Monday, January 9, 2017

சிறுகதைகளின் நிறப்பிரிகை

தென்பெண்ணைக் கதைகள்
----------------------------------------------------



சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?
தமிழ் இலக்கியத்தின் தனிப்பாடல்கள் சிறுகதைகளா இல்லையா ?
சிறுகதை மேற்கத்திய இலக்கியமா?
இப்படியாக எப்போதும் சிறுகதைகள் குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது.
சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எவராலும் அறுதியிட்டு
சொல்லிவிட முடியாது. சிறுகதைக்கான எல்லைக்கோடுகள் வரையப்பட்ட
அடுத்த நொடியில்  எல்லைக்கோடுகளைத் தாண்டி சிறுகதை பயணித்துவிடுகிறது..

அண்மையிலவாசித்த  எழுத்தாளர் அன்பாதவனின்
"தென்பெண்ணைக் கதைகள்"   படைப்பிலக்கியத்தின் பரிசோதனைக்களமாகவே மாறி இருப்பதைக் கண்டேன்.
ஒரு நிகழ்வு,  ஓர் உணர்வு சிறுகதையாகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துதான்.
ஆனால் "நீர்மங்களின் நிறப்பிரிகை" ஒரு நிகழ்வைச் சுற்றியோ ஒர் உணர்வைச் சுற்றியோ எழுதப்படவில்லை. இன்னும் சொல்லப்ப்போனால் ஒவ்வொரு நீர்நிலையும் ஒவ்வொரு தனித்தனி  சிறுகதையாக இருக்கின்றன.
கடல், பெருங்கடல், வளைகுடா, நதி,  குளம், ஏரி, கிணறு என்று ஒவ்வொரு நீர்நிலைகளாக பயணிக்கிறது.. வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் சாட்சியாக நீர்நிலைகள் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது கடலில் குளிக்கப்போகிறான்..அப்பா பக்கத்தில் இருப்பதால்  பெருங்கடலோ அலையோ அச்சிறுவனை அச்சுறுத்தவில்லை.

"ஹ என்ன பெரீய்ய கடல், எங்கப்பாவை விடவா..!" என்று வங்களாவிரிகுடாவில் ஆரம்பிக்கும் நீர்மங்களின் கதை  தமிழ்நாட்டில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படும்  சமகால அரசியலுடன் முடிகிறது.
கடலைக் கண்டு அதிசயித்தவனும் அப்பாவை கடலினும் பெரிதாக நினைத்தவனும் கடந்துவந்தப் பாதையில் ஒரு நதியின் மரணம் நிகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ., நீரின்றி அமையாது உலகு என்ற வாழ்வியலை கதையின் அடிநாதமாக மெல்லிய இழையாக கோர்த்திருக்கும் நேர்த்தி கதையை வீரியமுள்ளதாக்குகிறது.
கதையின் சம்பவங்களும் கதைப் பாத்திரங்களும்
 நிறப்பிரிகையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றன. கதைக்களமான நீர்நிலைகளே  கதையின் முதன்மைப் பாத்திரமாகிவிடுகின்றன. கதை நீர்மங்களின் கதையாக
நீர்மங்களின் நிறப்பிரிகையாக ஜாலம் செய்துவிடுகிறது. இத்தனையும் இந்த ஒற்றைக் கதைக்குள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் படைப்பிலக்கியத்தின்
அன்பாதவன் என்ற தேர்ந்த கதை சொல்லியை மிகச்சிறந்த உத்திகளைக்
கையாளும் எழுத்தாளராகவும் மெய்ப்பிக்கிறது.
 ரொம்பவும் இயல்பாகவும் அனைவரின் வாழ்க்கையிலும்
நிகழும் சாதாரண சம்பவங்களின் பார்வையில் கதையை நகர்த்தி இருக்கும் பாணி         வாசிப்பவனைக் கதையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது.
.  ஒற்றை நிகழ்வு ஓர் உணர்ச்சி என்றெல்லாம்
வரையறுக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீர்நிலைகளின் படைப்பு
வெள்ளம் அடித்துச் செல்லுகிறது.
நிகழ்வுகளின் ஈரம் நீர்நிலைகளின் ஈரத்தையும்
சாயலையும் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் நம் கதைகளைச் சொல்லும் நிறப்பிரிகையாக மறுஅவதாரம் எடுக்கின்றன. . கதை,  கதையையும் தாண்டி பயணிக்கிறது என்பது ஒரு படைப்பாளனின் ஆகச்சிறந்த வெற்றி என்றெ கருதுகிறேன்.


காக்கை குருவி எங்கள் சாதி என்று எழுதினானே பாரதி. அவன் மனுஷன்.
அவனைப் போல இருக்கனும்... அப்படினு  காக்கை குருவிகள் பேச
ஆரம்பிக்கின்றன.
சின்ன வயதில் பறவைகளை கல்லெறிந்து காயப்படுத்தியதும்
கொலை செய்ய உதவியதும் என்ற குற்ற உணர்விலிருக்கும் கவிஞன்
பறவைகளின் மன்னிப்பு கேட்கிறான். கவிதை எழுதுகிறான்.
அத்தருணத்தில் பாதிக்கப்பட்ட பறவை இனங்கள் என்னவெல்லாம்
பேசக்கூடும்? என்ற கற்பனைக்குள் புகுந்து அதுவே சுயவிமர்சனமாகி 
"சிறகுகளின் சாபம் " கதையை கனமுள்ளதாக்குகிறது.
"மூட்டை மூட்டையா பாவம் பண்ணிட்டு காசியில போயி கரைக்கிறமாதிரி..
பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்கிற மாதிரி , ஒத்தக் கவிதை எழுதிட்டு
என்னமா பாவலா காட்டறான் பாரு இந்த ஆளு "
என்று பறவைகள் கவிஞனைப் பார்த்து கிண்டல் செய்கின்றன.
எள்ளல் சுவையுடன் எதையும் எழுதுவதில் திறமைமிக்க அன்பாதவனுக்கு
பறவைகளின் மொழி  கை கொடுக்கிறது.
" நீ பாவமன்னிப்பு கவிதை எழுதறது.. குற்ற உணர்ச்சியில மிதக்கிறது..
இதெல்லாம் செத்துப்போன எங்கள் தொப்புள் கொடி உறவுகளை
மறுபடியும் உசுரோட கொண்டு தருமா என்ன.." என்று வாகை மரத்து
மைனா கோபத்துடன் கேட்கிறது.
அது மைனாவின் குரல் மட்டுமா..? அருகிலிக்கும் முள்ளி  வாய்க்கால்
தாண்டி அக்குரல் எதிரொலிக்கிறதே!
. ..
சிறுகதையின் ஒரு சொல்,,, தொப்புள் கொடி உறவு பற்றிய உரையாடல்...
கதைக்கு பன்முகப்பார்வையைக் கொடுக்கிறது. சிறுகதையும் பன்முகத்துடன்
பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது இக்கதை.

செய்திகளும் செய்திகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் உண்மை அறியும்
குழுக்களின் அறிக்கைகளும் சமகால வரலாற்றுடன் நேரடியாக தொடர்புடையவை.
அவை அனைத்தையும் தன் படைப்பிலக்கியத்தில் கொண்டுவர எடுத்த முயற்சியில் , கொஞ்சம் கூடுதலான ஆசையில் அன்பாதவன் எழுதி
இருக்கும்"  நடுக்கடல் தனிக்கப்பல்" இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் தனித்துவமான சிறுகதையாகி இருக்கும்., ஆகி இருக்க முடியும். ஆனால் நடுக்கடல்  தனிக்கப்பல் தென்பெண்ணையில்
ஆவணமாகவும் செய்தியாகவும் மட்டுமே... பயணித்திருக்கிறது..
ஆவணங்களை சிறுகதைக்கான நிகழ்வுகளின் ஆதாரமாகக் கொண்டுவரும்போது அதுவே
சமகால சமூக அரசியல் பிரச்சனைக்கான கருப்பொருளுக்கு அழுத்தும் கொடுக்கும்..
ஆனால் அதுமட்டுமே ஒரு சிறுகதையாகிவிட முடியாது..

" சம்பவாமி யுகே யுகே " சிறுகதை முழுக்கவும் நாடகத்திற்கான
கூறுகளைக் கொண்டுள்ளது.
தன் சமகாலத்து கவிஞர்களின் கவிதைகளை தன் சிறுகதைகளில் ஓர் உத்தியாகவே கையாண்டிருக்கிறார் அன்பாதவன்.
. சிறுகதைகளில் அதிகமாக  கவிதைகளைக்
கையாண்டவர் அன்பாதவனாகத்தான் இருப்பார் என்று எண்ணுகிறேன்.
அன்பாதவன் கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதையாளர். அவருடைய இத்தொகுப்பில் இலக்கியத்தின் இந்த மூன்று கூறுகளுமே  விரவி இருக்கின்றன.
சிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை, வளர்ச்சி, வடிவச்சோதனைகள், பரிசோதனை முயற்சிகள்  என்று பல்வேறு சோதனை முயற்சிகளின் களமாக  தென்பெண்ணைக். கதைகள்.
களத்தில் இறங்கிவிட்டால் கடைசிவரைப் போராடும் குணம் கொண்டவர்
அன்பாதவன்.   தென்பெண்ணை அவர் படைப்பிலக்கிய முயற்சியில்
இன்னொரு மைல்கல்
. வாழ்த்துகளுடன்...
--
தென்பெண்ணைக் கதைகள்
அன்பாதவன்
இருவாட்சி (இலக்கியத்துறைமுகம்) வெளியீடு
விலை : ரூ 130

1 comment:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete