Wednesday, May 28, 2008

நிலம் பெண்ணுடல் ....எதிர்வினைகளும் என் மறுமொழியும்


Date: Mon, 26 May 2008 10:58:19 +0300
From: jamalan.tamil@gmail.com
To: puthiyamaadhavi@hotmail.com
Subject: நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து


புதியமாதவி அவர்களுக்கு...

என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், உங்களது எழுத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். முழுமையாக படிக்க வாய்க்கவில்லை. காரணம் நான் அரேபியாவில் இருப்பதால் தமிழ்நூட்கள் கிடைப்பதில்லை. இணையத்தின் வழியாகவே படிக்க முடிகிறது. உங்களது பார்வையின் கொணங்கள் வித்தியாசமானவையாக உள்ளன. உங்களது இக்கட்டுரை கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன். மிகச்சிறப்பாக அந்த நூலை முன்வைத்து உரையாடலை மேலே நகர்த்திச் சென்றுள்ளீர்கள். வாசிப்பினூடக எனக்கு எழுந்த சில கேள்விகள் இவை..

தாய்வழிச் சமூகம் பற்றிய "இருக்கம்" புரிதலிலிருந்து நீங்கள் துவங்குகிறீர்கள். தாய்வழிச் சமூகத்தில் பால்வேறுபாட்டு உணர்வு இருந்திருக்குமா? இன்றைய பெண்ணும், பெண் உடலும் அன்றே நிலவி இருக்க வாய்ப்பு உண்டா? "பாலின வேறுபாடு" அல்லது பாலினமாதல் என்கிற இயக்கப்போக்கு எங்க எப்பொழுது உருவாகியிருக்கும்? "ஆதித்தாயை" ஒரு பெண்ணாக பார்க்க முடியுமா? எனது ஊகம் (எனது வாசிப்பு இதில் விரிவானது அல்ல) இன்றைய பெண் குறித்த பார்வையைதான் நாம் அதற்குள் பொறுத்திப் பார்க்கிறோம். சங்க இலக்கியங்களில் ஆண் பெண் வரையறைகளைப் பார்க்க முடியும். அது தாய்வழி சமூகம் அல்ல. அரசு உருவாக்கம் அல்லது நிலமயமாதலுக்குப்(territorialization) பிறகே பாலின வேறுபாடு உருவாகுகிறது. இதற்கு பெண் உடல் நிலமாக பதிலீடு செய்யப்பட்டது. அல்லது நிலமும் பெண்ணும் ஒன்றாக மாற்றப்பட்டு நினைவிலப்புலக் கட்டமைவுகள் உருவாக்கம் நிகழ்கிறது. இங்கு நான் முன்வைக்கும் பிரச்சனை.. பெண்தான் ஆணை உருவாக்குகிறாள் என்கிற அடிப்படையான எனது புரிதலிலிருந்து வருகிறது. ஆண் பெண்ணை தனது சொத்தாக பாவிக்கிறான். அதிகாரம் என்பது ஆணிலையான வடிவமே.. அதிகாரமற்ற ஒருவெளியின் குறியீடாகவே பெண் இருக்கிறாள். ஆக, இந்த ஆண் கட்டமைவிற்கான அரசியல் பின்புலங்களிலிருந்தே நமது பேச்சு துவங்கவேண்டும் என்கிறேன்.

மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது. அரசு, பேரரசுகள் தோற்றம்.

இவ்வாக்கியங்களில் உள்ள சிக்கல் இரண்டாம் கட்டத்தில் ஆண்-பெண் சமத்துவம் என்கிற போக்கு எற்பட்டதா? மதம் என்பது குறித்த இன்று சொல்லப்படும் கதைகள் எல்லாம் ஆணியநோக்க கதையாடல்களே. மதம் என்பதே பெண் உடல் குறித்த நினைவிலியுடன்தான் செயல்படுகிறது. அல்லது பெண் உடலை தனக்குள் ஒடுக்கி புதைக்கப்பட்ட வடிவமே. நீங்கள் இந்தப் புரிதலுக்கான புள்ளியை தொடுகிறீர்கள் என்றாலும் அரசும் மதமும் பெண்களை ஒடுக்குகிறது என்பதன் மறுதலையாக பெண் அதிகாரம் பெற்றால் போறும் என்கிற மற்றொரு அதிகார நிலைக்கான ஆவலாக மாறிவிடக்கூடியதாக உள்ளது.

மற்றபடி காமக்கிழத்தி பற்றியும் பரத்தமை பற்றியும் உங்கள் புரிதல் நுட்பமானதும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. இன்னும் உங்கள் கட்டுரை பல ஆழமான நுட்பத்துடன் பிரச்சனையின் ஆழத்திற்கு செல்கிறது. குறிப்பாக தேவரடியார் பற்றிய கருத்துக்கள். பெண்ணியத்துடன் பொது அதிகாரப் போக்கையும் சாதிய ஒடக்குமுறையுயம் முன்வைப்பதும் மிக முக்கியமான செயல்படு கோணத்தை முன்வைக்கிறது.

இன்னும் நிறைய உரையாடலுக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது உங்கள் கட்டுரை.

உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார்கள் என்பதுதானே. 'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து, தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால்.." என்று வாதமிடுவது இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

முக்கியமாக இந்த வரிகளில் உள்ள அரசியல் தெளிவுதான் இக்கடிதத்தை எழுதத் தூண்டியது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜமாலன்.
--
http://jamalantamil.blogspot.com/
http://tamilbodypolitics.blogspot.com/
http://kalakuri.blogspot.com/

2008/5/26 puthiyamaadhavi sankaran :


மதிப்பிற்குரிய ஜமாலன் அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் ஆழ்ந்த வாசிப்பில் எழுந்த கேள்விகளுக்கும் அதைப் பதிவு
செய்தமைக்கும் மிக்க நன்றி.
இனக்குழு வாழ்க்கையில் பெண்ணின் தலைமை இருந்தது. அவளே அந்த இனத்தை வழிநடத்தும் தலைவி.
வேட்டையாடுதல், கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணுதல், தன் இனக்குழுவைப் பாதுகாத்தல், தன் இனக்குழுவை
விருத்தி செய்தல்.. இதுவே வாழ்க்கை. இக்காலக்கட்டத்தில் பெண்ணின் மாதவிடாயும், பிரசவமும்
ஆணால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால் அவளிடம் பயம் கலந்த மரியாதை, அச்சம்,
ஏன் பெண் வழிபாடாக அதுவே மாறியது. நாட்டார் வழிபாட்டில் இன்றும் ஆடு, கோழி, பன்னி என்று
ரத்தத்தால் வழிபாடு நடத்துவதும். ரத்தத்தின் நிறத்தில் நெற்றியில் இன்றுவரை தொடரும் திலகமிடுதல்
எல்லாம் அந்த வாழ்வியலின் எச்சங்கள் தான்.
தமிழ்க் கடவுள் குமரன், பெண் தெய்வம் குமரி. குமரன், குமரி என்ற சொற்றொடர்கள்
ஆண்பால், பெண்பால் சொற்கள்,
கணவன் என்ற ஆண்பாலுக்குப் பெண்பால் சொல் என்ன என்று கேட்டால் மனைவி என்று சொல்லுவோம்.
இது இலக்கணம், உலகம் தழுவிய பாலியல் விதி. (gender ) ஆனால் நம் குமரன் நம் குமரியின் காதலனோ
கணவனோ அல்லன். ஏன்?
குமரி என்று வழிபடும் பெண் தெய்வத்தின் மகன் குமரன். இதுதான் தாய்வழிச் சமூகம் ஆண்வழி தலைமையை
நோக்கி நகர்ந்தப் போது ஏற்பட்டது.
என் கட்டுரையின் தாய்வழிச் சமூகம் அதன் அடுத்தக்கட்டம் பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளென்.
சொற்களை அதன் வரிசைகளை மீண்டும் பாருங்கள். ஆண்-பெண் சமத்துவம் அல்ல. தலைமையிலிருந்த
பெண்ணுக்குத் துணையாக போர்புரிந்தவன் சிறிது சிறிதாக அவளுக்குச் சமநிலையை அடையும் காலக்கட்டம்.
எனவே தான் ஆண்-பெண் சமத்துவம் என்று சொல்லாமல்,
பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளேன்.

முதல்நிலை: பெண்-தலைமை - இனக்குழு வாழ்க்கை - - நிலவுடமை அற்ற சமுதாயம்.
இரண்டாம் நிலை: பெண்-ஆண்.. தலைமை -இனக்குழு வாழ்க்கை மாற்றம் பெறும் நிலை. வேளாண்மையின் தோற்றநிலை
தனிநபர் நிலவுடமை இல்லை. இந்த வேளாண்மையைக் கண்டுபிடித்தவளும் பெண்தான்.
மூன்றாம் நிலை: ஆண் தலைமை, நிலவுடமை, உடமை வரும்போது வாரிசுரிமை வருகிறது. உரிமைகளுக்காகவும்
உணவுக்காகவும் போரிட்ட களம் மாறி, நிலவுடமைக்காகப் போரிட்ட காலக்கட்டம்.
இக்காலக்கட்டத்திலும் பெண் ஆணுக்கு அடிமையில்லை.
அடுத்தக்கட்டம்: பேரரசுகள். நடுகல்வழிபாடு மறைந்து பெருந்தெய்வங்கள் வழிபாடு புகுந்தக் காலக்கட்டம்.
இந்துமதம், கிறித்துவமதம், இசுலாம் எல்லா மதங்களும் சிறுதெய்வ வழிபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து
பெருந்தெய்வ வழிபாட்டை நோக்கி மனித சமூகத்தைப் திருப்பியதை அறிவோம்.
ஒவ்வொரு காலக்கட்டமும் மாற்றமும் நிகழ பலநூற்றாண்டுகள் ஆனது என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ள
வேண்டும். கிட்டத்தட்ட இந்த மாற்றத்தின் எல்லா கோடுகளையும் சங்க இலக்கியத்தின் அகம், புறம் இரண்டிலும்
நாம் சான்றுகளுடன் நிறுவ முடியும். சங்க இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஒரு பரந்துப்பட்ட காலமாக இருக்க
வேண்டும்.
நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது குறித்து என் கருத்துகளை "உறவுச்சிக்கல்கள்" என்ற கட்டுரையில்
விரிவாக எழுதியுள்ளேன்.
http://puthiyamaadhavi.blogspot.com/search?updated-max=2008-02-04T23%3A34%3A00-08%3A00&max-results=7
http://www.blogger.com/posts.g?blogID=1341847542020354313

வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை.

சொல்ல மறந்துவிட்டேன்.

நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது ஒரு ஆரோக்கியமான பார்வை.

வாழ்த்துக்கள்
ஜமாலன்.

2008/5/26 Jahir Hussain :

தோழர் புதியமாதவிக்கு..

முதலில் உங்களது விரிவான விளக்கத்திற்கு நன்றி. பேரளவில் உங்களது கருத்துக்களில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இக்கருத்துக்கள் பலமுறை எதிர் கொள்ளப்பட்டவை என்றாலும், உங்கள் விளக்கங்கள் சரளமாகவும் சுருக்கமாகவும் தொகுக்கப்பட்டள்ளது. அதிலும் குறிப்பாக மார்க்சிய (இதை நீங்கள் ஏற்பவராகத்தான் தெரிகிறது உங்களை முழுமையாக வாசித்தப் பிறகே உறுதிப்படும்.) வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் பெண்ணிய வரலாற்றை நீங்கள் தொகுத்திருப்பது உங்களது ஆழந்த மற்றும் வித்தியாசமானப் புரிதலைக் காட்டுகிறது. குமரன் குமரி பற்றிய விளக்கம் புதிதாகவும் முதன்முறை உங்கள் மூலம் நான் புரிந்து கொண்டேன். குமரனுக்க வேல்தந்து அசுரனை அடக்குதலையும் இதனுடன் இணைத்த வாசிக்கலாம். நன்றி. நிற்க.

நான் முன்வைத்த கோணத்தையும் உங்கள் உரையாடலின் கோணத்தையும் இணைப்படுத்தி நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். விளக்கங்களுக்கு மீண்டும் நன்றி.

எனது பார்வை என்பது இன்றைய பெண் என்கிற கருத்தாக்கத்தை பண்டைய பெண் என்கிற கருத்தாக்கத்துடன் ஒப்பு நோக்கி பார்க்கலாமே ஒழிய ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா? என்பதுதான். சமீபத்தில் நான் படித்த ஹிஸ்டீரியா பற்றிய ஒரு ஆய்வில் மேற்குலகில் 18-ஆம் நூற்றாண்டு வரை (மறுமலச்சிக்காலத்திற்கு முன்புவரை) பெண் ஒரு சக மனித ஜீவி என்கிற கருத்தே இருந்ததில்லை என்றும். பாலியல் என்பதில் ஆண்களே முதன்மையாகவும் பெண்கள் ஒரு இன உற்பத்திக்கானவர்களாக மட்டுமே கருதப்பட்டார்கள் எனறு படித்திருக்கிறேன். பெண் உணர்வு பற்றிய புரிதலே அவர்களக்கு இல்லை என்றும். (இங்கு நீங்கள் மனுவின் பெண் பற்றிய நினைவிலி என்ன என்பதை இணைப்படுத்திப் பார்க்கலாம். மனு வரையறுக்கும் பெண்? ஏன் திருவள்ளுவர், தொல்காப்பியர் பெண் குறித்து முன்வைப்பவை ஆதிகக்ச சொல்லாடலே என்பதில் மாறுபாடு இருக்காத என்றெ நினைக்கிறேன்.) இதனை நாம் கீழ்திசை நாடுகளான நமக்கு பொறுத்த முடியாது என்றாலும்.. இன்று நாம் பேசும் "பெண்" என்கிற கருத்தாக்கம் குறித்த பிரச்சனையாக இது இருப்பதை உணரலாம். போகட்டும். "பெண்" குறித்த வரையறை சார்ந்ததே எனது பிரச்சனை என நினைக்கிறேன்.

எப்படியோ உங்கள் பதில் எனக்கு மேலதிக புரிதலை தருவதாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு ஆய்வாளனோ எழத்துடன் முழுநேர உறவடையவனோ அல்ல. அதனால் எனது பேச்சை பொருட்படத்த வேண்டியதில்லை. போகிற போக்கில் காதில் பட்டதாக கொள்ளுங்கள்.

இப்பரச்சனைகள் குறித்து எனது கருத்துக்களை இங்கு விளக்க முயன்றுள்ளேன். (http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_7002.html)
வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மற்றபடி உங்களது பிளாக் இருப்பது எனக்கு தெரியாது. அதனை முழுமையாக முதலில் படித்து விடுகிறேன். சற்றுமுன்தான் உங்கள் மற்றொரு கட்டுரை கீற்றில் படித்தேன். அக்கரமாஷி. அதிலும் உங்களது பார்வை சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தந்த உறவுமுறை பற்றிய தொடுப்பில் அப்பதிவை அடைய முடியவில்லை. அது பிரச்சனை இல்லை உங்கள் பதிவில் தேடிக்கொள்ள முடியும்தானே.

மற்றபடி உங்கள் பொருட்படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள்.

தோழமையுடன்
ஜமாலன்.

நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து




நிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக
அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின்
தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள். அவள் சக்தி.
அவளே பராசக்தி. அவளன்றி ஓரணுவும் அசையாது. அவளுக்குள் இந்தப் பிரபஞ்சம்
அடக்கம். இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தின்
இயங்குவிசை., சக்தியின் ஆற்றல்.. அவள்.
மனித வரலாற்றின் இனக்குழு வாழ்க்கையில் "அன்னையே தலைமை".
மனித வரலாறு இந்தப் பாதையிலிருந்து மாறாமல் பயணித்திருந்தால் பெண்ணியம் என்ற
சொல் இன்றைக்குப் பேசப்படும் எந்தப் பொருளிலும் தன்னை அடக்கிக் கொண்டிருக்காது.
ஆனால் மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலக்கட்டத்தில்
இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற
இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது.
அரசு, பேரரசுகள் தோற்றம். இப்போது நிலம் மனித சமூகத்தின் உற்பத்தி களன்
மட்டுமல்ல. நிலம் ஆட்சி அதிகாரத்தின் குறியீடாக மாற்றம் பெறுகிறது.

காலப்போக்கில் கலந்துவிட்ட பிற இனக்குழுக்களின் பெண்ணியப்பார்வை
தமிழரின் பெண்ணியப்பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது.
மதம் என்ற நிறுவனமும் ஆட்சி அதிகாரத்தின் மூளையாகச் செயல்பட்ட குறிப்பிட்ட
சில இனத்தாரின் சாணக்கியமும் தமிழ்ப் பெண்ணியத்தின் மீது ஏற்படுத்திய
பண்பாட்டு தாக்குதல்களைச் செந்தமிழன் தன் நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்
கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகிறார்..

