Thursday, July 24, 2025

கலாப்ரியா கவிதைகள்

 


காலமே காட்சியாகும் கலாப்ரியா கவிதைகள்..

Tk Kalapria 


கலாப்ரியாவின் கவிதைகளில் வாழ்விடமும் மனிதர்களும் கவிதையாகி நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இனி வரும் தலைமுறைக்கு அவர் கவிதையின் முதற்பொருள் " இப்படி எல்லாம் இருந்ததாம்" என்று ஓர் ஆவணமாக மாறும்.

இப்புறச்சூழலைக் காட்சிப்படுத்தும் கவிதைகளின் ஊடாக அவர் கையாளும் கருப்பொருட்களும் கவிதையின் உணர்வு சரடில் கச்சிதமாக பொருந்தி நிற்கும்.

என் வாசிப்பில் கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவமாக இதை உணர்கிறேன்.


முதுகலை படிக்கும்போது கலாப்ரியா வின் கவிதை வரிகள் இரண்டை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறேன்.

அது தனிக்கதை.😃


அவருடைய கவிதைகளின் தனித்துவத்தை ஒரு வாசகராக இப்போதும் கொண்டாடுகிறேன்.

அவர் கவிதைகளின் முதற்பொருளும்  கருப்பொருளும் எனக்கு அந்நியமானவை அல்ல, என்பதும் கூட அவர் கவிதைகளை மிகவும் நெருக்கமாக எனக்கான உலகமாக மாற்றி இருக்கலாம் என்ற 

ஓர்மையுடன் நான்.

 கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்த்துகளுடன்..💐💥🎻


கலாப்ரியா கவிதை:

கறுப்பேறிப்போன

உத்திரம்,

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும் உயரத்தில்.

காலேஜ் படிக்கும் அண்ணன்

அதில் அவ்வப்போது

திருக்குறள்,

பொன்மொழிகள் – 

சினிமாப் பாட்டின்

நல்வரிகள் – என

எழுதியெழுதி அழிப்பான்

எழுதுவான்.

படிப்பை நிறுத்திவிட்டு

பழையபேட்டை மில்லில்

வேலை பார்க்கும் அண்ணன்

பாஸிங்ஷோ சிகரெட்டும்

தலைகொடுத்தான் தம்பி

விளம்பரம் ஒட்டிய

வெட்டும்புலி தீப்பெட்டியும்

உத்திரத்தின்

கடைசி இடைவெளியில்

(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே

பத்திரப்படுத்தி வந்த

தாத்தாவின் – பல

தல புராணங்கள்

சிவ ஞானபோதம்

கைவல்ய நவநீதம்

சைவக்குரவர் சரித்திரங்கள்

பலவற்றை,

வெள்ளையடிக்கச் சொன்ன

எரிச்சலில் – பெரிய அண்ணன்

வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி

விளக்கு மாடத்தில்

அடைத்ததுபோக

உத்திர இடைவெளிகளில்

ஒன்றில் தவிர

அனைத்திலும்

அடைத்து வைத்திருப்பாள்

அவன் அம்மா.


முதல்பிள்ளையை

பெற்றெடுத்துப் போனபின்

வரவே வராத அக்கா

வந்தால் – 

தொட்டில் கட்ட

தோதுவாய் – அதை

விட்டு வைத்திருப்பதாயும்

கூறுவாள்.

நின்றால் எட்டிவிடும்

உயரம்

என்று

சம்மணமிட்டு

காலைக் கயிற்றால் பிணைத்து – 

இதில்

தூக்கு மாட்டித்தான்

செத்துப் போனார்

சினேகிதனின்

அப்பா.

Wednesday, July 16, 2025

தோழர் மலரின் கதை



தோழர் மலரின் கதை.

இது  புனைவல்ல. உண்மை.
சில அதிசயங்களும்
சில நம்பிக்கைகளும்..
🔥🔥🔥🔥

 அவளை மாடு முட்டி காலால் மிதித்தது. அவ்வளவுதான் அவளுக்கு இன்றுவரைத் தெரியும். மற்றதெல்லாம் அவளைப் பற்றி அவள் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அண்டைவீட்டாரும் பள்ளிக்கூடத்தில் அவளுடன் படித்த
அவள் தோழியரும் சொல்ல அவள் அறிந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன.

  காஞ்சிபுரம் ஐயன்பேட்டை கிராமத்தில் கோவி. கலியமூர்த்தி, சந்திரா இருவருக்கும் பிறந்த மகள் மலர்விழி. மாடு முட்டுவது மாடு மிதிப்பதெல்லாம் மிகவும் சாதாரணமாகவும் அதனால் ஏற்படும் காயங்களும் வீக்கங்களும் கைவைத்தியத்தில் சரியாகிவிடும் என்பதே மக்கள் நம்பிக்கையாக இருந்தது. எனவே மகள் மலர்விழியை மாடு மிதித்துவிட்டது என்பதை யாருமே பொருட்படுத்தவில்லை. மலர்விழிக்கு வலி இருந்த இடத்தில் தைலமோ கைமருந்தோ தடவி இருப்பார்கள். ஆனால் இரவு தூங்கி எழுந்தப் பின் மலர்விழியின் உடல் வீங்கி ஒரு விகாரமான தோற்றம் ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் சேர்ந்துக் கொண்டது. அவள் உடலின் வீக்கம்தான் காய்ச்சலைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைப் பெற்றொருக்கு கொடுத்திருக்கும். 

அவர்கள் காஞ்சிபுரம் பார்த்தசாரதி மருத்துவமனைக்கு
தங்கள் மகளைக் கொண்டு காட்டுகிறார்கள். உடல் பரிசோதனைக்குப் பிறகு
மருத்துவர் குழந்தையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால்தான் உடல் வீக்கம் எடுத்திருக்கிறது என்று சொல்லி உடனடியாக அவளுக்கு ஓரு ஊசிப்போட்டாக வேண்டுமென சொல்கிறார். அந்த ஊசியின் விலை 1983 ல்
ரூ 600. மலர்விழி சொல்கிறார் அந்தப் பணம் என் அப்பாவின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு என்று. மகளின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று கலியமூர்த்தி கடன்பட்டு ஊசி வாங்கி சிகிச்சை எடுக்கிறார்கள். மலரின் உடல் வீக்கம் சற்று குறைகிறது என்றாலும் மலர் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னைச் சுற்றி யார் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. மருத்துவர்களால் அவள் நிலைக்கு காரணம் இதுதான் என்று தெளிவாக சொல்லவும் முடியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

மலர்விழியின் அம்மாவும் அப்பாவும் வேறு வழியின்றி தங்கள் மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து தங்கள் வீட்டுக்கு வரும் வழியில் மலர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

 மலரின் அம்மா சந்திரா வரும் வழியில் தன் குழந்தையுடன் இறங்கி அந்தக் கோவிலுக்குப் போய்விடுகிறார். ஐயன்பேட்டையிலிருக்கும் சந்தோலி அம்மன் கோவிலின் வாசலில் உட்கார்ந்து விடுகிறார். 
“தாயே என் மகளை நீ குணப்படுத்தாமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” சங்கல்பம்…எடுக்கிறார். அவருடைய மன உறுதியை யாராலும் அசைக்க முடியவில்லை. கணவர் கலியமூர்த்தி மருத்துவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இது தேவையில்லாத வீம்பு, நம் மகளுக்கு இதுதான் தலைவிதி, இதை மாற்றமுடியாது , ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார்;. ஆனால் மலரின் அம்மா யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. சந்திரா தன் மகளுடன் சற்றொப்ப ஆறு மாதங்கள் அந்தக் கோவிலில் தன் வேண்டுதலுடன் உட்கார்ந்திருக்கிறார். 

 அவருக்கு உணவு, மாற்று உடை என்று வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் கொண்டுவருகிறார்கள். நாள்கள் செல்ல செல்ல அனைவருக்கும் அவள் செயல் முட்டாள்தனமாக தெரிகிறது. ஆனால் அவள் மட்டும் உறுதியாக இருக்கிறாள். தாய் சந்திராவுக்கும்  ஊர்த்தெய்வம் சந்தோலி அம்மனுக்கும் நடுவில் காலம் மெளனமாக இருக்கிறது. கோவிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் (தண்ணீர்) மட்டும்தான் சந்திரா தன் மகளுக்குன் கொடுத்த ஒரு மருந்து எனலாம். 

மலர் அழவில்லை. சிரிக்கவில்லை. ஏன் கோவிலில் இருக்கிறோம் அம்மா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு அவளைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் எதுவுமே தெரியவில்லை. அவள் தன் சூழலுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை.

  திடீரென ஒரு நாள் அந்த விடியல் மட்டும் வேறொரு சூரியனை அனுப்பியது. சந்தோலி அம்மன் முதல் முறையாக பேச ஆரம்பித்தாள். ஆம்,
குழந்தை மலர் வாய்திறந்து பேசினாள். “அம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்”
அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தைகள்!

 அதுவரை வாய்த்திறந்து எதுவும் பேசாத மகள் பேசிவிட்டாள், இனி எல்லாமும் சரியாகிவிடும் என்று அம்மா சந்திரா நம்பினாள். ஊரும் உறவுகளும் அந்த நாளைக் கொண்டாடின. மகளை வீட்டிற்கு அழைத்துவந்து சடை விழுந்த கூந்தலில் நீருற்றி  நீராட்டினாள். சடை சடையாக பின்னலிட்டு இருந்த கூந்தல் தண்ணீரை ஊற்றியவுடன் அப்படியே கையொடு வந்துவிட்டது. தலைமுடி மட்டுமல்ல, அவள் புருவம், இமை முடிகளும் உதிர்ந்துவிட்டன. ஒரு விகாரமான தோற்றத்தில் குழந்தை மலர்விழி 
மெல்ல மெல்ல மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.
 சில ஆண்டுகள் தான் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததே இல்லை என்கிறார் மலர்விழி. அவர் வீட்டில் மட்டுமல்ல, அண்டை வீடுகளிலும் அக்குழந்தையின் மன நலம் பாதுகாக்கப்பட்ட து. யாரும் அக்குழந்தையின் விகார தோற்றத்தைக் காட்டியோ பேசியோ அக்குழந்தையின் மனசைத் துன்புறுத்தவில்லை. இதெல்லாம் அவர்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்காமல் வந்தப் பண்பாடு. நயத்தக்க நாகரிகம்.

