Sunday, February 16, 2020

குந்தியின் குருஷேத்திரம்

Image result for sunrise kisses

பாணனின் பாடலைப் பாடினான்..
இசையின் ஒவ்வொரு துளியிலும்
உடல் நனைந்தது..பற்றி எரிந்தது..
விறலியைப் போல ஆடினேன்.
இரவின் கூத்துக்கலைஞர்கள்
ஒப்பனையை களைந்துவிட்டார்கள்.
நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன.
அவன் முத்தமிட்ட நெற்றியில்
இன்னும் சூடு ஆறவில்லை.
படுக்கை எங்கும் முத்தங்களின் பன்னீர்த்துளிகள்.
விடிவதற்குள் எல்லாம் மாறிவிடுமோ..
ஹே .. சூரிய வம்சமே..
இன்றுமட்டும் தூங்கிவிடு..
என்னையும் தூங்கவிடு.
பூஜை அறையில்
கருவறைத் திறந்திருந்தப் போது
உன் மந்திரங்களைச் சொல்லாமல்
சென்றுவிட்டாய்..
உன் கர்ணபுத்திரனைக்
கொடுக்கத்தவறிவிட்டாய்.
குருஷேத்திரம்…
என்னை அல்லவா பலி கேட்கிறது.!
எதிரணியில் உன்னை நிறுத்துகிறது.
அம்புகளின் படுக்கையை
அவர்கள் தருவார்களோ?
உன் அம்பறாத்துணியிலிருந்து
பறந்துவரும் அம்புகளின் அமுத விஷம்
என்னை எடுக்குமோ.. வாழ்வை முடிக்குமோ
எதுவானாலும் சம்மதமே..வா..
ஓம் நமசிவாயா
காத்திருக்கிறேன்..
நீ தரப்போகும் கடைசி முத்தத்திற்காக.

1 comment: