Tuesday, February 23, 2010

KHANS vs GANDHIS




MY NAME IS KHAN திரைப்படம் உள்ளூர் அரசியல் தாதாகிரி தனங்களால்
மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில் திரையிடப்பட்டது மும்பையில்.
அதனாலேயே நிறைய ஸ்டார் அந்தஸ்த்தை திரைவிமர்சன ஊடகத்தில்
மிகவும் எளிதாகவும் பெற்றது. My name is khan, iam not a terrorist
இதுதான் கதையின் மையம். வழக்கம் போல கரண் ஜோகரின் காட்சி
அமைப்புகள் வெளிநாட்டு கதை தளம் ,. கதாநாயகன் பெஞ்சில்
உட்கார்ந்திருக்கும் காட்சி , இத்தியாதி நிறைய சொல்லிக்கொண்டே
போகலாம்.

பம்பாய் , ரோஜா, நாயகன் என்று இந்தியாவின் வெவ்வேறு இடங்களை
கதைத்தளமாக்கி இந்திய முகத்துக்கு ஏற்ற மாதிரி நடிகைகளைத் தேர்வு
செய்து இந்தியாவின் பெருநகரங்களில் வசூலை அள்ளும் வித்தையில்
மணிரத்னம் எப்படி கெட்டிக்காரரோ அது போலவே பாலிவுட்டில்
வெளிநாட்டு இந்தியர்களை முன்வைத்து அதற்கு ஏற்றது மாதிரி கதைக்கரு,
கதை நிகழ்வுகள், கதை நிகழ்விடங்களை அமைத்து இந்திய பாலிவுட்
சினிமாவை உலக அரங்கில் ஜெர்மன், சீனா, ஜப்பான், அமெரிக்கா, நார்வே,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் அரபு நாடுகளுக்கு எடுத்துச் சென்று
டாலர்களிலும் யூரோக்களிலும் குளிர்காயும்
வித்தையை நடத்திக் கொண்டிருப்பவர் கரன் ஜோகர். போலந்து, ஜெர்மனி, ரஷ்யாவில் எந்த பாலிவுட் படங்களுக்கும் கிடைக்காத சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மை.


அதற்கான மிகச்சிறந்த கதைக்கருவாக கிடைத்திருப்பது அமெரிக்காவில்
11/9 க்கு முன்பும் அந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னும் .
கதைக்கரு, தளம் இவற்றில் கரண் கள ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என்று
குறைபட்டுக் கொள்கிறார் நியுயார்கிலிருந்து திரைவிமர்சனம் எழுதும் அஸீம் சாப்ரா. (Aseem Chhabra). இந்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்
MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்கு , மற்ற KHAN நடிகர்களிடம் இல்லாத துணிச்சல் ஷாருகானிடம் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் தவறில்லை.


கதையில் அவருக்கிருக்கும் உளவியல் சிக்கலும் அதன் காரணமான
உடல் அமைப்பு, எண்ணம், செயல்பாடுகளில் காட்டும் வித்தியாசம்
கதைக்கு வலு சேர்க்கிறதா என்பதை கரண் ஜோகரிடம் தான் கேட்க வேண்டும்.
கதை நாயகன் இப்படிப்பட்டவனாக காட்டப்பட்டால் தான்
MY Name is khan, iam not a terrorist என்று அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம்
சொல்ல நினைப்பதை மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று
கற்பனை செய்து ஒரு மிகப்பெரிய விசயத்தைச் சொல்வதற்கு ஒரு நொண்டிக்
குதிரையில் பயணித்திருக்கும் கோமாளித்தனத்தைக் கண்டு காமெடி
காட்சி இல்லாத குறையை இப்படி நிவர்த்தி செய்து கொண்டார்களோ என்று
சமாதானம் சொல்லிக்கொண்டாலும் .. சரி விட்டு தள்ளுங்கள்.

இனி விசயத்திற்கு வருவோம். நடிகர் ஷாருகானுக்கு அமெரிக்கா போயிருந்தப் போது அவருடைய KHAN என்ற பெயர் அடையாளம் காரணமாக தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மணிநேரம் காத்திருக்க வைத்தார்கள். மம்முட்டிக்கும் இதே நிலமை ஏற்பட்டது. ஏன் இந்தியாவின் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம்.

மத அடையாளத்தை தீவிரவாதியின் அடையாளமாகக் காட்டியதில் வல்லரசுகள்
மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு
இருக்கத்தான் செய்கிறது.

அதனால் தான் MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதில்
இருக்கும் புரிதல், MY name is Rahul, iam not a terrorist என்று சொல்வதில்
கிடைப்பதில்லை.


அமெரிக்காவின் இச்செயல் என்னவோ 11/9 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்றோ உளவியல் சிக்கல் என்றோ கரண்ஜோகர் காட்டியிருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையல்ல. ஏனேனில், ஈரானிய திரைப்படம் - வட்டம் (2000) படத்தின் இயக்குநர் (Jafer Panahi) ஜாஃபர் பனாஹி டிரான்ஸிட் விசா வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக நியுயார்க்
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு ஹாங்காங்குக்கே திருப்பி அனுப்ப பட்டார்.
ஹாங்காங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து புவனோஸ் அய்ரஸில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு செல்லும் வழியில் 15.4.2001ல் இது நடந்தது. அப்போது அமெரிக்காவில் அவரது வட்டம் திரைப்படம் திரையிடப் பட்டிருந்தது. அப்படத்திற்காக அவருக்கு "கருத்துச் சுதந்திரத்திற்கான" பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை திருப்பி அனுப்பி தனக்குப் பட்டம் வழங்கிய திரைப்பட சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

KHAN என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு
மட்டுமல்ல நம் மகாத்மாக்களுக்கும் அலர்ஜியாகத்தான் இருந்திருக்கிறது.


இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் அரச பரம்பரைக்கு காந்தி என்ற
அடையாளம் ஏன் வலிந்து கொடுக்கப்பட்டது?
Khans எல்லோரும் காந்தி என்று மாற்றம் பெற்றது ஏன்?
இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சோனியாகான், ராகுல்கான்..
இப்படியாக ஒரிஜினலாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இந்திராகாந்தியின் பெயரில் இருக்கும் காந்தி யார்?
இப்படி நிறைய கேள்விகள் அண்மைக்கால வரலாற்றிலிருந்து
மிகவும் சாதுரியமாக கள்ள மவுனத்தின் மூலம் மறைக்கப்பட்டு
மறக்கப்பட்டு விட்டது.









இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி
ஆனார்? யார் காரணம்?
இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான்
பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும்
பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இசுலாமிய
மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டார்.
ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்று சிலர் சொல்கிறார்கள்.
அவருடைய தாய் பார்ஸி என்பதும் பார்சிகளில் காந்தி என்ற குடும்பபெயர்
இருப்பதும் மறுப்பதற்கில்லை. இலண்டனில் மசூதியில் இந்திராவும்
ஃப்ரோஸ்கானும் நிக்காக் செய்து கொண்டதை இலண்டன் பத்திரிகைகள் செய்தியாக்கின.

அதன் பின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்
மகாத்மா என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள்.
காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்தார்
என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எல்லாம் யாரும் நினைத்தால்
சம்பந்தமில்லாமல் யாருடைய குடும்ப பெயரையும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்ன? இதெல்லாம் மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம்.

சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின்
சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு காந்தி
வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு khan களை காந்தியாக்கியது தான்..
இலண்டனில் ஃப்ரோஸ்கான் என்ற பெயர் ஃப்ரோஸ்காந்தி என்று ஒரு
அஃபிடவிட் (affidavit) மூலம் மாற்றம் பெற்றது. இதில் ரொம்பவும்
புத்திசாலித்தனமாக இது பெயர் மாற்றம் மட்டும்தான், மத மாற்றம் அல்ல
என்பதும் குறிக்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பியவுடன் இந்திராவுக்கும்
கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து
வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஃப்ரோஸ்காந்தி இறந்தப் பின் இசுலாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை
பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள்.
சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.
ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனேனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

தாய்வழி குடும்ப பெயரைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை..
இந்திய அரசியலில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு சாதுரியமாக,
திட்டமிடப்பட்டு எதிர்கால அரசியல் அதிகாரப்பகிர்வுக்கு துணை செய்யும்
வகையில் ஆளும் வர்க்கத்தால் சாதிக்க முடிந்தது என்பதை நினைத்துப்
பார்க்க வைத்தது ஏதொ ஒரு வகையில் இந்தப் படம் .

MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்குப் பதிலாக
MY Name is Gandhi, iam not a terrorist என்று சொல்லிப்பாருங்களேன்.
கேட்பவர்கள் நமக்கு எதோ ஆகிவிட்டது என்கிற மாதிரி பார்ப்பார்கள்.
நமக்கே கூட சத்தமாக அதைச் சொன்னால் ஏதொ கருத்துப்பிழை
உள்ள சொல் தொடரைச் சொன்னது போலிருக்கும்!!

பால் பச்சையாக இருக்க முடியுமா?
ரோசா செடியில் மல்லிகைப் பூக்குமா?
காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?
என்று நம் மூளையே நம் கட்டுப்பாட்டை மீறி நம்மிடம் பேச ஆரம்பிக்கும்!

காந்தி, எங்கள் தேசப்பிதாவே.. உங்களின் எளிமைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அரசியல் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அதிலும் குறிப்பாக தன்னுடைய அடையாளப் பெயரான காந்தி என்ற
குடும்ப பெயரையே ஃப்ரோஸ்கானுக்கு வழங்கிய உங்கள் அரசியல் அறிவு
யாருக்கு வரும்? ஜவஹர்லால் நேரு குடும்பம் இதற்காக உங்களுக்கு
நன்றி சொல்கிறார்களோ என்னவோ... இந்திய மக்கள் நாங்கள் நன்றி
சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்!.

ஷாருக்கானுக்கு ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம்.
MY Name is khan, iam not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய
வேண்டாம். ஒரு அஃபிடவிட் வாங்கி உங்கள் khan பெயரை காந்தி என்று
மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கு இனிமையாகத்தான்
இருக்கிறது.

Wednesday, February 10, 2010

பெண்வழிபாடு

*வளர்ச்சி கூடவும் தளர்ச்சி நீங்கவும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளவும். துர்க்கையை வழிபட்டால் துயரங்கள் நீங்கும்* அவளுக்கு வயது 13 அவள் பேதை. * வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும். * பேதையின் மலரும் மொட்டுகள் காற்றில் அசைந்தாடியது. டாப் ஸ்லிப் அதற்குள் அணியும் டைட் ப்ரா அவள் இன்னும் அணிய ஆரம்பிக்கவில்லை. அதனோலேயே எப்போதும் புத்தகக்கட்டை பையிலிருந்து எடுத்து மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டு நடப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது. எப்பொதும் கணக்கில் தப்பு செய்தால் 'ணங்'குனு தலையில் கொட்டும் டியூசன் சார் இப்போது அப்படிக் கொட்டுவதில்லை. பக்கத்தில் வந்து முதுகுப் பக்கமாக தட்டுவதும் அப்படியே கைகள் முன்பக்கம் நகர்த்துவதும் யாரும் பார்க்காத போது அப்படியே விரல்களால் கிள்ளிவிடுவதுமாக.. கத்தவும் முடியவில்லை . யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. டியூசனுக்குப் போகமாட்டேன்னு அழுது அடம்பிடித்து எல்லா ரகளையும் செய்து பார்த்துவிட்டாள். " நீ வாங்கற மார்க்குக்கு டியூசன் வேண்டாம்னு வேற சொல்றியா?" வீட்டில் ஆள் ஆளுக்கு திட்டியது தான் மிச்சம். 'அந்த சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அதுதான் போகமாட்டேனு சொல்றா" 'இவ சேட்டை எல்லாம் அவருக்கிட்ட நடக்காதில்லே.. அதுதான்.." 'ஏண்டா.. அவதான் ஒரே ப்டிவாதமா போகமாட்டேன்கிறாளே பொம்பளைக் குட்டி படிப்புக்கோசரம் ஏண்டா இப்படி அலட்டிக்கிறே...' 'சும்மா இரும்மா.. இவ படிச்சா தான் இவளுக்கு லைஃப். என்ன பண்றது மூத்தவா அவுங்க அம்மா மாதிரி சிவப்பா பிறந்திருக்கா பிரச்சனை இல்லை.. இவ என்ன மாதிரி கருப்பால்லே இருக்கா. எதோ ஒரு எஞ்ஜினியரிங் அது இதுனு படிச்சி நல்ல சம்பளம் வாங்கினா அவ படிப்பையும் சம்பளத்தையும் பார்த்து நல்ல இடமா அமையும்னு நான கணக்குப் போடறேன்.. இவ என்னடானா என் கணக்கை தப்பாக்கிடுவா போலிருக்கே.. மகன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்று பெரிசு மவுனமாக முந்தானையை எடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் மார்பகங்களை போர்த்து இழுத்துச் சொருகிக்கொண்டது. அப்பா மட்டுமில்லை சித்திமார் மாமா என்று சொந்த பந்தங்கள் எல்லோரும் அவள் அவளுடைய அப்பா மாதிரி கருப்பா பிறந்ததுக்காக ரொம்பவும் தான் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். அவளுக்கு அப்படி எல்லாம் வருத்தமே வருவதில்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்து அடிக்கடி ரசித்துக் கொள்வாள். அதுவும் குளித்துவிட்டு வந்தவுடன் டவலைச் சுத்திக்கொண்டு இடுப்பு சுளித்துக் கொள்கிற மாதிரி தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நடிகையின் குளிக்கிற காட்சிகளையும் நடித்து நடித்து தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருப்பாள். எப்படியோ ஒருவழியாக டியுசன் முடிந்தது. என்னவானாலும் சரி இனிமேல் இந்த மாதிரி டியுசன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துவிட்டாள். +2வில் எல்லோரும் டீச்சர் xy யிடம் தனிக்கோச்சிங் அதாவது பிரைவேட் டியூசன் எடுத்துக் கொண்டார்கள். சும்மா சொல்லக்கூடாது டீச்சரின் கோச்சிங் மாணவர்கள் தான் இதுவரை கணக்கில் 100/100 எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்ற ரிகார்டு வேறு இருந்தது. அதிலும் லேடி டீச்சர் என்பதால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றொர்கள் பயமில்லாமல் போட்டார்கள். மற்றவர்கள் கோச்சிங் பீஃஸை விட 5000 ரூபாய் அதிகம் என்றாலும் லேடி டீச்சர் என்பதால் பெற்றோர்கள் விரும்பி பணத்தைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 10 மாணவர்களுக்கு மேல் சேர்ப்பதில்லை என்பதால் ரொம்பவும் டிமாண்ட் இருந்தது. அவளுக்கு இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். *அவளுக்கு வயது 15. அவள் பெதும்பை * * கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. * பெதும்பைக்கு டீச்சர் நன்றாகவே கணக்கு சொல்லிக்கொடுத்தாள். ரொம்பவும் கண்டிப்பாகவும் இருந்தாள். எப்போதும் சிடு சிடு வென இருப்பதாக அவளுக்கு தோன்றியது. கொஞ்சம் இந்த டீச்சர் சிரித்தால் நல்லா இருக்குமோனு நினைத்தாள். அதை எப்படியும் டியூசன் முடிவதற்குள் டீச்சரிடம் சொல்லிவிட வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். இதற்குள் வீட்டில் அவள் அக்காவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அக்கா நல்ல கலர். இருந்தாலும் அவள் அழகாக இருக்கிறாள் என்பதாலேயே யாரும் சீர் செனத்தி இல்லாமல் அக்காவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. அக்காவுக்கு நகைச் செய்யும் போதும் சரி வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கும் போதும் சரி இவளுக்கே இப்ப்டினா இந்தா நிக்காளே இவளுக்கு என்ன பாடு படப்போறேனோ என்று அப்பா பெதும்பையைப் பார்த்து அடிக்கடி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல அதை எல்லாம் கேட்டும் கேட்காதது மாதிரி அக்காவின் திருமணத்தில் தான் என்ன மாதிரி உடை அணிந்து கொள்ள வேண்டும், அதை உடுத்துக்கொண்டு எப்படி அங்கேயும் இங்கேயும் நடக்க வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெதும்பை. அக்காவைப் போலவே மாப்பிள்ளையும் நல்ல கலரா உசரமா இந்த டி,வி விளம்பரத்தில் வர்றவன் மாதிரி எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு பெதும்பைக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அக்கா திருமணத்தால் டியுசனுக்கு ஒருவாரம் போகமுடியவில்லை. டீச்சர் அதற்குள் ஒரு சேப்டர் நடத்தி அடுத்த சேப்டருக்கு போய்விட்டாள். அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. வேனும்னா இரவில் 9 மணிக்குப் பின் வந்து ஒரு மணி நேரம் தனியாக பாடம் கேட்கலாம் என்று டீச்சரே சொன்னவுடன் பெதும்பைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எவ்வளவு நல்ல டீச்சர்.. வீட்டில் சொன்னவுடன் யாரும் எதுவும் எதிர்ப்பு சொல்லவில்லை. அதுவும் லேடி டீச்சர் என்பதால் 'லேட் ஆனா நீ வரவேண்டாம், டீச்சர் வீட்டிலேயே தங்கிக்கோ விடிஞ்சப்புறம் வந்தா போதும். தெரு நாய்கள் ராத்திரி 10 மணிக்கப்பறம் சைக்கிள் முன்னாலே ஓடிவந்து குரைச்சி ரகளைப் பண்ணுதுக,.. நேத்து இப்படித்தான் அடுத்த தெரு மயிலு மவன் 10 மணிக்கு பஸ் டாப்பிலிருந்து சைக்கில்ல வந்திருக்கான் தெருநாய் கூத்திலே பையன் சைகிளை அங்கங்கே திருப்பி கீழே விழுந்து முட்டியைப் பேத்துக்கிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பெதும்பை சிட்டாக டீச்சர் வீட்டுக்குப் பறந்தாள். டீச்சர் இவள் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டு இவளுக்காக காத்திருந்தாள். ஒவ்வொன்றாக இவளுக்கு புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்தாள். இரவில் டீச்சர் வீட்டில் விடிய விடிய மெல்லிய நைட் லேம்ப் வெளிச்சம் இருந்ததால் அவளுக்குப் பயமாகவே இல்லை, வீட்டில் அக்காவுக்கு திருமணம் ஆனபின் அவளுக்குத் தனியாகப் படுக்க பயமாக இருந்தது. பாட்டியின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால் இவளுக்கு தூங்கும் போது பேஃன் வேணும். பாட்டிக்கு பேஃன் காத்தே ஆகாது. அம்மா பக்கத்தில் போய் படுத்துக் கொண்டால் பாதி நாள் நடுச்சாமத்தில் அம்மா அருகிலிருக்க மாட்டாள். கேட்டால் அப்பாவுக்கு கால்ப்டித்துவிட போயிருந்ததாகச் சொல்வாள். அப்பாவுக்கு கால்பிடித்துவிட்டால்தான் தூக்கம் வரும்.. அதுக்காக இப்படியா.. நடுச்சாமத்தில் அம்மாவைக் கால்பிடித்துவிட சொல்வது!..