Friday, March 20, 2009

பூப்பு நீராட்டு





புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.

பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.

பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே
இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை.
பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி
அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது.
ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த
முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து
அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே
இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும்
ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண
முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் எற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது
மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு
--------------------------------

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும்
பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி
சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன.
அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம்.
அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும்
அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை
தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான
அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie)என்றும்
பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின்
இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:
---------------------------------------
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று
சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம்
உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ
அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள்
என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும்.
பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த
அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய
ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள்
என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும் . அந்தப் பெண் அவள் ஒத்தப்
பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள்.
பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே
பூப்படந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது
விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின்
முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்தித்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது.
"பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது.!
தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை
உண்மை, பொய் அனைத்தையும் "பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

சங்க இலக்கியத்தில் பூப்பு
----------------------------

பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை.
தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)

என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது.
இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும்
பூப்பன்று.

பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானுறு பாடல், ம்கட்பாற் காஞ்சித்துறைப்
பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.

"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக,
பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள்
மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.

காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை
ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை..

சடங்குகளூம் சமூக மாற்றங்களும்
--------------------------------------
"அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன.
சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு
ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு
சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக
வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன.: என்பார் ராஜ்கவுதமன்.
இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep)
அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/
சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார்.
"தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள்
வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்)
இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண்
ஏற்கிறாள்.

பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான்.
பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக
சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த
கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே
காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட
சமூகக் காரணிகளாக மாறியது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி
நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும்
சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும்
துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில்
தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.

தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும்.
இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில்
"முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம்.

தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில்
கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும்
பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில்
ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை.
சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய
பூப்படைதலுடன் தொடர்பு படுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது.
பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள்.
பெண் அடிமையாகிப்போனாள்.
எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை
அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும்
பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.
பழமை என்பதால் பாதுகாக்கலாம்
அருங்காட்சி அகத்தில்.
அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும்.
சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம்.
தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.


வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.
- கவிஞர் கனிமொழி.


துணைநின்ற நூல்கள்:

> பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.

> welcome to womenhood) – sharon supriya

Friday, March 13, 2009

வீரவணக்க வரலாறு





வீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்




என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும்.
அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும்
அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில
விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும்.

ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான்
ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை
வளர்த்திருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009ல்
ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை
போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் பிற்பகலில் கலந்து கொண்டேன்.
ஈழத்திலிருந்து வந்திருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) எம்.கே.சிவாஜிலிங்கம்
ஈழத்தில் நடக்கும் செய்திகளைப் பேசினார்.. அப்போது கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன்
ஓவென அழுது அருகிலிருந்த நண்பனின் மடியில் படுத்துக் கொண்டான. அவன் கண்களிலிருந்து
கண்ணீர்த் தாரைத்தாரையாக வழிகிறது. அவன் கால்களும் கைகளும் நடுங்குகின்றன.
அவன் உடல்மொழி என்னை அச்சுறுத்தியது. இதே மனநிலையில் இந்த இளைஞன்
இருந்தால் அல்லது அவனுடைய இந்த மனநிலை வளர்க்கப்பட்டால் இவனும்
வீரவணக்கம் பட்டியலில் வந்துவிடுவானோ என்ற அச்சம் ஏற்பட்டது.
ஒரு தாயாக சகோதரியாக அவனைப் பார்த்த எனக்கு அவன் கண்களும் அந்தக் கண்களில்
கண்ட சோகமும் இயலாமையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன்
உடல் நடுங்குவதையும் கண்டு அச்சம் ஏற்பட்டது. அப்படியே அவனை அழைத்துக்கொண்டு
மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுவதும் நன்றாக ஓய்வு கொடுப்பதும் தேவை என்று
என் உள்ளம் சொன்னது. அருகிலிருந்த நண்பரிடம் "அவனுக்கு குடிக்கத் தண்ணீர்க்கொடுங்கள்
டேக் கேர் ஆஃப் கிம்" என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தப் பார்வை
அந்த இடத்திலிருந்து என்னை நகர்த்தியது.
அதன் பின் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த உயிர்த்தியாகங்கள் என்னை இதை
எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. அதிலும் கட்சிவாரியாக தமிழ்நாட்டில்
தீக்குளிப்புகள் நடக்கிறதோ என்று ஐயப்படும் அளவுக்கும் பத்திரிகை செய்திகள்
பயமுறித்தின.

கொழுந்துவிட்டெரியும் ஈழத்துப் பிரச்சனைகளுக்கு நடுவில் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம்
செய்த எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒரு
கணத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மன அழுத்தம். அதுவும் , தான், தன் மனைவி, மக்கள். சாதி,
சமயம், ஊர், உறவுகள் என்ற வட்டங்களை உடைத்துக்கொண்டு தன் சகமனிதனின் துன்பம் கண்டு
சகிக்கமால் தங்கள் இயலாமையின் காரணமாக சினம் கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.
அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் தான்.
இன்னும் சொல்லப்போனால் அரசாங்கத்தை ஓட்டுப்போட்டு உருவாக்கிய நாமும்
அரசியல் தலைவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நம் சமூகமும் தான் குற்றவாளிகள்.
வீரவணக்க வசனங்களை, கவிதைகளை மறந்து அறிவுப்பூர்வமாக இதை அணுகும்போது
தமிழினத்தின் இயலாமையோ என்ற எண்ணம் வருகிறது!


வீரவணக்கம் என்ற வழிபாடு நம் இனக்குழு பண்பாட்டின் எச்சமாகவே நம்மிடம் தொடர்கிறது என்று
நினைக்கிறேன். சங்க இலக்கியத்தில் புறநானூறு 335ல்
"பகைவர் முன்நின்று தடுத்து யானையைக் கொன்று மரணம் அடைந்த வீரனுக்கு எடுத்த
நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர வேறு வழிபாடில்லை" என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டின் தாக்கத்தை அப்படியே இந்தி எதிர்ப்பின் போது உயிர் நீத்த தாளமுத்து, நடராசன்
விசயத்தில் திராவிட இயக்கங்கள் பயன்படுத்திக்கொண்டன.
போர்க்களத்தில் வீரமரணம் அடைவதும் தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் தன்னுயிரை மாய்த்துக்
கொள்வதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை நாம் அறிந்திருந்தாலும்
வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசவோ எழுதவோ அச்சப்படுகிறொம். அந்தளவுக்கு
நம்மை நம் தலைவர்களும் சமூகமும் கட்டுப்படுத்து வைத்திருப்பது உண்மை.
இன்னொரு செய்தியும் எனக்கு நினைவுக்கு வருகிறது .2008, 26/11
மும்பை மாநகர தாக்குதலின் போது எதிரியின் குண்டுக்குப் பலியான மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள்-
(Hemant Karkare, Ashok Kamte and Vijay Salaskar) ஹேமந் கர்க்கரே, அசோக் காம்டே, விஜய் சாலஸ்கர்
மூவருக்கு இந்திய அரசு அசோகச்சக்ர விருது வழங்கியது. ஆனால் இம்மாதிரி தாக்குதல்களில்
எதிரியின் குண்டுக்குப் பலியாவதும் போர்க்களத்தில் எதிரியை எதிர்க்கொண்டு போரிட்டு உயிரிழப்பதும்
ஒன்றல்ல. மும்பைத் தாக்குதலில் பலியான அவர்களை மதிக்கிறோம் எனினும் அவர்களுக்கு இவ்விருது
வழங்கப்பட்டது சரியல்ல என்று இந்திய இராணுவ படைத்தளபதிகள் தம் கருத்தை மிகவும் தெளிவாக
முன்வைத்தார்கள்.

நம்மில் பலர் நினைக்க கூடும். இம்மாதிரியான உயிர்த்தியாகங்கள் மக்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தவல்லன.
இந்திப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை நம் தமிழ்ச்சாதி கண்ட உயிர்த்தியாகங்களின் எழுச்சிகள் மூலம்
நாம் சாதித்துக் கிழித்தது என்ன? இன்றுவரை நடுவண் அரசின் இந்தி மொழிக்கொள்கை புறவாசல் வழியாக
ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறதே! செம்மொழி நாடகத்தில் தமிழன் இந்திய அரசால் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டான்?
நாம் செய்தது என்ன? 1983லிருந்து ஈழத்து நம் உறவுகளுக்காக நாம் எழுதி எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளும்
கவியரங்கங்களும் இலட்சங்களைத் தாண்டும். ஒரு கவிதை ஒரு தமிழன் உயிரைக் காப்பாற்றி இருந்தால் கூட
இன்றைக்கு நம் ஈழத்தமிழ் மண் இடுகாடாகியிருக்காதே!

எதையும் உணர்வுப்பூர்வமாக பார்ப்பது தவறல்ல. ஆனால் அப்படி மட்டுமே பார்ப்பது மாபெரும் தவறு.
பிரச்சனைகளைத் தீர்க்க அறிவாயுதம் ஏந்த வேண்டும்.






ராஜீவ்காந்தி மரணத்தில் தமிழினம் எவ்வளவு பாதிக்கப்பட்டதோ அதைவிட அதிகமாக அவர் அன்னையார்
இந்திராகாந்தி அம்மையார் மரணத்தில் 1984ல் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள்
கண்டனக் கவியரங்கங்கள் நடத்தவில்லை. உயிர்த்தியாகங்கள் செய்யவில்லை. ஆனால் செயலில் காட்டினார்கள்.

"ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்"
என்று 3000 சீக்கியர்களை டில்லியில் கொன்று குவித்ததை அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்தி பேசினார்.
கொதித்துப் போன சீக்கியர்கள் விடவில்லை. கொஞ்சநாள் கடந்து ராஜீவ்காந்தியை மன்னிப்பு கேட்ட வைத்தார்கள்.
(தெளிதமிழ் இதழ் 13/2/2009 பக் 17)

சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம்.


வீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்.

கட்சிவாரியாக தீக்குளிப்புகள்
வீரவணக்கங்கள்
கூட்டங்கள் தலைவர்கள்
வீரவசனங்கள்
அறிக்கைகள்
அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்
கதவடைப்புகள்
கண்டனக்கூட்டங்கள்
கவிதையின் இடிமின்னல்
போதும் போதும்..

முத்துக்குமரன்களை ஈன்ற
அன்னையின் கருவறை சத்தியமாய்
எமக்கு வேண்டும்
எம் மண்ணில்
ஒரே ஒரு மண்டேலோவின்
மனித சரித்திரம்..

-----------------

Wednesday, March 11, 2009

வீரகேசரி நாளிதழில்



முகமும் முகவரியும் அறியாத உங்களைப் போன்றவர்களின்
வாழ்த்துகளும் விமர்சனங்களும் தான் என் எழுத்துப்பயணத்தை
அர்த்தமுள்ளதாக்கும் சத்தியக்கடிதாசிகள். மிக்க நன்றி.

http://epaper.virakesari.lk/Default.aspx?selpg=866&selDt=03/09/2009&BMode=100#
Published on March 09 2009 ,Page 19

Monday, February 16, 2009

இது அரசியல் கோஷமல்ல




வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது..

இது-
அரசியல் கோஷமல்ல.

