Tuesday, August 21, 2007

கவிதாசரணில் எதிர்வினை

Keetru Kavithaasaran Article

ஜனவரி - ஜூலை 2007
தமிழ்க் கனவும் தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்
கவிதாசரண்
இந்த இதழில் வெளிவந்துள்ள புதிய மாதவியின் கட்டுரை ஒரு இணைய தளத்தில் இடம் பெற்றிருந்தது.(பார்க்க: கட்டுரை மார்ச் 21,2007 திராவிட அரசியல்) எனினும் கவிதாசரணிலும் வரவேண்டும் என விழையப்பட்டதால் இங்கு வெளியிடப்பெற்றது.

என் கை முறிவுக்கு அறுவை செய்துகொண்டபின், ஒரு நாளில் புதிய மாதவி எங்கள் இல்லம் வந்திருந்தார். மும்பைத் தோழர்களோடு சென்னை வந்தவர், அவர்கள் அதிகாரத் தமிழர்களைத் தரிசிக்கச் சென்ற இடைவெளியில் இவர் தன் அன்பை வெளிப்படுத்த எங்களைத் தேடி வந்தார். நீரும் நீரும் கலந்தாற்போல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன இரண்டு செய்திகள் அந்த உரையாடலின் முகவரிபோல் எனக்கு முகமன் கூறி, சறுகுகள் அடர்ந்த வனத்தினூடாக 'வீடு நோக்கித் திரும்தலில் சற்று இளைப்பாறக் கோரின.
ஒருமுறை மும்பை வந்திருந்த ஆசிரியர் வீரமணியிடம் (திராவிடர் கழகத்தவர் தங்கள் தலைவரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர். ஒருவகையில் மிகையில்லாமல் அவருக்குப் பொருந்திவரும் இயல்பான அடைமொழி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மாதவியின் முதல் விளிப்பும் அதுவாகத்தான் இருந்தது.) 'பெரியாரின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டுடைமையாக்க வலியுறுத்தலாமே?’ என்று துண்டுச்சீட்டு அனுப்பிக் கேட்டதாகச் சொன்னார்.
ஆசிரியர் மலர்வார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக இறுகிப்போனதைப் பார்த்து இவருக்கு அதிர்ச்சி. எனக்கு அதைக் கேட்டு வியக்கத் தோன்றியது- மாதவிக்கு இப்படியொரு வெள்ளை மனசா என்று. பெரியார் எழுத்தின் அனுபவப் பாத்தியதையை விட்டுக்கொடுக்க மறுக்கும் வீரமணியாருக்கெதிராக அணுகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மாதவி. இதை முன்கூட்டியே அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதைக் கேட்கும் துணிச்சல் உள்ளவர்தான். 'வீரமணி உங்களை வெகு காலத்திற்கு மறக்கமாட்டார்.என்றேன்.
அவர் சொன்ன இரண்டாவது செய்தி எனக்கொரு புதிய தகவலாய்க் கூடுதல் மன உளைச்சலைத் தந்தது.
"இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன், ஐயா. ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”, என்றார்.
பெரியாரைப் பேசிப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரைக் கடந்தும் பல கேள்விகளோடு வளர்ந்து வருபவர். உரைகளுக்கிடையிலும் வரிகளுக்கிடையிலும் ஒளிந்துகிடக்கும் கரித்துகள்களைச் சலித்தெடுக்கும் நுண்ணரசியலைப் பயின்றுகொண்டிருப்பவர். எதார்த்த வெள்ளத்தில் உடன்போகப் பழகிய பிறர் இவரை நோய் முற்றியவராகப் பார்த்துச் சலித்துக்கொள்ளும் அளவுக்கு எதிர் அரசியலின் நியாயங்களை மனமதிரப் பேசுபவர். புதிய மாதவியின் இப்பரிமாணங்கள் நமக்கு வெகு காலமாகவே பரிச்சயமானவைதாம்.
(அவர் கிளம்பும்போது மதிய உணவு வேளை கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் அவர் உணவு கொள்ளாமலே கிளம்பிச் சென்றார். எங்கள் வீட்டிலிருந்து யாரும் அப்படிச் செல்ல நேர்ந்ததில்லை. வெளியிலிருந்து வருகிறவர்கள் ஒருவேளையேனும் தங்கிச் செல்வார்கள். நான் மாதவியை அதிகம் வலியுறுத்தவில்லையோ என்பது என் வீட்டம்மாளின் குறைபாடு. எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் வேறு வகை உணர்வில் திளைத்திருந்தேன் என்பது கவனத்திற்கு வருகிறது.
நாங்கள் அப்போதுதான் அவரை முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஆனால் அது எனக்கு மறந்தே போய்விட்டது. அவர் ஏதோ இந்த வீட்டுப் பெண்போல, அடுத்த தெருவிலோ, அடுத்த பேட்டையிலோ வாழ்க்கைப்பட்டவர்போல, அவ்வப்போது எங்களை வந்து எட்டிப் பார்த்து 'எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன?)
புதிய மாதவியின் கட்டுரை நான்கு பேர்களைப் பற்றிப் பேசுகிறது. நால்வரும் அவரவர் தளத்தில் ஆள்திறம் கொண்டவர்கள்; சமூகப் பெரும்பரப்பை ஊடறுத்து நிற்பவர்கள். மாதவி அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறார். கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டில், 'அவரும் மரத்துப் போய்விட்டார்; அவரை நம்பிய மக்களும் மரத்துப்போய் விட்டார்கள்’ என்பதாக மாதவியின் ஆற்றாமை கசந்து கொள்கிறது. இந்த ஆற்றாமை ஒன்றும் அவ்வளவு எளிதாக விலக்கிவிடும் விஷயமல்ல. உண்மையில் அது நம்மைக் கொல்லும் பண்பியல் நஞ்சாக அச்சுறுத்துகிறது; அலைக்கழிக்கிறது. கடவுள் மறுப்பிலிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலைப்பாட்டுக்கு மாறியவர்களை என்னிலும் கடுமையாகத் தாக்குகிறார். 'திருடர்கள்’ என்று பெயரிட்டழைக்கிறார். அவர் கோபம் நியாயமானது. இழப்பின் ஆற்றாமையில் சொற்கள் பொங்கி வழிகின்றன. இதில் ஒளிந்திருக்கும் கண்ணி என்னவெனில் இன்னும் நாம் அவர்களின் உடன்பிறப்புகளாய்ச் ‘சீ’ப்படுகிறோம் என்பதுதான்.
நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் 1960களில் ஜெயகாந்தனுக்காகக் கடைகளில் காத்து நின்றவர்களில் நானும் ஒருவன். மாதவி அதைத்தான் சொல்கிறாராக இருக்கும். மனிதர்களோடான உரையாடல் தளத்தில் ஜெயகாந்தன் எப்போதுமே விவகாரமான ஆள்தான் எனினும் எங்கள் காலத்தில் அவரை சிம்ம கர்ஜனை செய்பவராகவே நம்பியிருந்தோம். 'ஹரஹர சங்கர’ எழுதி ஞானபீட விருது பெற்ற பிறகுதான் மாதவி சொல்வதுபோல் அவர் கம்பீரமாகக் குரைப்பது ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முரசொலி அறக்கட்டளை பரிசு தரவும் அதை அவர் பெறவும் இந்த வீழ்ச்சி நியாயப்பட்டிருப்பதுதான் ஆகப்பெரும் சோகம்.
இந்தக் கசப்புகளிலிருந்து மீளும் உபாயமாக மாதவிக்கு இளையராஜா கிடைத்திருக்கிறார். கொஞ்சம் மிகையோ என்னும்படி அவரை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் சித்தாந்த உறுதிப்பாடுமிக்கவர் என்பதாக வேறு நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பதற்கும் மூகாம்பிகைக்கு வைரக்கை சாத்தினால் அருள்பாலிப்பாள் என்பதற்கும் சித்தாந்தம் வேண்டியதில்லை; வெறும் மூடத்தனம் போதும். 'செத்தாலும் சிந்திக்க மாட்டேன்’ என்று கண்ணைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனம். மாறாக, இளையராஜாவின் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறாரே, அது பெருமிதம் கொள்ளத்தக்க நியாயம். மாதவி அதற்காக கர்வமும் கொள்ளலாம். தன்மானம் பிறர் மானத்தைக் காயப்படுத்தாதவரை அந்தக் கர்வம்தான் அதன் நியாயமும்கூட.
பெரியார் படத்துக்கு இளையராஜா இசையமைக்காமல் போனது அவரது தீவிர தெய்வ பக்தியால் மட்டுமே அல்ல என்றே தோன்றுகிறது. பெரியார் பட இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நிர்வாக மேட்டிமைகள் பலரும் மிகையான தன்மூப்பில் திளைப்பவர்கள்; அடிப்படையில் அதிகாரச் சுரப்பிகளாய் வடிவமைக்கப்பட்டவர்கள். பிறரை சகமனிதர்களாகவன்றி, ஊழியர்களாகவே பார்க்கப் பழகியவர்கள். நட்புக்குச் சூழ்பவர்களை ஏவிப் பிழைக்கிறவர்கள். இவர்களால் ஒருபோதும் மக்களைத் திரட்டி ஈர்க்கும் அரசியல் தலைவர்களாக முடியாது என்பது என் எண்ணம்.
மக்களுள் ஒருவனாக உட்கார்ந்து, மக்களை ஊடறுத்துச் மேலேறுகிறவன்தான் வெற்றிகரமான மக்கள் தலைவனாகலாம். தனக்கு மேலே உள்ளவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதான மனத்தயாரிப்புள்ளவன் மானஸ்தர்களைப் பற்றி அக்கறைப்படாதவன். இளையராஜா விஷயத்திலும் இப்படியொரு ரசாயனமே வினை புரிந்திருக்கக்கூடும். ஞானராஜசேகரன் தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு தானே களமிறங்காமல் தன் அலுவலகச் சிப்பந்தியை ஏவி இளையராஜாவைப் பணியமர்த்த எத்தனித் திருக்கலாம். (இளையராஜா மறுத்துவிட்டார் என்பதை உடனடியாக ஆதாய விளம்பரமாக்கிக்கொண்டதில், குற்றம் சுமத்தப் பறக்கும் அதிகார மூளையை அடையாளம் காணலாம்.) காயப்பட்டு விட்டதாகக் கருதிய இளையராஜா 'என்னை மதியாதவன் நான் வணங்கும் ஈசனேயாயினும் எனக்கவன் துச்சமே’ என்று தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம்.