என்று அப்பாவின் மீது தான் அவளுக்கு கோபம் வரும். அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். டீச்சர் வீட்டில் தூங்கினால் இந்தப் ப்ரச்சனை எதுவுமே இல்லை. நிம்மதியாக தூங்கி எந்த்ரிச்சி டாண்னு அம்மா காபி போடும் போது வீட்டுக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது. அன்றைக்கு அவளுக்குச் சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது. டீச்சரும் சரி தூங்கலாம் என்று சொல்ல்விட்டாள். தூக்கத்தில்... அவள் கால்களை அகட்டி வைத்து மெத்தென்று .. உடல்.. கதகதப்பாக வெட்ப பெருமூச்சுடன். அவள் உதடுகளைக் கவ்விக்கடித்து.. அவள் தொடைகளைத்தடவி உதடுகளால் முத்தமிட்டு அவள் கூந்தலைத்தடவி உடலை இழுத்து அணைத்து காற்றுகூட நடுவில் புகுந்துவிட இடமின்றி இரு பெரும்மலைகளுக்கு நடுவில் இருக்கும் இரண்டு சிறிய குன்றுகளாய் பெதும்பையின் மார்புகளைத் தடவி நீருற்றின் குளிர்ச்சியாய் ஈரமாக்கி.. இதுகனவா நனவா.. என்ன நடக்கிறது? சட்டென்று போர்வையை விலக்கிக்கொண்டு வெளியில் வந்துவிட முடியாதபடி ஆகாயமே காவல் காத்த நிலவில்லாத வானத்தில் ... கதகதப்பான அணைப்புக்குள் பெதும்பை தூங்கிப் போனாள். * அவளுக்கு வயது 19. அவள் மங்கை. * பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம். * எஞ்சினியரிங் சீட் கிடைத்து விட்டது. சென்னையில் அண்ணா கல்லூரியில். விடுதி வாழ்க்கை. எப்போதாவது லீவில் அக்கா வீட்டுக்குப் போகலாம். ஆரம்பத்தில் அடிக்கடி போனாள். ஆனால் என்னவொ அவளுடைய அக்கா அவளுக்குத் தெரிந்த அக்கா மாதிரியே இல்லை. டோட்டலா அக்கா மாறிப் போயிருந்தாள். எல்லாம் அத்தானுக்குப் பிடித்த மாதிரி தான். சாப்பாட்டிலிருந்து கட்டிக்கொள்ளும் புடவை கலர் வரை.. எப்படி ஒரு மனுஷியால் இவ்வளவு தூரம் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்று அவளுக்கு அதிசயமாக இருந்தது.. அத்தான் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் ரொம்பவும் விலை உயர்ந்தாகவும் ரொம்பவும் அழகானதாகவும் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்து அது அது இடத்தில் வைத்திருந்தார்கள். எதையாவது அவள் தொட்டுப் பார்த்தால் கூட அக்கா சத்தம் போடுவாள். 'கையை வச்சிக்கிட்டு சும்மா இரேண்டி.. அத்தான் சத்தம் போடுவாரு.. ரொம்ப காஸ்ட்லி ஐட்டம்.. 'என்பாள். வீடுனா அப்படி இப்படி பொருட்கள் அங்கேயும் இங்கேயுமா கிடக்கனும். அதுதானே மனிதர்கள்.. உயிருள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளம். அதை விட்டுட்டு இப்படியா மியுசியம் மாதிரி பைஃவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி.. ஒரு செட்டப்பில் .. அவளுக்கு என்னவொ அக்கா வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் பெரிய பெரிய ஹோட்டல் ரிசப்ஷன் ஹால் தான் நினைவுக்கு வரும். சொல்வதில்லை. * ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * அக்கா உண்டாகி இருக்கிறாள் என்று அம்மா பட்சணமெல்லாம் செய்து கொண்டு பார்க்க வந்திருந்தாள். அம்மாவும் அக்காவும் டாக்டரிடம் போயிருந்தார்கள். அத்தான் ஆபிஸிலிருந்து சீக்கரமே வந்துவிட்டார். வழக்கம்போல அத்தானும் அவளும் ஹாலில் உட்கார்ந்து டி.வி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தான் ரொம்பவும் நெருக்கமாக அவள் தொடையைத் தொட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவள் எதிர்பார்க்காமல் அவள் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டார். 'என்ன இது.. ப்பிளிஸ் எந்த்ரிங்க திஸ் இஸ் நாட் கரெக்ட்..ப்பிளீஸ்ஸ்ஸ்ஸ்' அவள் குரல் உடைந்தது. அழகையை அடக்கிக் கொண்டாள். அவள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அத்தானின் கைகள் அவள் துப்பட்டாவை விலக்கி அவள் கழுத்துப் பகுதியை தடவி கீழிறங்கியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவனைத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். 'ரஸ்கல்.. நீ நடந்துக்கிட்டதை என் அக்கா கிட்டேயும் அம்மா கிட்டேயும் சொல்றேன் பாரு.. ' ஆத்திரத்துடன் சேர்ந்து அழகையும் வந்தது. அவன் அவள் அருகில் வந்தான். 'ஏய் இந்தப்பாரு..., உன் அக்கா அழகுக்கு முன்னோலே நீ தூசி.. யாரும் உங்க அக்காவை விட்டுவிட்டு நான் உங்கிட்டே வந்தேன்னு நீ சொன்னாகூட நம்ப மாட்டாங்கடீ.. சும்மா கிடந்து அலட்டாதே.. எம் மேலே உனக்குத்தான் கண்ணு.. நீ தான் உன் அக்கா இல்லாத நேரம் பார்த்து எம்மேலே விழுந்தேன்னு நான் சொன்னா அதைத்தாண்டீ நம்புவாங்க.. போடி போ.. சொல்லு.. சொல்லுடி..' அவன் சொல்ல சொல்ல அவன் மீது அருவெருப்பு வந்தது. அதன் பின் அவள் தன் அக்கா வீட்டுக்குப் போவதை தவிர்த்தாள். அப்படியே போனாலும் அக்கா இருக்கும்போது போய்ட்டு உடனடியாக வந்துவிடுவாள். அம்மாவிடம் மட்டும் அத்தான் நடந்துக் கொண்டதை ஊருக்குப் போயிருக்கும் போது சொன்னாள். 'எங்கிட்டே சொன்னமாதிரி இதை வெளியில் யாருக்கிட்டேயும் சொல்லிடாதேடி. அக்கா வாழ்க்கையே வீணாக்கிடுவானுக. பொண்ணா பொறந்திட்டா இப்படி ஆயிரம் வரும் போகும்.. மனசுக்குள்ளேயே போட்டுக்கனும் புரியுதாம்மா..' சொல்லிவிட்டு அம்மாவும் சேர்ந்து அழுதாள். அம்மாவின் அழுகையில் அவள் இதுவரை யாரிடமும் சொல்லாத சொல்ல முடியாத எல்லாமும் கலந்திருந்தது. அவளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போவதில் அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டில்லி என்று எங்கே கிடைத்தாலும் போயிடலாம் சென்னை மட்டும் வேண்டாம் .. சொந்தக்காரங்க இல்லாத இடத்தில் சுதந்திரமாக தனியாக இருக்க வேண்டும் .. அந்த நினைப்பே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் வேலைக்குப் போவதற்குள் நல்ல இடத்திலிருந்து அவளுக்கு வரன் வந்துவிட்டது. நல்ல வாட்டச் சாட்டமான பையன். எம்.டெக் படிச்சிருக்கான். ஒரே பையன். எந்தப் பிக்கல் பிடுங்கலும் கிடையாது. சீர் எதுவும் டிமாண்ட் பண்ணலை. போடரதைப் போடுங்கனு சொல்லிட்டாங்க. வீட்டில் எல்லோரும் இவளுக்கு வந்திட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் வாய்க்கு வாய் பேசிக்கொண்டார்கள். அம்மா தான் எல்லார் வாயும் ஒன்னுபோலிருக்காது என்று இவளுக்கு கண்ணேறு கழித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்ததலிருந்து அவளுக்கு கண்ணேறு கழித்ததாக நினைவில்லை. அதுவும் அவளுக்கில்லை. அவளுக்கு கிடைக்குப்போகும் கணவனால் கிடைத்திருக்கும் போனஸாகவே இருந்தது. * ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும். * அவளுக்கு வயது 27. அவள் அரிவை. எல்லா பெண்களுக்கும் மனசுக்குள் இருக்கும் ஆவல் அவளுக்கும். ஏன் தன்னை மனைவியாக தன் கணவன் ஏற்றுக்கொண்டான் என்பதை அறிந்து கொள்ள துடிப்பது. அந்த நேரத்தில் அவள் கணவன் சொல்லும் காரணங்கள் பெரும்பாலும் பொய்யாக இருக்கும். அது நிஜமல்ல என்றாலும் அவன் சொல்லும் பொய்யை உண்மை என்று அந்தக் கணத்தில் நினைப்பதில் ஒரு தனிசுகம். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அவளும் கேட்டாள். ஆனால் அவன் பொய் சொல்லவில்லை. உண்மையை எந்த ஆடைகளும் அணிந்து போர்த்தாமல் நிர்வாணமாக சொன்னான். நான் பார்த்ததில் நீ தான் ரொம்பவும் சாதரணமா இருந்தே. ரொம்ப சிம்பிளா இருந்தே. படிச்சிருக்கே.. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் இது எல்லாவற்றையும் விட நிதர்சனமான காரணம்.. சாதாரணமான லுக் இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பிளை பயப்பட வேண்டாம்.. நிம்மதியா இருக்கலாம்.. னு சொல்லிட்டு அவளைத் தன்பக்கம் இழுத்தான். அவன் இழுத்தவுடன் தன்னிடம் அவனை இழுத்து அணைக்கும் அவள் கைகள் ஒடிந்து போனது. அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும் படுக்கையில் சுருக்குப்பையைக் கிழித்து நுழையும் கத்தியின் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது. அவனுடைய இரு குழந்தைகளையும் பெற்று வளர்த்தாகிவிட்டது. அவளுக்கு நேரம் போவதற்காக டிடிபி வேலை செய்தாள். வீட்டில் இருந்து கொண்டே செய்வதால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவனுடைய கணினியையோ லேப்டாப்பையோ பயன்படுத்தக் கூடாது. என்ன காரணம் கொண்டும் அவனுக்கு விடுமுறை நாட்களில் அவள் அந்த வேலைகளைச் செய்யக் கூடாது. தொழில்துறை கணினித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை டிடிபி செய்வதில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது. எல்லா புத்தகங்களிலும் எழுதியவர்கள் தன்னுரையில் அவளுக்கு நன்றி சொன்னார்கள். பக்கத்திற்கு 50 முதல் 100 வரை கூட அவளுக்கு வருவாய் வந்தது. இந்தப் பணம் அவளுடையது. அவள் விரும்பியபடி அதைச் செலவு செய்யலாம். அப்படி நினைத்து தான் அவ்வை முதியோர் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தாள். அந்த ரசீதை அப்படியே ஹாலில் இருந்தது, அதைப் பார்த்துவிட்ட அவள் கணவன் அதை விரும்பவில்லை என்பது அவன் கடுகடுப்பான முகத்தைப் பார்த்தே அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றி பேசினால் தானே வம்பு.. அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். * சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன. * அவளுக்கு வயது 29 அவள் தெரிவை. வீட்டுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வரும் நண்பர் vx டம் பொறுக்க முடியாமல் சொல்லி அழுதிருக்கிறாள். அவர் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் வெளியில் போய்வருவாள். நிறைய புத்தகம் படிப்பவர். நல்ல பதிப்பாசிரியர். அவருக்கு நிறைய எழுத்தாளர்களை பேராசிரியர்களைத் தெரிந்திருந்தது. அடிக்கடி அவளிடம் சொல்லுவார். 'நீயும் உன்கதையை எழுதேன்' என்று. Men are taught to apologize for their weaknesses, women for their strengths.(Lois Wyse) என்று அவர் சொல்லியதைப் பல நாட்கள் நினைத்து பார்த்திருக்கிறாள். எவ்வளவு சரியான வார்த்தைகள். Men define intelligence, men define usefulness, men tell us what is beautiful, men even tell us what is womanly. என்று ~Sally Kempton சொன்னதைச் சொல்லி ஆக்ஸ்போர்ட் அகராதி முதல் ஹாலிவுட் படங்கள் வரை பெண் எப்படி சித்தரிக்க்பட்டிருக்கிறாள், அவளுக்கான இடம் என்ன, இதை எல்லாம் சொல்வதும் எழுதுவதும் தீர்மானிப்பதும் யார் என்றெல்லாம் நிறைய பேசிக்கொண்டு வந்தார். அவர் பேச பேச அவளுக்கு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அடிக்கடி நண்பரின் நினைப்பு வந்தது. இதைச் சொன்னால் நண்பர் அதற்கு என்ன பதில் சொல்வார் என்பதை நினைப்பதும் தான் நினைத்தது சரிதானா என்று அவரிடம் அதைக் கேட்டு அவர் சொல்வதை வைத்து டிக் அடித்துக் கொள்வதும்.. எல்லா நேரங்களிலும் அவர் நினைவு தன்னை ஆக்கிரமித்திருந்ததை அவள் உணர்ந்து கொண்டாள். அப்படித்தான் ஒரு நாளிரவு.. கணவன் அருகில் வரவும் அவளுக்கு அப்போதும் அவர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்துவிட்டது. "பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்." மங்கிய வெளிச்சத்தில் அவளைச் சுற்றி அவர் பேசிய சொற்களின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தீண்டியது. அந்த அணைப்பில் அந்தக் கைகளில் அந்த முகத்தில் அந்தப் பெருமூச்சில் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் வந்து உட்கார்ந்து கொண்டன. அவள் கண்களை மூடிக் கொண்டாள். திறந்து நிசத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு இந்த நினைப்பு பிடித்திருந்தது. சுகமான அனுபவமாக இருந்தது. எனோ எந்தக் குற்ற உணர்வுமில்லை. மனசுக்கு நிறைவாக இருந்தது. தான் ரசிக்கும் ஒருவரிடம் தான் விரும்பும் ஒருவரிடம் தன்னை ரசிக்கும் ஒருவரிடம் தன்னை விரும்பும் ஒருவரிடம் தன் உடலை மட்டும் விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார்? அன்று புதிதாகப் பிறந்தது போலிருந்தது. மீண்டும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டாள். *அவளுக்கு வயது 45 அவள் பேரிளம்பெண். * தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான். * குழுந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவளுக்கு அவள் நண்பர் மூலம் நிறைய நிறைய ஆர்டர் கிடைத்தது. நண்பருடன் இருக்கும் நாட்களும் பொழுதும் அதிகமாக இருந்தது. இரு குடும்பங்களும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வரப் போக இருந்தார்கள். அன்று நண்பருடன் அவள் டாக்ஸியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். என்னவோ தெரியவில்லை. அவர் அவளுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்த மாதிரி இருந்தது. சரி அதனால் என்ன.. கண்ணை மூடிக் கொண்டு அவரைக் கட்டி அணைத்துவிட்டு இப்போ எதற்கு இப்படிப் பாசாங்கு செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவர் சாதாரணமாக அவள் தொடையில் கை வைத்துக் கொண்டார். காற்றில் பறந்த அவள் தலைமுடியை அவர் பின்பக்கமாக ஒதுக்கினார், அவர் கைகள் அவள் கழுத்தைத் தடவியது. கழுத்துப் பகுதியில் தான் உணர்வு நரம்புகளின் முடிச்சுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவர் தன் கைகளை பின்பக்கமாக நீட்டி அவள் தோள்களை அணைத்துக் கொண்டார். அவளுக்கு இப்பொது அழுகை வரும்போலிருந்தது. அப்படியே அவர் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது. தனக்கு என்னவாகிவிட்டது? தொண்டை வறண்டு போனது. அவள் இருப்பிடம் வந்துவிட்டது. டாக்ஸிக்காரன் மீட்டருக்கு அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சரிதான் போயிட்டுப் போறான்.. "ஆஜ் தோ பூரா வசூல் கியா" என்று சொல்லிக்கொண்டே அவர் அவள் பின்னால் வந்தார். அவளுக்கு நடைத் தள்ளாடியது. எட்டாவது மாடி. லிப்டுக்குள் நுழைந்தவுடன் இரும்புக்கதவு பூட்டிக் கொண்டது. அவர் சொன்ன வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அன்று வீட்டில் யாருமில்லை. அவருடன் தனியாக கழிக்கப்போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றி காத்திருந்தது உண்மை. அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவரும் வழக்கம் போல ஹாலில் வந்து உட்கார்ந்தார். இருவருக்கும் சேர்த்து சூடாக டீ போட்டாள். கிச்சனில் நுழைந்தவரிடம் என்ன அப்படி புதிதாகப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டு வைத்தாள். வாருங்களேன் காற்றாட திறந்த பால்கனியில் உட்கார்ந்து டீ சாப்பிடலாம் என்று அழைத்தாள். அவரும் முகத்தைக் கழுவிவிட்டு அவளுடன் சேர்ந்து திறந்துவெளி பால்கனியில் உட்கார்ந்தார். யு வடிவத்தில் உட்காருவதற்கு ஏற்ற மாதிரி கட்டிவிடப்பட்டிருக்கும் பால்கனி சுவர்.. இழுத்து பூட்டிக் கொள்ள வசதியாக இரும்பு கம்பிகள். செடிகள். இரும்புக் கம்பிகளை விலக்கி வைத்து வசதியாக இருவரும் பால்கனி சுவரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவள் மெதுவாக அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடி இறுகியது. மறுநாள்.. இது தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல.. கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. பால்கனியிலிருந்து தவறி விழுந்துவிட்டார்கள் என்று அவர்கள் இருவரின் முடிவைப் பற்றி பத்திரிகைகளும் டிவிக்காரார்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். * பிரத்தியங்கரா தேவியை வழிபட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.* --------------------------------------------------------------------- .... நன்றி: விலங்குகளின் பாலுறவு குறித்து மருத்துவர் டி.காமராஜ் குறிப்புகள் & வயது அடிப்படையில் பெண்களை ஏழு வகைப் படுத்தும் பெருங்கதை யுகமாயினி பிப்.2010 இதழில் வெளிவந்திருக்கும் கதை