வடக்கில் வங்கத்துப் போர்முனையில்
வடக்கில் பஞ்சாபின் படுகொலையில்
பாய்ப்போட்டு
படுத்து உறங்கிய
இந்திய இறையாண்மை
தெற்கே
இந்துமாக்கடலில் மட்டும்
இரவெல்லாம் விழித்திருந்து
காத்திருந்து
காவல் காக்கிறதாம்!
யாருக்காக?
எதற்காக?
இப்போதும் வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத்தேய்கிறது

பக்கத்துவீட்டு பாகிஸ்தானின்
பங்காளிச்சண்டையில்
வங்கதேசம் வந்துதித்த வரலாற்றை
எழுதி எழுதி
பூரித்துப்போன பாரதமாதாவுக்கு
தெற்கே
இலங்கைத் தேசத்தில்
ஈழம் மட்டும்
கசக்கிறதா..?

வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

இந்திய தேசத்தில்
இவர்தான் "தேசப்பிதா" என்று
பாடப்புத்தகத்தில்
எங்களைப் படிக்க வைத்தீர்கள்
அந்த தேசப்பிதாவைக்
கொன்றவனின் கூட்டத்தைக் கூட
உங்கள் அரசியல் வானத்தில்
தலைவர்களாக
அடையாளம் கண்டீர்கள்.
ஒரு பாரதப் பிரதமரைக்
கொன்றவர் என்பதற்காய்
தலைப்பாகைக் கூட்டத்தை
ஒதுக்கவில்லையே..!
ஏ.. பாரதமாதா..
இதெல்லாம் உனக்கு
மறந்துப் போயிருக்கலாம்
மன்மோகன்சிங்கே ..
உங்களுக்கு எப்படி
மறந்துப் போனது?

இப்போதும்
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

சரித்திர உண்மைகளை
மாற்றி எழுதிய
உங்கள் பொய்முகத்தை
அண்ணாவின் ஆரியமாயை
கிழித்து எரிந்ததை
அவாள்கள் மறக்கலாம்
அண்ணாவின் தம்பியர் மறந்தது ஏன்?

ஆரியமாயையின் புதியநாமம்
இந்தியமாயை.
ஆங்கிலேயன்
அடிமைகள் கழுத்தில் தொங்கவிட்ட
அந்த அடையாள அட்டையுடன்
உலாவருகிறீர்கள்
வரலாற்றில் கறைப்படிந்த
உங்கள் கரங்களால்
ராஜீவின் கதையைச் சொல்லிச்சொல்லி
எங்கள் வரலாற்றைக்
களங்கப்படுத்தாதீர்கள்!
முடிந்தால்-
ஒரு கணமேனும்
உங்கள் முகமூடியைக்
கழட்டி வைத்துவிட்டு
உங்கள் முகத்தைப் பாருங்கள்

பஞ்சாபி என்றும்
வங்காளி என்றும்.
மராட்டியன் என்றும்
அசாமி என்றும்
பீகாரி என்றும்
காஷ்மீரி என்றும்
உங்கள் முகங்கள்
உங்கள் முகங்களாக
ஒப்பனைகளின்றி தெரியும்.
அந்தப் பிம்பங்களுக்கு நடுவில்தான்
உங்களால் பார்க்கமுடியும்
எங்களை-
எங்கள் தமிழ் முகத்தை
எங்கள் ஈழ தமிழ் நிலத்தை.

வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இது இனி அரசியல் கோஷமல்ல.

உலகச்சந்தையில்
இந்திய முகங்களைப்
பட்டா போட்டு
விற்றுத் திரியும்
பாரதமாதாவே..
உன் புதல்வர்களிடன் சொல்லிவை.

வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இது அன்று பாடிய மரபுக்கவிதையல்ல.
இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
இதில் மரபுச் சட்டங்கள் உடையும்
பயமுறுத்தும் சீர்-தளை சிதையும்
";நவீனக்கவிதை";
இங்கேதான் விதைக்கப்பட்டது என்று
நாளைய வரலாறு
எங்கள் கல்லறைகளில் எழுதும்.
இது எங்கள்
உயிர் எழுத்துகளின்
போர்ப்படை அணிவகுப்பு.
மெய்யெழுத்துகளில்
புதைத்து வைத்திருக்கும்
புதிய கண்ணிவெடிகள்.
இது வெடிக்கும்.
வெடிப்போம்..
எங்கள் களத்திலிருந்து
அக்னிக்குஞ்சாய்
புறப்படும்
அமைதிப் புறா.
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுக்கும்
கூடுகள் கட்டும் வித்தையை.
குஞ்சுகளைப் பறக்க வைக்கும்
வாழ்க்கையை.
----------------------------------

Thursday, February 5, 2009

போராட்டத்தின் திசைகள்- நயனம்

நண்பர் நாக.இளங்கோவின் நயனம் வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கருத்துகள்
அனைத்தையும் அப்படியே நானும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் இச்சூழலில்தான் ஒரு நிஜமான தலைமை உருவாகும் என்று இதுவரை அறிந்த உலக சரித்திரத்தின் வழி
நம்புகிறேன்.



Monday, February 02, 2009 தமிழ்நாட்டின் போராட்ட திசைகள் எப்படி
அமையவேண்டும்?
தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றின்
முகத்திரை இன்று கிழிபட்டுக் கிடக்கிறது.
அவற்றின் நாணயமும் வஞ்சகமும்
தமிழினத்தின் முன் நகைக்கப் பட்டுவிட்டது.
வரலாற்றில் இக்கட்சிகள் கறையாகிப் போய்
விட்டன. தமிழினத்திற்கு எதிரான
இந்திய வஞ்சகமோ எக்காளமிடுகிறது.

முத்துக்குமாரும் இரவியும் பற்றிக்கொண்ட தீ
பற்ற வைத்திருக்கும் தன்மான உணர்வு
தமிழனுக்கெதிராக செயல்படும் அகில
உலகத்தையும் அடக்கி வைக்க வேண்டாமா? -
என்ற எண்ணம் எழாத தமிழன் இல்லை.

கிளர்ந்தெழும் தமிழ்நாட்டுக் குமுகம்
தனது போராட்டத் திசைகளை எப்படி
வகுத்துக் கொள்ளும் - என்னவெல்லாம்
அதன் திசைகளாக இருக்கக் கூடும்
என்பதே தமிழ் மக்களின் சிந்தனையாக
உள்ளது.

தமிழினம் என்ற போதெல்லாம் அப்பழுக்கின்றி
உறுதியான குரல் கொடுத்து
நிற்கும் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,
பெரியார் தி.க இராமகிருட்டிணன் இவர்களுடன்
தா.பா, நல்லகண்ணு, இராமதாசு
மற்றும் பல தமிழர்கள்
இணைந்து ஏற்படுத்தியிருக்கும்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் அளப்பரியன.

தமிழ்நாட்டின் போராட்ட திசைகளை இவர்கள்
சிறப்புடன் அமைக்கவேண்டும்.

*திசை-1:* தமிழினத்தின் எதிரி யார்,
துரோகி யார் என்பது தெளிவாகிவிட்ட பின்னர்,
அவர்களை நேரடியாக மக்கள் முன் நிறுத்துதல்
வேண்டும். நெடுமாறனும் வைகோவும் திருமாவளவனும்
"இந்திய அரசு இப்படிச் செய்கிறது" என்று
சொல்லாமல் நேரடியாக ஒன்றும் தெரியாதவர்
போல் இவ்வளவுக்கும்
காரணமாக இருக்கும் சோனியா காந்தியை
நேரடியாகக் கண்டிக்க வேண்டும்.

திருமாவளவன் இதனைச் சரியாக
உண்ணாநோன்பின் போது செய்தார்.
ஆனால் கருணாநிதி குறுக்கே புகுந்து
"காங்கிரசைக் குறை சொல்லி
திசை திருப்புவதா?" என்று எகிறவும்
திருமா குறைத்துக் கொண்டார்.

இது தவறு. நேரடியாக சோனியாவையும்
காங்கிரசையும் கண்டிக்க வேண்டும்.
காங்கிரசின் தமிழகத் தலைவர்களை
எதிர்த்து கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

அதேபோல, கருணாநிதியும் அன்பழகனும்
செயலலிதாவும் தமிழகத்தில்
செல்லும் இடங்களில் எல்லாம்
கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

இதனை கிளர்ந்தெழும் தமிழினம்
முக்கியமாகச் செய்யவேண்டும். அப்படிச்
செய்தால்தான் வாக்கு வங்கிப் பயம் வரும்.
அதுதான் அரசியல் கட்சிகளின்
அடிமடி. அதில் அடிக்க வேண்டும்
தயவு தாட்சனை இன்றி.

*திசை-2:* தமிழக ஆதிக்க சக்திகளான
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு
ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவுடைய
தொலைக்காட்சிகள், காங்கிரசு
சார்ந்தவரின் தொலைக்காட்சிகள்,
இந்து நாளேடு, துக்ளக் நாளேடு,
தினமலர் நாளேடு ஆகியவை தமிழினத்திற்குத்
தொடர்ந்து மொழிவகையானும் இனவகையானும்
நலிவை ஏற்படுத்துகின்றன.

இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று
பேசிக் கொண்டிருந்த போது
எனது அருமை நண்பர் ஒருவர் இதுவே
அமெரிக்கா போன்ற நாடுகளானால்
இப்படிச் செய்யாமல், இம்மிடையங்களில்
விளம்பரம் கொடுக்கிறார்களே
அந்தப் பொருள்களையெல்லாம் புறக்கணிப்பார்கள்.
அப்பொழுதுதான்
இம்மிடையங்களின் அடிவயிற்றில் அடிவிழும்
என்று சொன்ன கருத்து சிறப்பெனப் பட்டது.

ஆகவே, கிளர்ந்தெழும் தமிழினத்திற்குத்
திசைகாட்டும் தலைவர்கள் இதனை
முன்னெடுக்க வேண்டும். சிங்கள இரத்தினம்
இந்து இராமுக்கும், தினமலர்,
துக்ளக்கிற்கும், சன், கலைஞர்,
செயா தொ.காகளுக்கும் பதில் எழுதியோ,
அவர்களின் கொடுமைகளை எண்ணிப்
புலம்பியோ இருப்பது பேதைமை.

தமிழ் மக்களிடம் இதனைச் சரியாக
சென்று சேர்த்து விட்டால் தமிழ் மக்கள்
சொன்னபடி மிடையங்கள் கேட்கும்.
இன்றைக்கு இது தலைகீழாக இருக்கிறது.

ஆகவே, *"தமிழினத்திற்கு துரோகம்
செய்யும் ஆதிக்க சக்திகளின் மிடையங்களிலும்
தமிழினத்திற்கு எதிராக செயல்படும் மிடையங்களிலும்
எந்தப் பொருள்கள் விளம்பரப் படுத்தப் பட்டாலும் *
*அதனைத் தமிழர்கள் வாங்க மாட்டார்கள்!"*
என்பது தமிழர்களின் கிளர்வின் ஒரு திசையாக
ஆக வேண்டும்.

*திசை-3:* தமிழ் இணையம் என்ற மிடையம்
மேற்கண்ட திசைக்கு முன்னோட்டமாக
அமைய, இணையத்திற்கு வரும் எந்தத்
தமிழரும் தமிழினத்திற்கு எதிராக
எழுதும் எந்தத் தமிழ் இதழையும்
தொடக் கூடாது. இந்தக் கட்டுரையை
வரைவதற்கு முன்னர் நான்
இதனைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டேன்.

