரும்பியவுடன்

என் தண்ணீர்க் கூஜாவைத் தேடிப் பார்த்தேன். அதைக் காணவில்லை.


என் தாய்வீட்டு சீதனமாக என் அம்மா ஆசையுடன் கொடுத்த அந்த


தண்ணீர்க் கூஜாவைக் காணவில்லை.



ஃபிரிட்ஜ் வாட்டர், மினரல் வாட்டர் , அத்துடன் பலவகையான பழரசங்கள்

எவ்வளவோ குடித்துப் பார்த்து விட்டேன், அடங்கவில்லை என்

தண்ணீர்த்தாகம்.  என் தண்ணீர்க்கூஜாவை இனி நான் பார்க்கவே முடியாதா?

பெற்ற தாயை  இழந்த தருணத்தில் அழுதக் கண்ணீர் மீண்டும்

என் விழி இமைகளை நனைக்கிறது.   என் தண்ணீர்க் கூஜாவை நான்

இழந்துவிட்டேன்.  எப்போது மரணம் சம்பவித்தது என் தண்ணீர்க் கூஜாவுக்கு?

யாரிடம் பறி கொடுத்தேன்  என் தாய் கொடுத்த தண்ணீர் கூஜாவை?

இதோ... என் தொண்டையை யாரோ அமுக்கி என்னைக் கொலை

செய்ய வருகிறார்கள்.  தண்ணீரைக் கூஜாவில் நிரப்பிக் கொண்டு

பயணங்களில் சாகசங்களுடன் வாழ்ந்த அந்தச் சிறுமியின் பயணம்

முடிந்து விட்டது.


இனி என்னால் கண்டு பிடிக்கவே முடியாது,

காணமல் போன என் தண்ணீர் கூஜாவை.


------







2 comments: