Thursday, March 3, 2011

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்





அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா?
பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்!
அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம்.
அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை...
நம்மால் கற்பனைச் செய்துப் பார்க்க முடியாத தண்டனை
38 ஆண்டுகள் KEM மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறாள்..
கோமாவில் இருக்கிறாளா.. இல்லை செடியிலிருந்து பறிக்கப்பட்ட
காய்கறி போல ஒரு சதைப் பிண்டமாக (permanent vegetative state)
இருக்கிறாளா.. மருத்துவர்களும் பத்திரிகைகளும் இப்போது அதைப்பற்றி
பல்வேறு கருத்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொருத்தவரையில்..
அவள் கொலை செய்யப்பட்டு 38 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அவளை இந்த நிலைக்குள்ளாக்கிய சோகன்லால் வால்மிகி மீது
எங்கள் சட்டம் ரொம்பவும் தான் கருணைக் காட்டி இருக்கிறது,
வல்லாங்கு (Rape) செய்ததாக அவன் குற்றம் சாட்டப்படவில்லை.
அவன் மீது வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே.
அதிலிருந்தும் அவன் வெளிவந்தாகிவிட்டது. தற்போது டில்லி மருத்துவமனையில்
அவன் வார்ட் பாயாக மீண்டும் வேலை. ஒருவேளை இந்த 38 வருடத்தில்
அவன் ரிடையராகி சொந்த ஊருக்குப்போய் நிம்மதியாக பான்பாராக் சாப்பிட்டுக்
கொண்டு இருக்கலாம், யாருக்குத் தெரியும்.

அருணாவுக்கு கட்டாயமாக கொடுக்கப்படும் மருந்து, உணவுகளை நிறுத்தி
அவளுக்கு கருணைக் காட்ட வேண்டும், அதாவது கருணைக்கொலைக்கு
நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறார் அருணாவைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் ஒரு புத்தகமாக எழுதிய பிங்கி விரானி.
நீதிமன்ற உத்தரவு படி அருணாவின் மூளையை செகேனிங் செய்து
பார்த்திருக்கிறார்கள். மூளை சுருங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.


அருணா கோமா நிலையில் இல்லை என்கிறார் KEM டாக்டர் சஞ்சய் ஓக்.
அவள் சங்கீதம் கேட்பதையும் அண்மையில் மீன் சாப்பிடக் கொடுத்தப்ப்போது
அவள் சந்தோஷமாக சாப்பிட்டதையும் அதனால் அவளுக்கு மீன் உணவு
விருப்பமானது என்பதை அறிந்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
அழுவதும் சில நேரங்களில் சத்தமிடுவதும் கை கால்களை அசைப்பதும்
அவள் அறைக்குள் வந்தவர்கள் யார் என்பதை அறியவில்லை என்றாலும்
யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துக் கொள்கிறாள்
என்றும் டாக்டர் சஞ்சய் ஓக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 38 ஆண்டுகள் படுக்கையில் இருக்கும் அருணாவை
அங்கு வேலைப்பார்க்கும் எவருமே தொல்லையாக நினைக்கவில்லை
என்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள்
அவளுக்கு இல்லை என்றும் சொல்கிறார் டாக்டர் ஓக்.
"எங்களுக்கு அவள் உயிருடன் இருந்தாக வேண்டும், எங்களைப் பொருத்தவரையில்
அவள் மற்றவர்களைப் போல உயிருடன் இருப்பவள்தான்
We want us alive and she is very much a living person for us,"
என்பதுதான் இன்றும் டாக்டர் சஞ்சய் ஓக்கின் கருத்து.

மருத்துவப்புத்தகங்கள் permanent vegetative state நிலையில் இருக்கும்
நோயாளிகள் கண்களை அசைப்பது அழுவதும் சிரிப்பதும் உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டினாலோ அல்லது புறக்காரணிகளின் தூண்டுதலாலோ அல்ல
என்று சொல்கிறது.அதனால் தான் KEM மருத்துவமனை நரம்பியல்
அறுவைச்சிகிச்சை டாட்கர் சுனில் பாண்ட்யா அருணாவில் நிலையை
permanent vegetative state என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்.

எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நம்மவர்கள் ஐந்து
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகள்
PVS நிலையிலிருந்த டெர்ரிசச்வோ (Terri Schiavo) என்பவருக்கு
உணவு கொடுப்பதை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் கருணைக்கொலைக்கு
ஆதரவளித்ததைக் காரணம் காட்டுகிறார்கள்.ஆனால்
19 ஆண்டுகள் கோமா நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியச் சட்டம் 21, சட்டப்படி வாழ்வதற்கான உரிமையைப் பற்றி
பேசுகிறது, சட்டப்படி சாவதற்கான உரிமையை அல்ல.

அருணாவுக்கு நினைவு திரும்பக்கூடாது. அப்படி ஓர் அதிசயம் நடந்தால்
அதுதான் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
உறவுகள் கைவிட்டதற்காக அழுவாளா?
உண்மைகள் தூக்கிலிடப்பட்டதற்காய்த் துடிப்பாளா?
காதல் செத்துப்போனதற்காய் கண்ணீர் வடிப்பாளா?
இல்லை.. இல்லை..
முகம் சுளிக்காமல் தன்னைத் தங்களில் ஒருத்தியாக இந்த 38 வருடங்கள்
காத்த அந்த மருத்துவமனை நர்சுகளிடம் நன்றி சொல்லி
மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை, நன்றி .. என்று
தன் கடைசிமூச்சை அவர்கள் காலடியில் விடுவாளா?
அருணா என்ன செய்வாள்.. அவளால் என்னதான் செய்யமுடியும்?
62 வயது அருணாவுக்கு நினைவு திரும்பாமலேயே
இருக்கட்டும்.

(ref: TOI, 28/2/11& Mumbai mirror)


**

அவளைப் பற்றிய செய்தியை நான் உண்மையின் ஊர்வலங்கள் என்ற
தொடரில் திண்ணையில் எழுதியிருந்தேன். அதன் பின் என் வலைத்தளத்திலும்
சில வருடங்கள் கழித்து மறுவாசிப்புக்காக கொடுத்திருக்கிறேன்.
அருணாவைப் பற்றிய அந்தப் பக்கங்களை ...


http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_05.html

1 comment:

  1. arunaa ... kolvathaal ethuvaum maarividap povathillai enbathai vida aval manam sariseiyappattaal erpadum vilaivukal athikam...

    ReplyDelete