இதனைச் செய்ய எந்தத் தலைவரும்
வழி காட்ட வேண்டியதில்லை. இணையம்
என்ற இந்த தமிழ் உணர்வுள்ள குமுகம்
எளிதில் செய்ய முடிந்தது.

அப்படியான இதழ்களும் நாளேடுகளும்
என்னதான் தமிழர்க்கெதிராக
எழுதினாலும் அதை நாம் படிக்க வேண்டிய
பகிர்ந்து கொள்ள வேண்டிய
அவசியம் நமக்கு என்ன?

ஆகவே இணையக் குமுகம் உடனடியாகச்
செய்ய வேண்டியது, தமிழினத்திற்கு
எதிரான இந்த மிடையங்களைப் படிப்பதில்லை
என்று முடிவு கட்டி விடவேண்டும்.

*திசை-4:* அடுத்ததாக தமிழினத்திற்கு
எதிராக இருக்கும் நாடுகளைப்
புறக்கணிக்க வேண்டும்.

1) சீனாவும் சப்பானும் சிங்கள
பவுத்த வெறியர்களுக்குத்
துணை போவதற்கு அவர்களின்
தன்னலமே காரணமல்லவா?
ஆகவே, தமிழினம் சீனாவிலும்
சப்பானிலும் தயாரிக்கப் பட்ட எந்தப்
பொருளையும் வாங்கக் கூடாது.

வணிகர்கள் அந்நாடுகளில் தயாரிக்கப் பட்டுத்
தமிழகச் சந்தைக்குள் வரும்
பொருள்களை விற்கக் கூடாது.
வணிகர்கள் *"சப்பான் சீனா நாட்டுப்
பொருள்கள் இங்கே விற்கப் படாது"*
என்று கடைகளில் எழுதிப் போடவேண்டும்.
வெள்ளையன் போன்றோர் வணிகர்
சங்கத் தலைவர்களாக இருக்கையில்
இது நடக்கக் கூடியதே.
இப்படிச் செய்தால் தமிழ் மக்கள் மனமார்ந்த
ஆதரவினைத் தருவார்கள்.

அதே நேரத்தில் சோனி, தோசிபா போன்ற
நிறுவனங்களின் பொருள்களை
மக்கள் விடுவார்களா என்ற ஒரு கேள்வி
எழத்தான் செய்கிறது. ஆனால் இது
ஒரு இயக்கமாகக் கிளம்பினால்
தமிழ் மக்கள் தவமாக ஏற்றுக் கொள்வர்.
வெள்ளையர்களை வெளியேற்ற
தமிழ் மக்களும் அவர்களின் பொருள்களைப்
புறக்கணித்தார்கள்தானே!
அந்த அமைதிப் போர்
தற்போது நிகழ வேண்டும்.

நானும் இந்தத் தவறைச் சின்னாள்களுக்கு
முன்னர் செய்தேன். இனிச் செய்யேன்.

2) இத்தாலிப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும்.
இத்தாலி நாட்டு ஆடைகள், கண்ணாடிகள்
போன்ற பொருள்கள் புறக்கணிக்கப் பட
வேண்டும். ஏனென்றால் இத்தாலியைச்
சேர்ந்த சோனியா காந்தி தமிழர்களை அழிக்கிறார்
என்ற செய்தியை இந்தியாவிற்கும் உலகிற்கும்
அறிவித்து தமிழினத்தின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும்
*"இங்கே இத்தாலி நாட்டுப் பொருள்கள் *
*விற்கப்படாது*"
என்று எழுதிப் போட்டால் தமிழகம் என்ன,
இந்தியாவின் பெரும்பகுதியும்
மகிழ்ச்சிதான் அடையும்.

3) பாக்கித்தான், வங்கதேசம், மாலத்தீவுகள்
ஆகிய நாடுகளை நம்மால் பெரிதும் எதுவும்
செய்து விட முடியாது. ஏனென்றால் அங்கிருந்து ஏதும்
நமக்கு வருவதில்லை. ஆனால், வங்கதேசத்தில்
இருந்து அகதிகளாகவும்,பிழைப்பு தேடியும்
தமிழகத்தில் நிறைய வங்கர்கள் இருக்கின்றனர்.
இவர்களைத் தமிழ்நாட்டை விட்டு
வெளியேற்ற வேண்டும். வங்கதேச நாட்டில்
இருந்து பல ஆயிரம் பேர் பிழைப்பு
தேடி தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் அவர்கள் கடைநிலை
ஊழியம் செய்கிறார்கள். அவர்களை
எல்லாம் தமிழ்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்.
அப்பொழுதுதான் வங்கதேசத்திற்கும்
இந்தியாவிற்கும் நமது எதிர்ப்பைச் சொல்ல முடியும்.

4) சிங்களத்தில் இருந்து என்ன பொருள்கள்
வந்தாலும் - குறிப்பாக தேயிலை - அவற்றைப் புறக்கணிக்க
வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இதனைத்
துண்டுச் சுற்றுகள் மூலமும் வணிகர்கள்
மூலமும் செயல் படுத்த வேண்டும்.

இந்த நாடுகளின் பொருள்களைப் புறக்கணிக்கும்
போது அந்நாடுகளோடு பல்வேறு வணிகத்
தொடர்புகள் கொண்ட அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும்
புரிபட வைத்தால் போதும்.

*திசை-5:* வைகோ, இராமதாசு,
திருமாவளவன் ஆகிய மூவருக்கு மட்டும்
தமிழ்மக்கள் ஒரு நெஞ்சார்ந்த அன்பு
வேண்டுகோளை வைக்க வேண்டும்.

இவர்கள் இன்றே வருகின்ற பாராளுமன்றத்
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும்
சொல்லலாம்தான் - ஆனால் அதன்
தலைமை என்ன செய்யும் என்று
நமக்குத் தெரியாது. ஆனால், வைகோவிடமும்
இராமதாசிடமும் திருமாவிடமும்
உரிமையாகவும் எதிர்கால சூக்குமமாகவும்
இதனை நாம் கேட்டுக் கொள்ளவேண்டும்.

பாராளுமன்றத்தில் உறுப்பினராகி என்ன
செய்தோம் - இந்தியப் பாராளுமன்றம்
நமது குரலுக்கு மதிப்பளித்ததா?

பா.ச.க ஆட்சி செய்தபோது வைகோ
பொடாவில் போடப்பட்டார்.

அவர் பாராளு உறுப்பினராக இருந்தும் யாராலும்
எதுவும் செய்யப்படவில்லை. கேலிக்கு உள்ளானார்.
காங்கிரசு ஆட்சியில் கூட்டணியாக இருந்தும்
4 உறுப்பினர்கள் இருந்தும் இவர்கள்
குரல் ஏற்கப் படவில்லை.
ஆகையால் அந்தப் பாராளுமன்றமே
தமிழினத்திற்குத் தேவை இல்லை என்று
சொல்லி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு ஆகிய
மூன்றனுக்கும் பெரும் இடரைத் தேர்தல்
களத்தில் கொடுக்க வேண்டும்.
இவர்களின் தமிழினத் துரோகத்தைக் கிழிக்க வேண்டும்.

இதன் மூலம் தேர்தல் உணர்வு குறைந்து,
தமிழ் உணர்வு மலரும்.

மாற்றாக இந்தத் தமிழின உணர்வாளர்கள்
மட்டும் தனியே கூட்டணி கண்டு
பாராளுமன்றத் தேர்தலில் துரோகிகளை
அடையாளம் காட்டி, வருகின்ற சட்டமன்றத்
தேர்தலில் தமிழ் உணர்வாளர்களாக
ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் எக்கேடு
கெட்டுப் போயினும் வருகின்ற சட்டமன்றத்
தேர்தலுக்குள் தி.மு.க, அதிமுக,
காங்கிரசு ஆன மூன்றனையும்
செல்லாக்காசாக தமிழகத்தில் ஆக்கிவிடவேண்டும்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் கணக்குகளை
விட்டு விட்டு,தமிழ்க்கணக்குகளை மட்டும்
பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு மக்கள் விடும் கோரிக்கையாக
*"நீங்கள் முன்னே நின்றால் நாங்கள் *
*பின்னே வருவோம் - நீங்கள் *
*திமுக அதிமுக காங்கிரசு
பின்னால் நிற்காவிட்டால்"* என்ற
செய்தியைச் சொல்ல வேண்டும்,

இந்த ஐந்து திசைகளிலும், சான்றோர்களும்
பெரியோர்களும் சரியெனக் காட்டும் திசைகளிலும்
செயற்பட்டால், தமிழினத்தைப் படுகொலை செய்யும்
சிங்களம், இந்தியம், சீன சப்பானியம்
மற்றும் இன்ன பிற நாசகாரச் சக்திகளை
எதிர்த்துத் தோளோடு தோள் நின்று போராட
*"தமிழ்நாட்டில் இருந்து தமிழன் ஈழத்திற்குப் போவான்".
*
இது நடக்கும்; நடக்க வேண்டும்.
அந்தப் படை பெருகும்; பெருக வேண்டும்;

*"அடைய வேண்டிய முக்கிய எல்லை இதுதான்"
*
முத்துக்குமார் சாவு சென்னையில் நடந்ததல்ல.
அது கிளிநொச்சி, வன்னி, யாழ், திருமலை,
முல்லைக் கள முனையில நிகழ்ந்த வீரச்சாவாகவே
தமிழருக்குப் படுகிறது.

இதனைத் தமிழினப் பெரியோர்கள்
குறிக்கொள்ள வேண்டும்.

தமிழ்ப்படை பெருக உழைக்க வேண்டும்.

அப்பொழுது உலகமே திரண்டு வந்தாலும்
தமிழினத்திற்கு அழிவு இருக்காது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, January 31, 2009

வீரவணக்கம்

இக்கடிதம் நக்கீரன் செய்திகளிலே
வெளிப்பட்டிருக்கிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2652


மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்


இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை
வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை
சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே
இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான
ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.



உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்
அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார்,
தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல்
கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது
ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.



இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று
மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள்,
சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில்
கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை
காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என
முத்துக்குமார் தெரிவித்தார்.



மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம்
செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர்
இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள்
என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில்
மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.



இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை
குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது
குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும்
சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.



26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு
கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு
பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி
அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள்
தெரிவித்தனர்.


ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர் ஈழப்பிரச்சனை
குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:


விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...


வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க
நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர்
முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம்
சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.


உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும்
பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக்
கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும்
எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.


வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும்
வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து
நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த
பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.
இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய
வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில
தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள்
சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.


ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம்
சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது
ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை
செய்த கொலைகாரர்கள்தானா?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள்
முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும்
குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு
தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய
தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா,
தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன்
பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால்
பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.


மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம்
ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே
பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம்
பக்கம் இருக்கிறார்கள்?


கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று
அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப்
புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம்,
இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல்
காமெடியைப் போல.


காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர்
என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும்
பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல்
காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில்
போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து
சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ
செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா
இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே
நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி
மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று
வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத்
தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும்
போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக
இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள்,
வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே
களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.


உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை
ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு
வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான
புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள்
என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய
தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு
முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ்
மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு
மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில்
இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள்
போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த
விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான்.
ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த
தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து
உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை
நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை
எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.


உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில்,
இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது
மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச்
சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள்
அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்
புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு
வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!
போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின்
இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல்
நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன
தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி
என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின்
அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய
அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால்
திரட்டுங்கள்.


இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை
இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை
உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற
இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும்
வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு
மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.


உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின்
உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி
படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்'
என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை
காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக்
கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து
போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ
செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால்
அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில்,
மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள்
போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட
ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு
செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள்
பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும்
கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப்
பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம்
தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை
தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு
வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில்
அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று
கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள்
தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும்
பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது
மாதிரியில்லையாமா?


தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...


உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும்
வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால்
தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை
எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள்
இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை
செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை
இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள்
விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு
உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை
எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ,
ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும்
என்பது என் கருத்து.


தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...


உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம்,
தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது
போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள்
நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை
ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள்
காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய
விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம்
தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த
மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக
உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே,
பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப்
பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக
காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த
மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான
நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்
மத்திய காவல் அதிகாரிகள்.


ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான்
தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக
காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே
அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள்
என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி
வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின்
உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது
என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி
மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான்
இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில்,
நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற
பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக
அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து
தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய
சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில்
கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்
முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க
மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர்
மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள்.
மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.



களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...


அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம்
உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும்
எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற
உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும்
கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி
ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை
பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில
சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு
இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,


உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை
கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது
என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த
காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை
மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும்
கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும்
வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு
வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப்
பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?


வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது
என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள்
என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை
செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச்
சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி,
தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.
இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும்,
ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும்
தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும்,
பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும்
தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்.
மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.


புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா லி என்னவோ
பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல..
உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர,
காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில்
ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப்
பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா
போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச்
சொன்னது.


நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு
அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த
பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.
அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது
இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச்
சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம்
ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான்
சண்டை என்கிறது.


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ,
மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி
இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.
ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம்
சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும்
என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.


ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம்
இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர்.
இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப்
பக்கத்திலிருப்பவர்.


இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா
நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி
இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத்
தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம்
குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த
காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.
இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு
ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை
ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று
எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற
நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே
வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.


உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப்
பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக
நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள்.
சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?


அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது
இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே
தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச்
சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை
இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான்
சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத்
தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித
உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?
சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின்
ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச
சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால்
பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத்
துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில்
நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள்
ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து
உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும்,
குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.
அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற
நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு
ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை
இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.


காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.


1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத்
திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார்
போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட
வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற
பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக
மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா
பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான
சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு
வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு
வழங்கப்படக்கூடாது.


3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை
விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை
செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும்
அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட
வேண்டும்.


4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள்
மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட
தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும்
வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான
குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய
ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ்
சோதனைக்குப்பட வேண்டும்.


8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம்
மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன
மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த
தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு
ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள்
தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து
அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே
இறுதியானது.


10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப்
பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின்
தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று
விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட
வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள
பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான
பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக
அங்கீகரிக்கப்பட வேண்டும்.


14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான
வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,


அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99



அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும்,
பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம்
ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில்
கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள்,
உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப்
பண்ணுங்கள் நன்றி.

Friday, December 26, 2008

சுபவீயுடன் நேர்காணல்




மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மும்பை வந்திருந்த திரு.சுப. வீரபாண்டியன் அவர்களுடன் அவர் எழுதிய தந்தை பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூல் குறித்தும் புலம் பெயர்ந்த தமிழர், ஈழத்தின் எதிர்காலம் குறித்தும்
நானும் நண்பர் கே.ஆர்.மணியும் நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்.


http://rapidshare.com/files/176839264/Untitled1.mp3.html

http://rapidshare.com/files/176625642/Untitled.mp3.html

Tuesday, December 16, 2008

கண்ணீர்த்துளிகளின் கடைசிப்பக்கம்




இயல் தமிழ் தந்தை - தமிழர்
இதயத்து வேந்தன்
காஞ்சியின் கவிதை - தமிழர்
காத்திருந்தக் கனவு.
நாடகச்சோலை - கூத்து
நடனமாடும் மின்னல்
அரசியல் வானம் -அவனுக்குள்
ஆயிரம் சூரியன்

காவியம் படைக்காத
கம்ப ரசம்
வேலைக்காரி பார்க்காத
பணத் தோட்டம்
தீ பரப்பும்
சந்திரோ தயம்
ஆரிய மாயை
பிணி தீர்த்த
திராவிட மருந்து
பகுத்தறிவு விருந்து .

இந்தியக் கோட்டையில் -இவன்
எழுந்து நின்ற போது
இமயம் இவனை
அந்நாந்துப் பார்த்து
அதிசயித்துப் போனது.
இவன் - உலகின்
எட்டாவது அதிசயம்.

இந்து சாம்ராஜ்யம் -இவன்
எழுத்து முனையில்
பொடிப் பொடியானது
என்றாலும்
திருமூலருக்கு
இவந்தான் தேர்ப்ப்பாகன்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
திருமந்திரம்
இவன் திருநா தொட்டப்பின்னே
பொதுமந்திரமாகி
புதுமந்திரமானது
ஒரு புதிய சகாப்தம்.

பூமி உருண்டையை
புரட்டிப் போடும்
வானம்பாடிக் கவிஞருக்கெல்லாம்
இவனே வாத்தியார்.

"தம்பி" என்ற
ஒற்றைச் சொல்லால் - தமிழ்
உலகையே அளந்த
'வாமந' அவதாரம்.
அடடா.. மன்னித்துவிடுங்கள்
இவன் அவதாரங்களை வென்ற
அதிசயப் பிறவி.

ஈரோட்டு போர்முரசே -திராவிடர்
ஈடில்லா தமிழ்முரசே
நினைவிருக்கிறதா.. அண்ணா..
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
கடைசிப் பக்கம்

'தலைவர் அவரே என்றாய்
பகை வெல்லும்
துப்பாக்கி ஒன்றே என்றாய்'
அண்ணா..
ஈரம் உலராத
கண்ணீர்த்துளிகளை
உன் இமைகளுக்குள்
புதைத்துவிடு.

இன்று-
ஊரெல்லாம் தலைவர்கள்
ஒவ்வொரு நாளும்
புதிது புதிதாகப் பறக்கும்
கழகக்கொடிகள்
இதயக்கனிகள்
அத்தனையும் உன் பெயரால்.

நித்தமும் தொடரும்
அறிக்கை யுத்தங்கள்
தொலைக்காட்சி சாம்ராஜ்ய
அடாவடிச் சண்டைகள்
வாரிசுகளின் பனிப்போர்
அண்ணா ..
காலம் எழுதாமல் விட்ட
கண்ணீர்த்துளிகளின்
கடைசிப்பக்கம்..

அண்ணா..
'எதையும் தாங்கும் இதயம் உன்னிதயம்' என்று
எவர் சொனனாலும்
நம்ப வேண்டாம்
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
சாட்சியாய்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்
'இதையும் தாங்க உன்னால் முடியாது அண்ணா"

புறநானூறு படைத்த
சங்கத் தமிழனை
எத்தனைக் கடிதங்களில்
எழுதி எழுதி வளர்த்தாய்
அத்தனையும் மொத்தமாக
கடல்தாண்டி தெரிகிறது
தெற்கே " தமிழன்படை"
எட்டிப்பார்..
-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-
அண்ணா
உன் கண்ணீர்த்துளிகளால்
மீண்டும் எழுது

'தம்பி உடையான் சிங்களப் படைக்கு அஞ்சான்'
'வெற்றி நமதே" என்று.

Thursday, December 11, 2008




திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.








நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.





---- +-----------

Friday, November 21, 2008

ஊடகங்களும் ஊடறு பெண்களும்





வாழ்க்கை அவள் உரிமை
உங்களைப் போலவே
காற்றும் மண்ணும்
கடலும் வானும்
தாயின் கருவறையும்
அவளுக்கும் சொந்தமானவை.

அதை அவள்
யாரிடமிருந்தும்
பிச்சையாக
யாசிக்கப் போவதில்லை.

அவளுக்கு வாழ்வளிப்பதாக
நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும்
தருணங்களில்
உங்கள் வாழ்க்கையும்
தன்னைத் தூக்கிலிட்டுக்கொள்கிறது.

நிறைய திரைப்படங்கள், மெகா தொடர் காட்சிகளில் பெண்களை அதிகம் கவரும் காட்சி..
"பெண்ணுக்கு வாழ்வளிப்பதாக" காட்டப்படும் காட்சிகள் தாம்.

எப்படி, எம்மாதிரியான தருணங்களில் இக்காட்சிகள் காட்டப்படுகின்றன.
எந்த மொழியாக இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் இக்காட்சிகள் அதிகமாக
பெண் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக சொல்கின்றன ஊடகங்களின் புள்ளிவிவரங்கள்.

காட்சி 1: :
தங்கையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். அவள் தற்கொலை
செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஓடி வந்து வழக்கம்போல கதாநாயக அண்ணன்காரன்
காப்பாற்றுகிறான். காப்பாற்றிவிட்டு காரணம் அறிந்து துடிக்கிறான். உடனே "யார் அவன்?"
என்று கேட்கிறான். உடனே சபதம் எடுக்கிறான்."தங்கையைப் பாலியல் பலாத்காரம்
செய்தவனுடனேயே எப்படியும் திருமணம் செய்து வைத்துவிடுவதாக. தங்கையும்
சந்தோஷப்படுகிறாள்.

காட்சி 2:

ரவுடியாக இருக்கும் கதாநாயகன் ஒரிளம் பெண்ணை -( அவள்தான் கதாநாயகி-
பொதுவாக அவள் அழகான, பணக்காரப் பெண்ணாக இருப்பாள் என்பது கதைகளின்
பொதுவிதி- ) மற்றவர்களுக்காக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான்.
அதிலும் அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு
(அப்பொதுதான் காட்சி இன்னும் கொஞ்சம் கனமாக அமையும் என்பது டைரக்டர்களின்
கணிப்பு) அப்புறமென்ன. அந்தப் படித்த பணக்காரப் பெண் தன்னைக் கெடுத்த அந்த ரவுடியைத்
தேடி வருவாள்.. அவனுடன் வாழ்வதே தனக்கான வாழ்க்கை என்பது அவள் மூலமாக
சொல்லப்படும் சமூக நீதி

காட்சி 3:

பணக்கார வாலிபன் அந்த ஊரில் ஏழை ஆனால் அழகானப் பெண்ணை பாலியல் ப்லாத்காரன் செய்ய
ஊரே கூடி அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க.. அவள் எப்படி அவன் காதல் மனைவியாகிறாள்
என்பது கதை.

என்ன.. உங்கள் அனைவருக்கும் இம்மாதிரி கதைகளுடன் சம்மந்தப்பட்ட ரஜனிகாந்த், பார்த்தீபன்,
சீதா, அனில்கபூர் , ஜூகிசாவ்லா, ராணிமுகர்ஜி.. மேலும் இன்றைக்கு மெகா தொடர்களில்
வந்து போய்க்கொண்டிருக்கும் பலர் முகங்கள் நினைவுக்கு வரலாம்.

ஆனால் யாருக்கும் நினைக்கத் தோன்றுவதில்லை..
அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையிலிருந்து வாழ்க்கையை.

இம்மாதிரியான காட்சிகள் நாம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் காதல்,
குடும்பம், கற்பு இத்தியாதி அனைத்தையும் தலைகுனிய வைத்துவிடும் அவலத்தை நாம்
உணர்வதில்லை. அந்தளவுக்கு ஆணாதிக்கச் சிந்தனை தச்சர்களால் செதுக்கப்பட்டிருக்கிறது
நம் ஒவ்வொருவரின் சிந்தனைச் சிலைகள்.

கிட்டத்தட்ட இம்மாதிரியான திரைப்படங்கள் - காட்சிகள் வந்து 15 வருடங்களுக்குள்
பல்வேறு உண்மைக் காட்சிகள் வெளியில் அனைவரின் பார்வைக்கும் தெரியும்படி அரங்கேறின.

வழக்கு 1:

இம்ரானாவின் வழக்கு நீதிமன்றம் வருகிறது. 2005ல் ல் உத்திரபிரதேசம் முஷபர்நகர் மாவட்டம் சார்த்தாவல் கிராமத்தில்
நூர் இலாகியின் மனைவி இம்ரானாவை அவள் மாமனார் அலி முகமது - கணவரின் தந்தை -
பாலியல் பலாத்காரம் செய்துவிட ஊர்ப்ப்ஞ்சாயத்து கூடி தீர்ப்பளிக்கிறது.

"இம்ரானா கற்பிழந்துவிட்டாள். அவள் கணவனைத் தவிர வேறொரு ஆடவனிடம்
அவள் உடலுறவு கொண்டுவிட்டதால் அவள் திருமண உறவு முறிகிறது
அவள் 7 மாதங்கள் தனித்திருக்க வேண்டும்
7 மாதம் தனித்திருப்பது அவள் தன்னைப் புனிதப் படுத்திக்கொள்ளவாம்!
அதன் பின் அவளைக் கெடுத்த அவள் மாமனாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்!"
ஆனால் கணவன் நூர் இலாகியின் துணையுடன் ஜூன்20, 2005ல் இம்ரானா கட்டைப்பஞ்சாயத்து
வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கணவனுடனேயே சேர்ந்து வாழப்போவதாகவும்
மாஜிஸ்டிரேட் முன்னிலையில அறிவித்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் துணையாக பல்வேறு
பெண் உரிமைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்தன. (National commission of women
and other leading women's organisations) அதன் பின் தான் இந்திய உச்சநீதிமன்றம் இந்தியச் சட்டத்திற்கு
இணையாகவும் முரண்பட்டும் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் கண்டித்தது.
( charged these two organisations, Darul-Ul-Uloom of Deoband and All India Muslim Personal
Law Board the two pillars of islamiz bodies in india with interfering with the country"s legal system and
introducing parallel islamic laws in violation of the constitution)

வழக்கு 2
-------------

2002ல் டில்லி நீதிமன்றத்தில் மனோஜ்குமாரின் வழக்கு. குற்றவாளி மனோஜ்குமார் தான்
பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறான்.
அந்தப் பெண்ணும் ஒத்துக் கொல்கிறாள். பிறகென்ன?
வழக்கு "பெண்ணுக்கு வாழ்வளித்தாந் சுபம்" என்று முடிகிறது,. அவன் திருமணம் செய்து கொள்ள
முடிவெடுத்ததாலேயே அவன் மீதிருந்த குற்றம் ரத்து செய்யப்படுகிறது. அதாவது குற்றப்பத்திரிகை
வாசித்த பெண்ணே அதைத் திருப்பி வாங்கிக்கொண்டு அவன் முடிவுக்கு தன் சம்மதத்தை
தெரிவிக்கிறாள்.

வழக்கு 3
------------
2003ல் வழக்கு 2 போலவே இன்னொரு வழக்கு. ஆனால் முடிவு ?
சாந்தி முகந்ட் மருத்துவமனையில் 23 வயது நர்ஸ் பாலியல் ப்லாத்காரம்
செய்யப்படுகிறாள். செய்தவன் புரா (Bhura) அவளுக்கு நம் சமூகம் மதிக்கும் அந்த
"வாழ்வளிக்கும் " நல்ல காரியத்தை செய்ய தயாராக இருப்பதாக அறிவிக்கிறான்.
" பாவம் இந்தப் பெண், இவளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த யாரும் இவளை
ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய முன்வருவார்களா? அதனால் தான்
தான் அவளுக்கு வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக தலைநிமிர்ந்து சொல்கிறான்.

"பரிதாபப்பட்டு வாழ்க்கைப் பிச்சையளிக்க இவன் யார்?
அவனுடைய இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு என்னிடம் கேட்பதே தவறு!"
என்று அவனை மட்டுமல்ல அவன் முடிவைப் பற்றி தன்னிடம் அபிப்பிராயம்
கேட்ட நீதிமன்றத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறாள் இவள்.
குற்றம் செய்த புராவுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் தன்னைப் பலாத்காரம் செய்து வல்லுறவு கொண்ட ஆணைத்
திருமணம் செய்வது மட்டுமே தனக்கு பாதுகாப்பு, வாழ்வதற்கு சமூகம் அளிக்கும்
உரிமை, சமூகத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள கிடைத்திருக்கு வாய்ப்பு
என்றே நினைக்கிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்ணே அவன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்வந்ததை ஏற்றுக்கொண்டால்
அது நல்லதுதானே , ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கிறது, குற்றமிழைத்தவனுக்கு மன்னிப்பு
கிடைக்கிறது ' என்று தத்துவம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வல்லுறவு கொண்டவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு
பாலியல் உறவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லை என்பதை
பெண்ணின் பெற்றோர்களிடம் சொன்னால், அவர்களோ "காலப்போக்கில் எல்லாம்
சரியாகிவிடும்" என்று பதில் சொல்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில்
பணிபுரியும் உளவியல் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

உதிரிக்காட்சிகள்
-------------------

காட்சி 1
-----------

சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடம், சரியான நேரம் பார்த்து , பெண்களின் செண்டிமெண்ட்
விசயங்களைத் தொட்டுச்செல்லும் ராதிகா சரத்குமார் அவர்களின் அனைத்து மெகாதொடர்களிலும்
வரும் கணவன்மார்களுக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் உண்டு.
அல்லது இரண்டு மனைவி கதைகள்.. இரண்டாவது மனைவியாக வருபவர் கதாநாயாகியாக
இருப்பதால் பாவம்... முதல் மனைவி பாதியிலேயே செத்துப் போவதும், கொலை செய்யப்டுவதும்,
பைத்தியமாவது... இத்தியாதிகள் சகஜம்.
இந்த செட்டப் காட்சிகள் இன்றைய வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் இந்த தலைமுறையின்
அம்மாக்களுக்கும் ஆழப்பதிந்து போகும் காட்சிகள். இம்மாதிரியான காட்சிகளின் தாக்கம்
வாழ்க்கையின் சில முடிவுகளைக் கட்டாயம் பாதிக்கும் என்பதை இன்னும் 10 வருடங்களுக்குள்
இச்சமுதாயம் பிரதிபலிக்கும்.

காட்சி 2
------------

ஊடகங்களின் ஆகாயம் பரந்து விரிந்து நம் வீட்டு படுக்கையறை வந்துவிட்டது.
"ப்ரண்ட்ஸ்"(friends) என்ற அமெரிக்க மெகா தொடரைப் பார்த்து ரசிக்காத இளவட்டங்கள்
நகர்ப்புறங்களில் இருக்கவே முடியாது. தான் விரும்பிய ஆணுடன் பாலியல் உறவு கொள்வதையும்
அதை ரொம்பவும் சகஜமாகக் காட்டுவதும் அப்படி உறவு கொள்வதாலேயே அவனையே திருமணம்
செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதுமான காட்சிகள் இளைய தலைமுறையைக் கவர்ந்த
காட்சிகளின் கருப்பொருள்கள்.

கால்செண்டரில் ஓரிரவு (one night @the call centre) என்ற சேட்டன் பகத் எழுதிய நாவல்
ஆண்-பெண் பாலியல் உறவில் நகர்ப்புற இளைய தலைமுறையின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.

எனினும் இக்காட்சிகளும் திருமண உறவுக்குப் பிறகு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க வரையறைகளை
மீறவில்லை. ஆனால் ஆணுக்கு அந்த மாதிரியான எதையும் வற்புறுத்தவுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

திருமண வாழ்வில் கற்பொழுக்கத்தைப் பேணுவதில் பெண் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறாள்.
அனைத்து காட்சிகளின் ஊடாக மெல்லிய இழையாக தெரிவது பெண்ணின் மாறாத முகம் மட்டும்தான்.
சில வசனங்களும் நடுவில் வரும் காட்சிகளும் மாற்றம் ஏற்பட்டிருப்பது போல ஒரு மாயத்தோற்றத்தை
ஏற்படுத்துகின்றன.
---------











**** புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக்
கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான
மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு , காதலும் அன்பும் இல்லாதவனுடன்
இருக்க வேண்டும் என்கின்ற சமுதாயக் கொடுமையும் அழிய வேண்டும்.**** தந்தை பெரியார். .

--------------------

Friday, November 7, 2008

திசைமாறிய பறவைகளின் கூடு




கவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின்
தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார்.
திசை மாறி பறந்து வந்த பறவைகள்,
பருவகால புலம் பெயர்தலாய் பல நுறு மைல்கள் கடந்து வந்து தன்னை, தன் இருப்பை முட்டையிட்டு அடைகாக்கும் பறவைகள்,
குஞ்சாக வெளிவந்ததெல்லாம் தன் கூட்டில் வளர வேண்டிய காக்கையின் குஞ்சுகள்
மட்டுமல்ல என்ற புரிதலுடன் வாடகைத் தாயாக மாறும் பறவைகள்,
சபிக்கப்பட்ட குயிலின் சோகக்கதை, கண்களில் பிறந்து வளர்ந்த கிராமத்து
மண்ணின் நினைவுகளை அடைகாத்துக் கொண்டு அடைக்கலம் தந்த நகரத் தெருக்களில் அகதியாய் அலையும் வாழ்க்கை, எதிர்பார்ப்புகளூடன் பிறந்த
மண்ணில் கால்வைக்கும் போது நினைவுகளில் வழ்ந்து கொண்டிருந்த எல்லா
தடயங்களும் மொத்தமாக காணாமல் போய்விடும் சோகம்...