மலர்விழியின் அம்மா அவருக்கு தேங்காய்ப் எண்ணெய் மட்டுமே தேய்ப்பாராம். முடி வளர்ந்திரும் பாருங்க.. என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் சந்திரா. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.
 மலரின் வாழ்க்கையில் இத்துயர சம்பவம் நடந்தப்போது அவர் 
ஐயன்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அரசு மேல் நிலைப் பள்ளி சின்ன காஞ்சிபுரத்தில் ஒன்பது முதல் பதினொரு வரை படித்திருக்கிறார்.
வடக்குத் தெரு, நடுத்தொடு, கந்தபார் தெரு என்று மூன்று தெருக்களும் அவற்றை இணைக்கும் சதுரவடிவில் அமைந்த ஊரும் அவரை ஒதுக்காமல் தங்கள் வீட்டில் ஒரு குழந்தையாக அரவணைத்திருக்கிறது.

 மலர் தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது அந்த ஐயன்பேட்டை சந்தோலி அம்மனைப் பார்க்கணுமே என்றேன். 
வீட்டுக்கு வாங்க தோழர், எங்க அம்மா சந்திராவைப் பாருங்க..” என்றார்.
அவருக்கு அவர் வாழ்க்கையின் நிகழ்ந்த அதிசயங்களை சந்தோலி அம்மனுடன் முடிச்சுப் போட விருப்பமில்லை. ஒரு தாயின் உறுதி , நம்பிக்கை என்று விளக்கம் தருகிறார். என் அம்மா செய்ததெல்லாம் எனக்கு தினமும் அக்கோவில் துளசி நீரைக் கொடுத்ததுதான் என்று அறிவியல் விளக்கமும் தருகிறார் தோழர் மலர். 

 சந்திரா என்றால் என்ன? சந்தோலி என்றால் என்ன? இருவருமே மலருக்கு அன்னையர்தான். அம்மா என்ற  மாபெரும் சக்தியில் சந்தோலி அம்மனும் கரைந்து கண் திறந்திருப்பாள் தானே. 

 இன்று தோழர் மலர்விழி, தமுஎகச வின் மிக முக்கியமான களப்பணியாளர். 2008ல் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை “செம்பருத்தி குழந்தைகள் உலகம்” என்ற பெயரில் ஆரம்பித்தார்.  விருதுநகர், திருச்சி, இராமநாதபுரம் , மதுரை, கடலூர், சென்னை என்று பரந்துப்பட்ட அவர் பயணம் மாணவர்களின் பல மேம்பாட்டு திறன்களுக்கு வழிகாட்டியது. அதன் செயல்வடிவமாகவே ‘மழலைச்சொல் ‘ என்ற பதிப்பகம் ஆரம்பித்து குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான கதைகளை எழுத வைத்தார். 
39 புத்தகங்கள், 16 பக்கங்களுக்குள் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இன்றும் குழந்தைகளின் கால்களாகவும் காதுகளாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறார் தோழர் மலர்விழி.

(தோழர் மலரும் நானும் வள்ளியூரில் நுங்கு சர்ப்பத்துடன்)

Monday, July 14, 2025

என்னைப் பெத்த அம்மாஆஆஆ

 



‘எப்ப வந்த தாயி.. ? ‘

மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார்.

‘வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ‘

‘என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ‘

‘யோவ் கோனாரு ..சாகப்போறவக்கிட்டே ஏன் போட்டிப்போடுதேரு..உள்ளெ வந்து நாடிப் பிடிச்சுப் பார்த்துதான் சொல்லப்பிடாதா.. மூவடையா இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளைய இப்படிக் காக்கப் போடப்போறாளோ தெரியலையே.. ‘ சின்னம்மா அழுது கொண்டே அலுத்துக் கொண்டாள்.

கோனாரும் மூவடையாளும் ஒரே கிணத்தில் குளித்தவர்கள்.. ஒரே குளத்தில் அயிரை மீனைப் பிடித்து விளையாண்டவர்கள்..

என்ன ரண்டு பேருக்கும் ஒருவித சண்டை நேசம் உண்டு.அந்தக் காலத்திலிருந்தே அப்படித்தான். இப்பவும் ரண்டு பேருக்கும் அப்படித்தான் சண்டை வந்தது.

ஆண்பிள்ளை இல்லாதவர்களுக்கு அரசு மானியமாக அறுபதோ எழுபதோ மாசமாசம் கொடுக்கின்றது. உனக்கென்ன கொடுத்து வச்சவா.. மாச மாசம் பொண்ணு வேற பணம் அனுப்பறா.. கவர்மெண்ட் பணம் வேறு .. ‘ என்று சொல்ல

ப்டி பிடி என்று பிடித்துக் கொண்டாள் மூவடையா..

மூவடையாளுக்கு யாரும் அவளைக் கொள்ளி வைக்க ஆண்பிள்ளை இல்லாதவள் என்று சொல்லிவிட்டாள் போதும் .. அவ்வளவுதான்.. அன்னிக்கு பூரா ஊர்ச்சனம் தூங்கினப்பிறகும் அவள் குரல் அடங்காது.. சகட்டுமேனிக்கு எல்லாரையும் ஏக வசனத்தில் அறுத்து வாங்குவாள்..மூவடையா வாய்க்குப் பயந்தே பலர் அவளிடன்

அதிகம் பேசமாட்டார்கள்.

ஆனா மூவடையா கடும் உழைப்பாளி. எல்லோருக்கும் கிணத்தில் தண்ணிரில்லை எப்படி விவசாயம் செய்வது என்று கவலையிலிருக்க இவள் மட்டும் பஞ்சாயத்து போர்டில் கொடுத்த இரண்டு ஆட்டை வைத்து வியாபாரம் ஆரம்பித்துவிட்டாள்.

வேறென்ன.. ஆட்டுப்பாலில் நல்ல இஞ்சிக் கலந்த டீ போட்டு காலையில் மலையாளத்து மார்க்கெட்டுக்குப் போகும் லாரி டிரைவர்களுக்கு வண்டி லோட்ஏற்றும் இடத்திற்குப் போய் விற்றுவிட்டு வருவாள்.


அரைமணி நேரம் நடந்துப் போய் இவள் விற்கின்றாள் என்பதைவிட இவள் எப்போதடா நமக்கு இஞ்சி சாயாக் கொண்டுவருவாள் என்று லாரி டிரைவரிலிருந்து ரிக்ஷா டிரைவர் வரை காத்திருப்பார்கள்..

எப்படியும் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வரை லாபம் கிடைக்கும்.

அதுபோதும் அவளுக்கு.. அவள் என்ன ஒத்தக் கட்டை..

இப்போது படுக்கையில் விழுந்து பதினைந்து நாளாகின்றது.

பெரிய டாக்டரு எல்லாம் ‘சரி .. சொல்றவுங்களுக்கு சொல்லிடுங்க.. ரொம்பநாளு தாக்குப்பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு..

பணம் செலவு செய்தால் சுகமாக்க கூடிய வியாதி தான்.

அறுவைச் சிகிச்சைக்கே இரண்டு லட்சம் ஆகும். இவர்களால் முடியாது என்பது டாக்டருக்கும் தெரியும். அதுதான் கையை விரிச்சுட்டார்.

அது தெரியாமல் அவர் முடியாதுனு சொன்னதையே அவருக்குடைய சிறப்பாக அந்த ஊர்ச் சனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..

‘ சும்ம சொல்லப்படாது.. அவுங்க அப்பா கோட்டையிடி வைத்தியரு மாதிரியே தான் இவரும்.. நம்மளை ஏமாத்தி பைசாப் பிடுங்க மாட்டாரு.. முடியாட்டா முடியாதுனு கரைக்கட்டா சொல்லிப்புடுவாரு.. இப்படித்தான் போனமாசம் பால்தேவர் அப்பாவுக்கு நாள் குறிச்சுக் கொடுத்துபுட்டாராம்..பிறகென்ன.. பால்தேவரு அக்கா தங்கச்சினு எட்டுபேருல்லே அத்தனை பேருக்கும் சொல்லிவிட்டு எல்லாலுவளும் வந்து பாலு ஊத்தி தான் காரியம் முடிஞ்சிருக்குனாப் பாத்துக்காங்களேன் ‘

கோனாரு கைகாலை கழுவிட்டு தாழ்வாரத்தில் கயித்துக் கட்டிலில் கிழிந்த தலையனை மாதிரி ஒரு சின்ன ஓலைக் கூடையில் வச்சி எடுத்துட்டுப் போற பருத்திப் பஞ்சுமாதிரி கிடக்கின்ற மூவடையா கையை தூக்கி நாடிப் பிடித்து பார்த்தார்..

ஒரு நிமிடம் அமைதி..

எல்லோரும் அவரு முகத்தையே பாத்திட்டிருந்தாங்க..

‘எல்லா நாடியும்தான் அடங்கிபோச்சே.. ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சிக்கிட்டுஇருக்கே.. ‘

அதுதானே.. அந்தப் பிள்ளையும் பிள்ளை குட்டிகளை விட்டுட்டு போட்டது போட்டபடிக் கிடக்க ஓடி வந்திருக்கு.. அவ மாப்பிளை நல்ல அமந்த குணம்..அதுதான் பேசாமா இருக்கு.. இவ இப்படிக் கிடந்து கடைசியிலே பால் ஊத்த யாருமில்லாமலே காய்ஞ்சிப் போகப் போறாளா..

