Wednesday, August 22, 2007

விமர்சனக்குருவிகள்


விமர்சனங்கள்
எங்கிருந்து வந்தாலும்
இடமுண்டு
இளைப்பாற
என்வாசலில்.

எத்தனை விமர்சனங்கள்?
விதம் விதமான
ரங்கோலிகள்!
விமர்சனக் கோலங்கள்
இணைத்த புள்ளிகளுக்கும்
இணைக்காத புள்ளிகளுக்கும்
நடுவில்
எப்போதும்
சிக்கித்தவிக்கிறது
எழுத்துப்பறவை.

என் கவிதைகளில்
வாழ்விடம் சார்ந்த
உண்மைகளில்லை என்றார்கள்.
உண்மைதான்.
கிராமவாசனையை
கருவில் சுமந்திருக்கும்
என் கவிதைகளில்
இன்னும் வந்துப்படியவில்லை
மாநகரக் கழிவுகள்.

எரிந்துகிடக்கும் புகைவண்டிகளின்
சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும்
மனிதப்பறவைகளை
என் கவிதைக்கூண்டுக்குள்
பத்திரமாக அடைத்துவைத்தேன்.
"கவிதையின் கவித்துவம்
சிறைவைக்கப்பட்டிருப்பதாக
புலம்பித் தீர்த்தார்கள்."

அவர்களின் அளவுகோலில்
எழுதிப்பார்த்தேன்
முற்றுப்பெறாத ஒரு
முனிவனின் முத்தத்தை.
சூரியன் குளிர்ந்து பனிக்கட்டியாய்
உறைந்து போனதாக
வருத்தப்படுகிறார்கள்.


என் விமர்சனச்கொடியும்
மண்ணில் பரந்து
மரத்தில் ஏறி
காற்றில் அசையும்
அடர்ந்தக் காட்டில்
இப்போதெல்லாம்
விமர்சனங்களை
விமர்சிப்பதில்லை.
ரசிப்பதாக மட்டுமே
தலையாட்டி வைக்கிறேன்.


இலக்கியவேடன் விரித்த
விமர்சன வலையில்
விழுந்து தவிக்கும்
என் விமர்சனக்குருவிகள்.

No comments:

Post a Comment