இப்படியாக வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் கவிதைகளில்
கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் கவிஞர்.
கிராமத்து பின்னணியும் அதற்கான ஏக்கமும் கவிஞரின் பெரும்பாலான கவிதைகளில் பளிச்சிடுகிறது.
அந்த ஏக்கம் வெறும் இழப்பின் தாக்கமாக மட்டுமே இல்லாமல் சமூகப்பார்வையுடன்
முன்வைக்கப்படுவது மற்ற கவிஞர்களிடமிருந்து சக்தி அருளானந்தத்தை
வேறுபடுத்தும் புள்ளி.
உங்கள் கவனித்திற்கு என்ற கவிதையில் மிகச்சிறப்பாக இக்கருத்துருவாக்கத்தை
முன்வைத்திருப்பார்., இழந்து போன ஆற்றின் நினைவுகள், இன்று அதே ஆறு
சாக்கடையாய் மாறிப்போயிருக்கும் அவலம் இரண்டு கருத்துகளையும் இணைக்கும்போது சுற்றுப்புறச்சூழல் சார்ந்த சமூக அக்கறை என்ற தளத்தில்
கவிதைப் பயணிக்கிறது.

பொய்க்காத பருவமழை
இடைவிடாத அடைமழையாய்
சாக்கடையாய் உருமாறிய ஆற்றில்
கரையடங்கா பெருவெள்ளம்
கெக்கலித்து எக்காளமிட்டு
கழிவுகளூடன் ஓடுவதை
கால் நனைக்க முடியா துயருடன்
கண்டு நிற்கும் நம் குழந்தைகளை
கவனிக்காமல் கடக்கிறோம்
நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு
முன்பு நீயும் நானும்
தன்னுள் மூழ்கித் திளைத்து
முக்குளித்த நாள்களை கூறி அழததை
கவனிக்காமல் கடந்ததைப் போலவே.

இக்கவிதையின் 'நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு" என்ற வரிகள்
சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம்
என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்லும் வலிமைமிக்கவை.

ஆண்டாளும் மீராவும் கொண்ட காதல் பக்தியை கொண்டாடும் சமுதாயம்
தன் வீட்டில் ஓர் ஆண்டாளையோ மீராவையோ இன்றுவரை உருவாக்கவில்லை.
பெண்ணிய வரலாற்றில் ஒரே ஒரு ஆண்டாள் தான்! ஏன்?

மானசீகமாய் காதலாகி கசிவது
கடவுளோடாயினும்
உனக்கிசைவில்லை
மீராவோ திலகவதியோ

என்று 'வெளி" கவிதையில் ஆணாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருக்கும்
பக்தியின் அடித்தளத்தை அசைத்துக் காட்டுவார் கவிஞர்.

இன்னொரு கவிதை 'நிர்வாணம்' முழுக்க முழுக்க பெண்ணிய விடுதலையை
பேசுகிறது.

எனக்குப் பொருந்தும் உடைகளை
எடுத்து வராமல்
உங்கள் ஆடைகளுக்கு
பொருத்தப் பார்க்கிறீர்களே என்னை
விடுங்கள் என்னை
நிர்வாணமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

என்று ஒலிக்கிறது.
பெண், பெண்ணின் மொழி, பெண் விடுதலை அனைத்தும் பெண்ணிடமிருந்து
அவள் அனுபவத்திலிருந்து பிறக்க வேண்டும்

துரத்தல்களும் விடுபடல்களும் என்ற கவிதையில் இதுவரை யாரும் பேசாத
ஒரு கருப்பொருளை கவிதையாக்கியிருக்கிறார் சக்தி.
அதிகாலையில் 7 மணிக்கு சிறுவர்கள் பள்ளிக்கு பொதிசுமந்து கொண்டு
வரிசை வரிசையாக செல்வதைப் பார்க்கிறொம். 7 மணிக்கு தயாராக
அக்குழந்தை 6 மணிக்காவது எழுந்து தன்னைத் தாயார் செய்து கொள்ள
வேண்டி வரும். அப்படியான வாழ்க்கையை

கடிகார முட்களின் கூர் நுனிகள்
துளையிடுகின்றன
அவள் தூக்கத்தை

தூக்க கலக்கத்துடன் எழுந்தமர்கிறாள்
காற்றிறங்கும் பலூனென
கண்களில் வடிகிறது தூக்கம்

என்று காட்சிப் படுத்தி,

புத்தகப் பை மதிய உணவு
தண்ணீர்ப்பாட்டில் கொறிக்க சிறு தீனி
பொதியுடன் ஓடுவாள்
வருகையை ஒலிக்கும்
பள்ளிப் பேருந்தில் ஏற

கிடைத்த பொந்தினில்
பொதிந்து கொள்கையில்
கழிக்க மறந்த காலைக் கடனை
நினைவூட்டும் அடிவயிற்றின் வலி

என்று ஒரு நிதர்சனமான உண்மையை பேசியிருப்பார். கிட்டத்தட்ட எல்லோரும்
அறிந்த ஒரு விசயம், பிரச்சனை எனினும் இதை ஒரு சமூகப் பிரச்சனையாக,
பள்ளி குழந்தைகளின் பிரச்சனையாக பார்க்கத் தவறி இருக்கிறோம் இதுகாறும்
என்பதை சக்தியின் கவிதைகள் வாசகனுக்கு உணர்த்துவதில் வெற்றி
பெற்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

சக்தி கவிஞர் மட்டுமல்ல நல்ல ஓவியரும் கூட. அவர் கவிதைகளில்
மின்னும் காட்சிகளும் அக்காட்சிகளின் நுணுக்கமும் அவருக்குள் இருக்கும்
தூரிகையின் சாட்சியங்கள்.

நகரமழை என்ற கவிதையில் தார்ச்சாலையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைக்
காட்சி படுத்துவார்.

மகரந்த தூளில்
சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல்
படபடக்கும் பட்டுப் பூச்சிகளாய்
தார்ச் சாலைத் தொட்டுத் தெறிக்கும்
மழைத்துளிகள்

என்பார். கரிய நிறத்தில் தார்ச்சாலை. தார்ச்சாலையில் படும் மழைத்துளியின்
தெறிப்பு.. மின்னும் சூரிய ஒளியில் வைரம் கலந்து பொன்னிறமாய்..
அக்காட்சி மகரந்தம் ஓட்டிய பட்டுப்ப்பூச்சியாய் மின்னுவாதக் காட்டும்
உவமையும் காட்சியும் ஓர் அற்புதமான ஓவியத்திரை.

ஞானம் கவிதையில் மரபியலான மெய்யியலுக்குள் நுழைந்து சக்தி தன் ஞானத்தை
எப்படி சிறைவைத்தார் என்பது புரியவில்லை. எல்லாம் விதி என்றும்
கல் சிலையாவதும் படியாவதும் நம் வசமில்லை என்றும் நினைப்பதும் தவறு.
யாரும் சிலைகளை படிகளாக்கலாம், படிகளை நிமிரித்து நடுகல்லாக்கி
வழிபடவும் செய்யலாம்.

அமர்பவன்
சித்தார்த்தனாயிருந்தாலே
போதி மரம் புத்தனாக்கும்
என்பது நிச்சயமாக புத்தன் என்ற மனிதன் புகட்டிய ஞானம் அல்ல.

பறவைகள் புறக்கணித்த நகரம்,
பிள்ளை பிடிப்பவள் அறை,
என்னோடு வந்து விட்ட என் கிராமம்,
பழையன கழிதலில்,
முன்பு பறவைகள் இருந்தன

மேற்சொன்ன கவிதைகளின் கிராமத்து வாசமும் சக்தி வரைந்திருக்கும்
கவிதைகளின் ஓவியமும் சக்தியின் தூரிகைக்கு பெருமை சேர்க்கும்
கவிதை ஓவியங்கள். கவிதைகளுடன் சேர்ந்திருக்கும் சக்தியின்
கோட்டோவியங்கள் கவிதைகளுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.சக்திக்கு வாழ்த்துகளுடன்,

சக்தியின் நட்சத்திர கவிதை

பழையன கழிதலில்
-------------------

அணையாத அடுப்பு அன்றெங்கள் அடுப்பு
ஆக்கி அரித்து ஆகக் கடைசியாய்
அம்மா அடுப்பில் வைப்பாள் பால்பானையை
கனன்று கொண்டிருக்கும் ராட்டினத்தணலில்
சிவந்து முருகி ஏடுகட்டும் பால்மணம்
வீடு நிறைக்கும்.

அரையாடப் பருவத்தில் ஆற்றில் குளிக்கையில்
அரையாட உருவி அதிலேயே மீன்பிடிப்போம்
அக்காவும் நானும்
அயிரைக் குஞ்சுகளின் தலைவால் கிள்ளி
அம்மியில் சாந்தரைத்து அவள் வைக்கும்
மீன்குழம்பு
அவ்வளவு ருசி.. அதுவும் சட்டியில்தான்.

வெங்கோடை நாள்களிலோ
அசலூர் ஆட்கள் தாகம் தணிக்க
ஆற்று மணல் குவித்து திண்ணை மூலையில்
தண்ணீர் நிறைத்து வைப்பாள்
புத்தம் புது பானையொன்றில்
'ஆத்தா நலாயிருப்பே' அவங்க
வாய் வார்த்தை ஒன்ணு போதும்
வம்சம் தழைக்குமென்பாள்.

பொங்கலுக்கும் புரட்டாசிக்கும்
கொசவங்குடி கொண்டுவரும்
சட்டிப் பானைகளை தட்டிப் பார்த்து
அவள் வாங்குவது தனியழகு

அய்யனுக்குத் தெரியாமல் சேர்க்கும் சிறுவாடு
அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய்
அஞ்சறைச் சாமான்கள் அஞ்சும் மூணும்
அத்தனையும் அடுக்குப் பானைகளில்தான்.

'சம்சாரி வீட்டில் சட்டிப்பான ஒடஞ்சா
வூட்டுக்கு ஆவாது' அம்மாவின் நம்பிக்கை
கவனத்துடன் கையாள செய்யும்.

பொழுதெல்லாம் சட்டிப்பானைகளில்
புழங்கிய அம்மா
பானைகளற்ற என் வீட்ட
வீடென்பாளா?

-----------

நூல்: பறவைகள் புறக்கணித்த நகரம்,
33 கவிதைகள்
வெளியீடு: இருவாட்சி பதிப்பகம், சென்னை 11.
பக்: 72, விலை. ரூ 40/

இந்தியப் பெண்ணியம்



ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை
ஒரு பெண்ணாக எனக்கென்று
ஒரு நாடு வேண்டாம்
ஒரு பெண்ணாக
இந்த உலகமே என் நாடு:

- வெர்ஜீனியா வுல்ஃப்


இந்தியப் பெண்ணியத்தைப் பற்றிப் பேசும் போது முதலில் சங்க இலக்கிய
தமிழ்ப் பெண்களைப் பற்றிய முன்னுரையே காலத்தாலும் கருப்பொருளாலும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பெண்ணியமாக இருக்கிறது.
சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர்களைக் குறிப்பிடலாம். (எண்ணிக்கையில் சிலர் வேறுபடக்கூடும்).பெண்கள் சில குறிப்பிட்ட
இனத்தைச் சார்ந்தவர்களாக இல்லாமல் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைப் பார்க்கும் போது பெண்களுக்குக் கல்வி பொதுவான ஒன்றாக
இருந்ததை உணர முடிகிறது. குறமகள், குயத்தியார் என்ற அடைமொழிகள்
இதை உணர்த்துகின்றன.