எப்படியும் ரண்டு நாள்ளே அடிச்சிடும்.. வெள்ளிக்கிழமையிலே அமாவாசை வருது.

இழுத்துட்டுக் கிடக்கிற உசிரை எல்லாம் அடிச்சிட்டுப் போறதுக்குத்தான் இந்த என்வெள்ளிகிழமை அமாவாசைனு சொல்லுவாங்க..ம்ம்ம் பார்ப்போம்..

கூட்டம் கலைந்தது..

‘ஏ மைனி.. கோனாரு என்ன சொன்னாரு.. ? ‘

அவரு என்னத்தை சொல்லறதுக்கிருக்கு.. இப்ப பத்து நாளா இந்தக் குளுகோஸ் தண்ணியை நாக்கிலைத் தொட்டு வைக்கறதில்தான் அவ உசிரு ஆடிக்கிட்டுகிடக்கு. என்னத்தை நினைச்சுக்கிட்டு கிடக்காளோ அவ மவளும் மருமவனும்வந்து காத்துக்கிடக்காவா.. ‘

‘என்ன தம்பி.. நீங்கதான் மூவடையா மருமகனா.. ? ‘

ஆமாய்யா..

இல்லஏ ஒன்னுமில்லே.. மூவடையா எங்கிட்டே ஒரு சீட்டுப் போட்டா பாருங்க..

ரண்டாவது சீட்டு எடுத்திட்டா.. இன்னும் 13 சீட்டு பாக்கி இருக்கு..

மாசமாசம் 250 ரூபா.. பணவிசயம் எதுக்கும் அவ உயிருடனிருக்கும்போதே சொல்லிட்டா நல்லதுனுதான்… ‘

மூவடையா இவர்கள் சொல்கின்ற பணக்கணக்கு , சீட்டு நாட்டு கணக்கை எல்லாம் கேட்டிட்டிருக்க மாதிரி அவர் சொன்னார். அவர்மட்டுமல்ல.. இரண்டு மூன்று பேர் இப்படி அவனிடம் மட்டும் கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். அவனும் எல்லோரிடமும் சொல்வதுபோல் இவரிடமும் பதில் சொன்னான்.

‘அதனால் என்னய்யா.. நானு மாசமாசம் உங்க பேருக்கு மணியார்டர் பண்ணிடறேன்

மாமியார் ரொம்ப சமாளிப்புள்ளவள் என்ரு அவன் கேள்விப்பட்டிருக்கின்றான்.

அவர்கள் மாச மாசம் அனுப்புகின்ற 100 ரூபாயில் இதை எல்லாம் செய்ய முடியாது.

இதெல்லாம் அவள் எப்படியும் சமாளிச்சிடலாங்கிற துணிச்சலில் செய்திருக்கும் காரியங்கள்.

எதற்குமே எழுத்து கணக்கு கிடையாது..கேட்கவும் முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும்.

மூவடையாவுக்கு அவர்கள் ஊர் அம்மனின் பெயர் என்று அவர்களின் சின்னம்மா சொல்லியிருக்கின்றாள்.

‘மூன்று யுகம் கொண்டாள் ‘ அவர்கள் ஊர் அம்மனின் திருநாமம்.

அந்த அம்மனின் பெயர்தான் இவளிடம் வந்து மூவடையாளாக மூக்கு வடித்துக்கொண்டு நின்றது.

மூவடையாவுக்கு ரஞ்சிதம் ஒரே பெண்தான். அதுவும் அவள் வெள்ளி செவ்வாய் தவறாது

ஊர் அம்மனுக்கு விரதமிருந்து ரஞ்சிதத்தை உண்டானாள். ரஞ்சிதம் பிறந்தவுடன்

மூன்று யுகம் கொண்டாளுக்கு தனியாக ஆடுவெட்டி கொடை விட்டுக் கொடுத்தாள்.

தனக்கு குழந்தை இல்லை என்பதை விட அம்மனின் பெயர் வைத்த தன்னை யாரும் மலடி என்று சொல்லிவிட்டால் அது அம்மனுக்கே இழுக்கு என்று எண்ணிஅழுதிருக்கின்றாள்.

அம்மா தாயே.. உன் பேரைச் சொல்லி என்னை யாரும் மலடினு சொல்லலாமா ?

நீ அதுக்கு இடம் கொடுக்கலாமா ? ‘ தினமும் அம்மனிடம் இப்படித்தான்பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் விரதங்களும் நம்பிக்கையும்தான் அவளுக்கு ரஞ்சிதத்தைத் தந்ததாக அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

எந்த நல்லக் காரியத்திற்கும் அம்மனிடம் தான் ஓடுவாள். எல்லா முடிவும் அம்மன் முன்னால் பூ போட்டுப் பார்த்துதான் முடிவுச் செய்வாள்.

ஒரு வெள்ளைப் பூவையும் சிவந்தி, கேந்தி, பூவரசம் என்று எதாவது கலர் பூவையும் சேர்த்து வைத்து விளக்கு ஏற்ற வரும் பூசாரியை எடுக்கச் சொல்லுவாள்.

அவர் வரும் நேரத்தைத் தவற விட்டால் அங்கே வேப்ப மரத்தடியில் விளையாண்டு கொண்டிருக்கும் சின்னப் பிள்ளைகளை பூ எடுத்து தரச் சொல்லுவாள்.

அவள் நினைத்த மாதிரி பூ வந்துவிட்டால்.. அன்று அவள் துட்டுப் பையில் சில்லறைப் புழங்கினால் அடித்தது யோகம் அந்தப் பிள்ளைகளுக்கு,

கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட பைசாக் கொடுப்பாள்.,

ரஞ்சிதத்தை இந்த உறவில்லாத பையனுக்கு கொடுக்க ரொம்பவும் தயங்கினாள்.

எல்லோரும் சொன்னார்கள். சொந்தத்தில் கொடுத்தால் தானே நாளை உன்னை அக்கறையாகக் கவனித்துக் கொள்வான் என்று. அவர்கள் சொல்வதும் சரியாகப்பட்டது.

ஆனால் இந்தப் பையனுக்கு நல்ல வேலை என்று வடக்குத் தெரு வாத்தியாரப்பா சொன்னதும் யோசிக்க வைத்தது.

பூ கட்டிப் போட்டுப் பார்த்தாள். அம்மன் ‘சரி ‘ நு உத்தரவு கொடுத்தவுடன் துணிந்து திருமணம் செய்து கொடுத்தாள்..

அவள் வளர்ப்பில் ரஞ்சிதத்திற்கும் ஊர் அம்மனின் மேல் எப்போதும் தனியானப் பக்தி உண்டு, பரீட்சைக்கு போகும்போது அவள் படிக்காத கேள்வி வரக்கூடாது என்று அம்மனிடம் வேண்டிக்கொள்வாள். வரவில்லை என்றால் ‘அம்மனே.எல்லாம் உன் அருள்.. ‘ என்று மனசில் உருகிப்போவாள்.

எப்போதாவது அவள் படிக்காதது வந்துவிட்டால் அம்மனைப் பற்றி அவளுக்கு வருத்தப் படவே தோன்றியதில்லை.

ரஞ்சிதம் கை காலைக் கழுவிவிட்டு புடவையை சரி செய்து கொண்டாள்.

தலை முடி சரியாக வராமல் சிக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டது.

அப்படியே எடுத்து ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள்.

நேராக அம்மன் கோவிலுக்குப் போனாள்.

அம்மனிடம் போகவேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர அதற்கு மேல் அம்மனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. எல்லாம் அறிந்தவள்தானே

நானும் என் சுயநலமும் என்ன வேண்டி அவள் முன்னால் வந்திருக்கின்றோம் என்பதை அவளுக்குச் சொன்னால் தான் புரியுமா.. என்ன ?

அவள் மெளனமாக கோவில் பண்டாரம் பூசை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போதெல்லாம் எத்தனைத்தடவைஇதே அம்மனிடம் ஓடிவந்து ‘சாமி என் அம்மாவைக் காப்பாத்து ‘ என்று கண்ணீர் விட்டிருக்கின்றாள்.

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இப்படித்தான் அம்மா நெல் காய வைத்துவிட்டு ஏணியிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்துவிட்டாள். டிரெயின் பிடித்துவந்து மறுநாள் ஊரிலிறங்கி அம்மாவைப் பார்க்கும்வரை எத்தனை வேண்டுதல்கள்..

இதுவரை அவள் அம்மாவுக்காக வேண்டியதிலிருந்து இன்றைய வேண்டுதல் எவ்வளவு வித்தியாசமானது.. அதனால் தான் அவள் வார்த்தைகள் வராமல் ஊமையைப் போல .. மனசில் நினைப்பது சொல்லாகப் பிறக்கும் முன்பே

அவள் மெளனத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டு .. வாழ்க்கையின்யதார்த்தப் படுக்கையில் மனக் கண்மூடி நின்றாள்.

கோனார் சொன்ன வெள்ளிக்கிழமை அமாவாசை வந்துவிட்டுப் போய்விட்டது.

ரஞ்சிதத்தின் கணவன் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

‘ரஞ்சிதம்.. மூத்தவனுக்கு இது பத்தாம் கிளாஸ்.. இன்னும் பத்து நாளையிலே பிரி லியம் டெஸ்ட்.. ‘

அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் கணவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.

கோனாருக்கு நம்பவே முடியவில்லை.

எப்படி தொண்டைக்குழியில் மட்டும் அவள் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.வாத்தியாரப்பா வந்து பார்த்தார்.

‘ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சுக்கிட்டு இப்படி பிள்ளையைக் காக்கப் போடுதே தாயி..ரஞ்சிதம் இன்னிக்கு சாயந்திரம் அம்மன் கோவில்பண்டாரத்திட்டே போயி திருநீறு வாங்கி நீ கொடுக்கிற குளுகோஸ் தண்ணியிலே கரைச்சுக் கொடு.. ஆங்ங்..அப்படியே மறக்காம நம்ம நாத்தங்காலுக்குப் போயிமண் எடுத்து கிணத்து தண்ணி.. கீழே கொஞ்சமா கிடக்கு.. அதையும் நம்மகோனாரு கிட்டச் சொல்லி எடுத்து தரச்சொல்லு.. கிணத்து தண்ணிலே அவ நாத்தங்காலு மண்ணைப்போட்டு கலக்கி வாயிலே ஊத்து தாயி..

உங்க அம்ம எப்பவும் துட்டுப் பையிலே துட்டு இல்லாம இருக்கவே மாட்டா..

அவ துட்டுப் பையிலே கொஞ்சம் பைசாவைப் போட்டு அவக் கிட்டேசொல்லு தாயி.. ஏம்மா, உன் துட்டுப் பையிலே பைசா இருக்குனு.. ‘

அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் ரஞ்சிதம் தலை அசைத்தாள்.

அவர் போனவுடம் வாத்தியாரப்பாவின் மனைவி வந்தாள்.

‘ஏ ரஞ்சிதம்.. இங்க பாரு.. இப்படி கயித்துக் கட்டிலிலே மெத்தையிலே

போட்டா அவ இழுத்துக் கிட்டு கிடந்துதான் அவஸ்தைப் படுவா.. ஆமா சொல்லிப்புட்டேன். அவளை எடுத்து நடு வீட்டிலே தரையிலே கிடத்து தாயி.. அவகட்டின வீட்டிலே அவ நல்ல உருண்டு பிரளட்டும்.. ‘

சொன்னது மட்டுமல்ல… யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் அவளே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அவள் போகும்போது ரஞ்சிதத்தை தனியாகக் கூப்பிட்டு பேசினாள்.

ரஞ்சிதம் கண்களில் கண்ணீர் வழிந்தது..

‘ஏ ரஞ்சிதம் இப்படி நீ அழுதேனா.. அப்புறம் இருக்க வேண்டியதுதான்..எத்தனை நாளு தாயி இப்படிக் காத்துக் கிடக்கப்போறே.. ? ‘

அன்று முழுவது ரஞ்சிதத்திற்கு தூக்கமே வரவில்லை…

கூரையில் கோழி கூவியச் சத்தம்.. எழுந்து வந்து அப்படியே கயித்துக் கட்டிலில் அம்மாவைத் தூக்கிப் படுக்க வைத்தாள்..நைந்துப்போன பழந்துணி மாதிரி அவள் இவள் கைகளில்..

அவள் தலையில் குளிரக் குளிர நல்லெண்ணெய் வைத்தாள்.அப்படியே கட்டிலை நகற்றி வைத்துக்கொண்டு ராத்திரிப் பிடித்து வைத்திருந்த சிமிண்ட் தொட்டி தண்ணியைக் குடம் குடமாக அவள் தலையில் கொட்டினாள்.

நல்ல அம்மாவின் உடம்பை தண்ணீர்விட்டுக் கழுவினாள்.

அம்மாவின் உடலைப் பார்க்கும்போது தன் உடலைத் தானே பார்ப்பது போல் பிரமை. அவள் கைகள் நடுங்கியது. கால்களைத் தொடைப்பக்கத்தை..மார்பை

நடுங்கியத் தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. முகத்தை அழுத்தி துடைக்கும்போதுஅம்மா கண்திறந்து இவளைப் பார்த்தது போலிருந்தது.

‘அம்மா…அம்மா ‘ அவள் குரல் உடைந்து அந்த இருட்டில் அவளுக்கே அந்நியமாகக் கேட்டது.

அம்மாவை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டுவந்து நடுவீட்டில் தரையில் கிழிந்தப்பாயில் கிடத்தியப்போது அம்மா இவளுடைய புடவையின் முந்தானையைப்பிடித்திருப்பது தெரிந்தது, எப்போது என் புடவையின் முந்தானையைப் பிடித்தாள்.. அவள் .. அவள் கைகளை எடுக்க முடியாமல் அப்படியேஉட்கார்ந்திருந்தாள்..

அம்மாவும் அவளுமாய். அவள் சேலையில் முந்தானி விரிப்பில் படுத்திருந்த இடம்..

அவள் சின்னவளாக இருக்கும்போதே இறந்துப்போன அப்பாவைப் பற்றிஅவரின் வீர பிரதாபங்களைப் பற்றி அவள் கதை கதையாகச் சொன்னதற்குச் சாட்சியாக நிற்கும் நடுவீட்டின் சுவர்கள் ..

அவர் வண்டி அடிச்சிட்டு வந்தார்னா ஊருக்குள்ளே நுழையும் போதே எனக்குத்தெரிஞ்சிடும்.. அவரு கையாலே காளை மாடுக ரண்டும் அப்படி ஒரு குதியாட்டம்

போட்டுக்கிட்டு ‘ஜல் ஜல் ‘னு வரும்..