ஈசன் என்றதும் திருவாசகம் ஓதி உடுக்கடிக்கிறவர் இளையராஜா என்பதைத்தான் மாதவி சித்தாந்தவாதம் என்கிறார் - அதாவது சச்சிதானந்த சித்தாந்தம் என்னும் பொருளில். அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது சித்தாந்தமல்ல. எதார்த்தத்தில் அடிமைத் தனத்தின் அடியாழத்தில் தன்னைத் தற்கொலைப்படுத்திக் கொள்ளும் தற்குறித்தனம். எனக்கு ஒரு படைத்தவனைக் கண்டெடுத்து, அவனுக்காகத் தெருத்தெருவாய் உருண்டுவந்து, நன்றி சொல்லி, போற்றி பாடி, தேரிழுத்துக் கொண்டாடி நாறிப் புழுப்பதென்பது, 'எனக்குச் சுயம் வேண்டாம். அடிமையாயிருப்பதே என் சுகம்’ என்பதன் மீட்சியற்ற வெளிப்பாடு. சுயமற்றவன் கோரும் மரியாதை, உடையில் சிந்திய பருக்கைபோல வெறும் அழுக்குதானே தவிர அணி அல்ல.
எதிர்பாராமல் இந்த 'நன்றி’ பற்றிப் பேச்சு வந்துவிட்டதால் நான் அதை மீண்டும் பேசியாக வேண்டும். என் 'சங்கர நேர்த்தி’யில் ஏற்கனவே பேசியதுதான். இளையராஜா பிறக்குமுன்பே அவர் பிறந்த பண்ணைபுரத்தில் அவருக்காகப் பெரியார் பேசியிருக்கிறார், பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்பதாகப் பேராசிரியர் சுபவீ நினைவுகூர்கிறார். ஆகவே, இளையராஜா பெரியாருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. எதற்காக நன்றியுள்ளவராயிருக்க வேண்டும், பெரியார் ஏதோ வள்ளல் போலவும் இளையராஜா அவர்முன் இரந்து நிற்பவர்போலவும்? நன்றி என்பது பிச்சைக்கார மண்ணின் அடிமை முறிச்சீட்டு என்பதல்லாமல் வேறென்ன?
பெரியார் தனக்குப் பிடித்த வேலையைத் தன்மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்; சமூக விழிப்புக்கான கருத்தியல் கொதிகலனாய்த் தன்னை வாழ்வித்துக்கொண்டவர். நான் அவரைப் புரிந்து கொள்ளலாம்; பின்பற்றலாம்; வளர்த்தெடுக்கலாம்; கொண்டாடி முன்னெடுக்கலாம். நன்றிகாட்டுவதென்பது நான் அவரின் நாய்க்குட்டியாய் இருக்கவா? திரும்பத்திரும்ப உடைமைச் சமுதாயத்தையும் அடிமைக் குடிமக்களையும் புதுப்புது உத்திகளில் அதிகாரச் சூத்திரங்களால் நியாயப்படுத்திக்கொண்டு, அதையே புரட்சி என்பதாகப் பிதற்றிக்கொண்டு அடிமைப் பட்டாளங்களைப் பிரசவித்து ஆசீர்வதிக்கிற இழி வேலையல்லவா அது?
மாதவியின் கட்டுரைக்கு சுபவீயின் நேர்காணலே அடிநாதம். வேறு வகையில் சொன்னால் சுபவீ வருத்தப்படுவதற்கு அல்லது கோபப்படுவதற்கு சுபவீயும் அவரது சேனைத் தலைவர்களுமே பொருத்தமானவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் கட்டுரை இது.
சுபவீ, இன்றுபூசிய சந்தனம் போன்றவர். உடம்பு வியர்க்கும்; சந்தனம் குழம்பும் என்பதெல்லாம் அப்புறம். இனிய பழகு முறைகளும் அரிய தோழமை உணர்வும் நிறைந்தவர். நல்ல பேச்சாளர்; பாசாங்கில்லாத வெகுநல்ல மனிதர். சொல்லப்போனால் இந்தக் கடைசி இரு அம்சங்கள்தான் என்னில் ஒளிரும் அவரின் அடையாளங்கள். அவரவர்க்கும் பொருந்திப்போக ஓர் இடமிருக்கும். சுபவீக்கு அப்படி யொரு இடம் இன்னும் வந்தடையவில்லை என்றே தோன்றுகிறது. கோல்ப் மைதானத்தின் பச்சைப் புல் மெத்தையில் எங்கிருந்து நோக்கினும் பளிச்செனத் தெரியும் வெள்ளைப் பந்து போல அவர் ஒளி சிந்துகிறார். சொல்லற்ற பொருண்மையின் படிமத் தீற்றல்கள் சொல்லுக்கப்பாலும் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.
திராவிட இயக்கவாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்- தங்கள் அப்பன்களையும் ஆத்தாள்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூசும் வல்லமைமிக்க நோஞ்சான்களாய் இருப்பதில். உடைமைச் சமுதாயத்தின் அதிகார வரம்பு இது. வெள்ளையடித்த வீடே இவர்களுக்கு இடித்துக் கட்டிய புதிய மாளிகை. மேடை முழக்கங்களே புரட்சிகரமான சிந்தனைகள். அரிய சிந்தனையாளர்களும் புதிய கருத்தியல் வாதிகளும் கருப்பைக் குள்ளேயே ரசாயன மாற்றத்துக்குள்ளாகி பெருச்சாளிகளும் நட்டுவாக் காலிகளுமாக உற்பத்தியாவது இந்த உடைமைப் பண்ணையின் இனப்பெருக்க முறைமை. இவர்கள் நடுவே வெள்ளைப் பந்துகள் குழிக்குள் விழுந்துவிடாமல் பச்சைப் புல்வெளியில் சுதந்திரமாய் மிதந்தலைந்தால் அதுதான் எவ்வளவு பெரிய கொண்டாட்டமா யிருக்கும்! அது நிகழும்போது வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்கள் மட்டும்தான்- அர்த்தமற்று உதிரும் வித்தைகளற்ற சொற்கள்.
சுபவீ நந்தன் வழி பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தபோது நான் எழுதிய கட்டுரை அவரைக் கடுமையாக முகங்கோண வைத்தது. (எந்தக் கட்டுரை யாரைத்தான் முகங்கோண வைக்கவில்லை?) அதன் அர்த்தப்பாடு அறுபடாத உள்ளிழையாக இன்னமும் அரூபத்தில் தங்கியிருந்தாலும் எங்களுக்கிடையேயான முகமன்களை மீட்டுக்கொள்வதில் அவரது பெருந்தன்மைக்கு முதலிடம் உண்டு. அவர் எழுதி வெளிவந்தவற்றுள் 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ கவனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பெரியாரை அவருக்கு உகந்த மாதிரி மறுவாசிப்புச் செய்த முயற்சியாகவே ஒரு வரையறைக்குள் அது சுருக்கிப் பார்க்கப்பட்டது. அப்படியும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக அதுவே இருக்கும். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதும்படி இடதுசாரி சாய்மானமுள்ள ஒரு இளைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவரோ விமர்சனம் எழுதாமல், அதன் உந்துதலால் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். இது சுபவீக்குக் கிடைத்த வெற்றியென்றே சொல்ல வேண்டும். நான் அந்தக் கட்டுரையைக் கவிதாசரணில் வெளியிட்டேன்- ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வைகளை எதிர்பார்த்து. அது கைகூடவில்லை. மாறாக, அந்தக் கட்டுரையை வாசித்த புகழ்பெற்ற மருத்துவரும் பெரியாரியவாதியுமான கவிஞர் ஒருவர் ஒரு போட்டியில் முதற்பரிசுக்குரியதாகத் தேர்வு செய்திருந்தார். இது சுபவீக்குக் கிடைத்த இன்னொறு வெற்றி. எனக்கு மகிழ்ச்சிதான். கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது - ஆழம் இவ்வளவு இலோசா என்று. அர்த்த நீர்ப் பரப்பில் சொற்கள் அலையற்று மிதப்பது நிகழத்தான் செய்கின்றன.
அந்த நூலை அடியொற்றியே அண்மையில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ யைக் கொண்டாட்டமாகத் துவங்கியுள்ளார் சுபவீ. இதன் மூலம் திராவிட இயக்கம் தமிழுக்கு மட்டுமானதல்ல என்று காலங்கடந்த காலத்தில் மீண்டுமொருமுறை நினைவு கூரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, திராவிட இயக்கவாதிகளுக்கு 'திராவிடம்’ என்னும் சொல் வெறும் இடுகுறிப் பெயராகவே தடித்துப் போயிருக்கலாம். அந்தச் சொல்லுக்கு எத்தனை ஆயிரம் விளக்கங்கள், விவரிப்புகள் செய்யப்பட்டபோதும் அடிப்படையில் அது தமிழுக்கான சமஸ்கிருதச் சொல்தான் என்பது அறுபடாத ஊடிழையாக நினைவு கூரப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் அடிப்படை அலகுகளாகக்கொண்டு சமூகத்தை உலைத்துக் கட்டமைத் ததுதான் பார்ப்பனர்கள் சாதித்த வெற்றி.
