Wednesday, May 4, 2022

மாதவி SPA

 


கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததாக 
வாசித்திருக்கிறேன்.
கழுதைப்பாலின் அழுகுக்குறிப்புகள் தெரியாது. 
  ஆனால் கிளியோபாட்ராவுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். 
அவள் பல மொழிகள் கற்றவள். அழகு குறிப்புகளை 
எழுதியும் இருக்கிறாளாம்! இயற்கை மூலிகை மருத்துவம்
அறிந்தவள். இதெல்லாம் வெளி நாட்டு கதை.
நம்ம ஊரு கதை இதைவிட அழகானதும் 
அழகின் ரகசியக்குறிப்புகளைக் கொண்டதுமாக
இருக்கிறது. நம்ம ஆடலரசி மாதவி 32 வகை வாசனை
மூலிகைகள் ஊறிய வாசனை நீரில்தான் 
குளித்திருக்கிறாள் என்று எழுதுகிறார்
இளங்கோவடிகள். 
 
“பத்துத் துவரினும் ஐந்து வரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையிலும்
ஊறிய நன்னீர், உரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி”
 
அவள் நீராடிய அழகை ‘கடலாடுகாதை’ வர்ணிக்கிறது.
இந்த முப்பத்திருவகை- 32 வகை ஓமாலிகை ?
என்னென்ன?
இதைச் சொல்லாமல் விட்டுவிட்டார் துறவி.
நம் உரையாசிரியர்கள் விடுவார்களா? பட்டியல் போட்டிருக்கிறார்கள். அதிலிருந்து, 
 
 
“இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம்,
 நாகணங்கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம்,
 நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, 
இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், நெல்லி,
ஒத்தகடு, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், 
அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது,
 புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பெருங்குளம்,
 பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை"
 
… என்ன ஒரு SPA.. !!!
இந்த 32 ல் நமக்கு 5க்கு மேல தெரியல.
….
எப்படியோ.. ஒருவழியா நானும் 
அழகுக்குறிப்பு எழுதிவிட்டேன்.

1 comment: