Friday, December 10, 2010

மீன் தொட்டி

அழகான வளவளப்பான கரைகளுடன்
எனக்காக நீ எழுப்பிய
புதிய சமுத்திரம்.
அலைகளோ வலைகளோ
என்னை
விலைப் பேசிவிட முடியாத
புதிய சாம்ராஜ்யம்.

எப்போதும் இதமான வெளிச்சம்
சுகமான காற்றுக் குமிழிகள்
தேடி அலைய வேண்டியதில்லை
எனக்கான என் உணவை.
வேண்டும் போதெல்லாம்
விதம் விதமான
சுவைகளுடன்
விருந்துகளின் ஆரவாரம்.
பாடுகின்றேன்
கனவுகளுடன் ஆடுகின்றேன்
கண்ணாடிக் குடுவையின்
திரவங்களைப் பருகிய
போதையில்
தள்ளாடுகிறது
என் பருவ மேனி.








காமம் உடைத்தப்
புதுவெள்ளமாய்
அலைகளில் கலக்கும் நதிகளை
நான் மறந்துவிடுவது
உன் சமுத்திரத்தை மட்டுமல்ல
உன்னையும் காக்கும் அறம் என நம்புகிறாய்
அதனாலேயே
உன் சமுத்திரத்தில்
அடிக்கடி
தண்ணீரை மாற்றுவதை மட்டும்
நீ மறப்பதே இல்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
பழையக் கடல் ,நதி,
பவளப்பாறை
சுறாவின் வேட்டை ,சுனாமி
எல்லாமே
உன் புதுவெள்ளத்தில் கரைந்து
காணாமல் போய்விடுகின்றன..
ஆனால்
மழைத்துளிகள்
செதில்களை நனைத்து
முத்தமிட்ட இரவுகள் மட்டும்
இன்னும் ஈரமாய்....

No comments:

Post a Comment