அந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழர் இயக்கம் - நீதிக்கட்சியைப் போலன்றி தமிழைத் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் கொண்டவர்களின் தமிழர் இயக்கம் (இன்றைய நான்கு தென் மாநிலங்களிலுமே எங்கெல்லாம் சந்தைகளும் படைக்குடியிருப்புகளும் இருந்தனவோ அங்கெல்லாம் தமிழ் சரளமாகப் புழங்கப்பட்டதாக கால்டுவெல் சொல்கிறார்.) பார்ப்பன மொழியிலேயே 'திராவிட இயக்கம்’ என்று அழைக்கப்பட்டதுதான் ஒரு வினோதக் கோணல். 'தமிழ்’ என்பதைவிட 'திராவிடம்’ என்பது மதிப்புள்ள சொல்லாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தமிழைவிட ஆரியம் உயர்ந்தது என்பதன் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம். (தமிழைக் கூலிக்காரர்களும் கூலிக்காரர்களோடு தொடர்புடைய வர்களும் பயன்படுத்திய மொழியாக இழித்துப் பார்ப்பது நெடுங்காலமாக நடந்துவந்திருப்பதோடு திராவிட ஆட்சியின் ஆங்கிலப் பள்ளிகளில் இன்றும் அது உறுதி செய்யப்படுகிறது.
திராவிடம் என்ற சொல்லைத் திண்ணை வேதாந்தத்தர்க்கமாக்கவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் 'திராவிடம், அல்லது திராவிட நாடு’ என்று தொண்டை வறளக் கத்தியாகிவிட்டது. இதெல்லாம் சுபவீ அறியாததல்ல. ஆனாலும் அந்த வறட்டுக் கூச்சலைப் புத்துயிர்த்துப் பின்புலமாக்கும் விதமாகத்தான் அவர் முன்வகிப்பில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் சுபவீ தன் இடத்துக்கான அறிவார்ந்த அடைதலைத் தேட மறுத்துவிடுகிறார், அல்லது கூடித் தொலைத்து விடுகிறார் என்று நமக்குப் படுகிறது. நம்மிலிருந்து மாறுபடுவதற்கு அவரிடம் மரபான காரணங்கள் நிறையவே இருக்கலாம். மரபின் மீள்பரிமாணம் பார்ப்பான் ஒழிந்த பார்ப்பனச் சாரம் அன்றி வேறென்ன?
பொடா சிறையனுபவத்துக்காளானவர் சுபவீ. இன்று அவரையும் அவரது நான்கு பழைய நண்பர்களையும் கலைஞர் பொடாவிலிருந்து விடுவித்திருக்கிறார். அதற்கு முன்பே அவர் கலைஞரின் அண்மையை விதித்துக்கொண்டுவிட்டார். அது ஒன்றும் சாதாரண அண்மையல்ல. அவரைப் போன்ற பொடா கைதிகள் புதிய அண்மையில் கல்லைப்போல் கனத்து மரத்திருக்க வேண்டிய அண்மை. இருவர் சேரும்போது ஒருவரையொருவர் பாதிக்கலாம். ஆனால் ஆள்கிறவர் பாதிப்படைவதென்பது ஆளப்படுகிறவரின் சரிவுக்குக் கிடைக்கும் ஆறுதலாக மட்டுமே இருக்கும்.
'பேரறிஞர் அண்ணா’ என்று தம்பிமார்களால் பெரிதும் போற்றப்பட்டவர் 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று அறைகூவல் விடுத்தார். அடைந்தாலும் அடையாவிட்டாலும் சுடுகாடு நிச்சயம் என்றாலும், ஏதோ 'அருள்வாக்கு’ மாதிரி அப்போதே சுடுகாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு மாயத் தொடர்பாகத் திராவிடநாடு உருவாக்கப் பட்டுவிட்டது. அதாவது, திராவிட நாடு என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஒரு சுடுகாட்டுத் தத்துவம் என்பதாக. அண்ணாவின் உடலுக்குச் சுடுகாடு கிடைக்கவில்லை. அதை இருப்பில் வைத்துக்கொண்டு இடுகாடுதான் உருவாக்கப்பட்டது.
அண்ணாவின் இலட்சியம் திராவிடநாடு அடைவதுதான். அது எல்லோருக்குமான திராவிடநாடு. அதை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை; சந்தர்ப்பம் கருதிப் பரண்மேல் பத்திரப்படுத்தி வைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கும் கடமை தம்பிமார்களுக்கு உண்டுதானே. அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் தம்பிகள் இருக்கலாம். ஆனால் 'வெட்டிவா என்றால் கட்டிவரும்’ காளையாக வெடித்துக் கிளம்பிய ஆருயிர்த் தம்பி கலைஞர் மட்டும்தான். ஆகவே அவர் அண்ணாவின் சூளுரையை ஏற்று அவரது ஆத்மா சாந்தியடையும் பொருட்டு அரிதின் முயன்று திராவிடப் பேரரசையே வென்றெடுத்த மூலநாயகனாகிவிட்டார். ஒரு வேறுபாடு- இது அவரின் சொந்தத்துக்கான பேரரசு. நாம் சொல்லும் திராவிடப் பேரரசு நான்கு திராவிட மாநிலங்களிலும் கொடிகட்டிக் கோலோச்சும் 'சன் குழுமம்’ அல்லாமல் வேறென்ன? நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும்? யார் சாதித்தார் என்பதை விட யார் வழியும் துணையுமாய் இருந்தார் என்பதை நினைவுகூர்வதாகத்தான் கலைஞர் கண்ட பேரரசாக இதை நாம் அடையாளப்படுத்துகிறோம்.
‘சன்’னுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பார் கலைஞர். உண்மையாகவே இருக்கலாம். ஆனால் உலகம்-குறிப்பாக திராவிட உலகம் அதை நம்ப வேண்டுமே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்கலாம். ஆனால் அது ஒரு பேச்சுக்குத்தான், அல்லது சட்ட முறைமைக்குத்தான். 'சன்’னைத் தமிழ்நாட்டில் யாரும் தகர்க்கத் துணிய மாட்டார்கள். ஜெயலலிதா எடுத்த சிறு முயற்சி அவர் தோல்வியோடு ஏறக்கட்டப்பட்டது. இன்று கலைஞர் ஆட்சி நடக்கிறது. 'சன்’னைத் தாக்கினால் அது அறிவாலயத்தைத் தாக்கியதாகத்தான் அர்த்தம். ஆட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். பதவி மேல் துண்டு மாதிரி- தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கொள்கையை விடமுடியுமா? அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா? அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா? பதறமாட்டாரா? பதறித் துடிப்பார் என்றால் அதற்குப் பெயர்தான் சொந்தம். 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்பார்கள். ஆனால் இங்கு கலைஞர் தானும் ஆடுவார். தன் சதையையும் ஆட்டுவிப்பார் என்பதுதான் உண்மை.
சன் குழுமத்துக்குக் கலைஞர்தான் தலைக் காவிரி. இன்று வழியெங்கும் வந்தடையும் பல்லாயிரம் நீர்க்கால்களுடன் அகண்ட காவிரியாய் விரிதல் பெற்றாயிற்று. ஒரு பேச்சுக்காக, தலைக்காவிரியே அடைபட்டுப் போனாலும் காவிரி இருக்கும். மணலும் மணலடி நீருமாகவேனும் பிழைத்துக் கிடக்கும். ஆனால் தலைக்காவிரி எங்க போகும்? பெற்ற பிள்ளைகளிடம் இரந்து நிற்கும் அன்னைபோல அது காவிரிக்காகத்தான் சுரந்து கொண்டிருக்கும்.
மாறனின் மக்கள் அம்பானியின் பிள்ளைகளைப்போல அல்லது அவர்களுக்கும் மேலான தொழில் மூளை கொண்டவர்கள். தங்கள் வர்த்தகப் பேரரசின் உறுதிக்கும் விரிவுக்கம் வழிசெய்துகொள்ளத் தெரிந்தவர்கள். 'நம்பர் ஒன், நம்பர் ஒன் - தினகரன் தமிழில் நம்பர் ஒன்’ என்பது போன்ற சீழ் மணக்கும் வர்த்தக மொழியை உற்பத்தி பண்ணக் கற்றவர்கள். வலிய சிறகுகளோடு பறக்கத் தெரிந்தவர்களுக்குத் தங்கள் தாத்தாவின் அளவற்ற அன்பு சில சமயங்களில் வேண்டாத சுமையாகக்கூட இருக்கலாம். ஆயினும் அந்த அன்பு அவர்களை இன்னமும் கிளிக்குஞ்சுகளைப்போல உள்ளங்கையில் வைத்து நீவிக்கொடுத்து முத்தமிடவே முந்துகிறது. இது கலைஞர் தன் கருணைமயமான பெயராகவே மாறிவிடும் உச்சபட்ச பிறவிப்பயன். எங்கே நாம் நாமாகவே இருக்க முடிகிறதோ அங்கே நாமாகவே நம்மை மடைமாற்றிக் கொண்டுவிட்டால் நமக்கும் நம்மைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் எவ்வளவு நிம்மதி!
பார்ப்பனர்களும் பனியாக்களும் எந்த அரசையும் தங்கள் சேவை நிறுவனமாக மாற்றியமைத்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். வணிக மொழியில் சொல்வதெனில், முதலாளிமார்கள் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தங்கள் நலன் பேணுவதற்காக சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களைத் தங்கள் சம்பளப்பட்டியலில் சேவைத்தரகர்களாக அமர்த்திக் கொள்வார்கள். அரசியலின் முரண் பருவப் பனிச்சருக்கில் பாதுகாப்பாக ஊன்றி நிற்கப் பயன்படுகின்ற கைத்தடிகள் அவர்கள். சமயத்தில் முதலாளியே அப்படியோர் உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால் தரகுப் பணம் மிச்சம்; தொழில் பெருக்கத்துக்கும் பாதுகாப்பு. ஆனால் அரசியல் வாழ்வு தான்தோன்றித்தனமான தட்பவெப்பங்களில் சிக்கிக்கொள்ளும் போது அதுவே தொழிலைக் கவிழ்க்கும் புயலாகவும் மாறிவிடும். அதனால் எதார்த்தத்தில் நாணயப்பற்றாக்குறையுள்ள அரசியல்வாதிகள் தாம் பெருமுதலாளி களாவார்களே தவிர, நல்ல முதலாளிமார்கள் தங்கள் அரசியல் கைத்தடிகளோடே தொழிற் பேரரசர்களாய் சிகரம் தொடுவார்கள்.