மாலதி மைத்ரி, அ.மங்கை ஆகியோரின் நூல்களான 'விடுதலையை எழுதுதல்',
'பெண்ணிய அரசியல்' ஆகிய இரண்டு நூல்களின் 'போலிப் பெண்ணியத்தின்'
கருத்துகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அவர் தன் கட்டுரைகளில்
தமிழ்ப் பெண்ணியத்தின் தன் பார்வையை வைத்திருப்பதாக மிகத் தெளிவாகச்
சொல்லியிருக்கிறார். அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட இருவரின் நூல்களை
இன்றுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் , அவ்விருவரின் கருத்துகளுக்குள்
புகாமல், தோழர் செந்தமிழன் கட்டுரைகளின் பெண்ணியப் பார்வைகளை
முன்வைத்து அதன் அடுத்தக் கட்ட சிந்தனைத் தளத்திற்கு நகர்வதே
என் இக்கட்டுரையின் நோக்கம்.

காமக்கிழத்தியும் விபச்சாரமும்:
----------------------------------
காமக்கிழத்தி என்று அழைக்கப்படும் சங்க இலக்கியப் பெண்கள் பாலுறவை
ஒரு தொழிலாக - தன் உடலை விற்றுப்பிழைக்கும் இன்றைய பரத்தமை
தொழிலிருந்து மாறுபட்டவர்கள். சட்டென வெகுஜன பத்திரிகை மொழியில்
சொல்வதானால் காமக்கிழத்தி விபச்சாரி அல்லள். இன்றைக்கு 'விபச்சாரம்,
விபச்சாரி என்ற பொருளில் கையாளும் குறியீடல்ல.
தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும்
காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய
பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம்.
சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும்
அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் விளக்குகிறார்.
தமிழினம் பண்டமாற்றையும் தம் குழுவிற்குள் கொடைப் பொருளாதரத்தையும்
கடைப்பிடித்ததால் பரத்தையர் உறவு பொருளாதர மறுபயனுக்கானதாக
இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

'ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மணநிலைக்குப் புறம்பாக
நிலவிய உறவே பரத்தையர் உறவு " என்ற மார்க்கனின் குறிப்பை
முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறார். (பக் 53)

"ஆகவே , பரத்தையர் விபசாரிகள் அல்லர்" என்ற முடிவை
ஆணித்தரமாக மனித இனக்குழு வரலாற்றுப் பார்வையுடன்
ஆய்ந்து முடிவுக்கு வருகிறார்.

ஆண்-பெண் சமத்துவம் ?
--------------------------
ரோமானியர்களின் 'Famulus' என்ற சொல்லின் பொருள் வீட்டு அடிமை
familia = என்றால் ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் எண்ணிக்கை.
தந்தை அதிகாரத்திற்குட்பட்ட ரோமானிய குடும்ப அமைப்பு முறை 'family'.
தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்பது இல்லறம். கணவன் - தலைவன் என்றும்
மனைவி தலைவி என்றும் நிகர்ப்பொருளில் சங்க இலக்கியத்தில் வாழ்கிறார்கள்.
பெண்ணுக்குச் சீதனமாக கொடுக்கப்படும் நிலம், பாவைநோன்பு
என்ற கருத்துகளின் ஊடாக பயணித்து தன் கருத்துக்கு வலுவூட்டுகிறார்.

இந்தக் கருத்துகளின் உச்சக்கட்டமாக தமிழரின் பொருளாதரம் பெண்களின்
பங்களிப்பைச் சார்ந்திருந்தது என்ற முடிவுக்கு வருகிறார். (பக் 91)
சமூக உற்பத்தியில் ஆண் - பெண் தவிர்க்கவியலா கடமைகளையும் உரிமைகளையும்
கொண்டிருந்தனர் என்று சொல்ல வரும்போதுதான் இக்கருத்தை உதிர்க்கிறார்.

'தமிழரின் பொருளாதரம் பெண்களின் பங்களிப்பைச் சார்ந்திருந்தது ' என்று சொல்வதற்கும்
'தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தங்கள் பொருளாதர நிலையில் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை'
என்று சொல்வதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
குறிப்பாக நெய்தல் நில வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்/
நெய்தலின் பரதர் தொழில் கடலில் மீன்பிடித்தல்..
அப்படி அவன் பிடித்து வருகிற மீனை விற்பதும் காயவைத்து பதப்படுத்தி
சந்தைப் பொருளாக்குவதில் உதவுவதும் பெண்ணான பரத்தி/ நுளைச்சியின் வேலை.
ஆணின் வேலை- பங்களிப்பும் மூலதனம்.
பெண்ணின் வேலையும் அவள் பங்களிப்பும் அந்த மூலதனத்தைச் சார்ந்தது.
அதைச் சார்ந்து தொடர்வது.

மீன்பிடித்தல் இன்றி மீன்விற்பனை சாத்தியமில்லை.

பொருளாதரம் என்பதை முதலில் உற்பத்தி/ மூலதனம் என்பதுடன் தொடர்பு
படுத்தி இருக்க வேண்டும்., அதைவிடுத்து அடுத்தக்கட்டமான விற்பனை/சந்தை
என்ற நிலையை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.

ஆண் சார்ந்த பெண் அடையாளங்கள்
--------------------------------------

பரத்தமை, காமக்கிழத்தி, ஆண்-பெண் இல்லற உறவுகள் என்று தன் கருத்துகளை
முன்வைக்கும் போதெல்லாம் நுண்ணிய உணர்வுகளின் ஊடாகவும் பயணித்து
மனித வரலாற்றுப் பார்வையை முன்வைத்த கட்டுரையாளர் என்ன காரணத்தினாலோ
எழுத்தாளர் மாலதிமைத்ரியின் கருத்தைப் போலிப்பெண்ணியம் என்று அடைமொழியுடன்
அடையாளப்படுத்த முயற்சி செய்திருப்பது வரலாற்றுப்பார்வையில் ஒரு சரிவை
ஏற்படுத்தியுள்ளது.
என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று பார்க்காமல்
'எவர் சொன்னார்? என்று பார்க்கும் ஒற்றைப்பார்வையின் விலை இது!

பக்: 91 ல் நிலம், நிலம் சார்ந்த ஆண்கள், பெண்களின் பெயர்களை அட்டவணையிட்டு
காட்டியிருக்கிறார்.

இந்தப் பெயர்களின் மூலம் ஆண்களுக்கு நிகரான பால் தொகுதியினராக பெண்கள்
விளங்கினார்கள் என்றும் , இதன் உள்ளார்ந்தப் பொருள் ஆண்களுடன் இணைந்து அவர்களுக்கு
நிகராக பெண்களும் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்." என்கிறார்.
தன் கருத்துக்கு அவர் சொல்லும் பெண் அடையாளச் சொற்கள்,
குறத்தியர், எயிற்றியர், ஆய்ச்சியர், உழத்தியர், பரத்தியர். என்பதே.
இச்சொற்கள் அனைத்தும் தொழில் சார்ந்த பெயர்களே என்று சொல்லும் கட்டுரையாளர்
பாலை நிலம் குறித்து சொல்ல வரும்போது ஏற்படும் முரணில் சிக்கி
அவரையும் அறியாமல் மாலதிமைத்ரியின் கருத்துவலைக்குள் வந்துவிடுகிறார்!

பாலை நிலம்: ஆண் : எயினர், மறவர்
பெண்: எயிற்றியர், மறத்தியர்.

"பாலைநிலத்தொழில் வழிப்பறி செய்வது என்பதால் எயிற்றியர் அதில் நேரடியாக
ஈடுபட்டதாகத் தெரியவில்லை" - பக்: 92

அப்படியானால் அடுத்தக் கேள்வி, எந்த சாதாரண வாசகனுக்கும் எழும் கேள்வி
-அந்தப் பெண் ஏன் எயிற்றி என்றழைக்கப்பட்டாள்?- என்பதுதான்.

அவள் அந்தத் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனின்
மனைவி/மகள். எனவே அவள் எயிற்றி ஆனாள்.
இந்த அடையாளத்தின் வழி வந்த பெண் அடையாளங்கள் தான்

>குறிஞ்சி நிலத்து குறவனின் மனைவி குறத்தி
முல்லை நிலத்து இடையனின் மனைவி இடைச்சி
மருத நிலத்து உழவனின் மனைவி உழத்தி
நெய்தல் நிலத்து பரதனின் மனைவி பரத்தி.

இதைத் தான் மாலதி மைத்ரி "பெண்ணுக்கு மனைவி அல்லது பரத்தை என்ற இரு
பாத்திரங்கள் மட்டுமே தமிழ் நிலத்தில் வழங்கப்பட்டிருந்தது:"
என்று சொல்லியிருந்தார்.

கட்டுரையாளர் இன்னொரு கருத்தையும் சிந்திக்க வேண்டும்.
மருத நிலத்து பெண் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்து
வாழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் உண்டு.
அவள் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்தப் பின்
"என்னவாக அழைக்கப்பட்டிருப்பாள்?"
உழத்தி என்றா? அல்லது இடைச்சி/ குறத்தி என்றா?
உழத்தியாக மருத நிலத்தில் பிறந்தவள் இடையனுடன் களவொழுக்கம்
கண்டு கற்பொழுக்கத்துடன் வாழும் போது அவள் என்ன தொழில்
செய்திருப்பாள்?
தினைப்புலம் காத்திருப்பாளா? அல்லது பால் விற்றிருப்பாளா?

பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் அவள் ஏற்றுக்கொண்ட
இல்லறம் சார்ந்தும் அவள் தொழிலும் அதைச் சார்ந்துமே இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் 'ஒரு தார மணம்' என்ற கற்பொழுக்க
இல்லற வாழ்க்கைக்கு பெண் கொடுத்த மிகப்பெரிய விலை
இதுதான்.
எனினும் பால்விற்பது, மோர் விற்பது, நாற்று நடுவது, மீன்விற்பது,
கால்நடை பராமரிப்பு, இத்தியாதி உபதொழில்கள் மூலம் நிகழ்ந்த
பண்டமாற்று பொருளாதர நிலையில் பெண் இல்லறத்தில்
அனைத்துக்கும்(ஆம் அனைத்துக்கும்) ஆணின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும்
அடிமைநிலையுடன் வாழவில்லை என்ற தமிழ் மரபுக்குப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
மேலும் கணினியின் உலகமயமாதலின் தொழில் அடையாளத்துடன் வாழும்
இன்றைய தலைவியிடம் சம்பளம் வந்தவுடன் காசோலையை வாங்கி தனதாக்கிக்
கொள்ளும் தலைவனாக அன்றைய தமிழ்ச் சமூகத்து ஆண் இருக்கவில்லை.
பெண்ணின் உழைப்பு சுரண்டப்படவில்லை. அவள் உழைப்பிற்கான பயனை
இல்லறத்தினர் அனுபவித்தாலும் அவள் பொருளாதர உரிமை மதிக்கப்ட்டிருந்தது.
ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

மரபுகளின் மறுபக்கம்
----------------------


மரபு என்பதாலும் எம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதாலும் அனைத்துமே
பெருமைப் படக்கூடியதாகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதாகவும் எண்ணும்
ஒரு கருத்துப் பிழையைத் நாம் பல்வேறு தளங்களில் தொடர்கிறோம்.
தேவரடியார் பற்றிய கட்டுரை இந்தப் பாதையில் பயணிக்கிறது.

"தேவரடியார் சமூகம் அழிந்துப் போனது" என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டுமா?
இல்லை ஆடல், பாடலை வளர்த்த ஒரு பெண் சமூகம் அழிந்து விட்டதே என்று கட்டுரையாளரைப்
போல வருத்தப்பட வேண்டுமா?
ஆமாம் இந்த தேவரடியார்களில் ஆடல்-பாடல் கலை யாரை மகிழ்விக்க?
அரசர்கள் அவர்களுக்குக் கொட்டிக்கொடுத்த பரிசுகள்- நிலங்கள் எதற்காக கொடுக்கப்பட்ட விலை?

தேவரடியார்கள் விபச்சாரிகள் அல்ல. உண்மைதான்.
ஆனால் என்றைக்கு அவர்களின் கலைக்கு நிலம் பரிசளிக்கப்படுகிறதோ அப்போதே
அதற்கு ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம்.
தன் கருத்துகளுக்கு ஆதாரமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் தேவரடியார்களுக்கு
வழங்கப்பட்ட நில உரிமைகளை, வீடுகளைப் பட்டியலிடுகிறார்.
தஞ்சைக் கோவில் எழுப்பப்பட்ட சோழரின் காலம்தான் ஆரியர்களின் ஆதிக்கம் மதத்திலும்
அரசு அதிகாரத்திலும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட பொற்காலம்!
ஆனால் அதைத்தான் தமிழர்களின் பொற்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறொம்!
"தேவரடியார்களின் பொருளாதர ஆதாரம் கோயில் சார்ந்திருந்ததால் இம்முறையின் ஒழிப்பு
அவர்களை வாழ வழியற்றவர்களாக்கியது. கோயில்களிலிருந்து துரத்தப்பட்ட பிறகு தேவரடியார்கள்
வசமிருந்த ஒரே தொழில் வாய்ப்பு விபசாரம் மட்டுமே. முற்போக்கு சக்திகளின் மூளை"
இதுகுறித்துச் சிந்திக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையாசிரியர்
சான்றுகளுடன் நிறுவ முடியுமா
எத்தனை தேவரடியார்கள் தேவரடியார் ஒழிப்புக்குப் பின் விபசாரிகளானார்கள் என்பதை.
உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து
விடுபட்டார்கள் என்பதுதானே.
'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து,
தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால் .." என்று வாதமிடுவது
இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

தமிழர் வாழ்வியலில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, சிற்பம், தச்சு, நகைத்தொழில்
உள்ளிட்ட பல்வேறு மரபுத் தொழில்கள் முதலாளியத்தால் அழிக்கப்பட்டு வருவதையும்
கூட்டுக் குடும்பமுறை கூட்டு உற்பத்தி முறை ஆகியவை முதலாளிய கருத்தாக்கங்களால்
சிதைக்கப்பட்டதையும் விவரிக்கும் போது "மரபுத் தொழில்கள் உயிர்ப்பிக்க வேண்டும்"
என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த முடிவுகளின் வழிப் பயணிக்கும் போது சாதியக் கட்டுமானத்தின் ஆணிவேர்களை
நாம் அடையாளம் காண முடிகிறது.
கீதாரிகளின் வாழ்வு குறித்தக் கட்டுரையில் நடோடி சமூகத்தின் இனக்குழுவில்
பொதிந்து கிடக்கும் கால்நடை மருத்துவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு காப்பாற்ற
பட வேண்டியவைதான்.அதற்காகவே கீதாரியின் எஞ்சினியர் மகன் இரவில் கிடையில்
ஆடைகளைக் கவனிக்க வருவதில் எமக்கு உடன்பாடில்லை.
கீதாரியின் மகனின் தொழில் கிடையைக் கவனித்தல் என்ற மரபு தொழில்
தொடர்வதில் சாதியம் பாதுகாக்கப்படும். இவை உடைக்கப்பட வேண்டிய மரபுகள்.
இவைகளை உடைப்பதிலும் இவை உடைக்கப்பட்டதிலும் என் போன்றவர்களுக்கு
துளியும் வருத்தமில்லை.

ஒரு எழுத்தின் வெற்றி அதன் தொடர்ச்சியாக எழும் பல்வேறு சிந்தனைகள்.
செந்தமிழன் கட்டுரைகள் வாசகனுக்கு சிந்தனை அலைகளை எழுப்புவதில்
மிகச்சிறந்த வெற்றி பெற்றுள்ளன. தோழர் செந்தமிழனுக்கும் இந்நூலை வாசிக்கும்
வாய்ப்பைக் கொடுத்த தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவுக்கும்
நூலைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் தஞ்சை பன்மைவெளி வெளியீட்டகத்திற்கும்
வாழ்த்துகள்.

-----------------

Wednesday, May 21, 2008

வெற்றிடம்



எப்போதும்
கை நழுவிப் போகிறது
உன்னைச் சந்திக்கும் வாய்ப்புகளும்
உன்னுடன் பேசும் தொலைபேசி
அழைப்புகளும்.
கைபேசிகளுடன்
அலைந்து கொண்டிருந்தாலும்
நம் கைகள்
நமக்கான நம் எண்களைச்
சுற்றாமலேயே
உலகம் சுற்றி வருகிறது.

உறவுகளின் மரணத்தையும்
நண்பர்களின் பிரிவையும்
காலம் கடந்தே
பதிவு செய்கிறது
என் கணினி.
கண்ணீர்ச்சுரப்பிகள்
வற்றிப்போனபிறகே
சம்பிரதாயத்திற்காய்
துக்கம் விசாரிக்கச்
சந்திக்க வருகிறது
என் விழிகள்.

பிரபலங்களின்
புத்தகக்குவியல்களில்
கிடைக்காத
ஞானத்தை
மனிதர்கள் இல்லாத ஜனக்கடலில்
அறிவுஜீவிதம் மரணித்த தருணத்தில்
உன் வெற்றிடம்
எனக்குப் போதிக்கிறது
புத்தனாய் இருந்து.

Thursday, May 8, 2008

"அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி



நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..

( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின்
பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை
வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது.
1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம்,
அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள்,
அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர்
அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்.
அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக
1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு
மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978)
லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980)
லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987)
பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை)
இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன.
இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"
வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு.
அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE
என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.

