Friday, February 20, 2026

புதிய மாதவி நேர்காணல் -2


புதிய மாதவி நேர்காணல். பாகம் 2

கோடுகள் இதழ் 14.

கேள்விகள் முரளிக்கண்ணன்.

🔥

 மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு மிகக்குறைவாக இருக்க காரணம் என்ன? படைப்பிலக்கியங்கள் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைவதற்கான ஊடகவழி சாத்தியங்கள்குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணமா?அல்லது வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறதா? அல்லது பெரும்பான்மையான மனிதர்கள் இலக்கியத்தை நிராகரிக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா? அது ஒரு சொகுசு, மேல்தட்டு, அசாதாரணம் என்பது போல.


இன்று நேற்றல்ல. எப்போதுமே மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. அப்படித்தான் இருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் பக்கத்து மாநிலம் கேரளாவில் இருக்கும் வாசகப்பரப்பு ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறது என்ற முடிவுக்கு இதை வைத்துக் கொண்டு வருவதும் தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்லும். இன்றைய ஊடக வெளிச்சம் யாரை எல்லாம் எழுத்தாளர்கள் என்று ஊதிப்பெரிதாக்கி காட்டுகிறதோ அவர்களின் எழுத்துக்கள் அதன் மேம்போக்கான நிலை, அவர்களின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் பெருத்த வேறுபாடு, வெறும் வார்த்தைகளும் உத்திகளும் மட்டுமே படைப்பிலக்கியமாகி விடாது என்ற புரிதல் கொண்ட சிலரையும் கூட பாதிக்கிறது. விவகி நிற்க வைக்கிறது.


அல்லது எதிர்மறையான கூறுகள் அவற்றில் இடம்பெறுகிறதா? ஒரு இலக்கிய படைப்பில் புரியாமை, பூடகம், மர்மம், சிக்கலான சேர்க்கை போன்றவை தவிர்க்க முடியாதவையா? அது ஒருவேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா?


பூடகம் புரியாமை, மர்மம், சிக்கலான சேர்க்கை இவை அனைத்துமே ஒரு வாசகனின் வாசிப்பை பொறுத்து அமைவது. எல்லாவற்றையும் 1+1 = 2 என்று சொல்வது கணித அறிவியல். அதை 1 + 1 = 0 என்றோ, 1 + 1 = 1 என்றோ சொல்வது பூடகம் மர்மம். இம்மாதிரியான பார்வையிலிருந்துதான் படைப்பூக்கம் நிகழும், வெளிப்படையாகத்தான் சொல்ல வேண்டும் என்றால் விரிவாக கட்டுரைகளை தேவையான ஆதாரங்களுடன் எழுதிவிட்டுப் போகலாமே! ஏன் கவிதை, கதை என்ற வடிவங்களுக்குள் போக வேண்டும். படைப்பிலக்கியத்தில் இன்று புரியாதது நாளை புரியலாம். புரியாமலும் போகலாம். உங்களுக்குப் புரிவது, எனக்கும் உங்கள் புரிதலைப் போலவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றால் அது படைப்பிலக்கியமாகாது. காதல், வீரம், சோகம், இயற்கை, இத்தியாதி மனித உணர்வுகள் மனிதனிடம் காலம் காலமாக இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் படைப்பிலக்கியமும் இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது இந்தப் பூடகமான மர்மத்தின் முடிச்சில் தான் .

எழுத்தாளர்களில் பலரையும், வரலாறையும் பார்க்கும்பொழுது இயல்பான, வழக்கமான வாழ்வின் துயரச்சாத்தியங்களிலிருந்து அவன் ஒரு எழுத்தாணைக இருப்பதாலையே அதைவிட அதிகமான, குறிப்பான துயர்மிகுந்த வாழ்வை அடைகிறானா? அது அவனது சொந்த தனிப்பட்ட இயல்பூக்கங்களிலிருந்து முளைத்தெழுகிறதா? அல்லது சமூகம் அவனை தன்னிலிருந்து வேறுபட்ட பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை போல ஒரு மனிதனாக காண்கிறதா? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன? அல்லது சமூகத்திற்கு அவனிடம் உள்ள பிரச்சனை ດທ?


நீங்கள் குறிப்பிடும் எல்லாமும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு எழுத்துள்ளமும் சந்திக்கும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. தனிப்பட்ட சொந்த அனுபவத்தின் ஊடாகவே சமூகத்தின் இன்னொரு பக்கத்தையும் படைப்பு மனம் வாசிக்கிறது. கண்டும் காணாமல் செல்லும் பாதசாரிகளின் கூட்டத்தில் ஒருவனாக அவனால் இருக்கவே முடிவதில்லை. அதனாலேயே படைப்பாளன் சமூகத்தின் பொதுஜனப்புத்தியில் கரைந்துவிட முடியாமல் தனித்துவிடப்படுகிறான். ஒரு வகையில் இத்தனித்துவிடப்படும் உணர்வு நிலையே அவன் படைப்பூக்கத்திற்கானதாகவும் மாறுகிறது எனலாம்.


ஒரு படைப்பாளி தன் சொந்த வாழ்வின் நிஜமான வாழ்வனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை உருவாக்கும் போதே. அப்படைப்பு படைப்புக்குரிய அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும். அவனுக்கு வேறுவழியில்லை, அவன் பலவற்றையும் கண்டிருக்கலாம். புரிந்திருக்கலாம். அது ஒருவரை அவரது அனுமதியில்லாமல் புகைப்படமெடுப்பது போலாகுமா? ஒரு படைப்பு அச்சு அசலாக நிஜம், செய்தித்தாளில் வெளிப்படுவதை போல வெளிப்படுவதில்லை என்ற போதிலும் அல்லது ஒரு வாசகளோ ஒரு பார்வையாலணே ஒரு படைப்பின் மேன்மையான கூறுகளை கருத்தில் கொள்வதற்கு முன் அது ஒன்றுமேயில்லையா?


படைப்பு அச்சு அசலாக, நிஜம் தான் என்றாலும் அது செய்தியாக மட்டுமே முடிந்துப் போவதில்லை. ஒரு படைப்பு மனம் அச்செய்தியை மனிதர்களின் வாழ்க்கையுடன் அன்றாட பாடுகளுடன், உறவுகளுடன், காதலுடன், இச்சமூகத்தின் அற ஒழுக்க கோட்பாடுகளுடன்... இப்படியாக பல முடிச்சுகளுடன் அவன் எழுத்துலகில் வந்துவிடுகிறது. அனுபவமும் இதோடு சேர்ந்து கை குலுக்குகின்றன. பிற எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு இதை முன்னிறுத்துவதை விட அண்மையில் வெளியான என் சிறுகதை தொகுப்பு. ரசூலின் மனைவியாகிய நான், இக்கதையில் ரசூல், அவன் மனைவி கவுரி, மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு, அதில் பாதிக்கப்பட்ட பொதுஜனம் எல்லாமே நிஜமானவை. செய்திகளாக வெளிவந்தவையும் கூட ஆனால் அவன் ரசூலாக இருப்பதும், அவள் கவுரியாக இருப்பதும் உடல் மட்டும் நான் இருத்தலின் அடையாளமா? ஒருவன் இருக்கிறான் என்பதன் அடையாளம் என்ன? என்ற வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளும், இப்படியாக ஓர் உண்மை சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதை. யாரையும் புகைப்படம் எடுக்கவில்லை. ஆனால் கதையின் மனவோட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் உணர்வுகளும் பெருநகரத்தின் சக்கரங்களைப் போல ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பு இப்படியாக ஏதோ ஒரு அசலின் மையத்தைச்


சுற்றி புனைவுலகின் உத்திகளுடன் வலம் வருகின்றன.


கலையின் அசாத்தியமான சாத்தியங்களை கொண்டு பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமா தான் அதிகபட்ச சாத்தியங்களை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. நீங்கள் பிற கலைகளோடு இலக்கியத்தை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ஓவியம் - சிற்பம், சினிமா நாடகம். பாரம்பரிய இசை நடனம் இவற்றை அவை செயல்படும் முறையில் இலக்கியத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா? அல்லது இந்த ஒப்பிடல் உபயோகமற்றதா? பொருத்தமற்றதா?


காட்சி ஊடகம் (சினிமா ) வலிமையானது என்பதில் ஐயமில்லை. ஆனால் காட்சி ஊடகத்திற்கு மொழிவழி வெளிப்படுத்தப்படும் இலக்கிய படைப்பிற்கு இருக்கும் பன்முகப் பார்வை இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இலக்கியத்தின் பன்முகப் பார்வையும், அவரவர் அனுபவத்தின் ஊடாக அப்பிரதி வாசிக்கப்படுவதும் நிகழ்கிறது. காட்சி ஊடகத்திற்கு இது சாத்தியமில்லை. அதனால் நான் காட்சி ஊடகத்தை விட இலக்கிய படைப்பு சிந்தனையைத் தூண்டுவதிலும், உணர்ச்சியின் பல்வேறு வடிகாலாகவும் அவரவர் வாசிப்பில் தன்னை இருத்திக் கொள்கிறது. ஆனால் மொழிவழியான இலக்கியம் அந்த மொழி சார்ந்த பிரதேச எல்லைகளுக்குள் முடங்கிவிடும். என்னதான் மொழியாக்கங்கள் வழி எல்லைகளைக் கடந்துவிட முயற்சி செய்தாலும் கூட ஒரு சிற்பத்திற்கும். ஓவியத்திற்கும், நிகழ்த்துக் கலைக்கும் கிடைக்கும் மொழி. தேச, இன எல்லைகளைக் கடந்து விடுவது போல அவ்வளவு எளிதல்ல. ஒப்பீடுகள் செய்யும் போது இந்த எல்லைக் கோடுகளின் வரையறைகளை முன்னிறுத்தி செய்தாக வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த ஒப்பீடு அதன் பொருத்தப் பாடுகளை இழந்துவிடும்.


படைப்பாளிகள் தங்களுக்குள் அறிந்தோ, அறியாமலோ பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு இருக்கிறார்களா? ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதல்ல. ஒருவரையொருவர் நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி இன்னொரு பகுதியை நெருங்க முடியாதவாறு இடையில் குறுக்கிட்டு நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா?


இருக்கிறது. பெரும்பாலும் சாதி சார்ந்த பிளவுபாடு இருக்கிறது. இந்த பிளவுபாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பட்டியல் போடுவதில், புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவதில், பெரிய எழுத்தாளர்கள் தங்கள் பேச்சுகளில் அல்லது பதிவுகளில் குறிப்பிடும் எழுத்தாளர்களின் பெயர்களின் வரிசையில்... இப்படியாக சாதி, சுயசாதி அபிமானம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. சுயசாதி அபிமானம் இருப்பதே மாபெரும் குற்றமா என்று கேட்டால் எழுத்து. இலக்கியம், தகுதி என்ற எல்லாமே புறக்கணிக்கப்பட்டு சுயசாதி அபிமானம் மட்டுமே முன்னிலையாகி முதல்நிலைப்படுத்தப்படும் போது அது கேள்விக்குரியதாகிறது.


சிறுபத்திரிக்கைகளின் செயல்பாடு தங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா? பல்வேறு தரத்தில், பல்வேறு வகையில், பல்வேறு பொருளில் எழுத்துக்கள் ஒரு சிறுபத்திரிக்கையை நோக்கி வருகிறது. 30 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் ஏறக்குறைய 80 பக்க ஒரு சிறுபத்திரிக்கையில் என்ன அடிப்படையில் எழுத்தாளர்களை தேர்வுசெய்து முன்னிறுத்துவது? சந்தேகமில்லாமல் அது

ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை வாங்கிப்படிக்கும் வாசகன் என்ற முறையில் அவனது எதிர்பார்ப்புகளை எப்படி வைத்துக்கொள்வது?


சிறுபத்திரிகையை ஒரு வாசகன் வாங்கி வாசிப்பதே அதன் கனமான வீரியமான படைப்புகளுக்காகவும், புதிய முயற்சிகளை அறிவதற்காகவும் நான். சிறுபத்திரிகை நடத்துபவரின் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயமிது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் சிறுபத்திரிகையை நடத்துபவரின் கருத்துநிலை, நோக்கம் சார்ந்த விடயம். எம்மாதிரியான வாசகர்களை அவர் பத்திரிகை சென்றடைகிறது என்பதையும் அல்லது எம்மாதிரியான வாசகர்களை சென்றடைய வேண்டும், உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சிறுபத்திரிகையின் ஆசிரியர் தெளிவான புரிதலுடன் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.