எந்த அரசியல்வாதியும் முதலாளியான பிறகு அரசியலை விட்டு விலகியதில்லை என்பது சமூகம் சந்திக்கும் பின்னடைவு. பலர் உழைப்பில் மண்ணள்ளிப் போடும் தொழில் நேர்மையற்ற வன்செயல். பணத்தைவிட அதிகாரப் போதையில் கரைந்து போகிறவர்களின் அழிச்சாட்டிய ஆட்டம் அது. சாராய வியாபாரிகள் பலர் அரசியலினூடாகப் பயணித்து கல்வித் தந்தைகளான பிறகு அரசியலும் சாராயமும் அளிக்க முடியாத வருமானத்தோடும் 'புகழ்’ மணத்தோடும் வாழ்ந்து காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியல் முதலாளிகள் - குறிப்பாகப் பல்மாநில, பன்னாட்டுத் தரத்தை எட்டிய திமிங்கிலங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றலாம். சமூக நல்லறம் பேணும் சாக்கில் அதற்கொரு சட்டமே கொண்டுவரலாம். அரசியல் அதிகாரம் பெற்றவன் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்கிறவனாகவும், பெருமுதலாளி தன் பேரரசை விரிவுபடுத்துவதற்குகந்த பன்னாட்டுக் குடிமகனாகவும் தகவமைத்துக் கொள்வதே அந்த நல்லறம். இதைக் கலைஞர் தன் கவிதைத் தமிழால் எப்படிச் சித்தரிப்பார் என்பது 'மில்லியன் டாலர்’ கேள்வி. எல்லாம் பணத்துக்குத்தான் என்பார்கள். அது வயிற்றுக்கான உண்மை. பணத்தை வென்ற பின் எல்லாம் அதிகாரத்துக்குத்தான் என்னும் மண்டை கனத்துக்கான உண்மையும் உண்டு.
கலைஞர், அரசியல் கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பதற்கென்றே பிறவியெடுத்தவர். அதன் உடன்போக்குப் பரிமாணங்களோடு, புறம்போக்குப் பரிமாணங்களையும் விஸ்தாரமாக வளர்த்தெடுத்து அவற்றை ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாற்றிக்காட்டியவர். தமிழ்ச் சமுதாயத்தின்மேல் தன் அரசியல் சாகசங்களையெல்லாம் ஒரு மாய வித்தைக்காரனைப்போல் செய்நேர்த்தியோடு பரிசோதித்து வெற்றி கண்டவர். மூச்சுக்கு மூச்சு தமிழைச் சொல்லியே தமிழ் மக்களை போதையூட்டி வசப்படுத்தியவர். தன்னை சாமானியனாக சித்தரித்தே சாமானியர்களை வென்றெடுத்து இன்றைக்கு கொழுத்த முதலாளிய மனோபாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர். முத்தமிழ் வித்தகர் என்றும் தமிழினத் தலைவர் என்றும் பட்டங்கள் தரித்தே தமிழகத்தில் தமிழை ஒரு வழி செய்துவிட்டுத் தன் தொப்பிக்கு மேலும் ஒரு வெற்றி இறகாக அதைச் செம்மொழிப் பட்டியலில் தள்ளிவிட்டவர். கட்சி அரசியல் கலைஞர் மீது முடிவில்லாத விமர்சனங்களை வைக்கும் என்றாலும், அவை ஒரு வகையில் அவர் ஓய்வில்லாமல் இயங்குகிறார் என்பதற்கும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கித் தன் சாமர்த்தியங்களைப் பலன்களாக்கிக்கொள்கிறார் என்பதற்குமான சான்றுகள்தாம்.
நண்பர்கள் விமர்சகர்கள் எனும் பாகுபாடில்லாமல் கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பல இருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கின்றவன் குறைந்தபட்சம் தனக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். எனக்கு அவரிடம் பிடித்த தலையாய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது 'கலைஞர்’ பட்டம். அவருக்குப் போல அது வேறெவருக்கும் அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திவிடாது. மற்றொன்று அவரது வாசிப்பு. இந்த வயதிலும் அவர் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல், குறிப்பெடுக்காமல், அதற்கான விழாவில் பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவர் ஒரு அரசியல்வாதி என்பதே மறந்துபோய் நாம் அவரது ரசிகனாய்விட முடிகிறது.
இவ்வகை சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கேள்விக் குள்ளாக்கும் விதமாக அண்மையில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்க்குரலாக, யோசிக்கத் தெரிந்தவர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. அது 'சன் டிவியை காப்பாத்தறதுக்காக தமிழ்நாடே தார வார்ந்திடும் போலிருக்கு’ என்பதுதான். நதி நீர் சிக்கலை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றிய விமர்சனம் அது. எந்தவித புள்ளிவிவரத்தோடும் நிரூபித்துவிட முடியாத ஒருவகை பாமரத்தனமான குற்றச்சாட்டுதான் என்றாலும், உண்மைகள் சாட்சிகளால் கொல்லப்படுவதும், அரசியல் ஒருபோதும் சீசரின் மனைவியர்களைப் பிரசவிப்பதில்லை என்பதும் அக்குற்றச்சாட்டின் முகமதிப்புகள். கலைஞரைக் கட்டுப்படுத்தும் காரணியாக 'சன் குழுமத்தை’ அடையாளப்படுத்துவது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம் என்றாலும் அதுமட்டுமே முழு உண்மையாகிவிடாது. அவரின் மொத்த செயல் தந்திரத்தின் ஒன்றைக் காரணியாக அது ஒருநாளும் இருந்துவிட முடியாது. ஆகவே உண்மைக்கு அருகில் நகரும் முயற்சியாக நாம் மேலும் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.
கலைஞர் எதன்பொருட்டும் ஓர் அறைகூவல் விடுத்து அதை உரிய காலத்தில் நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும் வைராக்கியமும் உள்ள மனிதர். எனில், தம் நாட்டு மக்கள் மீது அவருக்கு ஏதேனும் சொல்லற்ற சினம் இருக்கக்கூடுமா? இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி? இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்தது சங்க காலத்திற்குப் பின் வெகு அபூர்வமாகத்தான். ஏனெனில் அதை ஆக்கிரமித்தவர்கள் அந்நிய மொழியினராயிருந்தனர். தமிழின் வாழ்வு அது மக்கள் மொழியாய் அருகுபோல் வேரோடி நின்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டதுதான். இந்திய விடுதலைக்குப் பின்னரே ஆட்சிமொழியாக அதற்கொரு வாய்ப்பு வந்தது.
தமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்கள் - குறிப்பாகக் கலைஞர் அதைக் கிடப்பில் போட்டார் எனில் உள்ளூர அதற்கொரு அர்த்தம் அல்லது கோபம் இருக்க வேண்டும். கர்நாடகச் சிறையில் குணாவும், நெடுஞ்செழியனும் அநியாயமாக ஆண்டுக் கணக்கில் வாடியபோது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் முறையிட்டு விடுவிக்கக் கோரினர். கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் விடுவித்துவிடுவார் என்பது நிலை. கலைஞர் சொல்லவில்லையே. காரணம் குணா அவரை 'வடுகர், வந்தேறி’ என்று தன் நூல்களில் அடையாளப்படுத்தியதற்கான கோபமாக இருக்க வேண்டும். கலைஞர் அவரை மன்னிக்கத் தயாராயில்லை. ஆகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கான பட்டறிவும் உயர் பொறுப்பும் பெற்றவர்தான் என்றாலும் அற்பக் கோபங்கள் அவரை ஆளவே செய்யும்போலும். ஆகவே நாம் இதையும் கேட்கலாம்: தமிழினத்துக்கு அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார்? அவர் இடத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி இருந்து ஆற்றிவிடக்கூடிய பணிகளுக்கப்பால் அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம். இதன் தொடர்ச்சியாக, தமிழர்களுக்கு அவர் என்ன பாடம் புகட்ட நினைக்கிறார் என்பதும் புறக்கணிக்க முடியாத கேள்வியாகிறது.
முன் எப்போதையும்விட இந்த ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்து வருகிறார் என்று ஒரு நண்பர் மனம் வெதும்பிச் சொன்னார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாயிருந்தது. உண்மையில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் அவர் மிகுந்த வள்ளல்தன்மையோடு கூடுதல் நலம் செய்கிறார் என்பதாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாகூட அவருக்கு உடனடி அச்சுறுத்தலை விளைவிக்க முடியாமல் திணறுகிறார் என்பதாகப் பேச்சு. ஆனால் நண்பர் சொன்னதைக் கொஞ்சம் தொலைக் நோக்குப் பார்வையில் யோசிக்கும்போது இனவியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக சரியென்றே தோன்றுகிறது. 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்றொரு கருத்து உண்டு. அது இன்று அர்த்தமற்ற கூற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. சோழர்களைக் கொண்டாடும் கலைஞர் காலமும் அப்படியொரு பார்வையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் நண்பரின் எடுத்துரைப்பு அர்த்தம் பெறுகிறது. எடுத்துரைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை தேற்றங்களாகும்.
தமிழ் மக்கள் நாம் அறிந்த அளவில் தொல்காப்பியர் காலத்திலிருந்து அந்நியக் கலாச்சாரங்களால் தின்னப்பட்டவர்களாகவும், பின்னர் அந்நியர் ஆளுகையால் அடக்கப்பட்டவர்களாகவும் இரண்டாயிரம் ஆண்டு அடிமை வாழ்வைச் சுவைத்துக் களைத்தவர்கள். ஆகவே, அடிமைத்தனம் அவர்களின் இரத்தச் சிவப்பணுக்களாகவே ஊறிவிட்டது என்று சொன்னால் அது தப்பில்லை. கேரளர்கள், கர்நாடகர்கள், ஆந்திரர்கள் யாவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழர்களை அடக்கி ஆண்டவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும்கூட அவர்கள் எதிர்த்தடிக்கிறவர்களாகவும் தமிழர்கள் தாழ்ந்துபோகிறவர்களாகவுமே நிலைமை நீடிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களில் போல் 'மண்ணின் மைந்தர்கள்’ இயக்கம் தமிழ்நிலத்தில் கெட்டிப்படவில்லை என்று தோன்றுகிறது.
அடித்தட்டுத் தமிழ் மக்கள் இன்று வரை பேணிவரும் ஒரு நல்லம்சம், நாட்டில் அரசியல் ஊடறுப்புகளால் அந்நியத்தனங்கள் கோலோச்சினாலும், ஏதோ கண்மறைவில் நடத்தப்படும் ஒண்டிக் குடித்தனம்போலவும், காற்றக்கு அணைந்துவிடாமல் குடங்கையுள் நின்றொளிரும் கைவிளக்கு போலவும் அவர்கள் தங்கள் தொன்மங்களையும் கலாச்சாரத் திளைப்புகளையும் வழிவழி வரும் பண்பாக்கங்களாகக் காத்து வருகிறார்கள் என்பதுதான். மற்றபடி சாதியும் தீண்டாமையும் சமூக அசைவுகளைத் தீர்மானித்தபின், 'இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?’ எனும் கோட்பாடே கூடுகட்டிக்கொண்டுவிட்டது. நம்மவனா, பிறத்தியானா என்னும் பாகுபாடில்லாமல் ஆள்கிறவன் எவனாயிருந்தாலும் அந்நியனே என்னும் மனத்தயாரிப்பில் வாழப் பழகிக்கொண்டுவிட்டனர்.
முன் சொன்னதுபோல் 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்பது உண்மையில் பார்ப்பனச் செழிப்பில் எழுந்த, குடிபடைகளை உள்ளடக்கிக்கொள்ளாத புறமதிப்பீடுதான். சோழர்கள் காலத்தில்தான் அரச நீதியும் அரண்மனை ஆதிக்கமும் பார்ப்பன மயமாயின. தேவதாசி முறையும் தீண்டாமையும் கோயில்களிலும் குடியிருப்புகளிலும் வலுப்பட்டன. இராசராசன் தன் அண்ணனைக் கொன்ற ரவிதாசன் என்னும் பார்ப்பானைச் சிரச் சேதம் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் மனுநீதி அனுமதித்தபடி அவன் தலையைக்கூட மொட்டை அடிக்க முடியவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தக் கொலைகாரனையும் அவனது சுற்றத்தையும் போதிய உதவிகள் வழங்கி வேற்றிடம் செல்லும்படி வேண்டிக் கொண்டதுதான்.
மன்னன் ஆள்கிறான் என்பது சண்டைக்காலத்தில் மட்டுமே அறியப்படுவதாயிருந்தது. மற்ற காலங்களில் மன்னனுக்குப் படை திரட்டித் தருகிற கட்டைப் பஞ்சாயத்துக் கங்காணிகளின் வரைமுறையற்ற அத்துமீறல்களால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான் பொதுச் சமூக வாழ்வு.
வழிவழியாக இப்படி நசுங்கிக்கிடந்த தமிழ்மக்கள் அநியாயங் களுக்கெதிராகத் தாங்களாகவே திரண்டெழுவார்கள் என்பது வீண் கனவு. அவர்களைத் தட்டியெழுப்பவும், வழி நடத்தவும் மூர்க்கம் மிகுந்த தலைமை வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைப் போல் பொய்த்தோற்றம் காட்டி வந்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்கள்தாம் திராவிடக் கட்சிக்காரர்கள். இன்றைய திராவிட இயக்கம் வீரமணி நடத்தும் மடம்தான் எனினும், திராவிட இயக்கம் வேறு, திராவிடக் கட்சிகள் வேறு என்னும் அடிப்படைப் புரிதலை நாம் தவறவிட்டுவிடக்கூடாது.
திராவிடக் கட்சிக்காரர்களில் முதன்மைப் பாத்திரம் பகிப்பவர்தாம் கலைஞர் கருணாநிதி. கல்லக்குடி வீரராகக்கள அரசியலில் இறங்கியவர். பராசக்தி வசனமாக மக்களை எழுச்சி பெற வைத்தவர். ஆனால் அது ஒரு காலம். சொந்தங்கள் தன்னைத் தின்னக்கொடுக்காத காலம். இன்றோ, தன் எழுபதாண்டு அரசியல் முன்னெடுப்பில் என்னவாக வளர்ந்து, தமிழ் மக்களுக்கு எதை விட்டுவைத்திருக்கிறார் என்னும் கேள்விக்குரியவர். உலகெங்கும் உள்ள அரசியல் தலைமைகளை விடவும் அதிக விவரத்தோடு தமிழ் மக்களின் பாமரத் தன்மையைத் தன் அசுர செல்வாக்குக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவிர, தமிழகத்தின் சாமான்ய மனிதனுக்கு அவர் எந்த ஏறு முகத்தை முன்மொழிந்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் நுட்பமாக யோசித்தே ஆக வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதும் கலைஞரும் சன் தொலைக்காட்சியும் அடித்த லூட்டிகளைப் பார்த்த பிறகு தூங்கும் தமிழகத்துக்கே ஒரு சுய விழிப்பு வந்திருக்கிறது. அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசை திருப்புவதற்கென்றே கலைஞர் தன் மகள் கனிமொழியைக்கொண்டு 'ஊரே கேள் நாடே கேள்’ என்னும்படி சென்னை சங்கமம் நடத்திக்காட்டினார் என்று பேசாத ஆள் இல்லை. கலைஞர் அதை அறியாதிருக்க வாய்ப்பில்லை.
இடைக்காலத் தீர்ப்பு, இடைக்கால நிவாரணம் என்பதெல்லாம் இறுதியில் உறுதி செய்யப்படும் கூடுதல் பலன்களுக்கான அடையாள முன்மதிப்பீடுகள்தாம். காவிரியின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் வழங்கியது. இறுதித் தீர்ப்பு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறைந்தபட்சம் 1 டிஎம்சியாவது அதிகம் கொடுத்துச் சமாளித்திருக்க வேண்டிய சிக்கல். ஆனால் வழங்கியதோ 185 டிஎம்சிக்கும் குறைவாக. இந்த உண்மையை ஒருமுறைக்கு இருமுறை உற்றுப்பார்க்கக்கூட பொறுமையும் பொறுப்புமில்லாமல் தமிழகத்துக்கு 430 டிஎம்சியும் கர்நாடகத்துக்கு வெறும் 270 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளதாக 'சன் தொலைக்காட்சி திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருந்ததில் தமிழகமே அசைவற்று உறைந்துபோனது.
இந்த உறைதலுக்குக் காரணம் தமிழகத்துக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட நம்ப முடியாத கொடை மட்டுமல்ல, கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் வரலாறு காணாத வன்கொடுமை பற்றிய அச்சமும்தான். அதற்கேற்றாற்போல் கலைஞரும் உடனடியாக 'மன நிறைவளிக்கும் தீர்ப்பு’ என்று திருவாய் மலர்ந்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனோ 'திருப்தி, திருப்தி, திருப்தி’ என மும்முறை சத்தியம் செய்தார். தமிழகத்திற்கு எதிராக அவர்கள் அன்று மூட்டிய தீ கர்நாடகாவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. 430 டிஎம்சி நீர் என்பது தஞ்சாவூர் வரை பெய்யும் மழையெல்லாம் சேர்த்துவருமாம். 430 டிஎம்சியைப் பார்த்ததும் நான் மலைத்துப்போய் மேலதிக விவரம் சொல்ல மாட்டார்களா, கர்நாடகத்தில் தமிழர் கொலைகள் தடுக்கபடாதா என்று தவித்தேன்.
அடுத்த 24 மணி நேரம் உண்மை நிலை அறிய மாட்டாத குழப்பத்திலேயே தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளைப் பார்த்த போதுதான் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்ட கொடுமை தெரிந்தது. பழ. நெடுமாறன்தான் முதலில் கண்டனம் தெரிவித்தார். அந்த நிலையிலும்கூட 'நமக்குக் குறைய வாய்ப்பில்லை. கர்நாடகத்திற்குத்தான் கொஞ்சம் கூடுதலாக குறைந்துவிட்டது’ என்று கலைஞர் உருகினார். தமிழகம் தன்பாட்டுக்கு அசைவற்றுத் துயில்கொண்டிருக்க, கர்நாடகத்தில் அலைஅலையாய் கண்டனப் பேரணிகள் எழுந்தன. அவற்றை 'சன் செய்தி; மிகுந்த கொண்டாட்டத்தோடும் அவர்களைப் பகைத்துக்கொள்ளாத பக்கச் சாய்வோடும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது பயன்படுத்திய மொழி தமிழர்களைப் புண்படுத்திய கத்தி. மேலதிகம் பெற்ற கர்நாடகம் ஓலமிட்டுக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட தமிழகம் விடியவிடியக் கூத்தாடியவனின் கனத்த நித்திரைபோல் அயர்ந்து கிடக்கிறது.
கலைஞர் தன் சாதுர்யத்தால் தமிழகத்தைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டார். கர்நாடகத்தின் அராஜகத்திற்கெதிராக குரலுயர்த்தி நியாயம் பேசுபவர்களைப் பார்த்து 'அது நம் அண்டை மாநிலம்தான். பகை நாடல்ல’ என்று உபதேசம் செய்கிறார். தமிழக வண்டி வாகனங்களை அனுமதிக்காதது மட்டுமல்ல, அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்துகின்றனர் கர்நாடக சமூக விரோதிகள். எல்லைக் கடந்துவந்து 'ஓசூரையும் அபகரிப்போம் என்று ஆர்த்தெழுகிறார்கள். எறிதழலை சூறையிட்டாற்போல் எங்கெங்கும் கூக்குரல் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தமிழ்நாடு பிரேதங்களின் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது. அப்படித் திகழ வைப்பதற்கென கலைஞர் வெகு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறார்.
இதை எந்த விதமாய்ப் புரிந்துகொள்வது?