சங்க இலக்கியத்தில் கற்பு என்பது திருமணமான பெண்ணுக்குரிய ஒழுக்கமாக
மட்டுமே சுட்டப்பட்டுள்ளது. 'மாசு இல் கற்பு' என்ற சொல் ஏறத்தாழ பல பாடல்களில்
நற்.:15, அகம் 66, 144,116 பயின்று வந்துள்ளதைக் கொண்டு இதனை உணரலாம்.
இக்கவிதைகள் மனிதனின் வாழ்க்கைக்கு உயிர்நாடியாக பெண் விளங்கியதையும்
பெண்களுக்குச் சிலவகை உரிமைகள் இருந்தன என்பதையும் சமூக வாழ்வில்
இரண்டாம் நிலையில் பெண்கள் இருந்தார்கள் என்பதையும் உணர்த்தும்
சான்றுகளாக உள்ளன.
கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்திருக்கிறது எனினும்,
தெரிவு செய்யப்பட்ட கணவன் தவறு செய்யின் செய்த தவறைச் சுட்டிக்காட்டி
அவனைத் திருத்த முயல்வது மட்டுமே பெண்ணின் கடனாக இருந்தது.
அவன் செய்த தவறுக்காக அவனைத் தண்டிப்பதோ விலக்குவதோ சமூகத்தில்
விளையாத கருத்தாக்கமாகவே இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
சங்க காலத்து பெண்கள் கணவனின் போக்கைத் தடை செய்ய முடியாது.
கணவன் மீது அவர்கள் கொள்ளும் அன்பினை வைத்தே அவர்களின் பெருமை
அடையாளம் பெறும்.

வடமொழியில் மூத்த வேதமான ரிக் வேதத்தில் 267 ரிஷிகள் இருந்தனர் என்றும்
இவர்களில் பெண் ரிஷிகளின் எண்ணிக்கை இருபது எனவும் 'ஆர்ஷானுக்கரமணி'
எனும் நூல் தெரிவிக்கிறது. 'ப்ரஹத்தேவதா' எனும் நூல் 27 பெண் கவிஞர்கள்
இருந்ததாக தெரிவிக்கிறது. கணபதி சாஸ்திரிகள் 12 பெண் ரிஷிகள் இருந்ததாக
சொல்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ. ரிக் வேதத்தில் 24 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்று
பட்டியல் தருகிறார். எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வதேச சபையில் "வேதகாலத்தில் பெண்கள்
ரிஷிகளாக இருந்தார்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டதை' கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ள முடியும்.


குடும்பம், குடும்ப நலன், குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்,
தாம்பத்ய உறவின் சிக்கல்கள், கணவனின் பரத்தையர் பிரிவு, அதைப் பொறுக்க முடியாத பெண்ணின் இயல்பான எழுச்சி.. இப்படியாக பெண்களின் உலகம்
முரண்பாடுகள் கொண்ட இந்த இரு வேறு இனக்குழுவிலும் இணைகோடுகளாகவே இருந்தது என்பது தான் அதிசயத்தக்க உண்மை.
ரிக் வேத பெண் ரிஷிகளின் கவிதைகளும் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின்
கவிதைகளூம் கருப்பொருளின் மையப்புள்ளியாய் ஆண் சார்ந்தும் குடும்பம் சார்ந்தும்
இயங்கியதைக் காணலாம்.


பக்தி இயக்க காலத்தில் தோன்றிய பெண் கவிஞர்கள் மராத்தியில் சக்குபாய், ஜானாபாய், தமிழில்
-ஆண்டாள், காரைக்கால் அம்மையார்,- ராஜஸ்தானில் மீராபாய் - கர்நாடகாவில் அக்கா மகாதேவி - ,இந்தியில் மகாதேவி வர்மா, மலையாளத்தில் லலிதாம்பிகா
அந்தரஜ்னம், வங்கத்தில் ஆஷாபூர்ணதேவி என்று கடவுள் என்ற பரமாத்மாவை
நோக்கி காதல் பக்தியுடன் பாடியப் பெண்களின் பாடுபொருளூம்
ஒரே தளத்தில் பயணம் செய்தது.
'இயற்கை என் கருப்பை. அதில் சிந்தும் வித்துகளின் தந்தையும் நானே'
(Nature is my yoni. Iam the seed giving father) என்று கீதையின் கண்ணன்
சொல்லும் தத்துவம் ஆண்-பெண் உறவையும் ஆணின் சமூக மேலாண்மையையும்
காட்டும்.
இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்ட காலக்கட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத
இந்த மையப்புள்ளியைச் சுற்றி இந்தியப் பெண்ணியம் கட்டமைக்கப்பட்டது.
மேற்கத்திய பெண்ணியத்திற்கு எதிராக (Non western) இந்தியப் பெண்ணியம் கட்டி எழுப்பப்பட்டது.
"பெண்மையின் வலிமையைச் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய நாகரிகம் என்னும் மாளிகை எழுப்பப்பட்டிருகிறது" என்று சரோஜினிதேவி போன்றவர்கள் குரல் கொடுத்தது இந்தப் பின்னணியில் தான்.
பெண் தெய்வமாக்கப்பட்டதும், புனிதமாக்கப்பட்டதும், சக்தியின் வடிவமாக
கொண்டாடப்பட்டதும் இந்தப் பின்னணியில் தான். இக்கருத்துருவாக்கங்கள்
இந்தியப் பெண்ணியத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன.
இந்தியப் பெண்ணியம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்
இணைந்து வளர்தெடுக்கப்பட்டது.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத் தனத்தை
சட்டமாக்கிய மனுநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஆங்கில
ஆட்சிக்குப் பின்னரே பெண்களுக்கு ஏற்பட்டது.
பெண்களுக்குச் சுதந்திரம், உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி என்று பெண்ணியம் விழிப்புணர்வு பெற்றது.
சுவர்னகுமாரிதேவி தலைமையில் 1886ல் பெண்கள் கூட்டமைப்பு (Ladies association)
உருவானது. 1917, மே மாதம் 8 ஆம் நாள் சென்னையில் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு உருவானது. ஜாலியன் லாலபாக்
படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய எழுச்சியில் தான் முதன் முதலில்
இந்தியப் பெண்கள் போராட்டக் களத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயர் கொணர்ந்த
நிறுவனக் கல்வி முறையும் பெண்களின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோலாக இருந்தது.

"இவற்றிக்கெல்லாம் மேலாக மராட்டியத்தில் தோன்றிய ஜோதிபாபூலே (1827-1890)
என்பவரே முதன் முதலில் பெண் தனித்துவம் வாய்ந்தவள் என்று குரல் கொடுத்தவர் ஆவார். ஜோதிபாபூலே தான் முதன் முதலில் சாதியத்திற்கும் பெண்ணடிமைத் தனத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினார்" ( இரா.பிரேமா, பெண்ணியம் பக் 176).

தமிழகத்தில் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மிகப்பெரிய
சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. குஷ்பு பிரச்சனையாகட்டும், கண்ணகி சிலை
விவகாரமாகட்டும் தந்தை பெரியாரின் பெண்ணியக் கருத்துகளைத் தொட்டுச்
செல்லாமல் எவராலும் பெண்ணியம் பேச முடியாத அளவுக்கு பெண்ணியத் தளத்தில்
இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது தந்தை பெரியாரின் குரல்.

இக்கட்டுரையில் தமிழ் மொழி தவிர்த்து பிற வட இந்திய மொழிகளில்
இந்தியப் பெண்ணியம் பயணிக்கும் தளத்தை அடையாளம் காட்டுவதன்
மூலம் தமிழ்ப்பெண்ணியத்துடன் கை கோத்து நடக்கும் ஒப்புமையை
மறுபக்கமாக்கி வாசகனை அடுத்தக் கட்ட நகர்வுக்கு இழுத்துச் செல்ல முடியும்
என்று நம்புகிறேன்.

இந்தியப் பெண்ணியம் அடையாளப்படுத்தும் மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை ஆராய்ந்து பெண்கள் ஏன் நசுக்கப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள் எவை,
என்று ஆராயும் போது தனிமனித வாழ்வில் பெண்கள் நசுக்கப்படுவது போலவே
பொதுவாழ்விலும் பெண்கள் நசுக்கப்ப்டுகின்றனர் என்று உணர்ந்தார்கள்.
மனித மறு உற்பத்தி, திருமணச் சடங்கு, கட்டாய இருபாலர் உடலுறவு, தாய்மை
இவற்றின் பெயரால் பெண்கள் கட்டுப்படுத்தப்படுவதும் தனிநபர் வழக்கமே சமூக
அமைப்பின் கட்டுப்பாடுகளாக ஆக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்ளூமாறு பெண்கள்
கட்டாயப்படுத்தப் படுவதைக் காணலாம்.


பாதிதூரம் வந்தப் பின்
அவள் திரும்பிப் பார்த்தாள்
காணவில்லை
அவள் கடந்து வந்தப் பாதையை.
வயல்களில்லை
வீடுகளில்லை
மனிதர்கள் இல்லை
எதுவுமில்லை
எங்கிருந்து அவள் புறப்பட்டாள்
என்பதற்கான
எந்தத் தடயங்களும் இல்லை
யாரோ
அவளுக்குப் பின்னால்
கவனமாக
அவள் வாழ்வின் அடையாளங்களை
துடைத்துச் சென்றிருக்க கூடும்..

என்று இந்தி கவிஞர் ஜியோட்சனா மிலன் பெண்ணுக்கான தனித்துவங்களும்
பயணங்களும் அடையாளங்களும் சமூகத்தால் துடைக்கப்படுவதை
தன் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

பெண்ணியத் திறனாய்வில் காத்லின் வீலர் தன்னிலை மீதான ஒடுக்கு முறையிலிருந்து சமுதாயத்தை புலனாய்வு செய்வதையும் அந்தரங்கமே அரசியல் என்பதையும் வலியுறுத்துவார்.

இருட்டு
அந்த இருட்டு
அவளுக்குள்ளும்.
கிணறைச்சுற்றி
எழுப்பப்பட்டிருக்கும்
சுற்றுச்சுவரைப்போல
அவளைச் சுற்றி
இருட்டு..

வெளிச்சத்தின் தடயமில்லாத இருட்டு.
என்று பெண்ணைச் சுற்றி மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் இருக்கும்
ஆண் சமூகச் சிந்தனைகள் உருவாக்கி இருக்கும் இருட்டை வெளிச்சப்படுத்துவார்
இந்திக் கவிஞர் அனாமிகா.

புத்தகங்களூம் வாசிப்புகளூம் நிறுவனக்கல்வி முறையும் பெண்ணியத்தில்
ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்கள் இதுவரை யுகம் யுகமாய் உறுதியானதாக
ஆணாதிக்க சமூகத்தால் கட்டி எழுப்பப்பட்டிருந்த குடும்பம், வீடு என்ற
கட்டுமானத்தை அசைத்துப் பார்த்தது.

செங்கல் சிமெண்ட் மரத்தால்
கட்டுக்கோப்பாக
உறுதியாக
கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படும்
வீட்டை
அதன் பலத்தை
அடித்தளத்தை
அசைத்துப் பார்க்கிறது
புத்தகங்களும்
புத்தகங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்
கரையான்களும்.

என்று மராத்திக் கவிஞர் கவிதாமகாஜனின் கவிதை வெளிப்படையாகவே
பேசுகிறது.
பெண் -அழகியல் இரண்டுமே ஒன்றாக கருதப்படுவதால் மராத்திக்கவிஞர்
மல்லிகா அமர்ஷேக் பெண்ணை அழகின் குறியீடாக இருக்கும் வீனஸ் சிலையுடன்
ஒப்பிடுகிறார்.


