Thursday, August 23, 2007

மணிப்பூரின் போராளிகள்


மணிப்பூரின் போராளிகள்
-----------------------

"தேசப்படத்தின்
எல்லைக்கோடுகள்
கிறுக்கிய
எல்லைமீறிய
வன்புணர்ச்சியில்
மணிப்பூரின் நிர்வாணம்.

முலைகளே ஆயுதமான
போர்ப்படை
புறப்பட்டுவிட்டது
வலிகளின் வரிசையுடன்.

எதிர்க்கமுடியாத
அவலத்தில்
தோற்றுப்போகிறது
நேற்றுவரைக் குறிவைத்த
உன் நீண்ட துப்பாக்கிகள்"

மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.
மணிப்பூர் மக்களை எதிர்க்கிறது - இந்திய இராணுவம். இது சரித்திரப்பாடம்.

யாருக்காக யாரை எதிர்த்து இந்திய இராணுவம் போர் புரிகிறது?
வரைகோடுகளால் வரையப்பட்ட பூகோளப்பாடத்தை நிலைநிறுத்த இந்திய அரசு இந்தியர்களாக
சொல்லப்படும் இந்திய மணிப்பூர் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடித்து வீழ்த்தி தன் ஆளுமையை
நிலைநிறுத்தப் போர் நடத்துகிறது. இந்தப் போரில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தீவிரவாதிகள் என்ற
பட்டம். அந்த மண்ணின் உரிமையை, அவர்களின் பிறப்புரிமையை எதிர்ப்பதன் மூலம் இந்தியா
அரசின் இன்னொரு முகம் -மக்களாட்சி முகமூடி அணிந்து தன் மக்களைத் தின்று திரியும் பயங்கரவாதத்தின் பலம் - திரைவிலகி வெளியில் தெரிகிறது.

இம்பாலில் (Imphal) இருக்கும் பம்மன்கம்பு சிற்றூரில் அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி அவளைக் கைது செய்கிறார்கள்.
தீவிரவாதைகளின் இயக்கத்தைச் சார்ந்தவள் என்று தங்கஜம் மனோரமாதேவி
மீது குற்றம் சாட்டுகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 32. குண்டுகள்
துளைத்த மனித வல்லூறுகள் தின்று நாசம் செய்த அவள் உடல்
11-07-2004 அதிகாலையில் நகரியன் மபோமரிங் கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. ஏழு குண்டுகள் பாய்ந்துள்ள அவள் உடலில் ஒரு குண்டு அவள் இடுப்புக்கு கீழே பின்புறம் வழியாகப் பாய்ந்து அவள் யோனியைக் கிழித்து சிதைத்துள்ளது. அவள் உடலெங்கும் கீறல்கள், காயங்கள், வலது
தொடையில் கத்திக்குத்து..
அவள் நிலைக்கண்டு மணிப்பூர் மக்கள் கொதித்து எழுந்தனர். மனோரமாவின் குடும்பத்தினர் அவள் உடலை வாங்க மறுத்தனர். 32 அமைப்புகள் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தினர்.

மனோரமா படுகொலையைக் கண்டித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ( Armed forces special powers act- AFSPA. 1958ஐ) விலக்கக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்த 12 பெண்கள் ஊர்வலம் சென்றனர். இந்தப் பெண்களின் ஊர்வலம் பலகோடி
மக்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை விட வலிமையானது.
இந்திய அரசை அசைத்துப் பார்த்த பெண்களின் ஊர்வலமிது.
தங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

INDIAN ARMY RAPE US

INDIAN ARMY TAKE OUR FLESH

என்ற பதாகைகள் தாங்கி அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் ஊடகங்களை
மணிப்பூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. மணிப்பூரில் என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்று பிற மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்களுக்கு தெரியவந்தது.

