Wednesday, August 29, 2007

மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்


மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்

----------------------------------------------------
மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.
ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்து
நடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
புலவர் இரா.பெருமாள் அவர்கள் தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு அஞ்சலி கவிதை வாசித்தார்.

தோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் தோழர் இராசேந்திரன்.
தோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு
நிகழ்வுகள் மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம் தான் அவரை மும்பைக்கு
அழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தளும்ப அவர் நினைவுகளை,
பணிகளைப் பகிர்ந்து கொண்டார்.

தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணியைப்
பற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதியமாதவி. 'விடுதலை இயக்க
வேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித்முரசில்
தொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும் அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும்
தலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு தலித் இயக்க வரலாற்றில்
தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப்
பட்டியலிட்டார். தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆண்டதை விட அயலவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அதிகம். அதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக
இருந்தக் காலம் அதைவிடக் குறைவு. இருந்தும் சங்கத்தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழ் தன் மூலத்தன்மையை இழந்துவிடாமல் சேரிகளில் தான் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.
ஆதிதிராவிட சிந்தனையாளர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து புராணங்களின்
பொய்மை கலக்காத அவர்களின் படைப்புகளை எல்லாம் தோழர் அறிமுகம் செய்திருக்கும் பாங்கினை எடுத்துக்காட்டினார் புதியமாதவி.
பாபாசாகிப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இணையும்
புள்ளியிலிருந்து தான் இந்திய மண்ணில் சமத்துவமும் சாதி ஒழிந்த
சமுதாய மானுட விடுதலையும் சாத்தியப்படும் என்பதை தன் எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்க்கையின் மூலமும் நமக்கான செய்தியாக விட்டுச்
சென்றிருக்கிறார் தோழர் வள்ளிநாயகம் என்றார்.

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் தோழர்
சு.குமணராசன் நம்மை, நம் வரலாற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய
25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்து பயன்பெற
வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

நடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்
பெற்று தேர்வில் வெற்றி பெற்ற தலித் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கை குறிப்பினை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆதிதிராவிட சிந்தனையாளர் சபையின் ஆணை அதிகாரி திரு.சேகர்சுப்பையா.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த வி.ஜே பாலன்,
திருவள்ளுவர் பவுண்டேசன் அமைப்பைச் சார்ந்த எம்.ஜெயம், மற்றும்
தேவராஜன் மற்றும் பல மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையின் பொருளாளர் திரு.ஜசக் நியூட்டனும்,
நிர்வாக அதிகாரி சேகரும் தோழர் ஏபி.வள்ளிநாயகத்தின் நூல்களைத் தமிழக அரசு அரசுடையாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை
முன்மொழிந்து நிறைவேற்றினர்.

.............

No comments:

Post a Comment