பதிப்பகத்தை ஒரு தொழிலாக நடத்துவதை தவிர்க்கமுடியாது என்ற நிலையில், பதிப்பகங்கள் பொதுவாக தீவிர படைப்பிலக்கியத்தை எப்படிப்பார்க்கின்றன? படைப்பிலக்கியத்தோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்போடு இருப்பவர்கள் தான் அதை பதிப்பிக்கிறார்களா? தீவிர படைப்பிலக்கியத்தின் விற்பனை பதிப்பாளர்களுக்கு லாபம் தரும் ஒரு தொழிலாக இருக்கிறதா?


பதிப்பகம் சார்ந்த இக்கேள்விக்கு சரியான பதிலை ஒரு பதிப்பகத்தார் மட்டுமே கொடுக்க முடியும். படைப்பிலக்கியத்தோடு ஏதோ வகையில் தொடர்பிலிருப்பவர்கள் தான் பதிப்பகம் நடத்துகிறார்கள். நீவிர படைப்பிலக்கியத்தின் விற்பனை இலாபமானதாக இருக்கிறதா என்று கேட்டால் பதிப்பகத்தாரின் ஓட்டு மொத்த குரலாக ஒலிப்பது இதில் இலாபமில்லை என்பதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்கள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டே தான் இருக்கின்றன. இலாபமே இல்லை என்றால் எப்படி? என்ற கேள்விதான் எழுகிறது.


இணையத்தில் தீவிர படைப்பாளிகளுக்கான சிறுபத்திரிக்கைகள், தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவை முழுமையாக படைப்பாளிகளால் தளங்கணேடு தொடர்ந்து தொடர்பில் இருப்பது. படைப்புகளை வாசிப்பது. படைப்புகளை அனுப்புவது பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது அவை தனிப்பட்ட நபர்களின் ஆத்மதிருப்திக்காக நடத்தப்படுகின்றவைா?


தனிப்பட்ட நபர்களின் ஆத்மதிருப்திக்காக நட்த்தப்படுகிறது என்றெல்லாம் பொத்தம் பொதுவாக


சொல்லிவிட முடியாது. தனி நபர்கள் ஜெ.மோ, எஸ்.ரா. சாகுநிவேதிதா. நாஞ்சில் நாடன் இப்படியாக பலரும் அவர்களுக்கு என்று தனித்தனி வலைப் இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையத்தில் தீவிர படைப்பாளிகளுக்கான சிறுபத்திரிகை இணைய தளங்கள் மிகவும் முக்கியமானவை. உலகம் முழுவதும் சிதறி இருக்கும் ஈழத்தமிழர்கள் தான் இதில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்று சொல்ல வேண்டும். இணைய இதழ்கள் அவர்களின் தேவைக்கானதாக மாறியது. அத்தோடு சேர்ந்து இலக்கியமும் இணைய இதழ்களில் இடம் பெற்றது. இதன் வீச்சு அபாரமானது என்று தான் சொல்வேன். கனடாவிலிருந்து வரும் பதிவுகள் இணைய இதழ், சுவிஸ்சர்லாந்தில் இருந்து வெளிவரும் பெண்களுக்கான பெண்கள் நடத்தும் இணைய இதழ், கவிதைகளுக்கான வார்ப்பு இணைய இதழ், இதுதவிர திண்ணை, அச்சில் வெளிவரும் சிற்றிதழ்களையும் உள்ளடக்கி தன் வாசிப்புக்கு கொடுக்கும் கீற்று இணைய இதழ். பெண்கள் இணைய இதழ், ஆறாம்திணை இப்படியாக இணைய இதழ்களின் பரப்பும் வீச்சும் அபாரமானவை. பக்கங்களில் அதனால் தான் இன்று வெகுஜன இதழ்களும் இணைய இதழ் பக்கங்களை உருவாக்கி தங்கள் வாசகர்கள் பரப்பை அதிகரிக்கும் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. படைப்பாளிகளால் அவை முழுமையாக பயன்படுத்தப் படுகின்றனவா என்று கேட்டால் என்னைப் போன்ற தமிழகச் சூழலுக்கு அப்பால் வாழ்பவர்களுக்கு இணைய இதழ்கள் எளிதாக இருக்கின்றன. அச்சு ஊடகத்திற்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் அவஸ்தைகள் இல்லை. யாருடைய சிபாரிசுகளும் தேவைப்படுவதில்லை. சுதந்திரமாக செயல்படவும் முடிகிறது.