கதையோட்டமும் சில கேள்விகளும்
----------------------------------
சரண்குமாரின் தாய் மகாமயி மகர் இனத்தைச் சேர்ந்த தலித் பெண்.
அவனோ படில் (Patil) இனத்தைச் சார்ந்த ஆதிக்கச்சாதி ஆணுக்குப் பிறந்தவன்.
படில்களின் பண்ணைவீடுகளை காவல்காக்கும் மகர் ஆண்கள்
படில்களின் மனைவிமார்களைத் தூங்கும்போது கூட பார்த்ததில்லை.
பார்க்க முனைந்ததும் இல்லை. ஆனால் அவர்களின்
தாய்களை, தாரங்களை, மகள்களை, சகோதரிகளை பண்ணையாரின்
சதைப் பசி எப்போதும் தின்று எச்சிலாக்கி தெருவில் வீசுகிறது
வயிற்றுப்பிள்ளையுடன்.
மகமாயி வீடு நிறைய குழந்தைகள். வெவ்வேறு ஆதிக்கச்சாதியின் அடையாளத்தைச்
சுமக்கும் அடையாளமற்றுதுகள்.
மகர்களின் வீடுகள் இந்தக் குழந்தைகளை மகர்களின் இரத்தத்தைக் கறைப்படுத்திய
களங்கமாக கண்டு விலக்கி வைக்கிறார்கள்.
அவர்கள் பிறப்புக்கு வித்திட்ட ஆதிக்கச்சாதிகளொ எந்த வகையிலும்
தங்கள் அடையாளங்கள் தங்கள் விதைகளில் முளைத்த மரங்களில்
இருக்காமல் பார்த்துக்கொள்ளும் இயற்கை முரணை இயல்பாக்கி
வெற்றி காணுகிறார்கள்.

மகர்களின் குடும்பத்திலேயே சரண்குமாருக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.
ஓர் இசுலாமியரைத் தன் உறவுக்காரர் என்று சொல்ல சரண்குமாரைச் சுற்றியிருக்கும்
தலித் சிந்தனையாளர் கூட்டம் தன் புருவம் உயர்த்துகிறது.
அவன் அப்படிச் சொன்னதால் தலித் பைந்தர் அமைப்பில் கவுரவமான பொறுப்பில்
இருக்கும் தன் மகனுக்கு அவமானம் என்று சரண்குமாரின் மாமனார் அவனிடம்
சண்டை போடுகிறார்!

தலித்தியம் என்பது என்ன?
தலித்துகளின் கூட்டமைப்பு மட்டும்தானா?
இக்கேள்வி எழுகிறது.
தலித்தியம் என்பது தலித்துகளின் கூட்டமைப்பும் தான்.
ஆனால் அதுமட்டுமல்ல.
தலித்துகளின் கூட்டமைப்பில் சாதியொழிப்பை முன்னெடுத்துச் செல்லும்
நடவடிக்கை எளிதாகிறது. அந்தச் செயல்பாட்டின் வழி சமத்துவம் சமுதாயத்தை
கட்டமைப்பது என்ற குறிக்கோள் சாத்தியப்படும்.
ஆனால் நடைமுறையில் தலித்துகளின் கூட்டமைப்பு என்ற முதல் கட்டத்திலேயே
நின்று கொண்டிருப்பதற்கு யார் காரணம்?
தலித்துகள் மட்டும் காரணமா?
அடுத்தக் கட்ட நகர்வுக்கு வாய்ப்பின்றி இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருப்பது காரணமா?
இங்கு நிலவும் அரசு, அரசியல், தலைவர்கள் காரணமா?
தலித்திய மக்களை அந்த நிலையிலையே வைத்து தன் பீடத்தைக் காப்பாற்றிக்கொள்ளும்
தலித், தலித் அல்லாதோர் எல்லோருமே காரணமா?
யார்க் காரணம்?

என்னை மதிக்காதவர்களையும் மதிப்புடன் பயத்துடன் அழைக்கும்
என் நாக்கு
"என் நாக்கு மனுவின் சட்டத்திட்டங்களைச் சுற்றியே புரள்கிறது"
1978ல் மகர்களில் அந்த ஊரில் படித்தப் பட்டதாரிகள் இருவர்தான்
என்ற உண்மையைப் பதிவுச் செய்யும் போது
இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று பேசுவதற்கு முன்
சேரிக்குள் நுழைந்து அவர்களுடன் வாழ்ந்து பாருங்கள் என்று
எல்லோரையும் அழைக்கும் குரலில் சத்தியம் இருக்கிறது.
சத்தியமேவ ஜெயதே!

பாலுறவு
-----------

கற்பு, கற்பொழுக்கம், பெண் தெய்வங்கள் என்று அதீதமாக பேசப்படும் இந்திய-
இந்துச் சமுதாயத்தில் அவர்களின் பேச்சும் எழுத்தும் கற்பித்திருக்கும் ஒழுக்கப்
பண்பாட்டு விழுமியங்களும் அவர்களாலேயே சேரிகளில் மிதித்து நசுக்கிச்
சிதைக்கபடுவதையும் இவர்களின் தன் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன.
ஆதிக்கச் சீதாராமன்களின் வேடமணிந்த, அகலிகைகளுக்குப் புணர்வாழ்வு
கொடுத்த புண்ணியபாதங்களால் சிதைந்துக் கிடக்கும் தலித் பெண்களின் யோனிகள்
நம்மைப் பயமுறுத்துகின்றன.

மார்புக்கச்சையோ, ப்ளவுசோ அணியாமல் தொங்கும் முலைகளைத் தன் சேலை
முந்தானையால் மார்பைச் சுற்றித் தூக்கிக்கட்டி அலைந்த நம் பாட்டிகளை
பார்த்திருக்கிறோம். ஆனால் சரண்குமாரின் அம்மாவும் சகோதரிகளும்
நிர்வாணமாக வெளியிடத்தில், அவன் முன்னாலேயே குளிக்கிறார்கள்.

தன்னவ்வா (Dhanavva) என்ற தலித் பெண்ணை அவள் தகப்பன் சங்கர்
பெண்டாளுகிறான். கேட்டால் சொல்கிறான்..
"நான் போட்ட விதை முளைத்து வளர்ந்து மரமாகிவிட்டது. இந்த மரத்தின்
கனிகளை நான் ஏன் பறிக்கவோ சுவைக்கவோ கூடாது?" என்று!

சந்தமாயி புருஷன் செத்துப் போனதால் நெற்றியில் பெரிதாக வைக்கும்
குங்குமப் பொட்டை, கழுத்தில் அணியும் கறுப்பு மணி தாலியை
விலக்கி வைக்கிறாள்: அவள் அளவில் அவளுக்கான விதவைக்கோலமும்
மனைவியின் கடமையுமாக இதுவே அமைந்து விடுகிறது.
ஆனால் அவள் தான் பஸ் ஸ்டாண்ட்டில் காக் கா (kaka) வுடன்
திறந்தவெளியில் குடித்தனம் நடத்துகிறாள்.
வீடில்லாத , கதவுகள் இல்லாத பஸ் ஸ்டாண்டின் திறந்தவெளியில்
வாழ்க்கை நடத்துவது அவலம்தான்.
இந்த அவலத்தின் ஊடாகத்தான் அவள் இந்து-முஸ்லீம் என்ற மத அடையாளத்தை
மத துவேஷத்தை தன்னளவில் வெற்றிக்கொண்டு
ஒரு பெண் அவளுக்கு ஓர் ஆண் என்ற உன்னதத்தை, வாழ்க்கைக்கும் வாழ்க்கையின்
நம்பிக்கைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறாள்.

எது அடையாளம்?
-------------------

ஒரு மனிதனின் அடையாளம் என்பது என்ன?
நான் யார்?
என்று யோசிக்கும் போது நாம் நம்மை யாராக அடையாளப்படுத்திக் கொள்கிறோம்
என்பதைவிட நம்மை இந்தச் சமுதாயம் யாராக அடையாளம் காணுகிறது
என்பது தான் முன்னிலை வகிக்கிறது.
பல நேரங்களில் நாம் நம்மைக் காட்டும், காட்ட முனையும் அடையாளத்தை
அழித்து இந்தச் சமுதாயம் காட்டும் அடையாளம் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்தியாவின் தலைச்சிறந்த சிந்தனையாளர், தலைவர் என்ற தகுதிகளை
உடைய பாபாசாகிப் அம்பேத்கரின் உண்மையான அடையாளத்தை
மங்கவைத்து அவர் தலித்துகளின் தலைவர் என்ற அடையாளத்தை
நிலைநிறுத்திவிட்டது இச்சமுதாயம்.

"அவருக்கிணையாகக் கற்றவரும் அறிவின் விளிம்பைத் தொட்டுத் தளும்பியவரும் இனி
பிறந்தால்தான் உண்டு என்பது பூரிப்புக்குரிய விஷயம். அந்தக் கனவானின் உருவப்படம்
இந்தியா முழுவதும் குடிசைகள், குப்பங்கள், நடைபாதைகள், தெருவோரங்கள்,
பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட நலிந்த குடியிருப்புகள் என
முற்றும் புறக்கணிக்கப்பட்டோர் நடுவில் மட்டுமே கம்பீரமாகத்
தொங்கிகொண்டிருப்பதைக் காண்பது கண்ணீருக்குரிய அவலம்.

ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால்
அவருக்கும் சமூகத்துக்குமான நம்பகத்தன்மையின் சின்னமும் அதுவே"

என்று கவிதாசரண் சொன்னதும் நினைவில் வருகிறது. (ஆக 07-பிப் 08 இதழ்).

சரண்குமாருக்கு லிம்பாளே என்ற பெயர்- குடும்பப்பெயராக ..
(குடும்பப்பெயரென்ன குடும்பப்பெயர் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை!
சாதி அடையாளப்பெயர்) எப்படியோ வந்து ஒட்டிக்கொள்கிறது.
சாதிக்கலவரத்தின் போது அவன் தலித்திய அடையாளத்தை மறைத்துக்கொண்டு
பத்திரமாக வாழும் கவசமாக, அகமதாபாத்திலும் லாத்தூரிலும் எளிதாக
வீடு வாடகைக்கு கிடைக்க வாய்த்திருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.
வசதிகள் கூட கூட அவனும் அவன் வாழ்ந்த மகர்களின் கூட்டத்துடன்
மீண்டும் இணையமுடியாதவனாக தன்னை விலக்கிக்கொள்கிறான்.
தூய்மை என்ற பெயரில், அந்தஸ்து என்ற அடையாளத்தில்,
சமூக மதிப்பு என்ற அடையாளத்தை நிலைநிறுத்த.

சரண்குமாரைச் சுற்றி இருக்கும் அவனுடன் சம்மந்தப்பட்ட
இரத்த உறவுகள், சமுதாய உறவுகள், அவனை அவர்களில் ஒருவனாக ஏற்காமல்
அந்நியப்படுத்துகிறது.
உண்மையில் இந்த அந்நியப்படுத்துதல்- அவனைச் சாதிக்கெட்டவனாக,
சாதியற்றவனாக காட்டும் அடையாளம். இந்த அடையாளம் வரவேற்கப்பட
வேண்டிய அடையாளம்.
ஆனால் வசுவுகளிலேயே கீழ்த்தரமான மோசமான வசவாக கையாளப்படும்
வார்த்தை " சாதிக்கெட்ட பயலே !" என்பதுதான்.
சமுதாயத்தில் ஒருவன் அப்பன் இல்லாமல், ஆத்தா இல்லாமல்
இருக்கலாம்.. ஆனால் சாதி இல்லாதவனாக இருக்கக்கூடாது,
இருக்கவே முடியாது என்பது தான் அடிமுதல் முடிவரை
கம்பீரமாக எழுந்து நிற்கும் சாதியின் இறையாண்மை!

இந்த இறையாண்மையே இந்தியாவின் இறையாண்மையாக
இருப்பதுதான் அடையாளம் அற்றவர்களும் தேடி அலையும்
தனக்கான தன் அடையாளம்.

Friday, May 2, 2008

முரண்வெளி - 2

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் வலைப்பதிவில்
http://jeyamohan.in/?p=412 பக்கத்தை வாசிக்கச் சொல்லி எனக்கு மின்னஞ்சல்கள்
வந்து குவிகின்றன.
ஏழாம் உலகத்தை நான் வாசித்தவுடன் நான் உணர்ந்ததில் நான்
எழுதியிருப்பது ரொம்பவும் சொற்பம் என்பது என் எண்ணம்.
பாவம், புண்ணியம், நரகம், சொர்க்கம்,
பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் செய்வது புண்ணியம் என்ற
மேம்போக்கான நம் மத நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதில் ஏழாம் உலகம்
மிகப்பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக நான் உணர்ந்தேன்.
அதையே என் பார்வையில் பதிவு செய்திருந்தேன்.

உங்களின் கொற்றவை படைப்பு குறித்து தமிழ்நேயம் கோவை ஞானி அவர்கள்
விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பு நூலை அனுப்பியிருந்தார்.
அதன் பின் அந்த நாவலை வாசிக்க காத்திருக்கிறேன்.
அண்ணன் ராஜ்கவுதமன் கூட தன் கட்டுரைகள் "பாட்டும் தொகையும்
தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் ' நூலில்
கண்ணகியைக் காரைக்கால் அம்மையாராக கோடிட்டு காட்டியிருக்கிறார்.

"மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். " என்று எழுதியிருக்கிறீர்கள்.
"அவர்களில் இருந்து நான் வித்தியாசமானவள்" என்பதை மட்டுமே நான் இப்போது
உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் இந்து மதக் கருத்துகள் சிலவற்றை வாசித்தப்பின்
இதெல்லாம் சொன்னது சுவாமி விவேகானந்தரா அல்லது ஈ வே ரா பெரியாரா
என்ற சந்தேகம் வரும். ஆனால் யாரும் விவேகானந்தரின் கருத்துகளை
முன்னெடுத்துச் செல்வதில்லை. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை குறித்து
இந்து மதத்தினர் பேசுவதில்லை!

என் கருத்துகளுடன் உடன்படுபவர்களுடன் மட்டுமல்ல
மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களுடனும் என் நட்புறவு தொடர்கிறது.
கருத்து முரண்வெளியில் பயணிப்பதும் கைகுலுக்குவதும் சாத்தியம் தான்
என்பதற்கு என் நட்பு வட்டங்களே நல்லதொரு சாட்சியங்கள்.

என்னைப் பற்றி நண்பர் நாஞ்சில்நாடன் மூலம் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
நாஞ்சில்நாடன் சொல்லியிருந்தால் சரியாகத்தான் சொல்லியிருப்பார்.
நாஞ்சில்நாடனிடன் இதைப் பற்றி நேற்று பேசினேன்.

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை.



(எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்து)

http://jeyamohan.in/?p=412


இணையத்தில் சில கட்டுரைகளைக் காண நேர்ந்தது. அவற்றுக்கு என் எதிர்வினைகளைக் கோரி கடிதங்கள் வந்தன.

திருமதி புதியமாதவி பற்றி நாஞ்சில் நாடன் சொல்லியிருக்கிறார். ஏழாம் உலகம் நாவல் பற்றிய அவரது எதிர்வினையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலுள்ள அமைப்பு எதிர்ப்பு என்பது அதைவிட தீவிரமாக விஷ்ணுபுரத்தில் உண்டு என்பதே என் எண்ணம். பொதுவாகவே படைப்பூக்கம் என்பது அமைப்புநோக்குக்கு எதிரானதாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே நிறுவனத்தன்மைக்கு எதிரானவன். மத நிறுவனம் மீது எப்போதுமே கடுமையான எதிர்க்கருத்தே எனக்கு உள்ளது. ஏழாம் உலகமும் அதையே வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அமைப்பு எதிர்ப்பை ஒரு படைப்பாளி வெளிப்படுத்தும்போது அவன் பழமையான அமைப்புகளையே அதிகமும் இலக்காக்குகிறான். உடனே அவனிடம் அவற்றை எதிர்க்கும் புதிய அமைப்புகளுடன் சேர்ந்துகொள்ளும்படி கோருகிறார்கள். அந்த அமைப்பையும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால் அவனை அவர்கள் தங்கள் எதிரிப்பக்கம் சேர்த்துவிடுகிறார்கள். நல்ல படைப்பாளி எல்லாவகையான அமைப்பு மனிதர்களாலும் தங்கள் எதிரியின் தரப்பைச் சேர்ந்தவன் என்று அடையாளம் காட்டப்படுவான். என் எழுத்துக்கு எப்போதுமே இதுதான் நிகழ்ந்து வருகிறது. அதை மதவாதிகள் எதிர்ப்பார்கள். மத எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பார்கள்.

இன்னொரு விஷயம் உண்டு. மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். ஆகவே இந்து ஞான மரபின் சாரம் பற்றி பேசும் என்னை இந்து மதவாதி என்று முத்திரை குத்துவார்கள்.

நான் பாரம்பரியத்தின் சாரமான பகுதிகள் கற்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் மறுபரிசீலனைசெய்யப்பட்டு, ஓயாமல் புத்தாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் ஒரு படைப்பாளி. என்னால் முடிந்த வரையில் அதற்கு முயல்பவன். என் ஆக்கங்களே அதற்கு ஆதாரங்கள்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804171&format=html

*

ஈ.வே.ரா அவர்கள் பற்றிய என் கருத்தை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்துமதம் மீதான ஈ.வே.ரா அவர்களின் கடும்தாக்குதல்களை அதே வேகத்தில் நானும் செய்யக்கூடியவனாகவே இருக்கிறேன். வேதாந்திகளாக இருந்த என் குருநாதர்களும் அந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களே. நாராயணகுருவின் இயக்கத்துடன் ஈ.வே.ரா அவர்களுக்கு நீண்ட தொடர்பும் ஈடுபாடும் இருந்தது. நாராயணகுருகுல இயக்கம் இக்கணம் வரை ஈ.வே.ரா அவர்களை அதன் மூல ஆசிரியர்களில் ஒருவராக வைத்திருக்கிறது.

எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே.

ஒரு சீர்திருத்தவாதி எதிர்மறை அணுகுமுறையை எடுத்தால் அந்த எதிர்ப்பை மட்டுமே அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வெறுப்புவிவசாயிகளே அவரைத் தொடர்ந்து உருவாவார்கள். நட்டு வளர்த்து காடாக ஆக்குவார்கள். ஆக்கபூர்வமாக ஏதும் நிகழாது. ஈவேரா அவர்கள் இந்திய மரபை முழுக்க நிராகரித்தவர் அல்ல. பௌத்தம் முதலிய அவைதிக மரபுகள் சார்ந்து அவருக்கு ஆர்வம் இருந்தது- கல்வி இல்லாவிட்டாலும். அத்தளத்தில்கூட இங்கே பொருட்படுத்தும்படி ஒரு பத்து பக்கம் எழுதப்பட்டதில்லை. அவரது தாக்குதல்களை வசைகளாக மாற்றி முன்வைப்பவர்களே கண்ணுக்குத்தெரிகிறார்கள்.

சமீபத்தில் நிகழ்ந்த விவாதங்களை ஒட்டி ஈவேரா அவர்களைப்பற்றி தொடர்ந்து நண்பர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘பகைவர்களாக’ வந்த பல பெரியாரியர்கள் நண்பர்களாக ஆனதுதான் இப்போதைய ஆச்சரியம். ‘பாமரன்’ வகையறாக்களை வைத்து நான் ஈவேராவை மதிப்பிடுகிறேன், அவரது மூலநூல்களை போதிய அளவுக்குப் பயிலாமல் - என்பது முக்கியமான குற்றச்சாட்டு. ஈவேரா குறித்து முழுமையான விரிவான வாசிப்பு ஒன்றை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804241&format=html

முரண்வெளி - 1

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் குறித்து திண்ணை மின்னிதழில் வெளிவந்த
"ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்" என்ற
விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய விமர்சகர் நண்பர் கே.ஆர்.மணிக்கு
என் நன்றி


"முரண்வெளியில் புன்னகைப்பதும் கைகுலுக்குவதும் நமக்குச் சாத்தியம் தான்"

Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது

கே. ஆர். மணி




ஏழாம் உலகத்தை வெங்காய வாசத்தோடு தரிசத்த புண்ணிய ஆத்மா புதியமாதவிக்கு !


ஏழாம் உலகம் - அந்த புத்தகம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதிவுபோல எழுதவேண்டும் என்கிற நினைப்போடு சோம்பேறித்தனமும் சூழ்ந்துகொள்ள தப்பித்துபோனது என் பதிவு. இவ்வளவு உன்னிப்பாய் கதை எழுத வருவரின் கதை விமர்சக்கப்படும்போது நிறைய ஆழம் வேண்டுமென எண்ணிய நிறைய விமர்சனங்களும் பாதியிலே தடம் புரண்ட பெட்டிபோல தவறிக்கிடக்கின்றன. நேர் செய்யவேண்டும்.


ஏழாம் உலகத்திற்கு வருவோம். மும்பை புனா ரயில் பயணநேரத்திற்குள் அந்த ஏழாம் உலகத்தை கடந்தபோது, கனமானது அந்த ஞாயிறு. படித்துக்கொண்டிருக்கும்போதே என் ரயில் அறையின் பக்கத்து குழந்தை பார்த்து பயந்தே போனேன். நல்லவேளை, அதன் பெயர் ரஜினிகாந்தல்ல. அது சிரித்தது. சிரித்துக்கொண்டே மொபைல் போட்டே எடுத்தேன். பயத்தில் என்றுமில்லாமல் அன்று என் ஐந்துவயதுப்பையனை கட்டிக்கொண்டேன் இரவில். அவனுக்கு கை,கால் எல்லாம் ஓழுங்காகத்தானிருந்தது.


சில எழுத்துக்கள் மேலுக்கு மருந்து. சிலவை கையில் ஊசி. சிலது நரம்பு தேடி, விடைக்க வைத்து, கைமூட்டி அழுத்திபோடும் ஊசி. ஏழாம் உலகம் இந்தவகை. இது அப்பட்டமான ஆலயதரிசனம். ஆலய தொழிற்சாலை என்று சொன்னாலும் சொல்லலாம். கோயிலுக்கு

போனோமா, கும்பிட்டோமா, சாமி, தேவையா என்று வாதிட்டோமா, முன்னோர் பெருமை பேசி முதுகு சொறிந்தோமா என்றில்லாமல் இப்படியில்லாம் உண்மைத்தேடல் தேவைதானா என்ன? தேவைதான், ஆன்ம சுத்தியோடு சரீர சுத்திக்கு அந்தக்குளம் தேவைப்படுகிறது. அந்த பொதுக் குளத்தில் மீன்கள் வந்துபோனாலும் அதீத மக்களாலும், நிறைய பராம்பரியத்தாலும் அழுக்கு,

அழுக்கு சேர்ந்து, மேலே எத்தனை பூப்போட்டாலும் மூடத்தனத்தின் முடை நாற்றம்.


முதலாளி பண்டாரம், மூலதனம் முத்தம்மை, அப்புறம் உருவாகிற, உருவாக்குகிற பிச்சைக்கார உருப்படிகள், பக்த வாடிக்கையாளர்கள், அவர்களின் பயங்களையும், புண்ணியம் வேணுமென்கிற ஆசையையும் குறிவைத்து வீசப்படுகிற தர்ம வார்த்தைகள், அவர் அவர்களுக்கான பார்வைகள், அவர்களுக்கென கண்ணாடிகள், கண்ணீர்கள், வரம்புகள், விழுகிற சில்லறைகள் என கொட்டிக்கிடக்கிறது

யதார்த்தம். கொஞ்சம் பயங்கர யதார்த்தம். கன்னியாகுமரிபோல எழுந்துவிழும் உள்ளுணர்ச்சியில்லை, பின் தொடரும் குரல்கள் போல தத்துவசட்டம் அலசும் விவாதமில்லை, யாரும் திரும்பிபடுத்து புராணங்களும், கோபுரங்களும் தோன்றுவதுமில்லை, காடில்லை, காவிய நாயகிகளில்லை. பரவாயில்லை. சாதரண மாந்தர்கள். கொஞ்சம் உண்மையாயிருக்குமோ - இருக்கக்கூடாதென்கிறது பயமான மனம்.

இருக்கலாம். இருந்தால் என்ன செய்ய. எவ்வளவோ கழிவுகள் தூரெடுக்கப்படவேண்டியவை, இதில் அதுவுமொன்று. அவ்வளவுதான்.


குருக்கள் ஆசப்படுற அளவுக்கு முத்தம்மா இருப்பாளென்ன, ச்சீ.. எழலாம், உங்களுக்குள்ளும் ஆசை எழலாம். பாவம் குருக்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நம் நாட்டில் முனிகள், ரிஸிகள் எல்லாமே நியோக கலவையில்தானே வந்தார்கள். முத்தம்மாவுக்கு வசிஸ்டனோ, துர்வாசனோ, துரோணணோ, வால்மீகியோ .. எதுவோ ஒரு லக்கடித்திருக்கலாம். பண்டாரத்திற்கு அந்த வருச புரடக்சன் போய்விடும். மூலதனத்தை ஒரு வருடம் எந்த முதலாளிதான் முடக்கிபோடுவான்.


கதையெல்லாம் சரி, அதனால் அறியப்படும் நீதியாதெனில், உணர்வுயாதெனில் என்கிறபோதுதான் என்னால் புதியமாதவியோடு உடன்பாடமுடியவில்லை. அதைப்படித்தவுடன் என்னுள் என்ன எழுந்தது. எனக்கான பயம், மானுட கூச்சல், எப்படி சரியாக்கலாம் என்கிற பதைபதைப்பு. மனவிடுதலை நோக்கி, அகம்பிரம்மாஸ்மியை நோக்கி இந்தக்கோயில்கள் எப்போது நகரப்போகின்றன? கோவில்கள் எல்லாம் நமக்குள்ளே இறங்குவதற்கான படிக்கட்டுகளே என்று வேதங்களெல்லாம் கத்தி, கதறிக் கூறியும் மானுட

உள்விடுதலைக்குத்தான் எத்தனை தடங்கல்கள். அப்படியும் ஏன் என்னால் மதநிறுவனத்தின் மீது காறித்துப்ப முடியவில்லை.

எந்த நம்பிக்கை இதெல்லாம் திருந்தி என் மதம் புனிதப்படும் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது. வெறும் கானல் நம்பிக்கையோடும், புரட்டு வேதாந்தங்களோடும் காலம் தள்ளும் என் மனம் இறந்த நூற்றாண்டின் எச்சமா? மெளனம் என்னுள்ளும் கத்தியை இறக்கியது. Am i Over confident fool ?




--------------------------------------------------------------------------------



" தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது. ...... அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன " புதியமாதவி


மதநிறுவனம் எதிர்க்கப்படுவதும் அதன் அதிகாரங்கள் கைமாறிக்கொண்டேயிருப்பதும் எந்த சமூகத்திலும் புதிதொன்றுமில்லை. எப்போதுமே எதுவுமே மதமோ, அரசியலோ நிறுவனப்படுத்தப்படும்போது அந்தக்குளத்தில் கால ஓட்டத்தில் கசடுபடிந்து விடுகிறதென்பதை நாம் அறிவோம். ஆனாலும் ஓரளவாவது நிறுவனப்படுத்தபடாவிடின் அதனால் எந்த செயலையும் மேற்கொண்டு செய்யமுடியாது போய்விடும் என்பதும் நிதர்சனம். ஆகவே இரண்டு தன்மைகளிலும் பலம், பலவீனமும் இருப்பதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கான எதிர்ப்பை தொடர்ந்து மானுட சமுதாயம் செய்து வந்திருக்கிறதென்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மதம் மட்டுமின்றி, எல்லா அரசியல் கொள்கைகளுக்கும் பொருந்தும். மார்க்சின் கொள்கைகள் நிறுவனப்படுத்தப்பட்டதால் எழுந்த 'ஆகா' புரட்சிகளின் விளைவுகள் நமக்கெல்லாம் தெரியும். ஆனாலும் அவை தவிர்க்கமுடியாத சோதனைகளாகவே அதன் பாடங்கள் அதிக விலைகொடுத்து படித்தபாடங்களாகவே சமூகம் மெல்ல ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அதன் சில நல்ல பக்கங்களை மெல்ல மற்ற கொள்கைகள் தங்களுக்குள் சுவீகரித்துக்கொண்டுள்ளன.


மென்பொருள் துறையிலும் என்னால் இதற்கு சில உதாரணங்கள் கொடுக்கமுடியும். ஓப்பன் ஸோர்ஸ் ( Open Source ) என்கிற இயக்கம் [ காற்றும், நீரும் இலவசமாய் கிடைக்கும்போது ஏன் மென்பொருளுக்கு பணம் கட்டவேண்டும்?. அது மானுட உரிமையாகவே அமையவேண்டும் ] மெந்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகி (கிட்டதட்ட மதநிறுவனம்போல), அடாவடி தாதாவாகி அலும்பு செய்துகொண்டிருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்து, பின் ஓப்பன் சோர்ஸின் சில நல்ல கொள்கைகளை பிடித்தோ, பிடிக்காமலோ கடைபிடிக்க வேண்டியதாயிற்று. ஓப்பன் ஸோர்சிலும் இப்போது சில நிறுவனங்கள் மெல்ல மெல்ல நிறுவனமாகிக்கொண்டு வருகின்றன. தாதா மைக்ரோசாப்டும் சில இலவசங்களையும், தனது இறுக்கமான பீடங்களையும் தளர்த்திக்கொண்டது இரு கொள்கைகளும் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான அறிகுறி. மத, அரசியல், தொழில் நிறுவனங்களின் மீதான புற எதிர்ப்போ, அக எதிர்ப்போ அவ்வப்போதைய குறைகளை களைவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருக்கமுடியும்.

ஆகவே எந்தத்துறையிலும் நிறுவனமாக்கப்படலும், அதை எதிர்த்து நீர்க்கச்செய்தலும் மறுபடியும் அது எதற்காக எதிர்த்ததோ அதன் முனையிலே அது கெட்டிப்பட்டு நிறுவனமாக்கப்படுதலும் கால இயல்பினதுதானே.


ஆனால் கேள்வி, மதநிறுவனத்தின் மீதான எதிர்ப்பு எதற்காக, அதன் நேரம், காலம், நோக்கம், வழிமுறையென்ன என்பதில்தான் நம் சமூக சிந்தனையாளர்களெல்லாமே வேறுபடுகிறார்கள். மதநிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களெல்லாம் இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்யவந்த மாமணிகளில் ஒருவராக, இருப்பார்களா இருப்பாரா என்பது என்னளவில் சந்தேகமே.

மதத்திலிருந்தே மாற்றங்கள் செய்து, மதத்துவேசத்தை பரப்பாது ஒருங்கிணைத்து உழைத்த பெரியார்கள்தான் நாளடைவில் இந்துமதத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துசென்றார்கள். It should be integrating force, not differentiating force.. ஜெயமோகன் நாரயணகுருவை ஏற்றுக்கொள்வதும் பெரியாருக்கான எதிர்ப்பும் அந்த தளத்திலிருந்து வருவதாகத்தான் எனக்குபடுகிறது. என் கணிப்பு/ வாசிப்பு தவறாகவுமிருக்கலாம்.

இந்துமதம் மற்ற மதங்களைபோல வளராததற்கு முக்கிய காரணம் அதன் குறுகிய market sizeம், அதற்குள்ளான பிரிவுகளும், சண்டைகளுமே என்பது இன்றைய உலகமயமாக்கப்பட்ட, திறந்த, மதச்சந்தையின் கண்டுபிடிப்பு. விவேகானந்தரைப்போல இந்து மதத்தின் உயர்சாதி மதநிறுவனத்தை திட்டியவர்கள் வேறெவெருமில்லை. எல்லாம் எந்த நோக்கத்திற்காக, குளம் சுத்தப்படுத்தப்படுவதற்காக. மண்போட்டு மூடப்படுவதற்காகயில்லை. இல்லை பெரியாரின் நோக்கமும் இந்துமதத்தை சீர்படுத்துவதற்காகவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையே என நீங்கள் வாதிடலாம். ஆனால் அதன் நீண்டகாலப்பயன் Long term usability, நோக்கத்தின் வழிமுறை, அதனால் விளைந்த செயற்பலன், அதன் அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்வதற்கான நேர்மறை அணுகுமுறை பற்றி கேள்விகள் எழுப்பபடலாம். [அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை எதற்கு ? கேட்டது ஜெயமோகன் என்று ஞாபகம் ]

புரோகிதத்தையும், வைதிகத்தையும் திட்டுகிறார் என்பதற்காக நீங்கள். 9/11 புகழ் பின்லேடனை பாராட்டி கவிதை எழுதிவிடக்கூடாது.

"தந்தை பெரியாரின் தடியாய் முளைத்த மாமணியே, உன் தாடிக்குள் இருப்பது முடியல்ல. ஐயாவின் தடி. உன் விமானங்கள் என் சகோதரனை உள்ளே விடாத கோயில் விமானங்களை தகர்க்கட்டும் "

என்று மடக்கிப்போட்டு அவரை பாராட்டிவிடுவீர்களோ என்கிற பயம்தான் என்னை இந்தகடிதம் எழுத தூண்டிற்று. ஆகவே மதநிறுவன எதிர்ப்பு மட்டுமே எல்லா தலைவர்களையும் இணைக்கும் புள்ளியாகிவிடாது.

ஒரு புதிய கோணத்தில் யோசிப்போம்.

இந்த நாவல் மதநிறுவனத்திற்கு எதிராக எழுதப்பட்டதாய் எனக்கு தெரியவில்லை. இதிலெங்கே மதநிறுவனம் வந்தது. பக்தகோடிகளின் பயமான மனம் வணிகரீதியான பார்வையால் சுரண்டப்படுகிறது. எல்லாம் வயிற்றுப்பிழைப்புக்கும், ஒரு வேளை சோற்றுக்கும். அன்னதானம் கிடைக்கிற கர்நாடக கோயில்களில் கண்டிப்பாய் பண்டாரம் போன்றவர்கள் தொழில்செய்வது கடினமான ஓன்று. ஓழிக்கப்படவேண்டியவை கோயில் வாசல்காரர்களின் பசி மற்றும் பக்தர்களின் ஆன்மீகம் பற்றிய கண்ணோட்டம் என்கிறது என் இந்திய மனம்.