அவளுக்கு கைகள் இல்லை
-என்னைப் போலவே
அவள் தீர்க்கதரிசனப் பார்வை
அடியோடு செத்துப் போய்விட்டது
அவள் ஆடாமல் அசையாமல்
அலங்காரப்பொம்மையைப் போல
நின்று கொண்டிருக்கிறாள்
- என்னைப் போலவே
கரடு முரடான
கலாச்சார நூலேணியில்
கஷ்டப்பட்டு
தொங்கிக்கொண்டிருக்கிறாள்
கால்களுக்கும்
கால்களின் மேலிருக்கும் உதடுகளுக்கும்
நடுவில் இறுக்கமாக
- என்னைப் போலவே.

பாலியல் உந்துதல்களின் காரணமாகப் பாலியல் வன்முறை தொடர்வதும்
தந்தை வழிச் சமூகத்தில் அதிகார மையம் இதுவே என்பதும் இதனால் தான்
பெண் இரண்டாம்தரக் குடிநிலைக்குத் தள்ளப்படுகிறாள்: என்பதும் பெண் ஆண்
சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தையும் பெண்ணின் அதிகாரங்கள் மறுக்கப்படுவதையும் இன்றைய பெண் கவிஞர்கள் பல்வேறு கவிதைகளில்
அடையாளப்படுத்துகிறார்கள்.
ஆணின் காதலும் காதல் கவிதைகளும் பெண்மீது சுமத்தப்படும் முள்கீரிடங்களாகவே
இருக்கின்றன.

அவள் முலைகளிலும்
தொடைகளிலும்
நீ
வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி
அலைகிறாய்.
விடைத்தெரியாத
உன் கேள்விகளுக்கு
அவளீடம்
விடைகாணத் துடிக்கிறாய்.
என்று சொல்லும் மல்லிகா அமர்ஷேக்கின் கவிதை இக்கருத்தின் உள்ளும் புறமும்
அலசுகிறது.
ஆண் பேசும் காதலும் கவிதையும் பொய்யானவை என்று சொல்கிறது

அந்த உடல்களுக்கு அப்பால்
உயிர்ப்புடனிருக்கும் 'அவள்களை'
நீ வேண்டுமென்றே
உதாசீனப்படுத்துகிறாய்.

உண்மையில்
உன் கேள்விகளுக்கெல்லாம்
படுக்கையறை மட்டுமே
பதிலாக முடியுமா?

உன் காமம் தணிந்த இரவில்
உன்னோடு உறங்கிய அவளை
நீ அறிந்திருக்கவில்லை.
அவள் பெண்ணோ
ஊத்தைக் கண்ணோ
மாயப்பிசாசோ
இத்தருணத்தில்
கவிதைகளைப் பற்றிய
உன் பேச்சு
ஆச்சரியம்தான்.
ஆனால்
வருத்தமாகவும் இருக்கிறது
இன்னும் எத்தனைக் காலங்கள்
அர்த்தமில்லாத சொற்குவியலாய்
ம்ரப்பாச்சி வாழ்க்கையில்
பொய்யான கீரிடத்தைச்
சுமந்து கொண்டு
திரியப் போகிறாய்?
என்று கேள்வி எழுப்புகிறது.

உன் படகுகள்
பெண்ணின் தொடைகளைச் சுற்றிவந்து
பாய்மரத்தை விரிக்கின்றன

படகின் பயணம்
மீண்டும் ஒரு கடற்கரை
அல்லது
இளைப்பாறுகிறது அவள் முலைக்காம்புகளில்
உன் படகு.
சத்தமாகப் பாடுகிறாய்
அமெரிக்கா அமெரிக்கா
உரேக்கா யுரேக்கா..
இப்படியாக எதொ ஒரு பாடலை
கடலலைப் போன்ற அவள் கூந்தலில்
உன் சரீரம்
தொங்கிக்கொண்டிருக்கிறது.

அவள் கண் இமைகளில்
ஈர உதடுகளில்
காய வைக்கிறாய்
உன் சுவையான
அதிகப்படியான
தர்க்க நியாயங்களை.

மகிழ்ச்சி அலையின்
உச்சக்கட்டத்தில்
நிறைவுகளின் விளிம்பில்
நீ.

இப்போதும்
நான் சொல்லவரவில்லை
அவள்
தேவதை என்று!
ஆனால்
அரைநிர்வாணமாகிப் போன
உன் ஆன்மாவுக்கு
அவள் மட்டுமே
ஆடையாக முடியும்!.

இறுதியாக கவிதை இந்திய மெய்யியலின் தத்துவத்துடன் பெண்ணிய விடுதலையை
இணைக்கிறது. பெண்ணியத்துடன் மெய்யியலை இணைக்கும் போக்கில்
பெண்ணின் மனதில் புதியச் சிக்கல்கள் உருவாகின்றன. பெண் தனக்குள்ளும்
வெளியிலும் புதிய தேடல்களில் ஈடுபடுகிறாள். மரபை முற்றாக ஒதுக்கிவிடவும்
முடியாமல் மரபில் புதுமைச் செய்வதும் தேவையாகிறது. அவளுக்குள் இருக்கும்
பெண் பிம்பத்தை துரத்தவும் முடியவில்லை. புதிய தேடல்களில் மரபு சார்ந்த
மெய்யியலை இணைத்து ஒரு புதிய வழிமுறையை உருவாக்க அவள் முனைகிறாள்.

பெண்ணியத்தின் மேற்சொன்ன போக்கில் புராண இதிகாச கருப்பொருளுக்கு
புதிய அர்த்தங்கள் கொடுப்பதும் இதிகாசப் பாத்திரங்களுக்குள் இன்றைய சிந்தனைகளைப் புகுத்தி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கத்தை
கேள்விக்குட்படுத்துவதும் புதிய கருத்து தளத்தைக் கட்டமைப்பதும் சாத்தியமாகிறது.

மோதிரங்கள்
திருமணத்தின்
புனித அடையாளங்கள்
என்றால்
ஏ .. துஷ்யந்த ராஜனே
நான் உன் சகுந்தலையாக
இருக்க விரும்பவில்லை.

ரத்தமும் சதையுமான
என்னை நினைவூட்ட
தேவை ஒரு மோதிரம்தான் என்றால்
என்னை நீ மறந்துவிடுவதே நல்லது
துஷ்யந்தா.
என்கிறார் பஞ்சாபிக் கவிஞர் வனிதா.

நிராதரவான தருணத்தில்
மழைச்சாரலாய் நான்
ஈன்றெடுப்பேன்
என் மகன் பரத்தை.
அவனுக்காகவும்
அலைய மாட்டேன்
மீன்களின் வயிற்றில்
மோதிரத்தைத் தேடி.
என் மகனுக்காக
நான் உருவாக்கும் உலகத்தில்
மீன் அவன் வீடு
மாகடல் அவன் தந்தை
பூமி அவன் தாய்மடி.

என்று ஆண் சார்பில்லாத சகுந்தலையை அடையாளம் காட்டுகிறது.

பெண்ணுக்கு தன் உணர்வு என்ற ஒன்று கிடையாது. அப்படியே இருந்தாலும்
அதை அவள் வெளிப்படையாக உணர்த்தவே கூடாது என்பது தான் இலக்கியத்திலும்
இலக்கணத்திலும் காணப்படும் பெண்ணியம்.
'தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கில்லை" என்று தொல்காப்பியம் பேசும் பெண் திணை
இலக்கணம் நினைவு கூரத்தக்கது.
ஆனால் இருபதாம் நூற்றாண்டு பெண்ணியம் தன் தனித்துவத்தை, தன் வேட்கையை
தங்கள் கவிதைகள் வழி பதிவு செய்ய ஆரம்பித்துள்ளன.

உனக்குத் தெரியுமா
அந்தக் கணநேர காதலுக்காக
நான் காத்திருந்தேன்
பல நாட்கள் என்பது.

கற்பனைத் தவளும் கண்கள்
தேன்சொட்டும் உதடுகள்
மதுவடியும் முலைகள்
போதையூட்டும் தொடைகள்
ப்ராண அவஸ்தையில் அல்குல்
ஒரே ஒரு முறை
காதலின் சுவையறிய
அடிக்கடி
என்னை நானே
கொலை செய்து கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
என்னை
உயிர்ப்பித்துக் கொள்ள.

என்ற அபர்னா மொகந்தி - ஒரியா கவிதை
ஆண் எழுதும் எதையும் பெண்ணும் எழுத முடியும் என்பதும் அதைப் பெண் எழுதும் போது ஏற்படும் சக்திவாய்ந்த மொழியின் கருத்துருவாக்கத்தையும் சேர்த்தே பதிவு
செய்துள்ளது.

"ஆண் உயர்வு சமுதாயத்தில் இருக்கும்வரை பெண்ணுக்கான வெளி உருவாக முடியாது. ஆண் உயர்வு வெளியில் இருந்து கொண்டு பெண் பேசும் அரசியலும் ஆண்மை சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். அதற்குப் பெண் தன்னைத் தானே
உணர்தலும் உணர்ந்ததைத் தன்னுடைய மொழியில் வெளிப்படுத்தலும் தேவை"
என்பார் எலைன் ஷோவால்டர். (பெண்ணியத் திறனாய்வு. பக் 45)
ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம் நிலையிலிருந்து தாங்கள் பெற்ற
சொந்த அனுபவங்களின் வழி தன்னை உணர்தலே இன்று அலுவலக மகளிர் குரலாக
பல கவிதைகளில் ஒலிக்கிறது.
"ஆபிஸில் மதிய உணவு நேரம் " என்ற பிரதிபா நந்தகுமாரின் கன்னட மொழிக்கவிதை ஒரு காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..
என்று சொல்லி இறுதியில்

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

என்று முடியும் போது தனித்தனி இருவேறு பெண்களாக ஆணாதிக்கத்தால்
அடையாளப்படுத்தப் பட்ட இரண்டு பெண்களும் இரண்டாம் நிலையிலேயே
இருப்பதை உணர்த்திவிடுகிறது.

பெண்ணியப்போக்கில் சில கவிதைகளில் யதார்த்தத்தின் கோரமுகம் அப்படியே
சித்தரிக்கப்படுகிறது. பெண் விடுதலை என்பது இரும்புக் கூட்டிலிருந்து தங்கக்கூட்டிற்குள்
அடைக்கப்படுவதாக மட்டுமே இருக்கிறது. ஆண்-குடும்பம்
என்ற சிறை உடைத்து வெளியில் வந்தால் இந்தப் பூமி உருண்டையின்
ஒவ்வொரு அசைவிலும் ஆணாதிக்கமே கோலோச்சுவதால் விரக்தியுடன்
ஓர் ஆணுக்கு அடிமையாக இருந்து விட்டு போகிறேன் என்ற தத்புருஷ்
கவிதையில் சொல்கிறார் மராத்திக் கவிஞர் கவிதாமகாஜன்.

ஒத்துக் கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்


கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?



இந்தியப் பெண் கவிஞர்களின் படைப்புகளை இதுவரை யாரும் ஒட்டு மொத்தமாகத்
தொகுத்து ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ளவில்லை.
அப்படி தொகுக்கப்பட்டால் மொழி சார்ந்த பிரிவுகளைத் தாண்டி முரண்படும்
புள்ளியில் கை கோத்து நிற்கும் இந்தியப் பெண்ணியத்தின் கோட்பாடுகளையும்
போக்குகளையும் கண்டறிய முடியும்.


பிற மொழிக்கவிதைகள்:

> Live Update
-an anthology of recent marathi poetry
edited and translated by Sachin Ketkar
published by poetrywala

> Indian literature -sahitya akademi bi-monthly No: 215 of 2003
-women's poetry today.