Wednesday, February 3, 2010

முள்வேலி





காதல் புனிதம்
கற்பு தெய்வீகம்
தாய்மை பெண்மை என
கூர்மழுங்காத ஆயுதங்களால்
கைப்பற்றப்பட்ட
விளைநிலத்தில்
புதைந்து கிடக்கிறது
காலத்தின் கண்ணிவெடி.
வெடித்தால்
விளைநிலம் தரிசாகலாம்
பயமுறுத்துகிறது
வெள்ளை உடையில் வரும்
தேவைதைகள் கூட்டம்.
தேவதைகள் அறிந்ததில்லை
முள்வேலிகளின் பசியை.

Saturday, January 30, 2010

என் பசி




என் பசி
----------------> மராத்திய மொழிக்கவிதை


ஒத்துக்கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.

உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.

நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டு விட்டேன்
-என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-

என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்


கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?

---- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan)
கவிதை நூல் "தத்புருஷ் " ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின்
தமிழாக்கம்.)

Monday, January 18, 2010

மராத்தி எழுத்தாளர் அர்ஜூன் டாங்ளேயுடன் நேர்காணல்




கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிடாது
-----------------------------------------------------------------------------
(நன்றி: புதுவிசை - டிச 2009)

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் ( தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:

Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... - சிறுகதைகள்

Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித்ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992

No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry

Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories

Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.

1.

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானேநிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள் ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalith idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கானஇடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை! ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?

(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.

***

Wednesday, December 23, 2009

பனைமரம்





ஒற்றைப் பனைமரம்
-------------------

உங்கள் தோட்டத்தில்
பனைமரத்தின் வேர்கள்
அத்து மீறி நுழையவும் இல்லை
ஆசைக் கொண்டு அலையவுமில்லை.

உங்கள் தென்னை மரங்களுக்கு
குழித் தோண்டி
பக்குவம் பார்த்த நீங்கள்
இந்தப் பனைமரத்தின்
மண்ணையும் வளைத்து
வேலிப்போட்டு
தோட்டம் கண்டீர்கள்.!

தனிமரங்கள் தோப்பாகாது
மரங்களுடன் இருப்பதே
இந்த மரத்திற்கும் சிறப்பு
கனவுகளின் மயக்கத்தில்
உங்கள் தோட்டத்தின்
கம்பீர தோற்றத்தில்
உலாவந்தது பனைமரத்தின்
பச்சை நிழல்கள்.

கறுப்பின விடுதலையை
கர்ஜித்து கர்ஜித்து
வைரம் பாய்ந்த கறுப்பு தோள்களுடன்
வலம் வந்தது
பனை மரத்தின் கருக்குகள்.

மரங்கள் அடர்ந்த உங்கள்
தோட்டம்
சோலையானது.
பலருக்கு மாலையானது
எப்போதும் தொடர்ந்தது
மாலைகளுக்கான
மரியாதை அணிவகுப்புகள்.

ஒருவர் நிழலில்
ஒருவர் மயங்கி
ஒருவர் நிழலில்
ஒருவர் ஒதுங்கி
தனக்கென நிழல்களில்லாத
மரங்கள் அடர்ந்த
உங்கள் தோட்டத்தில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழல்..
தோட்டத்தின் நிழல்களைத் தாண்டி
விழுவதைக் கண்டு
தீடிரென ஒருநாள்
அதிர்ந்து போனது
உங்கள் தோட்டத்து முள்வேலிகள்.


முகம்மாறிய
உங்கள்
முகம் அறியாமல்
தன் நீண்ட நெடிய நிழல்காட்டி
உங்கள் மேடையில்
நாட்டியமாட நினைத்தது
பனைமரம்.
கறுத்த பனைமரங்களுக்கு
இடமில்லை.
விலக்கி வைத்தது
உங்கள் புதுப்புது விதிகள்.

யாரையோ சந்தோஷப்படுத்த
எப்போதும்
விலக்கி வைக்கப்படுகிறது
பனைமரத்தின் நிழல்.
பனைமரத்தின் மண்ணில்
பத்திரமாய் வளர்ந்தக்கதையை
மறந்து போனது
எல்லா மரங்களும்.
'வெட்டுவது கூட
கிளைகள் வளர்வதற்குத்தான்'
தத்துவம் பேசுகிறது
வாழை.
"எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும்
பொருந்துமானால்
ஏன் பிறக்கிறது
இன்னொரு தத்துவம்?"
கிளைகளே இல்லாத
பனைமரத்தை
வெட்டினால்
எப்படி ஜீவிக்கும்
இந்த ஒற்றைப்பனை.?

கேட்கிறது
தோட்டக்காரனிடம்.
'உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டுமே விழவேண்டும்'
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்.
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்.
நிழல்களைச் சுருக்குவதும் விரிப்பதும்
பனைமரங்களின் வசமில்லை.
அரசும் அதிகாரமும்
மாற்ற முடியாத
பிரபஞ்சத்தின் விதியை
கிழக்கில் உதிக்கும் சூரியனிடம்
கேளுங்கள்
சொல்லக்கூடும்-
.இயக்கவாதிகளின்
நிழல்களைக் கூட
கட்டுப்படுத்தும் அதிகாரம்
தன்னிடம் இல்லை என்பதை.

=============================

2 மொட்டைப் பனைமரம்
--------------------------------
செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.

தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.

ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.

கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.

இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
ஒற்றை நிழலில்
ஒதுங்கி இளைபாற.

--------------------------

Sunday, December 13, 2009

தெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு


தனி மாநிலம் கேட்ட தெலுங்கானாவுக்கு தலையசைத்தாலும் அசைத்தார்கள்
எங்கே பார்த்தாலும் தனிமாநில கோரிக்கைகள்.
இந்தியப் பூகோளப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கு.
சும்மா சொல்லப்பிடாது நம்ம பக்கத்து வீட்டு சந்திரசேகர ராவ் இருந்த உண்ணாவிரதத்தை.
மனுசர் நிசமாலுமே சாப்பிடாமா இருந்தாருனு சொல்லுதாங்க.
எதுக்கு உடம்பைக் கெடுத்துக்கனும் சொல்லுங்க?
கொஞ்சம் சொல்புத்தி சுயபுத்தி இல்லாட்டாலும் அடுத்தவனைப் பார்த்து நடக்கிற
புத்தியுமா இல்லை. எதுக்காக இப்படி 11 நாளு உண்ணா நோன்பிருக்க வேண்டும?
பக்கத்து மாநிலமான நம்மைப் பார்த்தாவது காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும் அதிரடி உண்ணாவிரத ஸ்டைலைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமோ?

டில்லியிலே ரொம்ப குளிருங்க. குளிரில் தலையாட்டினதை நம்ம டில்லிக்காரங்க
தெலுங்கானாவுக்கு சரினு சொல்லிப்பிட்டாங்கனு எழுதப்போக இங்கே பாருங்க
இன்னிக்கு பத்திரிகையிலே வந்திருக்கிற ஏகப்பட்ட தனிமாநில கோரிக்கைகளை.