காலையில் குளித்தவுடன் அப்படியே செவ்விள நீரை (தேங்காய்) உடைத்துதண்ணீரைக் கொடுத்தாள். குளுகோஸ் தண்ணீருக்கெல்லாம் கைகளால் தட்டிவிடும் அம்மா மடக் மடக்கென செவ்விளநீரைக் குடிப்பதைப் பார்த்து ஓவென அழவேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக் கொண்டாள்..

இரண்டு நாட்கள்… இது தொடர்ந்தது…

மூன்றாவது நாள்… மூவடையாளின் மூச்சு அடங்கியது…

‘அம்மாஆஆஆஆ

என்னப் பெத்த அம்மாஆஆஆஆ என்னை விட்டுட்டுப் போயிட்டியே

அம்மாஆஆஆஆ ‘ ரஞ்சிதத்தின் அடிமனசிலிருந்து கதறலுடன் வெளிப்பட்ட அழுகையின் குரல் அம்மன் கோவிலில் இருந்த மூன்று யுகம் கொண்டாள் செவிகளிலும் விழுந்தது..


மீள்பதிவு. ஏப்ரல் 2004 ல் எழுதிய கதை.மின்சாரவண்டிகள் தொகுப்பிலிருந்து.




Saturday, July 12, 2025

வேள்பாரி ரஜனி கலாட்டா

 வேள்பாரி ரஜனி கலாட்டா.😃



வேள்பாரி ஒரு கதையாடல் மட்டுமல்ல.

அதன் இலக்கிய அடையாளம் என்பது கதைகள் தாண்டிய வடிவம்/உருவம்தான்.

இதை ஒரு படைப்பின் கதை கூறு & இழைபொருள் 

Fabula & Narration என்பர்.

கதையை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

அதற்கு எந்த ஒரு திறமையும் இலக்கிய பிரக்ஞையும் தேவையில்லை!

ஆனால் இலக்கிய வடிவத்தில் இழை பொருள் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த இழை பொருள் இலக்கிய வாசிப்பில் ஒரு மாய சக்தி. ஓவ்வொரு பிரதியும் வாசகவெளியில் பல நூறு பிரதிகளாக மாறும் வித்தையை செய்வதும் அதுதான்.


 அதுதான் கதை சொல்லியிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டும் இடம். சினிமா என்ற காட்சி ஊடகம் தோல்வி அடையும் இடம் இந்தப் புள்ளி தான்.


தி.ஜானகிராமனின் மோகமுள் வாசகப் பிரதியை ஊடகப் பிரதியாக்குவதில் தோல்வி அடைந்தது இதனால்தான்.

வேள்பாரி?????


நிச்சயமாக வேள்பாரிக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்.

பொதுஜன காட்சி ஊடகம், மக்களை குஷிப் படுத்தும் வியாபார சந்தையை நோக்கமாக கொண்ட திரையுலகம் இதைக் கையாளுவதில் சில மசாலா ஃபார்முலாக்களை வைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் போல பிரபலங்களைக் கொண்டு பிரமாண்டமான காட்சிகளைக் கொடுப்பது.

பார்வையாளனுக்கு தீனிப்போடும் உடை பின்னணி அலங்கார பிரமாண்ட காட்சி அமைப்புகளைக் கொண்டுவருவது.

இரண்டரை மணிநேரம் இந்த பிரமாண்டம்  போதுமென பார்ப்பவரை வாய்பிளிந்து உட்கார வைப்பது..

அந்தப் படம் ஓடிடி க்கு வரும்வரை அதில் நடித்த பிரபலங்களைக் கொண்டு 

24x7 அதைப் பற்றியே எட்டு கோடி தமிழர்களையும் பார்க்க வைக்கும் ஒரு வகையான அராஜகம்...செய்வது!

இதைப் பற்றி எழுதாவிட்டால் சமூக இலக்கிய கலை உலக குற்றமாகிவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சமூக வலைத்தளங்கள் எங்கும் நீக்கமற நடக்கும் ஆக்கிரமிப்பு...

இதில் இலக்கியம் தொலைந்துப்போகும்!


ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடக்கலாம்.

எதிர்காலத்தில் வேள்பாரியின் கதைச் சுருக்கம் புத்தக வடிவம் பெறும். அது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெறும். 

வேள்பாரி கதை மாந்தர்கள் அதாவது சினிமாவில் காட்டப்படும் கதை மாந்தர்களைத் தேடி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரே சிலர் வேள்பாரியை முழுமையாக வாசிக்கலாம்.


தொடர்ந்து கடந்த கால பெருமிதங்களை மட்டுமே திரையுலகம் இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கொள்வதால் ஒரு ம_ _ அளவு கூட நம் பண்பாட்டு அரசியலில் அசைவைக் கொண்டு வர முடியாது.

வேள்பாரி தோழர் வெங்கடேசன் அறியாததா என்ன?

வாழ்த்துகள் தோழர்.

ஒரு பிரமாண்டமான வேள்பாரியை ஓடிடியில் பார்க்கும் நாளுக்காக நானும்.


#வேள்பாரி

#நாவல்சினிமா

#LiteratureCinema

#புதியமாதவி_13072025