ஒரே புத்தகத்தை படிக்கிற இருவருக்கு திருத்தப்படவேண்டியதுதான் என்று தோன்றுவதும், உடைக்கப்பட வேண்டியதுதான் என்று தோன்றுவதற்கும் நமக்கு அணிவிக்கப்பட்ட, பழக்கப்பட்ட கண்ணாடிகளின் நிறத்தைதவிர வேறென்ன வித்தியாசமிருக்கமுடியும்.


உண்மைகளை விட, நேர்மறையாய் செய்ய வேண்டியவைகளைவிட எது நம்மிலிருந்து கொப்பளித்து விழுகிறது ? விதைக்கப்பட்ட வெறுப்பு என்று வெறுமனே நான் எளிமைப்படுத்தினேனென்றால் நான் எவ்வளவுபெரிய மடையனாவேன். "டேய், அப்பேன், இந்த கம்பூயிட்டரெல்லாம் மயிரு வெறும் ஒண்ணும், ஜீரோவும்தானமேடே அப்படியா " என்று கேட்கிற பெரியப்பாபோல நானாகிவிடமாட்டேனா ?

மதத்திற்கும், ஆன்மிகத்திற்குமான தொடர்பு மெல்லியது, முக்கியமானதும் கூட. ஆன்மிகம் அரசாங்கம் போன்றது அது Macro Environment மதம் அதை செயல்படுத்தும் Micro Environment. ஆன்மிகத்தின் குறிக்கோள்களை எல்லா தரப்பிற்கும் எடுத்துச்செல்லும் முகவராக மட்டுமே மதபீடங்கள் இருந்துவரவேண்டும். பெரும்பாலும் அப்படித்தானிருந்து வந்திருக்கின்றன. எப்போதெல்லாம் குளத்தின் கழிவு நாற்றம் அதிகரித்ததோ அப்போதெல்லாம் தூர்நாற்றங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன, சில தடியோடு, சில ஆர்பாட்டமாய், சில அமைதியாய். இதே கருத்தில் ஜெயமோகனின் Blogல் http://www.jeyamohan.in அதைப்பற்றிய நீண்ட கட்டுரை பிரமாதமான ஒன்று உண்டு.

http://jeyamohan.in/?p=271

http://jeyamohan.in/?p=253

சில குறிப்புகள் Blogலிருந்து "ஈவேரா இங்குள்ள எல்லா தீமைகளும் ஒருசில சமூகங்களின் சதிவேலை மட்டுமே என்று எளிதாகச் சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட வெறுப்பு. ஆகவே வெறுப்புதான் வளர்ந்தது. நோயின் காரணம் தப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டமையால் நோய் நித்தம் வளர்ந்தது. "

"இன்னொன்று ஈவேராவின் இயக்கத்தில் உள்ள எதிர்மறைத்தன்மை. ஒரு சமூக இயக்கம் அப்படி கசப்பையும் வெறுப்பையும் கொட்டியபடி இயங்கினால் தீய விளைவுகளே உருவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஒரு மாபெரும் கல்வி இயக்கமாக இருக்கும். நாராயணகுருவின் இயக்கம் அத்தகையது. ஆகவே தான் அங்கே அவ்வியக்கம் சார்ந்து மாப்ரும் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் உருவானார்கள்."

"மாறாக இன்று 'பெரியாரியர்கள்' என்று சொல்லி பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். வெறும் வெறுப்பை மட்டுமே எங்கும் எவ்விடத்திலும் கொட்டுகிறார்கள். ..... ஆக்கபூர்வமாக எதுவுமே இல்லை."

கண்ணாடியின் நிறத்தை கொஞ்சம் மங்கமுயற்சிக்கவேண்டும். கறுப்புக்காமாலை அதிகமாகமல், மஞ்சள்துண்டை அணிந்துகொண்டவர்கள் போல "எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக " புதியமாதவி எதற்கு ஆவிகளை பற்றியெல்லாம் நம்பிக்கையில்லாதவரை வீணாக தொந்தரவு செய்யவேண்டும். ரவிசங்கரும், வேதாத்திரி மகரிசியும், அமிர்தானந்தமயி அம்மாவும், ராமக்ருஸ்ண மடமும் தூர் எடுக்கும் வேலையை எடுத்துக்கொள்வார்கள். அதற்காக கோயிலுக்கு போகாமலும் இருந்துவிடாதீர்கள். காசியும், கங்கையும், திருச்செந்தூரும், வேளாங்கண்ணியும் நமக்கு தேவை. வேதாத்திரி சொல்வது நம்மால் நமது மனதையே அறிவுத்திருக்கோயிலாக மாற்றும் திணவும், தெளிவும் வரும்வரைக்கும்.


புதியபார்வைகள், மறுவாசிப்பும் கொண்ட Change Agentஆய் நீங்கள் இருக்கவேண்டும் என்கிற பேராசை அதற்கு காரணமாயிருக்கலாம் என்பதை தவிர வேறெதுவுமில்லை பராபரமே. அதீத வைதிகவாதிகள் போல உங்களுக்கு பிடித்தமான ஈசமும் உங்களோடு தேவைக்கதிகமாக, உதிர்க்க முடியாத படி, உதிரத்தில் கலந்துவிட்டதோ, அது ஒரு நுணுக்கமான படைப்பாளிக்கு சிலுவையாகிவிடுமோ என்கிற பயம்தான். இலக்கியப்பறவைகள் எந்த ஈச சட்டைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதில் நம்மிருவருக்குமே சந்தேகமிருக்காது என்கிற ஆசுவாசத்தில் என் பயம் - அது தேவையற்றதாக கூடயிருக்கலாம். அதற்கப்பறம் நம்மிருவருக்கும் கனவுத்தொல்லைகளிருக்காது. ஏழாம் உலகம் போன்ற புத்தகத்தை படித்து வம்படியாய் திண்ணையில் எழுதிக்கொண்டிருக்கவும் மாட்டோம்.


இருக்கலாம். எனக்குள்ளும் அழுக்கு குளம். என்னையும் சில கண்ணாடிகள் மறைக்கலாம். ஆனாலும் எழுத்துக்கள் தவிர என்னை எது சுத்தம் செய்யும். ஆதலின் இலக்கியவாதிகள் காவிச்சட்டையோ, கருப்புச்சட்டையோ போடாமல் இருக்கும்போது அதன் மையப்புள்ளிகள் பலமாகுமே என்கிற ஆதங்கம்தான். நானறியமேலே எனக்குமிருக்கும் கண்ணாடி. நீங்கள் பார்த்தீர்களெனில் தயவுசெய்து என் கண்களில் படாமல் உடைக்கமுயற்சியுங்கள்.





--------------------------------------------------------------------------------


netwealthcreator@gmail.com


திண்ணையில் கே. ஆர். மணி

Copyright:thinnai.com 

Tuesday, April 29, 2008

பெரியாரும் விபூதியும்


1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில்
திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.
அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு
பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள். அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர். பெரியார் அதைப் பவ்வியமாக ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் இச்செயல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர்களுக்குப் பெரியார் சொன்ன பதில்:

" நான் எங்கே பூசிக் கொண்டேன்? அடிகளார் பூசிவிட்டார். அவ்வளவு பெரியவர்
இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார். அந்த நேரத்தில் நான்
தலையைத் திருப்பிக் கொள்வது அவரை அவமதிப்பது போல ஆகாதா?"
( நன்றி: யாதும் ஊரே -இதழ் 2005, ஜூலை)

மனிதர்களை மதிப்பது மட்டுமே கடவுளை விடவும்
மதங்களை விடவும் மதங்கள் எழுதி வைத்திருக்கும்
வேதங்களை விடவும் மேன்மையானது என்று
தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர்,
மாமனிதர் தந்தை பெரியார்.

குன்றக்குடி ஆதினத்தில் பாரதிதாசன்


1957ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குன்றக்குடி வருகையின் போது
அவருக்கு பூரணக்கும்ப மரியாதை செய்யப்பட்டது. வழிபாட்டு மேடையில்
எரியும் விளக்குகளைப் பார்த்ததும் "விளக்கெல்லாம் எரிகிறதே.. விழாவா?" என்று
கேட்டார் கவிஞர்.
"அடிகளார் வழிபாடு செய்யும் இடம் " என்றார்கள்.
தன் தோளில் கிடந்தச் சால்வையைக் கையில் எடுத்துக் கொண்டு புரட்சிக்கவிஞர்
கோயில்முன் நின்றார். மடத்து ஓதுவார் ஏ.எம்.சம்பந்தமூர்த்தி அவர்கள்
'விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியவை.." திருவாசகப்பாடலை
ஓதினார். மகிழ்ந்த புரட்சிக்கவிஞர் "அய்யா, நல்லா பாடுறாங்க. இந்தத்
தமிழ்ப்பாட்டைத்தான் நான் விரும்புகிறேன். தமிழனை இழிவுப்படுத்தாத -
சாதியை வற்புறுத்தாத சைவத்தை யாரும் எதிர்க்க மாட்டாங்க. அது இல்லியே" என்று
வருத்தப்பட்டார்.

(நன்றி: யாதும் ஊரே, ஜூலை 2005 இதழ்)

புரட்சிக்கவிஞரின் வருத்தம் காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய்
தொடர்வது தான் சாபக்கேடு.

Thursday, April 24, 2008

பாரதிதாசன் - பாரதி சந்திப்பு



பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்தாக
பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908லேயே நேர்ந்துவிட்டதாக பாரதிதாசன் ஆர்வலர்கள்
சொல்கிறார்கள். மன்னர்மன்னன், ச்.சு.இளங்கோ போன்றோர் இக்கருத்தை ஏற்கின்றனர்..
பாரதி-பாரதிதாசன் உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின்
புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..
இரா.இளவரசு பிற சுழ்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910ல் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்
எனத் துணிந்துள்ளார்.
இப்பெரும் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றி பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற
செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன.

பாரதி பாரதிதாசனைச் சந்தித்ததை சுதேசமித்ரனில் தராசு என்ற தலைப்பில் எழுதிய தொடர்
கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தராசு கட்டுரை: பாரதி
-----------------------

"எழுக! நீ புலவன்! "

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி. ஒட்டக்கூத்தப் புலவர் கூட
அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலிஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார்.
ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது."இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும்
வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே,எ ன்ன விஷயம் கேட்க
வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்கு கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை.
அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன்." என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின
பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம்.
அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

" காளை யொருவன் கவிச்சுவையைக் -கரை
காண நினைத்த முழு நினைப்பில் -அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள்_ இவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!-தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம்- எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை, இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்"

தராசு" சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்கதியும்
அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்".

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார்.

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸமாஷணைக்கு நடுவிலே கொஞ்சம்
இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை, நெசவிலே நாட்டு நெசவு
மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல், பணம் நல்லது,
ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு
நெய்ய வேண்டும் அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே
நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது.மஸ்லில் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை,
தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேல் நல்ல
வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்".

அப்போது புலவர் தராசை நோக்கி, "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு : "எழுக ! நீ புலவன் !" என்றது.

-------------

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய
பாரதிதாசன் தராசுவில் இடம் பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பது
புலப்படவில்லை.
பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும்
நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும்
தெரியவில்லை. பாரதிதாசன் ஒரு பெரும் கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி
முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

(நன்றி : காலச்சுவடு டிசம்பர் 2006 பாரதி 125 ஆ. இர.வேங்கடாசலபதி எழுதிய
பாரதியின் தராசு அல்லது பாரதி- பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?
கட்டுரையிலிருந்து )

Friday, April 18, 2008

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்

சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு,
, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும்
குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில்
எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன.. அருகில் யாராவது
இருந்து அவர் நம்மைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தில் சில சமயங்களில் தராளமாக போட்டுத்தொலைக்கிறொம்.
ஆனால் நாம் எல்லோருமே கோவில்/சர்ச்/மசூதி என்று அவரவர் வழிபாட்டு
தளங்களுக்குப் போய் வரும்போது "அம்மா தாயே,
அய்யா.. என்று நம்மைத் துரத்தும் குரலை ஒதுக்கிவிட்டு நடக்கமுடியாமல்
பிச்சைப் போடுகிறோம்.
இப்போது வழிபாட்டு தளங்களுடன் சேர்ந்து மருத்துவமனை வாசல்களிலும்
இந்தக் குரல் ஒலிக்கிறது.
நம் உணர்வு . நம் செயல் இரண்டையும் காலமும் இடமும் தீர்மானிக்கின்றன.
கோவில் வாசலில் பிச்சைப்போட்டு அந்தத் தர்மக்காரியத்தின் மூலம்
மனிதன் தன் பாவங்களைத் தீர்த்துக் கொள்வதும், புண்ணியம் தேடுவதும்
சாத்தியம் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் வர்க்க வேற்பாடின்றி
நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
கோவிலுக்குப் போகும்போது இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக
மாற்றி வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்களுக்குப் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளும்
பரமாத்மாக்களாகவே நாம் வலம் வருகிறொம்.

நம்மை அவர்கள் பாதிப்பது இல்லை.
அப்படி அவர்களின் தோற்றம் பாதித்தாலும் ஒரு சில மணித்துளிகள் தான்
அந்தப் பாதிப்பு.

'கந்தனுக்கு அரோகரா..
முருகனுக்கு அரோகரா.."

"கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை..
சாமியே அய்யப்பா
அய்யப்போ சாமியே
சாமியே சரணம் அய்யப்பா"

இத்தியாதி அந்தந்த வழிபாட்டுத்தளங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் மட்டுமே மாறிய
வாய்ப்பாட்டில் அசல் காட்சிகள் மறந்துவிடுகிறது.
நம் ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி நடக்கும் பயணத்தில்
நாம் சந்திக்கும் இந்த உயிர்கள் வெறும் நிழல் காட்சிகளாகி
மங்கிப்போய்விடுகின்றன.

அந்த நிழல்களின் உலகத்தில் அன்பு,காதல், உடலுறவு, பசி, காமம்,
சித்தனைப் போல அனைத்தையும் துச்சமாக நினைக்கும் மனநிலை..
இப்படி எண்ணற்ற மனிதர்களை நாம் ஜெயமோகனில் ஏழாம் உலகத்தில்
சந்திக்கிறோம்.

கோவிலுக்குள் இருக்கும் பழநி முருகனைத் தினமும் அலங்கரித்து பூசைகள் செய்யும்
போத்திக்கு முருகன் என்றால் கோனாரு மகன் முருகந்தான்.

'இங்கே பாருடே பண்டாரம், இது ஆறடி கல்லு, பத்து நானூறு வரிசமாட்டு பலரும்
கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடுதானுக. நமக்கு இது தொளிலு.
உனக்கு முத்தம்மை, எனக்கு இது. அது சதை, இது கல்லு, அது அளியும்,
இது இன்னும் ஆயிரம் வருசம் இருக்கும்' என்பார். (பக்203)

முத்தம்மையின் சதை அழிந்துவிடும். ஆனால் முத்தம்மையின் வாரிசுகளால்
நிரம்பி இருக்கும் கோவில் வாசல்கள் பக்தர்களுக்கு எளிதில் புண்ணியம் சேர்க்கும்.
பண்டாரங்களுக்கு முத்தம்மையின் கருப்பை மகாலட்சுமியின் ஐசுவரியத்தை
அள்ளிக்கொடுக்கும் தாமரைக்குளம்.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக அலைபவர்களிடம் முத்தம்மையின்
குரலும் அந்தக் குரலில் இருந்த தார்மீகம், பண்பாடு, கற்பு, உறவு..
இப்படி இந்த மனிதர்கள் தங்கள் பெருமையின் அளவுகோலாக
காட்டும் அனைத்தும் உடைத்து எறியப்படுகிறது.

பன்றிகள் முட்டி மோதி உறுமும் மலம் குவிந்த இடத்தில் முத்தம்மையைப்
போடுகிறார்கள்.
பெருமாள் கூனனுக்கு சராயப்புட்டியை திறந்து ஊட்டி அவன் உடலை வருடி
புணர்ச்சிக்குத் தயார் படுத்துகிறான். முத்தம்மை தீடிரென்று
"ஒடயோரே ஒத்த வெரலு.. ஒடயோரே ஒத்த வெரலு, இவன் வேண்டாம் ஒடயோரே,
இவன் மட்டும் வேண்டாம் ஒடயோரே" என்று வீரீட்டாள்.
ஆனால் கூனன் அவளை முழுவதுமாக ஆக்ரமித்துவிட...

முத்தம்மையின் பனிக்குடம் நிலமடந்தையின் பனிக்குடத்தை
உடைக்கிறது. அவள் வாரிசுகள் ஒவ்வொருவராய் சபரிமலை
படிக்கட்டுகள் என்று அவளே சொல்வது போல நம் கால்களை
மிதிக்கிறார்கள்..


'எனக்க பிள்ளைய பதினெட்டாக்கும், பதினெட்டு , சப்ரிமலை படிபோல பதினெட்டு.'

கண்ணில்ல, கையிலயும் காலிலயும் ஒரோ விரலு மட்டும்தான், கூனுமுண்டு,
மாறிலயும் வயித்தலயும் அடிச்சுட்டுல்லா கரைஞ்சேன்...
அக்கா , கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தைக் கை வெரலு.."

முத்தம்மையின் குரல் "ஒடயாரே இவன் வேண்டாம்"
கதறல் மலைகளில் மோதி பிறவிகள் தோறும் எதிரொலிக்கிறது.


அறுபடை வீடுகளிலும் இருக்கும் கார்த்திகைப் பெண்களைக் கதற கதற
அந்த முருகனே புணர்ந்ததை..
அன்னை குமரியைப் புணர்ந்த மகன் குமரனைத் தாங்க முடியாமல்
மலைகள் சரிகிறது.
..
"ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்..
எனக்க பிள்ளைய தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்.."
முத்தம்மைகளின் குரல் ...
புண்ணியம் சேர்க்கும் ஒவ்வொரு படிக்கட்டிலும் நம்மைத் துரத்துகிறது.
கோவில் கர்ப்பஹிரகத்து தீபாரதனையில் ஏழாம் உலகத்தின்
ஒற்றை விரல்.. திருவாசகத்தையும் தேவாரத்தையும் ஊமையாக்கி
'அம்மா தாயே பிச்சைப் போடு.." பண்டாரத்தின் உருப்படிகள்
கூட்டம் கூட்டமாய் நம்மைத் துரத்துகிறார்கள்.

*

எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக
தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக என் இலக்கிய நண்பரிடம்
சொன்னேன். தொலைபேசியில் சில மணித்துளிகள் நிலவிய அவர் மவுனம்
அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போடுவதாக என்னிடம் கேட்டது
போல ஒரு பிரமை. என் கருத்தை வலியுறுத்த பின்வருமாறு சொல்லிவைத்தேன்.

ஆவி, மறுபிறப்பு, ஆன்மா, பரமாத்மா, சொர்க்கம், நரகம்.. இத்தியாதி கருத்துருவாக்கங்களை
தன் வாழ்வின் கடைசி மணித்துளி வரை எதிர்த்தவர் தந்தை பெரியார்.
திராவிடம், திராவிய இயக்கம், திராவிட இயக்க எழுத்துகள் என்றால் அலர்ஜி என்று
ஒதுக்கி வைப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஏழாம் உலகத்தை வாசித்தவுடன்
தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது.
இன்னும் சொல்லப்போனால் பக்கம் பக்கமாக தந்தை பெரியாரின் எழுத்துகளை வாசித்தவள்,
அறிந்தவள் என்ற முறையில் அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை
ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன். (!)

**

ஏழாம் உலகம் என்னை ரொம்பவே பாதித்திருக்கிறது!
மதம், ஆன்மீகம், மத நிறுவனமயமாகும் போது ஏற்படும் வணிகத்தனம் என்று பல்வேறு தளங்களுக்கு
இட்டுச் செல்கிறது.
யதார்த்தம் என்றால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களையும் அவருடைய பாத்திரப்படைப்புகளையும்
வாசகர்கள் நினைப்பது இயல்பு. ஜெயகாந்தன் காட்டிய யதார்த்தம் என்பது வானத்தில் வட்டமிடும்
ஒரு கழுகின் பார்வை என்ற எண்ணத்தை ஏழாம் உலகின் கதைமாந்தர்களைக் காணும் போது
உணர்கிறோம்.

ஆமாம்.. இந்தியாவில் மட்டும் வழிபாட்டு தளங்களில் பிச்சைக்காரர்களின் ஏழாம் உலகம்.
இந்தக் காட்சிகளை நான் ஜெர்மன், பாரீஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் காணவில்லை.
ஜெர்மனில் மட்டும் ஓரிடத்தில் மெயின்ரோட்டில் ஒரு வயதானவர் இசைக்கருவியை
வாசித்துக் கொண்டிருந்தார். சிலர் அவருக்கு "யூரொ"வைப் போட்டார்கள்.
ம்ம்.. டீசண்டான பிச்சை எடுத்தல்தான். எனினும் அவருடைய உடை, அலங்காரம்
எதிலும் நம்ம ஊரூ ஏழாம் உலகத்தின் எந்தச் சாயலும் இல்லை.
என்ன காரணம்?

கவிதை:

உண்ணாமல்
உறங்காமல்
விரதங்கள் காத்தேன்.
கேட்டது கிடைக்க
உன் பாதங்கள் தேடி
ஓடி வந்தேன்.

கருவறையின் புழுக்கத்தில்
பக்தர்களில் பக்தி வியர்வையில்
என் குரல் அமுங்கிவிட்டது.
'தரிசனம் முடிந்தது' என்று
தள்ளிவிட்டார்கள்.

என் காலடியில்
'தாயே கருணைக்காட்டு'
உன் பிச்சையின் குரல்.
நான் நீயானேன்.
நீ மீண்டும்
சிலையானாய்.

( என் ஹேராம் கவிதை நூலில் 2000ல் நான் எழுதிய கவிதை)

---------------

Monday, March 31, 2008

அவளும் அவன் கவிதையும்





அறிந்து கொண்டீர்களா
அவள் மாறிவிட்டாள் என்பதை.
அந்தக் கவிஞனால் கூட
அவளை அடையாளம் காண
முடியவில்லை.
அவள்
பிறர் அறியாமல்
மறைவாய்
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.

மனித மனங்களின்
மூலைமுடுக்குகளில்
நுழைந்து
ஆழம் பார்க்கிறாள்.
அவள் சுமந்து வரும்
உலகளாவிய செய்திகளில்
அதிரடி மாற்றங்களில்
கவிஞனின் கவிதை
தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கவிதைக்கு முதலிடம் தர
மறுத்தவர்களையும்
முழுமையாக
ஆட்சி செய்கிறது
கவிதையின் ராஜாங்கம்.

கவிதை
அவளைப் பலியாடாக்கிவிட்டது.
தன் தலையில்
கைவைத்துக் கொண்ட
பத்மாசுரனாய் அவள்.
வாதங்களிலும்
இசங்களிலும்
கிழிந்து தொங்குகிறது
அவள் கவிதையுடல்.
அவள் இருக்கையை
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.
அவளுக்கான அவள் முகத்தை
கவிதை
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ
நிலத்தைப் போல
உறுதியான
அவள் ஆளுமையை
கவிதை விரும்புவதில்லை.
காற்றைப் போல
அவளிருக்கட்டும்.
உலகத்தைச் சுற்றிவரட்டும்.
அவன் கவிதைகள் மட்டுமே
அவளை அடையாளம் காணட்டும்.
அவளுக்கும்
அவன் கவிதைகளுக்குமான உறவு
தலைமுறைகளாக
தொடரும் கதை.

கவிதை..
அதுதான்
அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
கவிஞனின் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் அவள்.

மற்றபடி
அவனும்
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்
வந்துப்போகும்
ஒரு வலைப்பதிவு.
அவ்வளவுதான்.

(ref: LIVE UPDATE - An anthology of Recent Marathi poetry
Pg 144. prafull shiledar 's marathi poem)

Wednesday, February 13, 2008

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்


கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும்
கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல்
"இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான்.
குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக
வந்திருக்கும் அந்நாவலை அண்மையில் வாசித்தேன்.

தலைமைக்குத் தகுதியான வீரம், காதல் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே
கொண்டிருந்த மகாபாரதக்கதையின் பீமன் எப்போதும் இரண்டாம் இடத்தில்
இருக்கிறான். அவன் தான் வாசுதேவநாயரின் மகாபாரதக்கதையை
இரண்டாம் இடத்தின் பார்வையில் நின்று கொண்டு பார்க்கிறான்.
காலமெல்லாம் தர்மம், மனு சாத்திரம், முன்னோர் சொன்னது,
அரசு சட்டம், வழக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமைப்பீடத்தை
அவனுடைய இரண்டாம் இடம் கேள்விக்குரியதாக்குகிறது.


அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்றெடுத்தவள் பாஞ்சாலி என்று
அர்ச்சுனனுடன் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறாள்
பாஞ்சாலி. ஆனால் சுயம்வரத்தில் வென்றவளைப் பத்திரமாக
காப்பாற்றி எதிர்த்தவர்களை எல்லாம் ஓடச்செய்தவன் பீமன்.
அந்தவகையில் பார்த்தால் பாஞ்சாலி பீமனுக்குரியவளாகிறாள்.
ஆனால் எப்போதும் அப்படி பேசப்படுவதில்லை.

யுத்தத்தில் பகைவர்களை வென்றவனுக்கே அரசுரிமை என்பது வழக்கம்.
அப்படிப்பார்த்தால் குருசேத்திரத்தில் பகைவர்களான துரியோதனன்,
துச்சாததனை வென்றவன் பீமன். அரசுரிமை அவனுக்குத்தான் உரியது
என்று தருமனும் சொல்ல ஒரு கணநேரம் அரசனாகும் கனவுகளில்
மிதக்கும் பீமனை பாஞ்சாலி தன் தலைமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
சந்திக்கிறாள்.
பீமன் அரசன் ஆனால் அவனுடைய மனைவி பலந்தரை அரசியாவாள். தன்னுடைய
இடம் 'இரண்டாம் இடமாகி'விடும் என்று அச்சப்படுகிறாள் அவள்.
விதுரனோ காலமெல்லாம் பணிப்பெண்ணுக்குப் பிறந்த காரணத்தால்
அரசுரிமைகளிலிருந்து விலக்கப்பட்டவன். தன் மகன் யுதிஷ்டரனுக்கு
அரசுரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என்பதில்
கவனமாக இருக்கிறான். யுதிஷ்ட்ரன் விதுரனின் மகன் என்பதை
குறிப்பால் உணர்த்தும் இடங்களை ஆசிரியர் தன் பின்னுரையாக இணைத்துள்ளார்.

பீமன் தன்னை எப்போதும் தருமசீலன் என்று சொல்லிக்கொள்வதில்லை.
துவாரகைக் கடலில் மூழ்கி எல்லாம் முடிந்து ஐவரும் பாஞ்சாலியுடன்
இறைவனடி சேர மகாபிரஸ்தானம் ஆரம்பிக்கிறார்கள்.
களைப்புற்று பாஞ்சாலி மண்ணில் சாய்கிறாள். அப்போது தருமசீலன்
யுதிஷ்டிரன் ,"அவள் எப்போதும் அர்ச்சுணனை மட்டும்தான் மனதார
நேசித்துக்கொண்டிருந்தாள். ராஜசூயத்தில் என் அருகில் அமர்ந்திருக்கும்போதும்
அவள் கண்கள் அர்ச்சுனனிடம் தான் நிலைத்திருந்தன" என்று குற்றம்
சுமத்திவிட்டு சொர்க்கத்தேரை நோக்கி நடக்கிறான்.
பீமன் மட்டும் தான் சொர்க்கத்தேரை மறந்து தான் நேசித்த தன்
பாஞ்சாலியின் கண்கள் திறக்குமா என்று காத்திருக்கிறான்.
பீமனுக்கும் தெரியும் அவளின் காதல் மனம்.
நான்காண்டுகளுக்குப் பிறகு அவனுடைய முறையில் அவனுடைய குடிலில்
அவள் அர்ச்சுனனை நினைத்து "சொல்லுங்கள், காலகேயவதத்தைப் பற்றி
முழுவதுமாகக் கூறுங்கள்" (பக் 286) என்று சொன்ன நாட்கள்.
" வேண்டாம், தன் மனதில் அர்ச்சுனனைக் கனவில் கண்டு கொண்டிருக்கும்
அவளின் குளிர்ந்த உடல் இன்றைய இரவில் எனக்கு வேண்டாம்' என்று
அவன் குடிலிலிருந்து வெளியில் வந்த நாட்கள்.
ஆனாலும் அவன் மட்டும் தான் கடைசிவரை அவளுக்காக வாழ்ந்தவன்.
ஜெயாசக்கரவர்த்தி எழுதிய 'திரெளபதி' யில் தருமர் சொர்க்கம் போய்
சேர்வதற்கு முன்பே பாஞ்சாலியும் பீமனும் சொர்க்கத்தில் அவரை
வரவேற்றார்கள், என்ன அதிசயம்!" என்று எழுதியிருப்பார்.(பக் 14)
ஒவ்வொரு நிகழ்விலும் தருமன் பேசும் தருமம் எவ்வளவு
கேலிக்கூத்தானது என்பதை பீமன் போகிறப்போக்கில் சொல்லிக்கொண்டிருப்பான்.

போர்க்களத்தில் அபிமன்யு மாண்ட செய்தி கேட்டு கிருஷ்ணனின் முகம்
கறுத்துவிடுகிறது. அவன் உபதேசம் செய்த கீதையின் சாயம் வெளுத்து
விடுகிறது பீமனின் பார்வையில்.
'கிருஷ்ணனின் கருத்த முகத்தைக் கண்டேன், சொந்த இரத்தமென்றும்
குடும்பம் என்றும் வரும்போது தான் நைந்த ஆடைகளின் உவமையை
மறந்துவிடுகிறோம்..." என்கிறான் பீமன்.

பீமனின் மகன் கடோத்கஜன் போரில் இறந்துவிடுகிறான். கர்ணன் அர்ச்சுனனுக்கு
எதிராக இறுதியில் பயன்படுத்த வைத்திருந்த வேலைப் பயன்படுத்தியே
கடோத்கஜனைக் கொல்ல முடிந்தது. எனவே அர்ச்சுனன் தப்பித்துக் கொண்டான்
என்பதற்காக பாண்டவர்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணன்
பாண்டவர்களிடன் சொல்கிறான்.
திட்டமிட்டே தன் மகன் கடோத்கஜன் அன்றைய போரில் முன்
வரிசையில் அனுப்பப்பட்டதை அறிகிறான் பீமன். அதுமட்டுமல்ல
கிருஷ்ணன் மீண்டும் சொல்கிறான்,
" கடோத்கஜன் காட்டுமிராண்டிதானே! அரக்ககுணமுள்ளவன், யாகத்தின்
எதிரி, பிராமணர்களின் பகைவன் அவன் இப்போது இறக்கவில்லை
என்றாலும் என்றாவது நாமே கொல்ல வேண்டியது வரலாம்.."
கதை முடிவில் பீமனும் ஒரு காட்டுவாசிக்குப் பிறந்தவன் என்பதை
குந்தியே ஒத்துக்கொள்வாள்.
'அந்தப் பயங்கரக் காட்டிலிருந்து அவர் வந்தார். அதுவும் சங்கிலி அறுபட்ட
ஒரு சண்டமாருதத்தைப் போல்.. பெயர் தெரியாத ஒரு காட்டுவாசி வந்தார்"
என்று பீமன் பிறந்தக்கதையைச் சொல்லுவாள்.
கிருஷ்ணனின் கூற்றும் பீமன் பிறந்தக்கதையும் இணைத்துப் பார்க்கும்
போது அனைத்து திறமைகளும் கொண்ட பீமனுக்கு
பாரதக்கதையின் ஒதுக்கப்பட்ட இரண்டாம் இடத்தின் வரலாறு
சமூகப்பின்னணியுடன் புரியும்.


பீமனின் பார்வையில் ஒரு சமூகப்பின்னணியைக் குறிப்பாக
உணர்த்தியிருக்கும் நாவல் இரண்டாம் இடம். வாசிப்பவர்களுக்காக
படைப்பாளன் விட்டு வைத்திருக்கும் பக்கங்கள் அவை.
வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியிருக்கும் சொற்களுக்கு
நடுவில் மவுனத்தில் இமயத்தின் பனிக்கட்டியாக உறைந்து
போயிருக்கிறது இரண்டாம் இடத்தின் வரலாறு.
அந்த வரலாற்றின் எச்சமாகவே
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்
நாட்டுப்புறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடல்களில் பீமனும் கர்ணனும்
மற்ற கதை மாந்தர்களை விட அதிகமாகப் பாடப்பட்டிருக்கிறார்கள்.

'கத்தி எடுத்துச் சண்டைசெய்து -நான்
கர்ணனோட பொண்பொறந்தேன்
கர்ணன் மதிச்சாலும்
கர்ணனுக்கு வந்தவள மதிக்கலியே
காணமுற்றுத் தேடலியே

வில்லெடுத்துச் சண்டைசெய்து
வீமனோட பொன்பொறந்தேன்
வீமனுக்கு வந்த வேசிமதிப்பாவ
வேணுமின்னு தேடுவானா.."
.

இரண்டாம் இடம் :இன்று
----------------------

எப்போதும் சிலருக்கு இரண்டாம் இடம் நிரந்தரமாக இருந்துவிடுகிறது.
இரண்டாம் இடத்தில் இருப்பதாலேயே அவருடைய திறமைகள்
பல நேரங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

இன்னும் சிலர் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போட்டிப்
போடுகிறார்கள். அவர்களும் முதலிடம் காலியானால் இரண்டாம் இடம்
முதலிடமாகும் எழுதப்படாத சட்டத்தை நம்புகிறார்கள்.
அரசியலில் இந்த நம்பிக்கை பல நேரங்களில் பொய்த்திருக்கிறது.
அப்போதெல்லாம் முதலிடத்தைத் தவறவிட்டவர்கள் தங்களின்
இரண்டாம் இடத்திலும் நிலைத்து இருக்க முடியாமல் மன உளைச்சலில்
கூடாரம் மாற்றிக்கொள்கிறார்கள். கொள்கையாவது கொள்கை..!
வெங்காயம்!!