> நாங்க தான் முதல்ல தனிமாநிலம் கேட்டோம்னு சொல்றாங்க நம்ம கூர்க்கா மக்கள்.
மே.வங்கத்துடன் இருக்கப் பிடிக்கலையாம் அந்த டார்ஜிலிங் கூர்க்கா சனங்களுக்கு.
முதல்ல கேட்ட எங்களுக்கு கொடுக்காமா அது என்ன தெலுங்கானாவுக்குனு
கேட்கிறாங்க.

> எங்க மராத்தி மாநிலம் ( அய்யோ நான் இப்படி எழுதியிருக்கதை மேரா ராஜ்தாக்கரெ மானுஷ்களிடம்
யாராவது போட்டுக் கொடுத்திடாதீங்க அண்ணாச்சீங்களா, எம் பிழைப்புக் கெட்டுப்போயிடும்!)
5 வருடங்களுக்கு முன்பே 'விதர்பா' தனிமாநில கோரிக்கையை வைத்தது. பாவம் அப்படி
வைத்தவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர். யாரும் அவர் சொன்னாருனு
கண்டுக்காமா விட்டுட்டாங்களொ என்னவோ.
இப்போ மீண்டும் 'விதர்பா' வந்திடுச்சி.
ஒரே கூட்டணியிலிருக்கும் சிவசேனா எதிர்ப்பு, பா.ஜனதா ஆதரவு.

> சும்மா சொல்லப்பிடாது எங்க மாயாவதியை. பின்னே என்ன உ.பி எவ்வளவு பெரிய மாநிலம்.
தனி ஆளா தூத்து பெருக்கி துடைக்கிறவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும்.
அவுங்களும் கடிதாசி எழுதிட்டாங்க அவுங்க கஷ்டத்தை. உ.பி இரண்டா இல்லை மூணா பிரிச்சா
ரொம்ப நல்லா நிர்வாகிக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
பண்டல்காண்ட்., மேற்கு உ.பி, கிழக்கு உ.பினு 3 மாநிலங்காளாகிடும்.


>இதை எல்லாம் பார்த்திட்டு இருக்கிற நம்ம தமிழ்நாட்டிலிருந்து ஏன் எந்தக் குரலும் வரலைனு
எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குங்க. என்னவோ நம்ம் தமிழினத்தலைவரை எல்லொரும்
அரசியல் சாணக்கியர் அது இதுனு புகழாராங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்காமா
இப்படி கம்முனு இருக்காரோ.
இப்போ போயி அவர் சந்திரசேகர ராவிடம் வருத்தப்பட்டுக்கவோ முறைச்சுக்கவோ கூடாதுங்க.
சில வேலை இல்லாததுகள் தேவையில்லாமல் சந்திரசேகர ராவ் உண்ணா விரதத்தையும் அவர்
உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துக்கொண்டிருப்பது அவரைக் கடுப்பேற்றி இருக்கும்.
இதெல்லாம் என்ன சின்னக் கொசுக்கடி மாதிரி அவருக்கு.
அப்படியே லைட்டா தட்டிவிட்டுட்டு தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி
தன்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தாங்க என் ஆசை.

* தமிழ்நாடு மாநிலத்தை இரண்டா பிரிச்சிடலாம். ஒன்று தஞ்சை, கடலூர் என்று வடமாநிலங்களை
உள்ளடக்கிய சோழ மண்டலம். இன்னொன்று மதுரையைத் தலைநகராகக் கொண்ட தெற்கு மாநிலங்களை
உள்ளடக்கிய பாண்டிய மண்டலம். எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் முதல்வர்னு நான் சொல்லியா
உங்களுக்குப் புரியனும்?
மதுரையைத் தலைநகராகக்கொண்டு மூன்று சங்கங்கள் வைத்து அரசாண்ட் நம் பாண்டியர் வரலாற்றை
சரித்திர சான்றுகளுடனும் இலக்கியச் சான்றுகளுடனும் எழுதவும் நிரூபிக்கவும் நம் தமிழினத் தலைவர்
தமிழக முதல்வரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்?
சோழ மண்டலம் கண்ட ராஜ ராஜ சோழன் என்ற பட்டமும் நான்காவது தமிழ்ச்சங்கம் கண்ட
பாண்டியன் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம். தமிழகம் எங்கும் நம் சோழ பாண்டியர் வரலாற்றை
கதை கவிதைகள் எழுதி சாமாய்ச்சிடலாம்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ( ரொம்ப பழசாகிப் போன சொலவடைனு கோவிச்சிக்காதீங்க)
அடிச்ச கதையா தமிழகத் தலைவர் அவரை வாட்டி வதைக்கும் 'யாருக்குப் பட்டாபிஷேகம்" என்ற
பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக தீர்வு கண்டுவிடலாம்.
பெண்ணியம், பெண்ணுரிமை அது இதுனு பேசற நானே எங்க கனிமொழியை அப்படியே அம்போனு
விட்டுவிடுவேன்னு நினைச்சீங்களா.
நெவர். அவுங்களுத்தான் இப்போ டில்லிக்குப் போற ரூட் க்ளியர் ஆயிடுமே! இனிமே என்ன
டில்லியில் நிறைய கருத்துக்களம் நடக்கும். அப்புறம் டில்லியில் தமிழ்ச்சங்கமம் நடக்கும்.
அசத்திடலாம். அய்யோ நினைச்சாலே ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. அங்கேயும் கவியரங்கத்தில்
போய் நம்ம ஆதவன் தீட்சண்யா மாதிரி தோழர்கள் காச்சு பூச்சுனு கத்தாமா கவிதை வாசித்தோமோ
வாசிக்கலியோ டில்லியைச் சுத்திப் பாத்தமா வந்தோமானு வரனும்னு இப்போவெ சொல்லி வையுங்க.

> அப்புறம் இன்னொரு முக்கியமான செய்திங்க.
யாரும் ஏன் டில்லி அரசு தெலுங்கானாவுக்கு தலையசைச்சாங்கனு மண்டையைப் போட்டு
கசக்கிப் பிழிஞ்சிக்கவேண்டாம்.
தப்பித்தவறிக் கூட இது சந்திரசேகர் ரர்வ் உண்ணாவிரதத்தின் மகிமை, வெற்றினு நினைச்சி
காந்தியம் பேச ஆரம்பிச்சாடாதீங்க. வருஷக்கணக்கில் மணிப்பூரில் மனோராமா உண்ணா நோம்பிருப்பதை
ஏன் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசுனு தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள்.

.> உலகத்தில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக நம்ம காம்ரேட்கள்
தொண்டை வறள கத்திக் கொண்டிருப்பார்கள். சோவியத் ஒன்றியத்தை உடைத்த அமெரிக்கா
ஆசியாவின் பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டு துண்டுகளாக
உடைக்கும். உடைக்க வைக்கும் .. மன்மோகம் சிங் இதெற்கெல்லாம் தலையாட்டியே ஆகவேண்டும்
என்று பேசுவார்கள், நீங்கள் என்ன செய்யுங்கள்.. உங்கள் டி.வி சேனலில் மானாடா மயிலாட பாருங்கள்,
அதுப் பிடிக்காட்டா உலக அரங்கில் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவின் கிரிக்கேட்
மேட்சைப் பாருங்கள். காம்ரேட்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் தலைவலி வரும். எனவே முன்னெச்சரிக்கையாக
அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

> பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுனா என்னானு இத்தனை வருஷமும் புரியாம
இருந்தேனா. இப்போ புரிஞ்சிட்டுங்க. தெலுங்கானா வேணும்னு ஒரு கூட்டம், வேண்டாம்னு ஒரு கூட்டம்.
டில்லிக்காரன் பயங்கர எம்டன். சரினு சொல்ற மாதிரி சொல்லி எப்படி ந்நோ சொல்லிட்டிருக்கான்
கவனிச்சீங்களா. How to say YES when you want to say NO என்று இந்த எம்டனகளை வச்சே
தலையாணி மாதிரி தடியா புக்கு போடலாம்.

இப்படியே நாளையும் பொழுதையும் இவனுக எல்லாம் கழிச்சிடுவானுக. அப்புறம் பொதுசனத்தைப் பத்தி
பேசவோ யோசிக்கவோ இந்த பார்லிமெண்டு, சட்டசபை , பத்திரிகை, டி.விக்காரன் இவனுக்கெல்லாம்
எங்கே நேரமிருக்கும்? அது என்னா லிபரன் கமிஷன் அது இதுனு எதோ காதில் விழுந்ததே...
எல்லாத்துக்கும் கோவிந்தா..
எங்க ஊரிலே
சாம்பார் பருப்பு விலை கிலோ 100 ரூபாங்க. அட வெங்காயம், உருளைக்கிழங்கி விலை கிலோ 25க்கும் மேலே.
இப்போ புரியுதா ஏன் டில்லிக்காரன் YES சொன்னானு.
புரியாட்டாலும் ஒன்னும் குடிமுழுகிப் போயிடாதுங்க. கோவையில் நடக்க இருக்கும் செம்மொழி மாநாடு
ஏற்பாடுகள் குறித்து எழுதுங்களேன் யாராச்சும்.
செம்மொழி மாநாடு நடக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறொம் என்பதை
நினைத்து நினைத்து பூரித்துப் போகும், தமிழாக நான்



பின்குறிப்பு:
சில தனி மாநிலக் கோரிக்கைகளின் நியாயங்களை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்தி
எழுத உட்கார்ந்தேன். புத்தகம் படிச்சி குறிப்பெடுத்து எப்பவுமே ஸீரியசா எழுதி எழுதி என் கணினி மவுசுக்குப் போரடித்துவிட்டதாம்!

Saturday, December 12, 2009

+ மக்கள் சக்தி _ மைனஸ்_ அரசியல் சக்தி ? ஏன் ?????



-----------------------------------------------------

டிசம்பர் 06, மும்பை தாதர், அண்ணல் அம்பேத்கரின் கல்லறை இருக்கும் இடமான
சைத்தியபூமி ..
கூடும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12, 14, 15 இலட்சம் இந்த வருடம்
15 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்கிறது மும்பை காவல்துறை.
எதற்காக இவர்கள் வருகிறார்கள்?
திருப்பதிக்கோ அய்யப்பனுக்கு மாலைப் போட்டு கூட்டம் கூட்டமாக
செல்லும் மனித மனங்களில் வேண்டுதல்களும் வேண்டியதைக் கொடுத்ததால்
அதற்கு கைமாறாக எதையாவது கொடுக்க நினைக்கும் மனித இயல்பும்,
அவனுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்துவிட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்..
எனக்கு எப்போது கொடுக்கப்போகிறாய் என்ற கேள்வியும் நீ கொடுக்கும் வரை
உன்னை நான் விடப்போவதில்லை என்ற தீர்மானமும் இப்படியாக ஏதோ ஓர்
எதிர்பார்ப்பின் உந்துதல் காரணமாகவே பக்தி என்ற பெயரில் மனிதர்கள்
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற தளம் நோக்கி லட்சக்கணக்கில் ஆண்டுதோறும்
போகிறார்கள்.
இதில் அடிக்கடி புண்ணிய தளங்களை மாற்றிக்கொண்டிருக்கும் பேர்வழிகளும் உண்டு.
நாங்கள் எதையுமே வேண்டி போவதில்லை என்று சொல்லும் ஆன்மீகப் பேர்வழிகளும்
முக்தி, தேவலோகம், சொர்க்கம் , ஆன்மவிடுதலை என்று எதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டுதான் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இத்தியாதி எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக
மும்பை தாதர் கடற்கரையிலிருக்கும் சைதன்யபூமிக்கு வருகிறார்கள் இவர்கள்.
பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 06ல் சைதன்யபூமிக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இலட்சம் இலட்சமாக டிசம்பர் 5, 6 நாட்களில் மும்பையை நோக்கி வரும் இவர்களுக்காக
மும்பையின் காவல்துறை என்னவெல்லாமோ முன்னேற்பாடுகள் செய்கிறது.
குறைந்தது 1500 தொண்டர்கள் தாதர் ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குச்செய்வதில்
காவல்துறைக்கு உதவுகிறார்கள். ஆங்காங்கே தலித் அமைப்புகள், எஸ்.சி, எஸ்.டி யூனியன்கள்
வருகின்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது முதல் உணவு வழங்குவதை வரை தங்களால் இயன்றதை
செய்து வருகிறார்கள்.

அன்றும் இன்றும்
-----------------

தொடர்ந்து இந்நிகழ்வை நான் பார்த்து வருகிறேன். பொதுவாக 5ஆம் தேதி மாலை சிவாஜி பார்க்
போனால் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியே இரவு 12 மணிவரை
கடைசி டிரெயினைப் பிடித்து வீட்டுக்கு வருகிற மாதிரி இருந்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு 6ஆம் தேதி பகல் 2 மணிக்கு புறப்பட்டால் தாதரில் இறங்கியவுடனேயே
கூட்டத்துடன் கூட்டமாக நாமும் நடந்தாக வேண்டும் என்பதை விட அந்தக் கூட்டம் நம்மை
நகர்த்திச் செல்லும் என்பதுதான் சரியாக இருக்கும்.
15 அல்லது 20 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தைக் கடக்க 2 மணிநேரமானது.
'தாயி.. இவளைப் ப்டித்துக் கொள்' என்று சொல்கிறார் ஒருவர்.
அவள் அம்மா வரவில்லை. பக்கத்துவீட்டு குழந்தை என்னை நம்பி அனுப்பியிருகிறாள்'
என்று சொன்னவருக்கு நடுத்தர வயதிருக்கும். அவர் குழந்தை என்று சொன்ன குழந்தைக்கு
10லிருந்து 12க்குள் இருக்கும். என் மும்பை மூளை தப்பு தப்பாக கற்பனைச் செய்து கொண்டு
கவலைப்பட்டது!

அன்று பார்த்தவர்களுக்கும் இன்று பார்ப்பவர்களுக்கும் இடையில் ஓர் அப்பட்டமான
வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. படித்த ஆணும் பெண்ணுமாய், தூய்மையான
உடையில், கம்பீரமாக நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருப்பதாய்ப் பட்டது.
எண்ணிக்கையில் ஆண்களுக்கு குறையாத அளவு பெண்களும். வெள்ளை நிற
புடவை/சுடிதாரில். இந்த ஆண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தையும் தாண்டியிருக்கும்
என்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்கள் வந்ததால் மும்பை நகரமே குப்பைமேடாகிவிட்டது என்று சில வருடங்களுக்கு முன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதி தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டது.
இன்று A sea of people throngs chaityabhoomni in dadar என்று எழுதுகிறது.
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது மேடைகளும் மேடையை அலங்கரிக்கும் கோஷங்களூம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் சம்பந்த மில்லாத அரசியல் தலைவர்கள் எல்லோரும் அம்பேத்காருடன்
போஸ்டரில் போஸ் கொடுப்பார்கள், நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போஸ்டர்கள் மயமாக காட்சியளிக்கும்..
சிவாஜி பார்க்கில் பெண்களும் ஆண்களூமாய் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஈவ்டிசிங், ஆண்கள் பெண்களிடம் காட்டும் சில்மிஷம், கூட்டம் அதிகமாக இருப்பதால் நடக்கும் திருட்டு,
கூட்டங்களில் குடித்துவிட்டு நடக்கும் ரகளைகள்.. இப்படியான எந்தக் குற்றங்களும் இங்கே நடப்பதில்லை.
குடிப்பதும் திருடுவதும் தலித் ஆண்களின் குணாதிசயமாக காட்டப்படும் ஊடகக் காட்சிகளை இங்கே நாம்
பார்க்கவோ படம் பிடிக்கவோ முடியாது.

அறிஞர் அண்ணாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கின்னிஸ் ரிகார்ட் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப்பின் இன்று அந்த தம்பிமார்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றுதான்
தெரியவில்லை! பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்து 53 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை மாறி இன்னொரு தலைமுறை
தன் அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு சைத்திய பூமிக்கு வருவது உலக அரங்கில் வேறு
எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.




இந்த மனித சக்தியை ஒன்று திரட்டி அரசியல் சக்தியாக ஏன் மாற்ற முடியவில்லை?

அம்பேத்கருக்குப் பின் வந்த எவருமே அம்பேத்கரின் இடத்தைப் பிடிக்க முடியாதுதான் எனினும்
தலித்துகளின் நம்பிக்கைக்குரிய ஓரு தலைமை ஏன் உருவாகவில்லை.

ஆண்டுதோறும் சைத்திய பூமிக்கு வருகின்ற வழக்கம் இந்த 50 வருடங்களில் ஒரு சடங்காக
சம்பிரதாயமாக மாறிவிட்டதா?

வந்திருக்கும் எத்தனைப் பேர் அம்பேதரின் சிந்தனைகளை கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு
வாழ்வியலாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடமும் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் உளவியலைப்
புரிந்து கொள்ளூம் முயற்சியில் அவர்களை வாசித்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும்
இருக்கிறோம் நானும் என் அரபிக்கடல் அலைகளும்.

Monday, December 7, 2009

சைத்தியபூமியில்..





சட்டப் புத்தகத்தின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் உரிமைகளை நம்பி
உறங்கிக்கொண்டிருக்கிறான் இவன்
அரைநூற்றாண்டுகளாக ....

Tuesday, December 1, 2009

பாட்டுலகின் பாட்டனார்கள்

பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்
-------------------------------------------------



புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்றும் - நம்
தந்தையர் நாடென்றும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வேஷமிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலை காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியை
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
-------

தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்- என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.

-------------


திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி..
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்துப் போன
என்னையும் உன் மண்ணையும்.

---

எங்கள் போர்முரசே
தெந்திசையைப் பார்த்து
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த
புத்தனின் கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளை கனவுகளை
அக்னிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.

உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதற கதற
ரத்தம் சொட்ட சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.

----

உன் வீட்டில்
உன் கவிதைகளை
உரக்க வாசித்தே
ஊராளும் கூட்டம்
தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
இலவசமாக பல்பொடி
வழங்கலாம்
போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
மருத்துவர்கள் மாறி மாறி
கூட்டணி அமைத்து
கூட்டணி உடைத்து
தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
காலை 10 மணிமுதல்
பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும்
அதிசயங்கள் நடக்கலாம்
பார்வையாளர் வரிசையில்
பதுங்கி இருக்கிறது
உறைக்குள் வாளாக
உறங்கும் போர்ப்படை.

---


தமிழ்த் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக-
முலை வீசி எறிந்த -எம்
கொற்றவை சாட்சியாக-
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
'கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்'

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல- அவன்
பாடல்களும் கனவல்ல.

-----

(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
"பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்..
"பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் உரைவீச்சு.)

Friday, September 25, 2009

மவுனவெளி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்துக்
களைத்துப்போனது
காற்று
மூடிக்கொண்டன
கருவறைக் கதவுகள்

யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
'புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை"
ஆமென்.'

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

-------------

Friday, September 18, 2009

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்









ஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08

செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை

வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற

தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்

பயணச்சீட்டு தொகையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
10ஆம் தேதிக்குத்தான் ஏர் இந்தியாவில் இடம் கிடைத்தது.
எனவே 9/9/09ல் சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரம் கோபுர

தரிசனங்களுக்காக சென்று வந்தேன்.

சென்னையின் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத பத்து வருடம்

பின்னோக்கிய வட்டத்தில் காஞ்சிபுரம். சுட்டெரிக்கும் வெயில்.
பல்லி தரிசனம் கண்டால் செய்த பாவம் எல்லாம் கரைந்துவிடும்
என்று ஒரு கோவில்.. 2500 ஆண்டு பழமைவாய்ந்த மாமரமே
தலவிருட்சமாக இருக்கும் இன்னொரு கோவில், சிவனில்லாமல்
சக்தி மட்டுமே காமாட்சியாக காட்சியளிக்கும் தாய் வழிபாட்டின்

எச்சமாய் காமாட்சி அம்மன், எப்போதும் வெண்ணெய் நெடி கலந்து
புளிச்ச மோரின் வாசம் துளசி மணத்துடன் சேர்ந்து மணக்கும் பெருமாள்

கோவில்.. இப்படியாக கோவில்களின் நகரமாக சோழர் பல்லவர்

கட்டடக்கலையுடன் கவனிப்பாரின்றி சிலையாகிவிட்ட சிற்பங்கள்..
பக்தர்களின் பசியை மிகவும் அக்கறையுடன் வியாபாரமாக்கியிருக்கும்
சரவணபவனில் கை நனைத்துவிட்டு காஞ்சிபுரத்தில் நான் விரும்பிய

தரிசனத்தை நோக்கி பயணித்தேன்.

வண்டி ஓட்டுநருக்கு பெயர் தெரிந்திருந்தது. ஆனால் முகவரி

தெரியவில்லை. அருகிலிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தப் போது அவர்

சரியாக வழி சொன்னார். அதுவே அப்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியைத்

தந்தது. ஒருவேளை அந்தப் பெட்டிக்கடைக்காரர் 'வழி தெரியாது' என்று

சொல்லியிருந்தால் அதிர்ச்சி என்னைத் தாக்கியிருக்கும். அந்த மாதிரி

அதிர்ச்சி ஏற்படவில்லை என்பதால் ஏற்பட்ட நிம்மதியும் பல வருடங்கள்
நான் பார்க்க விரும்பிய ஓரிடத்தைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியும்
கலந்த கலவை உணர்வுகள்.

நான் 30 வருடங்களுக்கு முன் முதன் முதலாக வாசித்த அறிஞர்

அண்ணா குறித்த புத்தகம் நினைவுக்கு வந்தது. முதல் பக்கத்திலேயே
காஞ்சி என்றால் அண்ணா என்ற கருத்து எழுதப்பட்டிருக்கும்.
அதற்கு கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவில் நடைபெற்ற உண்மைச்

சம்பவம் பேசப்பட்டிருக்கும்.

கிருபானந்தவாரியார் தன் சொற்பொழிவில் ஒவ்வொரு தளங்களின்

பெயரையும் சொல்ல சொல்ல கூடியிருந்தவர்கள் அந்தந்த தளங்களின்

மகான்கள் பெயரைச் சொன்னார்கள். அந்த வரிசையில் அவர் காஞ்சி

என்று சொன்னவுடன் கூட்டத்தினர் (அதுவும் ஆன்மிக சொற்பொழிவு

கூட்டத்தில்!) அண்ணா.. அண்ணா என்று ஒரே குரலில் ஒலித்ததாகப்

பதிவு செய்யப்பட்டிருந்தது. வாரியார் காஞ்சி என்றவுடன் காஞ்சி

காமக்கோடி பீடாதிபதியின் பெயரைத்தான் எதிர்பார்த்தார் என்றும் கூட்டம்

அண்ணா என்றவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவருக்கு ஏற்பட்டது

என்றும் கட்டுரையாளர் எழுதியிருந்தார்.. ( புத்தக ஆசிரியர் பெயரும்

தலைப்பும் நினைவில் இல்லை. )
காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தை நோக்கிப் பயணம் செய்தப் போது

இக்கருத்து மட்டும் நினைவில் வந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின்
முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே

அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான்

உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின்

ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு

போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

அங்கே நான் பார்த்த காட்சிகள்..

ஒரு பெண் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். முகப்பில்

தலைவாசலுக்கு மேல் அண்ணாவின் புகைப்படத்தை ஆணி அடித்து

மாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புகைப்படத்தின் பிரேமுக்குள்

சின்னச்சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த

மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்தார்கள். அதுதவிர

அண்ணாவின் புத்தகங்கள் ஒரு சில கண்ணாடி அலமாரிக்குள் இருந்தன.
மலிவு விலைப் பதிப்பு புத்தகங்கள். அண்ணா பயன்படுத்திய மூக்கு

கண்ணாடி, எழுதும் இங்க் பேனா, இரண்டு பக்கத்தில் எழுத்துகள் மஙகிய
நிலையில் இருந்த அவர் நாட்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. மற்றும்

அண்ணாவின் புகைப்படங்கள். 20 முதல் 30க்குள் இருக்கும். அனைத்து

புகைப்படங்களும் அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வந்த
சாதாரண வாசகனும் அறிந்த புகைப்படங்கள் தான். குறிப்பிட்டு சொல்லும்

படி எதுவுமில்லை. அண்ணாவையும் தி.மு.க.வையும் ஒன்றாக பார்க்கும்

சிலர் சொல்லக்கூடும்.. அண்ணா நூற்றாண்டை ஒட்டி அண்ணாவின்

இல்லம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் அப்படி இருந்திருக்க்

கூடுமென. ஆனால் அங்கு வேறு எதுவும் இருந்ததற்கான

அடையாளங்கள் எதுவுமில்லை..!
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டிருந்தது. 10/09/1930 ..







"நாளை அண்ணாவின் திருமண நாள்"
என்று நினைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தேன்.
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் நிறைய செய்திகளை இன்று

நமக்குத் தருகிறது. ( இது குறித்தும் எழுத வேண்டும்)


அண்ணாவின் இல்லத்தில் அரசு வைத்திருக்கும் அண்ணாவின் நினைவுப்

பொருட்களை விட அதிகமாக அந்தக் காலத்தில் அண்ணா சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள், புத்தகங்கள், கையொப்பமிட்ட கடிதங்கள் எங்கள் வீட்டில்

கூட இருந்தது. அண்ணாவை தன் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட
எண்ணற்ற தம்பிமார்களின் இல்லங்களிலும் இருந்திருக்கும்.

இன்னொரு செய்தி.. அண்மையில் அண்ணாவின் திருவுருவம் பொதித்த

நாணயத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு

நிறைவு விழாவில் தமிழக முதல்வரின் பேச்சு. 16/9/09 தினத்தந்தி

மும்பை பதிப்பில் முதல் பக்கம்.. கலைஞரின் பேச்சு ..
தினத்தந்தியை நம்பிவிடுவதற்கில்லை. கலைஞர் அண்ணா குறித்து

பேசியதை எடிட் செய்துவிட்டு மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி குறித்து

பேசியதை மட்டும் வெளியிட்டு விட்டார்களொ என்னவோ..!

எங்கள் மும்பையில் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா

நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் அப்பாவு சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டார். அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கையும் மக்கள்

பணியும் போற்றுதலுக்குரியதுதான். அதில் எனக்கும் கருத்து

வேறுபாடில்லை. ஆனால் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு விழாவாக

இல்லாமல் அப்பாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவாக தவிர்க்க

முடியாமல் தடம் மாறியதைக் கண்டேன். !


திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.