🔥

ஒரு படைப்பாளியோ அல்லது ஒரு வாசகனே 

இணையத்திற்கு சென்று ஒரு இலக்கிய படைப்பையோ, ஒரு இலக்கிய கட்டுரையையோ தொடர்ச்சியாக நுகர வேண்டுமானால் அவனிடம் ஒரு கணினி இருக்க வேண்டும், இணையத்தொடர்பு இருக்க வேண்டும், தேவையானவற்றை எடுத்து வாசிக்க ஒரு பிரிண்டர் இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லையென்றால் அவன் ப்ரவுசிங் சென்டருக்கு சென்று கட்டணம் செலுத்தி குறைந்த நேரம், அதிக கட்டணம் அதை சாத்தியமாக்க வேண்டும். பொதுவாக தீவிர இலக்கிய வாசகர்கள் இணையத்தை எளிதில் அணுகி அதை பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பவர்களா?


நடைமுறையில் இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. நான் என் கிராமத்திற்குப் போகும் போது வெளியுலக இலக்கிய தொடர்புகள் அறுந்துப் போகின்றன. கைபேரியில் ரீசார்ஜ் செய்யும் பணத்திற்கு இரண்டு புத்தகம் வாங்கி வாசித்து கொண்டிருப்பேன். தமிழகச் சூழலில் ஒரு சினிமா பார்க்க செலவு செய்யும் தொகையுடன் ஒப்பிடும் போது தீவிர இலக்கிய வாசகன் இணையத்தை அணுகுவதில் தயக்கம் காட்ட மாட்டான் என்று நினைக்கிறேன். இதே இந்த இணைய வாசிப்பு களம் மாறும்போது மிகவும் உதவியாகவே இருக்கிறது. அதாவது வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் போது இணையம் தான் ஒரு நூலகம் போல நம்முடன் பயணிக்கிறது. இதை என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். வெளிநாடு வாழ் தமிழர்களைச் சென்றடைய இணையமே வாசலாக இருக்கிறது.

🔥

ஒரு படைப்பாளி தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு, எந்த அடிப்படையில் நம்ப முடியும்? ஒரு வாசகன் தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு நம்ப முடியும்? தீவிர இலக்கிய செயல்பாடுகள் தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு நம்ப முடியும் என நினைக்கிறீர்கள்? சிறுபத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள், படைப்பார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள் இவற்றோடு ஒப்பிடும் போது இணையத்தின் பாத்திரத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?


இன்று ஒவ்வொரு படைப்பாளிக்கு எல்லைகள் கடந்து பயனிக்க இணையத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெ.மோ, எஸ்.ரா. சாருநிவேதிதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களும் இணையத்தை ஒதுக்கவில்லை. தங்கள் படைப்புகள் இணையத்தில் இருப்பதால் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாசிக்கவும், அவர்களைச் சென்றடையவும் உதவியாக இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தக வெளியீடுகள் முதல் விமர்சனக் கூட்டங்கள் வரை இப்போதெல்லாம் ஒலி-ஒளி காட்சி வடிவத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். ஆனாலும் இணையத்தை மட்டுமே ஒரு படைப்பாளி நம்ப முடியுமா என்று கேட்டால் அதற்கான சூழலோ வசதியோ தமிழகச் சூழலில் வரவில்லை என்று தான் சொல்வேன்.

🔥

ஒரு படைப்பை இணையத்திலிருந்து பிரிண்டவுட்டாக எடுத்து வாசிப்பதற்கும், ஒரு பத்திரிக்கையில் அதை வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


எனக்கும் புத்தக வடிவில் வாசிப்பது தான் வசதியாக இருக்கிறது. ஆனால் 'கிண்டில்' வாசிப்பு அச்சு வடிவத்தின் புத்தக வாசிப்பை முழுமையாக கபளீகரம் செய்துவிடும் என்பது தான் இன்றைய இளம் தலைமுறையினர்

முன்வைக்கும் வாதம்.இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகட்டும். பார்த்து கொள்ளலாம்.


🔥


எழுத்து ஒரு வடிகாலா? அல்லது படைப்பாற்றல் என்ற தனியான ஒன்றிலிருந்து அது பிறந்து வர வேண்டுமா ? . வடிகாலாக இருந்தால் - வெறும் புலம்பல், வெறும் துயரக்காடு போன்று-  அதில் அதை வாசிக்கும் ஒரு வாசகனின் இடம் என்ன? அல்லது ஒரே சமயத்தில் அது இரண்டுமாக இருக்கிறதா?


இரண்டும் தான். வடிகால் வெறும் புலம்பலாக மட்டுமே வந்தால் அது இலக்கியமாகிவிடாது. அதை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்துவதே இலக்கியம் செய்யும் மாயவித்தை.

🔥


எழுதும் போது இது யாருக்காக எழுதப்படுகிறது என்ற பிரக்ஞை உள்ளே வருவது அல்லது உள்ளே செயல்படுவது ஒரு படைப்பின் போக்கை, ஒரு படைப்பின் அர்த்தத்தை திசைமாற்றி விடுமா?


இதை யாருக்காக எழுதுகிறோம் என்ற பிரக்ஞையுடன் எழுதுவதில்லை. குழந்தை இலக்கியம் மட்டும் விதிவிலக்கு.

🔥

படைப்புகளில் பொதுவாக பால்யகால அனுபவங்கள் தான் தீவிரமான உத்வேகம் கொள்ளவைக்கும் எழுத்துக்களை உருவாக்க காரணமாகிறது என்பது உண்மையா?


அப்படி சொல்வதற்கில்லை. இது ஒவ்வொரு தனி நபர் சார்ந்த விஷயம். எழுதுபவரின் வாழ்விடம். குடும்ப பின்புலம், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். திருப்பங்கள் இப்படியாக பல காரணிகள் இருக்கின்றன.

🔥

ஒருவர் தனக்காக எழுதுகிறார். அதை தன்னிடமே வைத்துக்கொள்கிறார். அல்லது வேண்டுமானால் பிறர் வாசித்துக்கொள்ளட்டும் என்று அனுமதிக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது ஒரு எழுத்தில் பிறர் என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?


எனக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர யாரும் தனக்கே தனக்காக எழுதுவதில்லை என்பது தான் உண்மை. அப்படி எழுதுவது டைரி குறிப்பு. படைப்பிலக்கியம் என்பது ஒரு படைப்பாளன் தன்னை, தன் அனுபவத்தை, சமூகம் சார்ந்த தன் பார்வையை, சமகால அரசியலை இப்படியாசு தன்னைச் சுற்றி நடக்கும் அக, புற உலகத்தை தரிசிக்கும் அனுபவம் தான் படைப்பாகிறது. படைப்பு மனம் அதை தனக்கு தெரிந்த அல்லது தோதுவான ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த படைப்புக்கும் வாசகனுக்குமான இடைவெளி குறையும் போது அக்குறிப்பிட்ட படைப்பு வாசகனுக்கானதாக மாறுகிறது.

🔥

இதுதான் பிரச்சனை, இதுதான் வாழ்க்கை, இதுதான் தீர்வு, சுபம் என எழுத்து ஒரு முற்றுப்புள்ளிக்கு வருவது ஏன் மிகச்சிறந்த எழுத்தாக கருதப்படுவதில்லை?


வாழ்க்கை அப்படி நேர்கோட்டில் இருப்பதில்லை. பன்முகத்தன்மையை படைப்பு இழந்துவிடும். பிரச்சனை, வாழ்க்கை, தீர்வு, ஏன் சுப முடிவுகள் கூட ஒன்று போலிருப்பதில்லை தானே.. எனக்குப் பிரச்சனையாக இருப்பது எல்லோருக்கும் பிரச்சனையாகவே இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? படைப்பு என்பதே இந்த முரண்களுக்குள் பயணிப்பது தானே.



நன்றி : கோடுகள் இதழ் 14

15/11/2019-1/1/2020


#பெண்ணியம்புதியமாதவி 

#புதியமாதவிநேர்காணல்

#புதியமாதவிபடைப்புகள்


No comments:

Post a Comment