தமிழக நலனை லாவணிக் கச்சேரி செய்தே தொலைத்துக் கட்டுவதில் மட்டும் திராவிடக் கட்சிகளுக்குள் அப்படியோர் ஒற்றுமை. மக்கள் பிரச்சனைகளைக் கிளறுவதன் மூலம் கலைஞரை ஓரங்கட்டும் தன் எதிர்கால அரசியல் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் மருத்துவர் ராமதாசும்கூட கலைஞர் போராட்டாம் வேண்டாம் என்றதும் சரி என்று ஒதுங்கிக்கொண்டார். மக்களைத் தட்டி எழுப்பி, உண்மையைச் சொல்லி, களமிறக்கி, இந்திய அரசின் செவிட்டுக் காதுக்கு கேட்கும்படியாக எதிர்ப்புப் பேரணி நடத்தவேண்டிய தமிழக முதல்வர், பொய்த் தகவல்கள் கூறித் தமிழர் கவனத்தைத் திசை மாற்றிவிட்டு கர்நாடகாவின் அராஜகத்தைத் தன் சன் டிவி மூலம் தட்டிக்கொடுத்து மகிழ்கிறார்.
இடதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அதிகார மப்பால் எத்தனை போக்கிரித்தனமான காரியத்திலும் இறங்கக்கூடியவர்கள் என்பதற்கு கேரளத்தில் அச்சுதானந்தனையும் மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் முதலமைச்சர்களாக்கிக் காப்பாற்றி வருவதே போதுமான சாட்சியமாகும். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, பொய்யும் புனைசுருட்டுமாக பேட்டை ரவுடியைப்போல் ஆபாசமாகப் பேசியும் நடந்தும் காட்டுகிறார் அச்சுதானந்தன். அது பற்றிக் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. பாலாற்றில் தடுப்பணை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. தமிழகம் எதுகண்டும் பதைக்கவில்லை. தமிழகத்தின் நலன்களும் முன்னுரிமைகளும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழக வரலாற்றிலேயே இல்லாமலாக்கி விட்டவர் கலைஞர்.
அடிமாட்டிலிருந்து அழுகும் பொருள் வரை கேரளாவிற்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கிறது. அவற்றை நிறுத்தினால் கேரளம் வழிக்குவந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஆத்திரக்காரர்கள். யார் நிறுத்துவது? நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே? ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு புதிய சந்தைகளை உறுவாக்குவதும் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் அரசு செய்யவேண்டிய வேலை. ஆனால் கலைஞர்தான் 'சகோதர யுத்தத்திற்கு நான் தயாரில்லை. போவதுபோகட்டும். எஞ்சியது நிலைக்கும்’ என்பதாக புத்தர் வேடம் போடுகிறாரே. கலைஞருக்கு கோபமே வராதா, அவர் எந்த உரிமைகளையும் கோரிப் பெற மாட்டாரா என்பது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.
தன் பொறுப்பிலுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தி 'நாங்கள் கேட்ட இலாக்காக்கள் கிடைக்காவிட்டால் ....?’ என்று சோனியாவையே பதற வைத்தாரே? உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன? தன் சொந்த நலன்கள் கேள்விக்குள்ளாகும்போது அவர் சிங்கமாயிருப்பாரே தவிர சிறுநரியாய் அல்ல.
இந்தியா முழுமைக்கும் பொருந்துவதான பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தவுடன் தம்மை யாரும்- குறிப்பாக ராமதாஸ்- முந்திவிடக்கூடாது என்னும் வேகத்துடன் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்தாரே. உடனடியாக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விரைந்து வழிகாண வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரே? அந்த வேகத்தையும் மிரட்டலையும் மூர்க்கத்தையும் தமிழகத்தைப் பாதிக்கும் நதிநீர் சிக்கல்களில் மட்டும் தன்னுள்ளேயே பதுக்கி வைத்துக்கொள்கிறார். கலைஞர் ஒன்றும் செய்யவில்லையே என்றால், உருப்படியாய்க் கவனம் கொள்ளும்படியாக, தீர்வை வென்றெடுக்கும்படியாக ஒன்றும் செய்ய முனையவில்லை என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பட்டியலிட்டுக் காட்டுவதற்கான சடங்காச்சாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் சகோதர யுத்தத்திற்கு தயாரில்லை என்பதை 'சன் குழுமத்தை’க் காக்கும் உபாயம் என்று சொல்லிவிடுவது கலைஞர் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளில் ஒரு துகளாகத்தான் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படியெல்லாம் அளந்து செயல்படாமல் போனால் இன்றைய பிரம்மாண்டத்தை அவர் எட்டியிருப்பாரா? ஏதொன்றிலும் அவருக்கு நோக்கம் இருக்கும். திட்டம் இருக்கும். உள்ளூர அவரைப் பாதித்ததற்கான கோபங்கூட இருக்கும்.
இந்திய அமைதிக்காப்புப் படை இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டவர் கலைஞர். சிங்களப் படைகளைவிட இந்தியப் படையே ஈழத்தமிழர்கள் மேல் புரிந்த அட்டூழியங்களும் படுகொலைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் அளவற்றவை என்பதுதான் அதற்கான காரணம். இன்றைய கலைஞரைப் பார்க்கும்போது, 'தமிழினத் தலைவர்’ என்னும் பெயருக்கு ஒரு பொருத்தம் இருக்கட்டுமே என்றும், பின்னொருநாள் இனங்காக்கும் பேச்சு வரும்போது ஒரு சாட்சியாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் அவர் கலந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அன்றே இந்தியப் படை புரிந்த அட்டூழியங்களுக்காக அவர் மத்திய அரசை மன்னிப்பு கோர வைத்திருக்கலாம். ஒருவேளை இந்தியப் படையால் சிங்களர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அப்படித்தான் கோரப்பட்டிருக்கும். ஆகவே அவர் ஒவ்வொன்றையும் அளவெடுத்தாற்போல் திட்டமிட்டே செய்கிறார் என்பது புரிகிறது.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கிறது. உலகத்தில் வேறெங்கும் நடக்காத அட்டூழியம் இது. இலங்கைக் கடல் பகுதியில்தான் அதிகம் மீன் கிடைக்கிறது என இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியே சென்றிருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொல்வ தென்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். தமிழகம் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறது. டெல்லி அதை வாங்கி வைத்துக்கொள்கிறது. டெல்லியின் அப்படியொரு மரத்தனத்தை வேறெந்த சந்தர்பத்திலும் நம்மால் காணவியலாது. மீனவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் டெல்லியும் கண்டுகொள்ள மறுக்கிறது.
பல நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப் படுவதை இந்திய அரசு கண்டுகொள்ளாது என்றால் இந்தியாவில் தமிழகத்தின் இடம் என்ன? இருப்பு என்ன? இந்தியா பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்; வெறும் பார்வை ஒன்றே போதும், சிங்கள அரசை அதன் இருப் பிடத்தில் நல்ல பிள்ளையாய் அழுத்தி வைக்க. ஆனால் இந்திய அரசு அதற்குத் தயாராயில்லை. பெரிய நாட்டை அண்டைச் சிறுநாடுகள் பகைத்துக்கொள்வதில்லை என்பது உண்மை எனில், இதிலுள்ள மர்மம் என்னவாக இருக்கும்? என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? இந்திய ஆணையானது அமைச்சகத்தின் கையிலே இல்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் கையிலே இருக்கிறது.
அதிகார வர்க்கம் ஆங்கிலேயன் காலத்திலும்கூட பார்ப்பனத் தாக்கம் பெற்றதாகவே இருந்தது. இந்திய சுதந்திரம் என்பதே பார்ப்பன- பனியா சுதந்திரம்தானே?
தமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஆட்சித்தலைமையை வகித்ததில்லை. (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தனிமாநிலமாகச் சுருங்கியபோது ராஜாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆட்சித் தலைமை ஏற்கும் பேறு கிடைத்தது.) ஆனால் ஆட்சியாளர்களை வழிநடத்துகிறவர்களாய் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதும், அதிகாரப் பகிர்வில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் இடையே இழுபறி போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதிகாரச் சமன்பாடு குலையும்போதெல்லாம் அவர்களுக்குள் உரசல்கள் நிகழ்ந்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் கை ஓங்கிவிட்டது. அதை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கேட்கவே நீதிக்கட்சி தோன்றியது.
நீதிக்கட்சி பார்ப்பனர்களைத்தான் எதிர்த்ததே தவிர பார்ப்பனியத் தாக்கங்களையல்ல. நிலைபட்டுப்போன கலாச்சாரத்தாக்கங்களின் பின்புலத்தில் ஒருவகையில் எல்லாருமே பார்ப்பனர்கள்தாம். ஒருவர் பிறவிப் பார்ப்பனர் என்றால் மற்றவர் பிழைப்புப் பார்ப்பனர். இதில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது ஊறுகாய்போலப் பயன்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே இந்தியா ஒற்றைத் தேசமாகி, அதனுள் தென்னிந்தியா ஒரு கூறாகிவிட்டது. கூடவே, பார்ப்பன எதிர்ப்பை பாரத தேசத்தின் அதிகாரத் தகர்ப்பாகத் திரித்துப் பார்க்கும் மனோபாவமும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் டெல்லிச் செயலகத்தைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழ்ப் பார்ப்பனர்கள். நீதிக்கட்சியானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தேய்ந்து சிதறி, முடிவில் தமிழ்நாட்டை மட்டுமே சேர்ந்த பெரியார் இயக்கமாகத் திரண்டெழுந்தது.
பெரியாரின் 'திராவிடர் கழகம்’ வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாக மட்டுமின்றி, பார்ப்பனக் கடவுள்களை மறுக்கும் இயக்கமாகவும், மேலும் பிரிவினை கோரும் பரப்புரை இயக்கமாகவும் திகழ்ந்து பார்ப்பனர்களை மருட்டும் அளவுக்கு அதிர்வுகளை எழுப்பியது. பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் தேர்தல் அரசியலைத் தெரிவு செய்யும் வரை நாத்திக வேடமும் 'திராவிட நாடு திராவிடர்க்கே’ முழக்கமும் போட்டுக்கொண்டிருந்தனர். ஏக இந்தியாவில் இவை சகித்துக்கொள்ளக்கூடாத அம்சங்களாகவும், தமிழர்கள் அபாயகரமானவர்கள், அடக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும் டெல்லி அதிகார மையத்தில் வல்லமை மிக்கதோர் உளவியல் எதிர்வு வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.
மத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஒழிந்து, கூட்டணி ஆட்சிகள் வந்தாலும், தமிழ்நாட்டு ஆளும் கட்சிகள் சுயநலக்காரர்களையும், விதிமீறல் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள டெல்லியின் தயவுக்கு ஏங்குபவர்களையும் கொண்டிருந்ததால், அவர்களது ஆதரவைப் பெறுவதிலும், அதே சமயத்தில் அவர்களை அடக்கி வைப்பதிலும் டெல்லிக்காரர்களுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பதையெல்லாம் தூக்கிக் கடாசிய பிறகு, கலைஞருக்கு டெல்லி தாய்வீடு மாதிரி. தமிழ்நாட்டுச் சனாதனப் பார்ப்பனர்கள் தமிழை 'நீச பாஷை’ என்று சொல்லிக்கொண்டே (இந்தியாவில் வேறெந்த மொழியேனும் அப்படி அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுவே தமிழின் தவிர்க்க முடியாத இருப்பை உறுதி செய்கிறது.) தமிழால் வாழ்வதுபோல், டெல்லி அதிகார அரசியலும் தமிழ்நாட்டைத் 'தலித் மாநிலமாக’ அழுத்தி வைத்துக்கொண்டே அதன் ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றுக்கொள்கிறது.
இந்தியாவில் தமிழகத்தின் இடமும் இருப்பும் இத்தகைய நுட்பங்களோடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழன் என்பவன் ஐயத்திற்கும் அவமதிப்பிற்கும் உரியவன் என்பதாக அந்த உறுதிப்பாடு நிலைத்துவிட்டது.
இந்தியாவில் உள்ள அடிமைத் தமிழனுக்கே இந்த கதி என்றால், முறையான இராணுவமும் ஆள்வதற்கு ஒரு நிலப்பகுதியும் வைத்துக்கொண்டு தனிநாடு கோரும் ஈழத்தமிழன் எவ்வாறு சகித்துக்கொள்ளப்படுவான்? ஒருவேளை, நாளை ஈழப் புலிகள் முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், அப்போது பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்தது போல் சிங்கள விடுதலைப் போரை இந்தியா ஆதரிக்கக் கூடும்.
இப்படியொரு சூழலில் கலைஞர் இந்திய இறையாண்மையைத் தாங்கி நிற்கும் கல்தூணாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 'காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட நேர்தால் நான் என் பதவியைத் துறப்பேன்’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சொன்னதும், நீர் கிடைக்காமல் போவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல், இந்திய இறையாண்மைக்கு ஊறு நேர்துவிடுமே என்றுதான் முன்னாள் பிரிவினைவாதியாகிய கலைஞர் கவலைப்படுகிறார். இந்திய ஒற்றுமை சிதறி, கர்நாடகமும் தமிழ்நாடும் தனித்தனி நாடுகளாகிவிட்டால் தண்ணீர் பெற வழியேதும் இல்லையா என்ன? நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா? எல்லாரும் மாநில நலன் பேணுகிறவர்களாய்க் கெட்டிப்பட்டு வரும்போது கலைஞர் மட்டும் இந்தியராய் இருக்க முற்படுவது ஒருவகையில் பாராட்டுக்குரியதுதான் எனினும், அது தமிழர் நலனையும் பாதுகாப்பையும் காவு கொடுக்கவோ அல்லது காட்டிக்கொடுக்கவோ அல்ல. ஒரு துணிச்சல் உள்ள இந்தியனாக மீனவர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அதிரடி முடிவுகளை அவர் அறிவித்திருக்கலாம்.
கலைஞர் ஏன் தன் வல்லமையைப் பயன்படுத்தக்கூடாது? தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில்? இந்திராகாந்தி உடனே படையனுப்பினாரே? 'இங்கு எங்கள் மீனவர்களை காக்கத் தவறினால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஆயுதப் படையாக மாற்றப்படுவார்கள். அதற்குத் தமிழகம் ஏற்பாடு செய்யும்’ என்று எச்சரித்திருக்கலாம். இவ்வளவு மெத்தனமாகவும் மரத்தனமாகவும் உறங்குவதுபோல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் சிங்களப் படையைத் தாக்கிவிட்டால் மட்டும் என்னமாய்ப் பதறுகிறது! கடலோரக் காவல் படையை உடனடியாக முடுக்கிவிடுகிறது. மாநில அரசை பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிங்கர்களால் கொல்லப்படும்போது மட்டும் காது கேளாததுபோல மௌனம் காக்கிறது. இதன் அர்த்தம் என்ன?
இலங்கைச் சிக்கலைப் பொறுத்தவரை 'இந்திய அரசின் நிலைப்பாடே என்னுடைய நிலைப்பாடும்’ என்கிறார் கலைஞர். மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பதும், கொல்லும் சிங்களப்படைக்கு உதவுவதும்தான். இது கலைஞருக்கும் சம்மதம்தானா?
விடுதலைப்புலிகள் சிறு விமானத்தைக் கொண்டு இலங்கை அரசின் கட்டுநாயகே இராணுவ விமான தளத்தைத் துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனராம். மறுநாள் காலை இந்தியா முழுவதும் அல்லோப்பட்ட காட்சி சமச்சீர் புரிதல் உணர்வுள்ள எவரையும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பதாகவும், அந்த பயங்கரவாதிகள் எந்த நேரமும் இந்தியாவில் நுழைவதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்பதுபோலவும், அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அழித்து முடிக்கவும் எல்லாக் காப்பரண்களையும் உடனடியாக முடுக்கிவிடவேண்டும் என்றும் ஒரே கூக்குரல்தான்.
இந்திய அரசும் உடனே ராடார் பொருத்தியதும், கடலோரக் காவல்படையின் 24 மணி நேர ரோந்துப் பணியை முடுக்கிவிட்டதும் நடந்தேறியது. ஆனால் அதே நாளில்தான் இலங்கைக் கடற்படை சுட்டு 5 மீனவர்கள் மாண்டனர். எனில் இதன் அர்த்தம் என்ன? ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன? யாருக்கு உதவி செய்துகொண்டிருந்தன? மீனவர்களைச் சுட்ட சிங்களக் கடற்படையினரை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையென்றால் அதற்கு என்ன பொருள்? ஆக இந்திய ரோந்துப் பணி என்பது கொலைகார சிங்களர் படைக்குக் காவல் புரிவதும், புலிகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு முன்னறிவித்து எச்சரிப்பதும்தான் என்றாகிறது. வேறு வகையில் சொன்னால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் சுடுவதற்குப் பாதுகாப்பளிப்பதுதான் என்றாகிறது.
இவற்றையெல்லாம் கலைஞர் அறியாதவரல்ல. ஆனால் அடுத்த நாள் அந்த ஐவர் கொலை பற்றிக் கலைஞர் சொன்னார், 'மீனவர்களைக் கொன்றவர்கள் யார்? அவர்களின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்று கண்டறியவேண்டும்’ என்பதாக. இதன் மூலம் கலைஞர் இலங்கைக் கடற்படையினரைக் குற்றம் சாட்டவில்லை என்பதாகிறது. அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் அப்படி குற்றஞ்சாட்டவில்லை என்று இலங்கை அமைச்சரே மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இலங்கையின் இன்னொரு அமைச்சர் 'மீனவர்களை விடுதலைப்புலிகள்தான் சுட்டிருப்பார்கள், நாங்கள் சுடவில்லை; என்கிறார். புலிகள் தான் சுட்டார்கள் என்று கலைஞர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் சிங்களர்கள் அதன் மறைபொருளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டவர்களாய், அதை உறுதி செய்து சந்தோஷங்கொள்கிறார்கள்.
பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன ஆலோசகர்களும், இந்திய உளவுப் பிரிவினரும் போன்ற எவரும் சொல்லாத, துணியாத ஒரு குற்றச்சாட்டை வெகு எதேச்சையாக கலைஞர் முன்வைக்கிறார் என்றால், 'தமிழினத்தலைவர்’ யாரைக் காக்கச் சபதம் மேற்கொள்கிறார்? புலிகளை அழித்தொழிப்பதைப்பற்றி நாம் ஒன்றும் பேசத் தேவையில்லை. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களையெல்லாம் தான்தோன்றித்தனமாகச் சொல்லவோ செயல்படுத்தவோ முடியாது. நாம் ஒன்று கேட்கலாம். திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் தமிழினத் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அது ஒன்றுதான் அழிப்பதற்கு எளிதான வழி என்றா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன மூளைகளால் பிழையாக வழிநடத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியத்தரப்பு இழைத்த கொடுமைகளையெல்லாம் மூடி மறைத்து விட்டது. ஆனால் அதற்கு நாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்க நேர்ந்தது ஆற்றிக்கொள்ள முடியாத சோகம். காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்ஸின் ஊது குழல்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்திராவின் கொலைக்குப் பின் சீக்கிய இனத்து மன்மோகன் சிங்கை அரியணை ஏற்றி இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழியமைக்கப்பட்டுள்ளது. எனில் ராஜீவ் மரணத்திற்கான விலையாக ஈழத் தமிழினத்தின் அழிவைக் கோரக்கூடாது என்பது நியாயம் அறிந்தவர்களின் வேண்டுதலாய் இருக்கும்.
உலகெங்கிலும் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அமைப்பாக்கப்பட்ட ஆகப்பெரும் பயங்கரவாதத் திரட்சிகளான அரச எந்திரங்கள் அப்படித்தான் அழைக்கும். விடுதலைப்புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கட்டும். ஆனால் அவர்கள்தாம் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கவசமுமாய் இருக்கிறார்கள். நோக்கமற்ற கொலைகளும் ஆள்கடத்தல்களும் கொள்ளைகளும் புரிந்துவந்த வேறுபல போராளிக் குழுக்களை இந்திய அரசும் உளவுப் பிரிவும் மிகுந்த பணச்செலவில் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்கள் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவுமாய் இருக்கலாம். அவரவர்க்கும் அவரவர் நோக்கம் பெரிது.
பல நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களது அரசை ஏதோ ஒருவகையில் அங்கீகரித்துத்தான் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிóறார்கள். 'அவர்களோடு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு வழங்கும் உதவியை நிறுத்திவிடுவோம்’ என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் சிங்கள அரசு புரியும் அட்டூழியங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவ்வப்போது கடுமையாகக் கண்டித்தும் வருகின்றன. ஆனால் இந்தியா தன் தேய்ந்து இற்றுப்போன பழைய பாதையிலேயே செல்கிறது என்றால் தமிழர்கள் அழிக்கப் படுவதற்காக அவர்கள் விரதம் காக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கட்சி அரசியல் நிர்பந்தம் காரணமாகப் பொய் சொல்லிக்கொண்டே சிங்கள அரசுக்கு பொருளும் தளவாடங்களும் பயிற்சியும் உளவுத் தகவல்களும் வாரி வழங்குகிறது இந்திய அரசு.
தமிழகக் கடைகளில் பிடித்த அலுமினியக் கட்டிகளையும் இரும்பு பால்ரஸ் குண்டுகளையும் கைப்பற்றிக் கடத்தல் வழக்குகள் போடப்படும் அதே நேரத்தில் இந்திய நெடுஞ்சாலைகளில் கண்டெய்னர் லாரிகளில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படு கின்றன. அவ்வாயுதங்களை சிங்க அரசு தமிழ் மக்களை கொல்லத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது?
திபெத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவிற்கு வந்தவர்கள் 'அகதிகள்’ என்னும் அந்தஸ்தில் அரச மரியாதையோடு வாழ்கிறார்கள். சிங்களப் படையின் தாக்குதல்களுக்குத் தப்பி இந்தியாவுக்கு ஓடிவரும் ஈழ மக்களோ 'புலம்பெயர்ந்தோர்’ என்னும் பெயரில் பஞ்சைப் பராரிகளாய், வக்கற்ற பிச்சைக்காரர்களாய், சந்தேகங்களுக்கு உள்ளாகும் சிறப்பு முகாம் கைதிகளாய், கொண்டுவரும் பொருள்களை யெல்லாம் காவலர்களிம் களவு கொடுக்கிறவர்களாய் நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை வழங்கவும் அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும்கூட கலைஞரின் இந்திய இறையாண்மை உணர்வு இடம் கொடுக்கவில்லை. ஒரு வரியில் சொன்னால் ஈழம் அழிவதில் கலைஞருக்கு எந்தத் துக்கமுமில்லை. இதையும் நம்மீது திணிக்கப்படும் அவரது நிலைப்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அவ்வாக்குறுதிகளும் அவற்றின் நிறைவேற்றமுமே தமிழகம் இலவசங்களில் உயிர் வாழும் நிரந்தரப் பிச்சைக்காரத்தனங்களால் நிரப்பப்பட்டிருப்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அடித்தள மக்களின் அவலத்தை நிலப் பகிர்வுத் திட்டமும் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டமும் உண்மையிலேயே போக்கலாம்தான். ஆனால் நடைமுறையில் அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது அரசின் நோக்கத்திற்கும் அக்கறைக்கும் உரைகல்லாகும்.
மேற்குவங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலப்பங்கீடு இங்கும் நடக்குமெனில் அது மக்ளுக்கான திட்டமாய் இருக்கும். அல்லாது, உபரி நிலங்களை கையகப்படுத்தாமல், பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்காமல், முறையான நுகர்வோரைப் பட்டியல் போடாமல் செய்யப்படும் எந்தத் திட்டமும் அதன் விழாச் செலவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் தயாரிக்கவே பயன்படும். கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து அரிசி வழங்கல் 35 சதவீதத்திற்கே நடப்பதும், அன்றாடம் லாரி லாரியாய் வெளி மாநிலங்களுக்கு அரசி கடத்தப்படுவதும் அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளைக் குறிப்புணர்த்தக் கூடும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி அதற்குள் சந்தையில் மறு விற்பனைக்கு வந்துவிட்டன. வேறு என்ன நடக்கும்? ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? யாருக்கு யார் நன்றி சொல்வது?
தெருவில் நடப்பவர்கள் அவசரத்திற்கு ஒன்றுக்கு இருக்க ஒரு வழி செய்யப்படவில்லை. மூத்திரத்தை அடக்கிச் சிரமப்படும் ஆத்திரக்காரர்களையும், கண்டகண்ட இடங்களையும் மூத்திரக் காடாக்கும் பொறுப்பற்றவர்களையும் கேட்டால் கலைஞர் தமிழர்களைப் பழி வாங்குகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கலைஞரைக் கேட்டால் மாநில வாரியாக எத்தனை மூத்திரக்காடுகள் உள்ளன என்று சொல்லி, தமிழகத்தின் சீரழிவுக்குப் பரிந்து பேசுவார். அடித்தள மக்களுக்குக் குடிநீர் இல்லை. குடியிருக்க இடமில்லை. நடக்க வழியில்லை. நாற்றமில்லாத சூழல் இல்லை. முறையாக மின்வசதி இல்லை. கழிவுநீரால் கழுவப்படாத சாலைகள் இல்லை. ஈக்களும் கொசுக்களும் எங்கே பெருகுமோ, அங்கேதான் மக்களும் பற்றாமைகளோடு பிதுங்கித் திணறுகிறார்கள். வெகுமக்களின் நீண்டகால, அவசரகால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
காவிரிக்கரை கிராம மக்கள் கரையிலேயே காலைக் கடன்களை முடிப்பார்கள். ஊர்கூடி பொங்கல் வைக்கும் நாளில் அந்தக் கரையை நன்றாகச் சுத்தம் செய்து, மருந்தடித்து, புதுமணல் பரப்பி, அதன்மேல் பொங்கலிட்டு விழா எடுப்பார்கள். ஆனால் நம் அரசுகள் இடும் பொங்கலோ குடலைப் பிடுங்கும் மலக்காட்டு நாற்றத்திலேயே புது முழக்கங்களோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி தன் எதிர்காலத் திட்டத்தின் நம்பகத்தன்மையுள்ள முயற்சியாக மக்களின் அவலங்களை எடுத்து வைத்து அரசின் ஜடத்தனத்தைப் பறைசாற்றுகிறது. இது தொடக்கம்தான். அதுவே நெஞ்சை அதிர வைக்கிறது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவை அதிகரிக்கவும் செய்யப் படுகிறது. உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் அரசு 90% மக்களின் கோவணங்களை உருவிக் கொண்டு அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் யாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துத் தாரை வார்க்கிறது.
முன்னெப்போதையும்விட, தலித்துகள் இன்று நாறிச் சிறுத்துப் போகிறார்கள். முன்னெப்போதையும் விட’ என்னும் தொடர் உங்களுக்கு வியப்பையோ கழிவிரக்கத்தையோ ஏற்படுத்துமெனில் நீங்கள் எவ்வளவு மரத்துப்போய்விட்டீர்கள் என்று நான் அதிசயிக்க வேண்டியிருக்கும். நேற்றுவரை தலித் மக்கள் தங்கள் அவலங்களைத் தலைவிதியின்மேல் இறக்கி வைத்திருந்தார்கள். இன்று தங்கள் அறிவின்மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். ஆகவே, தங்கள்மேல் வீசப்படும் ஒவ்வொரு அற்பக் குறிப்பையும் மனத்துள் வாங்கிக் குன்றிப் போகிறார்கள். அடுத்த பக்கத்தில் புரசை கோ.தமிழேந்தியின் நியாயம் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு கேவலமான வசவுகள் அவர்கள்மேல் வீசப்பட்டுள்ளன! பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர்! ஒரு சாமான்யரைக் கரையேற்று வதற்காகத் தமிழகம் எவ்வளவு பிச்சைக்காரர்களையும் தீராத பிரச்சினைகளையும் காப்பாற்றித் தீர வேண்டியுள்ளது!
நிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கழிசடை, பிறரைத் துல்லியமாக அவமானப்படுத்த நினைத்தால் அவரை 'அப்பன் பேர் தெரியாதவன்’ என்று நக்கலடிப்பான். நக்கலடித்தவனுக்கு சட்ட ரீதியாக ஒரு அப்பன் இருந்தாலும், உண்மை அதுவாயிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது, அவ்வளவு உள்ளீடற்ற வசவு அது. ஆனால் உடைமைச் சமுதாயத்தில் அது எதிராளியை வேரற்றவனாக அடித்து வீழ்த்துகிறது. இந்த மண்ணில் சொந்தங்களற்று, நிற்க நிழலற்று, ஊன்றிக்கொள்ள விழுதுகளற்று, மானுடத்தின் அற்பப் பிறவியாக அவரைச் சித்தரித்து மகிழ்கிறது. நமது அரசியல்வாதிகள் இதுபோன்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முன்வரவும் மாட்டார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அந்த வசவை மேலும்மேலும் வலுப்படுத்தி மனத்துள் மகழ்ந்துகொள்வதுதான்.
இந்தப் பின்புலத்தில், நாம் அவர்களை வேண்டுவதெல்லாம் தயவுசெய்து தமிழர்களை அப்பன் பேர் தெரியாதவர்களாக்கி விடாதீர்கள் என்பதுதான். இந்த வேண்டுகோள், கலைஞர், மருத்துவர், புரட்சித் தலைவி என எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு ஓடிவந்து நாற்காலியைத் தட்டிப் பறித்துக்கொள்ளப் போகிற புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும்தான். மக்களை மந்தைகளாகவே இருத்தி, இலவசத்துக்கு மிதிபட்டுச் சாகும் ஏமாளிகளாகவே வளர்த்து அழகு பார்க்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான அறைகூவலாக இருக்கும்.









No comments:

Post a Comment