இரண்டாம் இடத்தில் இருப்பது சிலருக்கு பாதுகாவலாக அமைந்து
விடுகிறது. அவர்கள் செய்கிற நல்லதுகளுக்கு மட்டுமே அவர்கள்
பொறுப்பு. அவர்களின் அநியாயச் செயல்களுக்கு பொறுப்பேற்க
வேண்டியது அவர்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும்
முதலிடம். இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலிடத்தை விட
அதிகமாகக் கோடி கோடியாக தன் கணக்கில் சேர்த்துக்கொண்டவர்களூம்
உண்டு.

ஒரு கருத்துக்கணிப்பில் முதலிடமா இரண்டாவது இடமா என்று
காகிதத்தில் வந்த வெறும் அட்டவணைகள் கூட சிலரின்
அரசியல் முகவரியை மாற்றி இருக்கிறது.

போட்டிகள் எப்போதுமே முதலிடத்திற்குத்தான். எனினும் அமைதியாக
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள்
பிழைக்கத் தெரிந்தவர்கள்.

முதலிடத்தை ரப்பர் ஸ்டாம்பாக்கிய இரண்டாம் இடங்களின்
துணிச்சலைப் பாரட்டியே ஆகவேண்டும்.


முதலிடத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் இப்போதெல்லாம் இரண்டாமிடங்களுக்கு
இருப்பதால் இரண்டாம் இடத்தின் அதிகாரம் கொடிக் கட்டிப்பறக்கிறது.

மும்பையில் பாருங்கள்..
மண்ணின் மைந்தன் கொள்கை உன்னுடையது மட்டும்தானா?
என்று போட்டி நடக்கிறது. பாவம் மாராட்டிமானுஷ்.
யார்ப்பக்கம் சேர்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் பீகார், உத்திரபிரதேசத்துக்காரர்களின் ஆதிக்கம்
அதிலும் குறிப்பாக மும்பையில் என்கிறார் - ராஜ்தாக்கரே.

இதே ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களை
நிறுத்தியிருந்தார் என்பதும் அந்த 15 பேரும் தோற்றுப்போனார்கள்
என்பதும் உண்மை.

ஈழத்துப் பிரச்சனையையும் தமிழனின் அகதி வாழ்க்கையையும் புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஈழப்போராளிகளை
ஆதரிக்கவில்லையா என்று வேறு கேட்டு வைத்திருக்கிறார்.!

பெரியவர் பால்தாக்கரேயோ விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனை வெளிப்படையாகவே ஆதரிப்பவர்.

இந்தியாவின் தலைமை அமைச்சராகும் தகுதி சரத்பவாருக்கு
உண்டு, அவர் பிரதமராக வேண்டும் என்றார் பெரியவர் தாக்கரே.

20 எம்.பி.களை வைத்துக்கொண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக
எப்படி வரமுடியும்? என்று சிரித்தார் சரத்பவார்.

சரி இது என்னவொ கொள்கைப் பிடிப்பில் மண்ணின் மைந்தர்கள் மீது
கொண்ட அதீதமான அக்கறையுடன் செயல்படுவது என்கிறமாதிரியான
ஒரு தோற்றத்தை... ஆம் தோற்றத்தைத் தருகிறது.
ஆட்சி, அதிகாரம் கைப்பற்றுவதற்கும் ஒரு எளிதான வழியாக
இருக்கிறது. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும்
வெளிமாநிலத்திலிருந்து மும்பை வந்து மும்பையை வணிகப்பெருநகரமாக்கி
இருக்கும் அம்பானி போன்றவர்களின் வருவாயை இழக்கத் துணிய
மாட்டார்கள். பொன்முட்டையிடும் வாத்துகளை இழக்க யாருக்குத்
துணிச்சல் வரும்?

ராஜ்தாக்கரே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்
என்ற செய்தி வந்தவுடன் (12/2/2008) பாட்னாவில் இனிப்பு
வழங்கி இசை வாத்தியம் முழங்க ஆடிப்பாடிக் கொண்டாடி
இருக்கிறார்கள்! மனிதர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கலாம் !
ஆனால் இரண்டாம் தரச் செயல்களைச் செய்வது என்பது
கேவலம்!

இரண்டாம் இடத்தில் கூட இப்போதெல்லாம் இரண்டு பேருக்கு
நிம்மதியாக இருக்க முடிவதில்லை. முதலிடத்தைக் குறிவைத்து
இரண்டாம் இடங்கள் நடத்தும் குருசேத்திரத்தில்
மீண்டும் ஒரு மகாபாரதக்கதை ....!!.

Tuesday, February 12, 2008

தொண்டர்களின் கதைப்பாடும் கவிதை அலை



தலைவர்களுக்காகவும்
அவர்கள் சொன்ன
தத்துவங்களுக்காகவும்
தன்னைத் தொலைத்த
தலைமுறைகளின் எச்சமாய்
பரந்து விரிந்து
மண்ணைத் தொடும்
அரபிக்கடலின் அலைகள்.
பேரலைகளாய்
சிற்றலைகளாய்
எப்போதும்
இந்த மண்ணில்
உங்கள் குரல்.

வங்கக்கடலோரம்
வலைவீசும்
கூட்டணித் தோணிகளுடன்
உங்கள் அரபிக்கடலின்
அலைகள் எப்போதும்
கைகுலுக்குவதே இல்லை.
அதனால் தான்
உங்கள் கூடாரங்களில்
கொள்கைகள் மட்டுமே
வெளிச்சங்களாய்-
எங்கள் தலைமுறையை
அதிசயிக்க வைக்கும்
அற்புதமாய்-
எப்போதும் அமைந்துவிடுகின்றன
பவள விழாக்காணும்
உங்கள் பாதைகள்.

கறுப்பும் சிவப்புமாய்
உங்கள் பாதைகளுக்கு
அடையாளமாய்
உங்கள் கரைவேட்டிகள்.
கைநீண்ட ஜிப்பாக்கள்
தோள்களில்
தென்றலெனப் புரளும்
நீண்ட நேரியல்
நிமிர்ந்த நடை
ஆட்சிக்கட்டிலுக்கு
வெண்சாமரம் வீசாத
உங்கள் செருக்கு
எப்போதும் எவரிடத்தும்
உங்கள்
அடையாளங்களைக் காட்டி
உங்கள் வாரிசுகளான
எங்களுக்காக
எதையும் வரமாக வேண்டாத
உங்கள் பெருந்தவம்
தந்தையே..
தலைவணங்குகிறேன்


ஈரோட்டுப்பாதையை
எங்களுக்காக
இந்த மண்ணில்
நிலைநிறுத்த
நீங்கள் நடத்தியது
வெறும் போராட்டங்கள்
மட்டுமல்ல.
உங்கள் கனவுகளுக்காக
நீங்கள் நடத்தியதெல்லாம்
வெறும் கூட்டங்கள்
மட்டுமல்ல.
எனக்குத் தெரியும்
நீங்களே பாதையாகிப்
போன அந்தக்கதை.

எனக்குத் தெரியும்...
இந்தப் பாதையில்
மண்ணாக
சல்லிக்கல்லாக
உறைந்த தாராக
எவராலும் உடைத்து
எடுக்கமுடியாத
பகுத்தறிவுப் பாதையாக
நீங்கள் மாறிய நாட்கள்.
அந்த நாட்களில்
உங்கள் வசந்தப் பருவங்களில்
நீங்கள்
எதை எதை எல்லாம்
தொலைத்தீர்கள் என்பது
எனக்கும்
எங்களைப் பெற்றெடுத்த
எங்கள் அன்னையர் பூமிக்கும்
தெரியும்.

தந்தையே
நீங்கள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு
சாட்சியமாய்
தொண்டர்களின் கதையை
எப்போதும்
என் கவிதைஅலைகள்
இந்தக் கடற்கரையோரம்
பாடிக்கொண்டே இருக்கும்.

Monday, February 11, 2008

கறுப்புக்குதிரையில் கவிதைகளின் ஊர்வலம்



மும்பையில் காலாகோடா (Gala godha) -

கறுப்புக்குதிரை என்ற பெயரில் ஒவ்வொரு

ஆண்டும் நிகழும் கலைத்திருவிழா இந்த

ஆண்டு கடந்தவாரம் மிகச்சிறப்பாக

நடைபெற்றது. (02/2/2008 முதல் 10/2/2008

வரை)
நாட்டுப்புற கலை முதல் மேற்கத்திய இசை

வரை எல்லாம் பல்வேறு அமைப்புகளின்

உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும்

நடைபெறுகிறது. இந்த மும்பை மாநகரத்தில்

வாழும் மாநகரக்கவிஞர்களை அழைத்து

இந்த மாநகரத்தைப் பற்றிய கவிதைகளை

வாசிக்கும் ஒரு நிகழ்வு டேவிட் சாசன் நூலக

பூங்காவில் பனிவிழும் முன்னிரவில் 100

முதல் 150 வரை எழுத்தாளர்கள் கூடி இருக்க
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும்
விரும்பினால் அவரவர் தாய்மொழியிலும்

வாசிக்கும் அனுபவம் கொஞ்சம்

வித்தியாசமானது.
ஆனால் ஒவ்வொரு முறையும் இம்மாதிரி

அனுபவங்களில் சின்னதாக ஒரு பெருமிதம்

எற்படும். எல்லா கவிஞர்களும் கிட்டத்தட்ட

ஒரே நேர்க்கோட்டில் நிற்பது தெரியும்.
அன்றும் அப்படித்தான்.
09/2/2008 மாலை 6 முதல் 7 வரை கவிதை

வாசிப்பின் முதல் பகுதியில் என்

கவிதைகளுக்கான நேரம்

ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுக்கு என்று கவிதை எழுத

நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதியிருந்த

இருகவிதைகள் அந்த நிகழ்வுடன் மிகவும்

தொடர்புடையதாக இருந்ததால் அந்த இரு

கவிதைகளையும் வாசித்தேன்.
(ஆங்கிலத்தில் தான்) என்னதான்

ஆங்கிலத்தில் வாசித்தாலும் என்னவோ

அந்தக் கவிதையின் ஒட்டுமொத்த

ஜீவனையும் கொடுத்த மனநிறைவு

ஏற்படுவதில்லை. இம்மாதிரி நிகழ்வுகளுக்குப்

பின் இப்படி ஒரு மனக்குறையும்

அவஸ்தையும் ஏற்படுவதைத் தவிர்க்க

முடிவதில்லை.

எனக்காக என் கவிதைகளை இதோ
சத்தமாக வாசிக்கப்போகிறேன்!

(1)
மாநகரக் கவிதை
--------------------

எப்போது ஏறலாம் ?
எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.
எப்போதும் இருக்கும்
எங்கள் மாநகர் வண்டியில்
மனிதர்களின் மந்தைக்கூட்டம்.
ஏறுவது மட்டும்தான் என்வசம்
இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய்
என் பயணம்.
அடிக்கடி இறங்கும் இடம் கூட
என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சரியான பக்கத்தில் நின்றாலும்
சரியான நேரத்தில் சென்றாலும்
சரியான இடத்தில் இறங்குவதற்கு
உத்திரவாதமில்லை.

கஞ்சியில் உலர்ந்து
கடை இஸ்திரியில்
காஸ்ட்லியாக நடக்கும் காட்டன்கால்கள்
கசங்கி நொறுங்கி
மரக்கால்களூடன் நொண்டியடிக்கும்
கம்பீரநடையில்
கண்துஞ்சாமல்
வெற்றியை நோக்கி வீறுநடைபோடுகிறது
என் மாநகரத்தின் மனித வெளிச்சங்கள்.

லிப்ஸ்டிக்கில் சிவந்த உதடுகள்
எப்போதும் தூங்கிவழியும் சன்னல்

இருக்கைகள்
திறந்தவெளி முதுகுகளுடன்
போட்டிப்போடும் செழிப்பான மார்புவெளிகள்
எப்போதும் தாதர் ஸ்டேஷனில் இறங்கக்

காத்திருக்கும்
காய்கறிக்கூடைகள்
ஏறி இறங்கும் பூக்காரிகள்
மார்புச்சீலை மறைக்காத
பால்குடிக்குழந்தைகள்
போகிற வழியில் உட்கார்ந்திருக்கும்
மூட்டை முடிச்சுகள்
நைலான் புடவைக்குள்
அடங்க மறுக்கும்
அரவாணிகளின் சதைத்துடிப்புகள்
தொப்புள் வளையங்கள் சிரிக்க
செல்போனுடன் ஜனித்துவிட்ட
இளங்குமரிகள்
இவர்களுக்கு நடுவில்
எங்காவது
தொங்கிக்கொண்டிருக்கும்
என் முகம்!

மீன்கூடையின் கவிச்சல்
வாடாபாவுடன் கலந்து
மல்லிகைப்பூவில் உரசி
குளித்தவுடன் தடவிக்கொண்ட
வாசனைத்தைலத்துடன்
வியர்வையாய்
மெல்லிய உள்ளாடையை ஈரப்படுத்தும்

சேச்சியின் தோள்களுக்கும்
மவுசியின் தொடைகளுக்கும் நடுவில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்கும் இருக்கை.
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை.
------
(2)
புத்தக அலமாரி
----------------

கழிவறைச் சுவர்களைத் தவிர

மற்ற எல்லா சுவர்களிலும்

கண்ணாடிக் கதவுகளுடன்

தொங்கிக்கொண்டிருக்கிறது

புத்தக அலமாரிகள்.


ஒவ்வொரு பொங்கலுக்கும்

வெவ்வேறு தளங்களில்

மாறி மாறி அடுக்கப்படுகிறது

புத்தகங்கள்.


அலமாரிக்கு கண்களாய்

இருக்கும் புத்தகங்கள் சில.

பிரபலங்களின் பெயர்கள்

பளிச்சிடும் கண்ணாடிக்குள்

புத்தகமாய் இருப்பதுகூட

அலமாரிக்கு அந்தஸ்தை

அதிகரித்து காட்டும் என்பதால்

எப்போதும் முன்வரிசையில்.


நண்பர்களின் புத்தகங்களைத்

தொட்டுப் பார்க்கும்போதெல்லாம்

சிலிர்த்து போகிறது

தனிமையின் நாட்கள்.


அலமாரியில் எப்போதும்

போனசாக சேர்ந்து கொள்கிறது

நானே காசு போட்டு

அச்சடித்து வைத்திருக்கும்

புத்தக வரிசைகள்.


தூசி துடைத்து

கரப்பான் அடித்து

கவனிக்க

அதிக கூலி கேட்கிறான்

கண்ணன் என் சேவகன்.


வைக்க இடமில்லை

என்பதால் மட்டுமே

எந்தப் புத்தகத்தையும்

பழைய பேப்பர்கடைக்கு

பார்சல் செய்யமுடியாமல்

அடிக்கடி எல்லைத்தாண்டி

அடுத்தவர் அலமாரிகளை

அபகரிக்கும் குற்றத்திற்காய்

எப்போது வேண்டுமானாலும்

தூக்கிலடப்படலாம் நானும்

என் எழுத்துகளும்.


என் கவலை எல்லாம்

சாவைக் குறித்தல்ல.

என் சாவுக்குப் பின்

அனாதையாகப் போகும்

அலமாரியின்

புத்தகங்களைப் பற்றித்தான்.

...
அப்பாடா இப்போ தான் நிம்மதி!

Friday, February 8, 2008

கலைக்கூத்தனின் இராகங்களைப் பாடிய இலெமுரியா




மும்பை வாழ் தமிழர்களின் கவிதை எப்போது எங்கே சூல் கொண்டது?
நாடகமேடையிலா? கவியரங்கங்களிலா?
தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டிலிருந்தும் பிறந்த வடிவேலு என்ற
இளைஞனின் கவிதைகள் தான் அச்சுவடிவம்-நூல்வடிவம் என்ற
நடைப்பயின்று துள்ளிக்குதித்து அருவியாகி,
மண்ணில் கலந்து நதியென மனிதர்கள் வாழ்வில் இணைந்து, அரசு, அதிகாரம், பதவி என்ற எந்த அணைக்கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்த முடியாத
பெருமிதத்துடன் கடலில் கலந்தது. அரபிக்கடலின் அந்தக் கவிதைகள் வாழ்ந்ததன் சாட்சியாக 02/02/2008 ல் தன் ஆரம்பவிழாவில் இலெமுரியா பதிப்பகம் கவிஞர் கலைக்கூத்தனின் இசைப்பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து
கவிஞர் கலைக்கூத்தனின் 'தமிழிசைத் தென்றல்" என்ற பெயரில் குறுந்தகடாக
வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
கவிஞர் கலைக்கூத்தனின் கவிதைகளை வெளியிடுவதன் மூலமே பல்வேறு
செய்திகளைக் குறியீடாக வெளிப்படுத்தி இருக்கும் இலெமுரியா பதிப்பகத்திற்கு
எம் வாழ்த்துகள்.

கலைக்கூத்தன் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தில் வேலைப்பார்த்தவர். அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் - ஏன் பல நேரங்களில் பேருந்து பயணச்சீட்டிலும் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை
நோட்டுப்புத்தகத்தில் எழுதிப் பாதுகாத்து அவை அச்சில் வர உதவிய
இளைஞர்களில் ஒருவர்தான் திரு.குமணராசன் அவர்கள். அவரே கவிஞரின்
பாடல்களுக்கு குறுந்தகட்டு வடிவம் கொடுத்து அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு
அந்த மறைந்தக் கவிஞனின் கனவுகளை எடுத்துச் சென்றிருப்பது
நட்பு, கவிதை ரசனை எல்லாம் தமிழனின் வாழ்வில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதைத் தான் உணர்த்தியுள்ளது.

எத்தனையோ பேர் வந்தார்கள், வாழ்ந்தார்கள்.. போனார்கள்.. ஏன் கலைக்கூத்தனுக்கு மட்டும் இந்தச் சிறப்பு?

இந்தக் கவிஞன் தான் 1977ல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த நேர்க்காணலில் செம்மாந்து பதில் சொன்னான்.
"தமிழக அரசின் அரசவைக் கவியாக இருப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள மராட்டிய மாநிலத்தில் ஒரு தமிழ்க்கவியாக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று.
Q: why didn't you ask the DMK Govt to help you?
poet: if the DMK Govt had by itself offered to help me, it would have been different. But i would not use my status as a party worker to promote my position as a poet. Besides it is more exciting to emerge as a poet from non tamil maharashtra rather than to be a court poet of a political party in tamil nadu.

தன் பெயரையும் புகழையும் தான் சார்ந்த அரசியல் மேடையில் இணைத்து எந்தப் பூமாலைக்காகவும் இவர் கவிதைகள் காத்திருந்ததில்லை.

கலைக்கூத்தன் கவிதைகள் - 1973
மனிதனை நான் தேடுகின்றேன் - 1979
எதிர்நீச்சல் போடுகின்றேன் - 1988
பூங்கோதை - 1976

பூங்கோதைக் காப்பியம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புக்குப் பாடநூலாக இருந்தது. 1988ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.
மும்பைக் கவிஞர் எழுதிய காப்பியநூல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது இன்றுவரை இவருக்கு மட்டுமே!
இவர் எழுதிய தமிழிசைப்பாடல்கள் இசைப்பேராசிரியர் வித்துவான் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் இராக, தாள, சுரக்குறிப்பு மெட்டமைப்புகளுடன்
வெளியிடப்பட்ட தொகுப்பு. இந்நூலை அக்காலத்திலேயே சண்முகாநந்தா கலையரங்கில் கவிஞர் வெளியிட்டார்.
"மகாகவி பாரதியையும் புரட்சிக்கவி பாரதிதாசனையும் நான் கலைக்கூத்தன்
வடிவில் காணுகின்றேன்" என்றார் அன்றைய சென்னை பல்கலை கழக
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள்.
கலைக்கூத்தனின் 'மனிதனை நான் தேடுகின்றேன்' கவிதைகளை டி.எஸ்.எலியட்டின் 'the hollow man' கவிதைகளுடன் ஒப்பிடக்கூடியது என்கிறார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் திருக்குறள்மனி
க.த. திருநாவுக்கரசு.

பொங்கல் பற்றி எத்தனையோ கவிதைகள். ஆனால் இவர் போல
எழுதியவர் எவருமில்லை.
இதோ "பொங்கல் நாளை!" கவிதையிலிருந்து சில வரிகள்

முப்பாலைத் தந்தானின் பிறந்தநாளை
முகிழ்த்து வரும் செங்கதிரை வணங்கும்நாளை
எப்போதும் வயற்சேற்றில் உழன்ற மக்கள்
இன்பமெலாம் வீடுவந்து சேருன்நாளை
தப்பாமல் உடனுழைத்த எருதின் வாயில்
தளிர்க்கரும்பு சோறுபழம் ஊட்டும்நாளை
எப்போதும் வரவேற்போம் வாழ்த்துக்கூறி
எம்தமிழர் போற்றவரும் பொங்கல்நாளை!

செந்தமிழன் வீரமதைப் பகரும்நாளை
தென்னிலத்தார் மேன்மைகளை விளக்கும்நாளை
நந்தமிழன் வரலாற்றின் தொடக்கநாளை
நாகரிகம் முகிழ்த்தயினம் கண்டநாளை
எந்தவொரு சூழலிலும் மாசில்லாத
இயற்கை வழி கொண்டாடும் சிறந்த நாளை
வந்தவர்கள் கதைகட்டி ஏய்த்து மாற்று
வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தநாளை!

உருவவழிபாடு கண்ட சமுதாயத்தில்
ஒருக்காலும் குறைகூற முடியா வண்ணம்
பருவவழிபாடு கண்ட தமிழன் காலப்
பக்குவத்தைப் பகுத்தறிந்தே ஏற்றநாளை
மதங்கலவாத திருநாளை மனிதவாழ்வின்
மதிப்புயர்த்தும் பொன்னாளை அரியநாளை
விதவிதமாய்ப் பொங்கலிட்டுத் தமிழன் வாழும்
வீடெல்லாம் விருந்துமணம் கமழும்நாளை
இதமாக வரவேற்போம் இன்பநாளை
இசையாலும் தமிழாலும் போற்றும்நாளை!

நாமும்,
நன்றியுடன் வரவேற்போம்.
கவிஞனின் தமிழிசைத் தென்றலை. அந்த இசைத் தென்றலின்
ராகங்களை மீட்டிய இதயவீணைகளை.

Monday, February 4, 2008

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும் _

மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு
இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய
இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் கலைக்கூத்தனின்
பாடல்கள்- குறுந்தகடு, எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் வாழ்வின்

சுவடுகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்திய நகர மேயர்கள் கருத்தரங்கில்

கலந்து கொள்ள வந்திருந்த நெல்லை மாவட்ட மேயர்
ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வழக்கம்போல மாலை 8 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டு கூட்டம்
பொறுமையிழந்து காத்திருக்க 8.50க்கு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இனி, சீமானின் பேச்சிலிருந்து சிலத் துளிகள்:

பொறுமையிழந்து தவிக்கும் மக்கள் அரங்கைத் தன் கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவர சீமான் பாட்டுப்பாட வேண்டி இருந்தது. விசில் சத்தமும்
கைதட்டலும் கட்டுப்ப்பாட்டுக்குள் வந்தவுடன் சீமான் தன் பாணியில்
இறங்கினார்.

> வாழ்த்துகள் திரைப்படம் 3 வாரத்திற்குள் பெட்டிக்குள் போய்விட்டது.
மக்களுக்கு படம் முழுக்கவும் தமிழிலேயே இருந்ததால் புரியவில்லையாம்!

> தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலம் அல்ல, அது இங்கிலாந்துக்குள்

இருக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது.

> வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிறான். எல்லோருக்கும் இடம்

கொடுத்தான் தன் மண்ணில். இப்போ எல்லோரும் இவன் மேலே ஏறி

மிதிக்கிறான்.

>பர்மா, பம்பாய், கர்நாடகம், கேரளா, இலங்கை இப்போ மலேசியா எல்லா

இடத்திலும் தமிழன் அடிப்பட்டுச் சாகிறான். இதிலே ஒரே ஒரு இடத்தில்தான்
தமிழன் திருப்பி அடிச்சான்! அவன் திருப்பி அடிச்சவுடனே எல்லாரும்

சொல்றான்..இது வன்முறை, தீவிரவாதம்னு.

> கங்கைக் கொண்டான், கடாரம் வென்றான்னு சொல்லிக்கிட்டே இருக்கியே
இன்னிக்கு உன் இனம் ராமேசுவரத்தில் குப்பறப்படுத்திருக்கே.. அனாதையா,
அகதியா..ஏன்?

> எங்கே போச்சு உன் வீரம்?

> சோறுதின்னாமா ரைஸ் தின்னா எப்படிடா உனக்கு சுயமரியாதை ஏற்படும்?

> நான் இவ்வளவு பேசிக்கிட்டிருக்கேன், அவன் "பாட்டுப்பாடு"னு கத்தறான்.
நீ விளங்கமாட்டே. உன்னை வெறிநாய் மாதிரி அடிச்சியே கொல்லப்போறான்.
இப்போ உனக்குப் பாட்டு கேட்குது.. அப்படித்தானே.. பாட்டுப் பாடறேன்
கேட்டுட்டு செத்துப்போ.!!

>உன் தோட்டத்திலே உன் மண்ணிலே காய்க்கிற இளநீரை நீ

வாங்கிகுடிக்கமாட்டே. உனக்கு கோக் குடிச்சாதான் பெருமை. சச்சின் 2 கோடி
ரூபாய் வாங்கிட்டு குடிக்கிறான். அட குடிக்கிற மாதிரி நடிக்கிறான். நீ
அந்தப் பூச்சி மண்டின பாட்டிலை வாங்கிக் குடிக்கிறே.

> உன் பாட்டன் செத்துப்போனதை அவன் சொன்னானு மத்தாப்பு கொளுத்தி
பலகாரம் சாப்பிட்டு தீபாவளினு கொண்டாடிக்கிட்டிருக்கியே.

> கடந்த காலத்தில் நீ சூத்திரன், நிகழ்காலத்தில் நீ அகதி..
நீ எப்போ தமிழனா இருந்திருக்கே.

> நீ எங்களை நாத்திகன்னு சொல்றியே , உண்மையில் பார்க்கப்போன நீதான்
நாத்திகன், உனக்குத்தான் உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. அட
உனக்கு உன் கடவுள் மீது நம்பிக்கை இருந்தா ஏன் கோவில் வாசலைப்

பூட்டிட்டு போறெ. உன் கடவுள் காலடியில் இருக்கிற உண்டியலுக்கு ஏன்
பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கே.
உனக்கே உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் தானே.
தன் காலடியில் இருக்கும் தன் உண்டியலைக் காப்பாத்த வக்கத்த கடவுள்
இந்த ஊரெல்லாம் காப்பாத்தும்னு நம்புறியா?
ஊரெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
உன் உண்டியலைக் காப்பாற்று தாண்டவக்கோனே

> நடு செண்டர் னு சொல்றே
ஓகே ரைட் சரினு சொல்றியே..
இது என்ன மொழி?

> சொந்தமொழி தெரியாதவன் முட்டாள்

> பிறமொழிகள் கற்க வேண்டாம்னு சொல்லலை. பிறமொழிகள் எத்துணை

வேண்டுமானாலும் கத்துக்கோ. ஆனால் அதெல்லாம் உன் வீட்டு

சன்னல்கதவுகளாக இருக்கட்டும். உன் வீட்டு நுழைவாயிலாக உன் தாய்மொழி

இருக்கட்டும்.

> நீ என்ன பண்றே.. உன் தாய்மொழியை உன் கழிவறைச் சன்னலாக

வச்சிருக்கியே.

சீமான் இதெல்லாம் சரிதான்.
உங்கள் பேச்சு உங்கள் சீற்றம் உங்கள் அடிமனசிலிருந்து எரிகின்ற
தீக்குச்சி..
ஒரு தீக்குச்சி எரியாமல்
தீப்பந்தம் எரியாது என்று நீங்கள் மேத்தாவின் கவிதை வரிகளைச் சொன்னது
மிகவும் சரிதான். "நான் நெருப்பு, புரட்சி தீக்குச்சி உரசலுக்காக காத்திருக்கிறது

என்று உங்களைப் பற்றிய உங்கள் சுயவிமர்சனம் மிகையானதும் அல்ல.

அன்றைய உங்கள் பேச்சில் நீங்கள் நரிக்குறவர்கள் குறித்து சொன்ன கருத்தை
மீண்டும் ஒரு முறை தீக்குச்சி வெளிச்சத்தில் பாருங்கள், அண்ணன் அறிவுமதி,
மற்றும் தோழர் சுப.வீ யிடம் கேட்டுப்பாருங்கள். அல்லது நரிக்குறவர்

இனவரைவியல் குறித்த ஆய்வுகளைக் (தமிழினிப் பதிப்பகம்

வெளியிட்டிருப்பதாக நினைவு) கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

சீமான் எனக்குச் சின்னதா ஒரு சந்தேகம்.

உங்களை எப்படி அழைக்கவேண்டும்?
இயக்குநர் சீமான் என்றா?
அப்படி அழைத்தால் தான் கூட்டம் சேரும். அப்படி அச்சடித்தால்தான்
விழாக்கள் வெற்றி பெறும். அப்படியானால் உங்களுக்கிருக்கும் முகம்,
உங்களுக்கிருக்கும் அடையாளம், உங்களுக்கிருக்கும் முகவரி
திரைப்படத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உங்கள் சீற்றம் எனக்குப் பிடித்திருந்தது. உங்களை உங்களுக்கான மேற்கண்ட
அடையாளங்களுக்கு அப்பால் ஒரு பகுத்தறிவு மனிதனாக, சொந்தமொழி மீதும்,
தமிழ் மண், தமிழ் உறவுகள் மீதும் எல்லையில்லாத பாசமும் அக்கறையும்

கொண்ட தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்த முடியவில்லையே என்பதில்
என்னைப் போன்றவர்களுக்கு வருத்தம் தான்.
நீங்கள் பேசிய கருத்துகளை, உங்களை விடவும் ஆணித்தரமாக

பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள்
யாரை அழைத்தாலும் அவர்களிடன் "ஆட்டோகிராப்" வாங்கவும் சேர்ந்து நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் எந்தத் தமிழனும் ஓடிவருவதில்லை.
இதெல்லாமே திரைப்பட முகவரி உங்களுக்கு கொடுத்திருக்கும்

அடையாளங்களால் கிடைத்த வெளிச்சம்.

மேலே சொன்ன இனமானக் கருத்துகளைச் சொல்லவும் இந்த மின்மினி
வெளிச்சங்கள் தேவைப்படுகிறதே.. இதுதான் தமிழனின் சாபக்கேடு.

இத்தனையும் பேசிய/பேசுகின்ற நீங்கள் இதற்கெல்லாம் காரணமானவர்களைப்

பற்றி ஏன் மவுனம் காக்கிறீர்கள்?

எய்தவன் இருக்க அங்கே அரங்கில் விசிலடித்த அம்புகளைக் கண்டு
ஏன் சீற்றம்?
ரஜினி என்ற நடிகரின் ஆதரவு/ கண் அசைவு எந்தப் பக்கமிருக்கிறது என்று
தலைமுதல் வால்வரை நம் தலைவர்கள் தலைகீழாக நின்று

தவமிருக்கிறார்களே! ஏன்?
ரஜினிகாந்த என்ற சினிமா நடிப்புத்தொழிலைச் செய்யும் ஒரு மனிதனை
"சூப்பர் ஸ்டாராக" உயர்த்திப் பிடித்திருப்பவர்கள் இந்த உள்ளீடு இல்லாத
வெறும் காகிதக் குப்பைகளா? உங்களுக்குத் தெரியும் யார் என்று?
ஆனாலும் உங்கள் தீக்குச்சிகள் வெறும் குப்பைகளைக் காகிதங்களை
மட்டுமே எரித்துக் கொண்டிருக்கிறது!
அதனால் எரிக்க எரிக்க குப்பைகள் வேகமாக பன்மடங்குப் பெருகிக்கொண்டும்
இருக்கிறது!

தீபாவளிப் பண்டிகைக் குறித்து நீங்கள் சொன்னதில் எனக்கொன்றும் கருத்து

வேறுபாடில்லை. என் "பெரியாரிஸ்டின் தீபாவளி" சிறுகதையை உங்கள்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நடுவிலும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசிக்க :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10412023&format=html

நம் தலைவர்கள் அவரவர்களின் குடும்ப வாரிசு தொலைக்காட்சிகளில் தோன்றி
தீபாவளி வாழ்த்து சொல்வதைக் கண்டித்து சின்னதாக தமிழ்நாட்டில்
ஓர் அறிக்கை வெளியிட்டுப் பாருங்களேன்!

தீக்குச்சிகள்
எரித்த காகிதக் குப்பைகள்
எரிந்து கொண்டே இருக்கிறது
தீப்பந்தம் எரிவதாக
கனவுகளில்
தீக்குச்சிகள்.
புரட்சி வந்துவிடும்
காத்திருக்கிறது
தீப்பெட்டி.
ஒவ்வொரு குச்சியாக
எரிந்து முடிந்து
காலியவதற்குள்
விழித்துக்கொள்ள வேண்டும்
தீப்பெட்டிகள்.
நம் மண்ணை
நம் மனிதர்களைக்
குப்பைகளாக்கிய
கோமாளிகளின்
கூடாரங்களை
கூண்டோடு அழிப்பதற்கு.

தாள் பொறுக்கும் தமிழச்சியாக
தமிழகம்
அரபிக்கடலோரம் வீசி எறிந்த
இந்திய அகதிகளின்
முகாமிலிருந்து
உங்கள் தீக்குச்சி உரசலில்
எரியும் காகிதக்குப்பைகளுக்கு நடுவில்
எரியக் காத்திருக்கும் தீப்பந்தம்..

--------புதியமாதவி, மும்பை.