16-07-2004ல் தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 700 பேர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.மணிப்பூர் பல்கலை கழக மாணவர் அமைப்பு அமைதியான முறையில் ஊர்வலம் வந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையை
முற்றுகையிட்டனர்.
கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கிளர்ச்சியை
காவல்துறை தன் இரும்புக்கரங்களால் சுட்டு வீழ்த்தியது. பலர் காயமடைந்தனர்.. சிலர் உயிரிழந்தனர்.
13 நாட்கள் பிணவறையிலிருந்த மனோரமாவின் உடலை அவள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லாமல் காவல்துறையே எரியூட்டி இறுதிச் சடங்கைச் செய்தது.

12 ஆகஸ்ட் 2004ல் மணிப்பூர் முதல்வர் 7 தொகுதிகளில் இந்திய இராணுவத்தின் (AFSPA) கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்காமல் தளர்த்திக் கொள்வதாக அறிவித்தார். (partial withdrawal).
15 ஆகஸ்ட் 2004ல் இந்திய சுதந்திர நாளில் மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இந்திய சுதந்திரக்கொடி, மூவண்ணக் கொடி எரியூட்டப்பட்டது.
32 வயது பிபம் சித்தரஞ்சன் சிங் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின்
வன்கொடுமையை எதிர்த்து தீக்குளித்தார்.
மணிப்பூரில் நடக்கும் இந்த அனைத்து செய்திகளையும் ஒளிபரப்ப
மணிப்பூர் கேபுள் நெட்வொர்க்கிற்கு அரசு தடையுத்தரவு விதித்தது..

>ஒத்துழையாமை இயக்கம் - (non cooperation )
>தன் எழுச்சி இயக்கம் (self reliance movement)
>சுதேசி இயக்கம்.. ஆம், இந்தியப் பொருட்களை முழுவதுமாக மணிப்பூரில் விலக்குதல்..
சுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் மறுவாசிப்பு இது.

சந்தேகத்தின் பேரால் யாரையும் எப்போதும் எவ்விடத்திலும் விசாரணையின்றி கைது செய்யவும் சுட்டுத் தள்ளவும் இந்திய பாதுகாப்பு படையில் கடைநிலை காவலர்க்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததையும்
இதெல்லாம் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட இந்திய அரசு
எடுக்கும் முயற்சிகள் என்றும் அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல,
தன்னையே ஏமாற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய இராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிரிகேடர் சாயில்லோ
(Brigadier Sailo) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் அரசு தரப்பு செய்திகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
"மிஷோரோம் கிராமத்தில் ஒட்டு மொத்த மனிதர்களின் உரிமைகள்
பறிக்கப்பட்டிருப்பதையும் அவர்களின் அவல நிலையையும் எழுதியுள்ளார்,

," The feelings of the entire villages and population of Mizoram are now totally alienated by the denial of all decencies of human rights and any picture which may have been painted to you to the contrary, is totally false." (Quoted in Where 'Peacekeepers' Have Declared War - :Report on violations of democratic rights by security forces and the impact of the AFSPA on civilian life in the seven states of North East - National Campaign Committee against Militarisation and Repeal of AFSPA, 2000, Delhi).

இன்று வடகிழக்கு மாநிலங்களின் நிலை இதுதான்.

தென்கொரியா வழங்கும் க்வாஞ்ச்சு விருது (Gwangju Prize ) சியோல் நகரத்தில் மே மாதம் 18ஆம் நாள் 2007ல் மணிப்பூரின் இரும்பு மங்கை சர்மிளா தானுவுக்கு -வயது 35- வழங்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் டூவுக்கு மேல் (12th std) தன் கல்வியைத் தொடர முடியாத மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சர்மிளா தானுவுக்கு ஆசியாவின் மிகச்சிறந்த
விருது வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஆவணப்படத்தை மனித
உரிமைகள் அமைப்பு தயாரித்து திரையிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக
அவருடைய விருதைப் பெறுகிறார் அவருடைய மூத்த சகோதரர்.
சர்மிளா தன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவில்லை.

யார் இந்த இரும்பு மங்கை?
இம்பாலிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் மலோம் (Malom) பேருந்து நிலையத்தின் அருகில் இந்திய பாதுகாப்பு படை 02 நவம்பர் 2000ல்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 10.
இதுமாதிரி துப்பாக்கிச் சூடும் மனித உயிர்களைப் பறிப்பதும் இந்திய பாதுகாப்பு படைக்கு புதிதல்ல, மலோம் மக்களுக்கும் புதிதல்ல. ஆனால் இச்செய்தியைக் கேள்விப்பட்ட சர்மிளா உடனடியாக மலோம் விரைந்து
தன் "சாகும்வரை உண்ணாவிரதம்" போராட்டத்தை அறிவித்தார்.
சர்மிளாவின் காந்திகிரியைக் கண்டு பலர் இந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் எதுவரை தொடரும் என்று ஐயப்பாட்டுடன் நோக்கினர்.
இம்பாலா மருத்துவமனையில் அவருக்கு 21 நவம்பரில் மூக்குவழியாக
திரவ உணவு ஊட்டப்பட்டது. 'தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக
சர்மிளாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசமும்
தற்கொலைக் குற்றமும் தொடர்கதையானது.
தாயின் சந்திப்பும் கண்ணீரும் சர்மிளாவின் மனவுறுதியை தளர்த்திவிடக்கூடாது என்பதால் இன்றுவரை உண்ணாவிரதமிருக்கும் மகளைச் சந்திக்கவில்லை என்கிறார் 75 வயதான சர்மிளாவின் தாய்.
மகாத்மா காந்தியடிகள் இன்றிருந்தால் நான் செய்வதையே அவரும் மணிப்பூர் மக்களுக்காக செய்வார் என்று காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு
இந்திய அரசிடம் சொல்கிறார் சர்மிளா.
மனோரமாவின் படுகொலை, அதன் பின் நடந்த மக்கள் எதிர்ப்புணர்வு அனைத்தும் சர்மிளாவின் போராட்டத்தை கூர் தீட்டியுள்ளன.

2007, சர்மிளா தன் சத்தியாகிரக அஹிம்சை வழி போராட்டமான உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்து
7 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த இந்திய அரசு மகாத்மாவின் சத்தியகிரக அஹிம்சைவழிப் போராட்டத்தில்
சுதந்திரம் அடைந்ததாக தன் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் எழுதி வைத்து 60 ஆண்டு
மக்களாட்சியை மண்ணில் நடத்துவதாக பெருமை அடைந்துள்ளதோ அதே இந்திய அரசுதான்
காந்தியின் அதே வழியில் தன் மண்ணின் மனிதர்களின் தன்மானம், தன்னுரிமைக்காக போராடும்
இளம்பெண் சர்மிளாவை அரசு மருத்துவமனையில் சிறை வைத்துள்ளது!
மருத்துவமனை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் சர்மிளாவைப் பார்க்க குறைந்தது 20 நாட்கள்
முன்பே திட்டமிட்டு உள்துறை அமைச்சகம் முதல் மணிப்பூர் சஜிவ்வா சிறைச்சாலை அதிகாரி வரை
அனுமதி தர காத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதிக்கு கூட சிறைவிதிகள் இத்தனை கட்டுப்பாடுகளை
விதிக்கவில்லை.

ஜவஹர்லால் நேரு மருத்துவமனை, இம்பாலாவில் இருக்கும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 13, 2007 முதல் மணிப்பூரின்
மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
நாடுதழுவிய போராட்டமாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் போராளிகளின்
படையில் ஒரு நாளாவது உண்ணாவிரதத்தில் நாமும் சேர்ந்து இரும்பு மங்கை சர்மிளாவின் போராட்டதை ஓரடி
முன்நகர்த்திச் செல்லுவோம்.



(¿ýÈ¢: Subhash Gatade , H 4, Rohini Sector 15,Delhi110085, Ph : 011-27872835 email : subhash.gatade@gmail.com)

No comments:

Post a Comment