Wednesday, May 28, 2025

எங்க ஊரு ராபின் குட்

 எங்களுக்கு இவருதான் ராபின் குட். எங்களோட ரியல் அமர் அக்பர் அந்தோணி!

தென்மாவட்டங்களில் செம்புலிங்கத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. எங்கள் பாட்டிகளின் கதைகளில் அவன்தான் எங்கள் ' ராபின் குட்' 

பிற்காலத்தில் நம்ம வாத்தியார் நடித்த மலைக்கள்ளன் சினிமாவில் நாங்கள் கண்டதெல்லாம் எங்க செம்புலிங்கத்தைத்தான்.

வண்டி மாடு வைத்திருப்பவர்கள்

கூண்டு வண்டி வைத்திருப்பவர்கள் இவர்களிடம் எல்லாம் செம்புலிங்கத்தைச் சந்தித்ததாக ஒரு கதை இருக்கும். 


21 அடி கிணற்றைத் தாண்டியவன். தாண்டும் போது , நடுக் கிணற்றில்,  சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருந்து மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றானாம்!


இப்படியாக மலைக்கள்ளன் மக்கள் கதாநாயகன் போல செம்பு லிங்கமும் ஒரு கதாநாயக பிம்பமாக எங்கள் பாட்டி தாத்தா கதைகளில் வலம் வந்தும் கொண்டிருந்தான்.


 செம்புலிங்கம் ஒரு ஹிந்து. அவன் இரு இணைபிரியாத நண்பர்கள் காசியும் துரையும். காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். 💥




எங்களோட அமர் அக்பர் ஆண்டனி இவுங்க தான். மலைக்கள்ளனுமா இவருதான். ராபின் குட் ரேஞ்சுக்கு இவருக்கு எங்க ஊரு பெரிசுக ஒரு பிம்பத்தை தங்கள் கதைகளில் சொன்னார்கள். 🙂

Sunday, May 11, 2025

சத்திய மேவ ஜெயதே



பொய்களின் இழைகள்

ஊடும் பாவுமாக

நெய்த வாழ்க்கை!

பளிச்சென மின்னிய

காமிரா கண்களில்

அனாதையான அசல்.

குப்பைத்தொட்டியில்

கருக்கலைப்பு வாசனை.


கோடையிலும் மழை வரலாம்.

தலைகுனியுமோ விசும்பு?

சிறுதுளி நெருப்பு

அக்னிப் பிரவேசம்

தலைகுனியும் சீதைகள்.

துரோகத்தின் கருகிய வாசனை.

ஆரம்பமாகிறது

உண்மையின் நிர்வாணம்.

அதிபயங்கர விசுவரூபம்.


சத்ய மேவ ஜெயதே.


#புதியமாதவி_12052025

#PuthiymaadhaviPoems 

Wednesday, May 7, 2025

கவரி மா ? கவரிமான்

 



தான் நேரில் பார்க்காத கவரிமா குறித்து திருவள்ளுவர் பேசுவது ஏன்?

 

தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய வெளி அதன் முதற்பொருள் தெற்கே குமரியும் வட எல்லை வேங்கடமும் தாண்டி விரிகிறது. அந்தக் குதிரைப் பாய்ச்சலில் தமிழ்மண் அறியாத கருப்பொருள்களும் இடம்பெறுகின்றன. காரணம் அக்கருட்பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி அறிந்ததும் அதைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகிறது.


உண்மையில் கவரிமான் என்கிற மான் வகை தமிழ் நாட்டில் உள்ளதா?

இல்லை…


காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்.


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் "

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)


பொழிப்பு: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.


கவரிமா என்பது என்ன?

கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. பனி மலையில் வாழும், எருமைபோல் தோற்றமுள்ள, யாக்(Yak) என்று அறியப்படுவதையே கவரிமா என்று இலக்கியங்கள் குறிப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


இதன் உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்று சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா ஆகும். இமயமலையில் வாழும் இந்த விலங்கு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிட்டார் என்பது அறிஞர்களின் கூற்று.


கவரி இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று என்பதற்கு புறநானூற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் சான்று பகர்கின்றன.


நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,

குவளைப் பைஞ் சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்

வடதிசை யதுவே வான்தோய் இமயம்(புறநானூறு: 132) இதில் இமயமலையில் வாழும் கவரி என்ற குறிப்பு உள்ளது.

மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்திய பாவில் கவரியைக் குறிப்பிடுகிறார்:

(பதிற்றுப்பத்து 11:21 – 24)


மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் இவர்கள் அனைவரும் கவரிமா என்றனர். பரிதியார் அதைக் கவரிமான் என்று தம் உரையில் கூறினார். மு.வை.அரவிந்தன் 'காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்!' என்கிறார்.


மணக்குடவர் 'ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்' என்றும்

பரிதியார் 'ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல' என்றும் காலிங்கர்: தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்குண்ட இடத்துநின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன' என்றும்

பரிமேலழகர்: தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார் என்றும் உரை கூறினர்.

வ சுப மாணிக்கம் 'மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர்' என்று தன் உரையில் 'பறிப்பின்' என்ற சொல்லை ஆள்கிறார்.

‘மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால், பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரு மயிர் என்றே பொருளுரைத்தனர்.


"காட்டில் வாழும் கவரிமான் தன்னிடமுள்ள நீண்டமுடியில் ஒரு முடி அற்று விழுந்து விடுமேயானால், அதற்கு மானம் பொறாமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இயல்புடையதாகும், இவ்வியல்பைத் தெரிந்த வேடர்கள் அம் மான் செல்லும் வழியில் அடர்ந்த முள்ளைக் கொண்டு போட்டிருப்பார்களென்றும் கவரிமான் அவ்வழியாகச் செல்லும்பொழுது அதன் நீண்ட முடி அம்முள்ளில் சிக்கிக் கொள்ளுமென்றும் அவ்வாறு சிக்கிக் கொண்டமுடி சிதைந்தாலும் அறுந்தாலும் அம் மான் அவ்விடத்திலேயே உயிர் துறக்குமென்றும் கூறுகின்றார்கள்." என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை.


குன்றக்குடி அடிகளார் "கவரிமான் என்பது மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்!" என்று குறித்துள்ளார்.


கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதி ஒரு மயிரை இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற இனம் என்று உரையாசிரியர்கள் மொழிந்தனர்.


 வள்ளுவருக்குப் பின் வந்த புலவர்களுள் திருத்தக்க தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார்; கம்பர் ‘மானமா’ என்றார். புகழ்பெற்ற இப்புலவர் பெருமக்களும் கவரிமாவை மானத்துக்கு உவமையாகக் கொண்டனர். மேலும் வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்று பெருங்கதை (35, 233, 4) கூறியது


வள்ளுவர் காலத்துக்கு முந்திய நூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் கூறிய செய்திகளின் அடிப்படையில் கவரிமா என்றது இமயமலையில் வாழும் விலங்கு பற்றியே என்று முடிவு கொள்ளலாம். ஆனால் அது மயிர் நீங்கினால் வாழ இயலாது என்று வள்ளுவரே முதலில் கூறியதாகத் தோன்றுகிறது. கவரிமா ஒருமயிர் நீங்கினால் உயிர்விடும் என்று பெரும்பான்மையினரும், மொத்த மயிற்கற்றையும் உடலில் இருந்து போய்விடுவதால் உயிர் நீக்கும் என்று சிலரும் மயிர்க்கற்றை சிக்கினால் இறந்துபடும் என்று மற்றவரும் கூறியுள்ளனர். இவை எவற்றிற்கும் சான்றுகள் இல்லை.


தன் மயிர் உதிர்வதால் உயிர்விடுகின்ற விலங்கு இருக்க முடியாது; இது இயற்கைக்குப் பொருந்தாதது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவர்.


முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர், 

  பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கொண்ட அன்னப்பறவை, 

சிங்கம் போன்ற உருக்கொண்ட யாளி, பெரும் உருவும் வலிவும் கொண்ட டைனோசர், முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர் போல காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனவே மயிர் இழப்பால் உயிர் நீங்கிய கவரிமா என்றொரு விலங்கினமே கிடையாது என்று கூறமுடியாது.


திருவள்ளுவர் தமிழ்க்குடியின் மானமாக குடியியல் பேசும்போது தமிழ்க்குடியின் நம்பிக்கைகளை தன் குறட்பாவில் கையாண்டிருக்கிறார்.

💥💥💥💥

#கவரிமா_கவரிமான்

#புதியமாதவி_கவரிமான்.


Tuesday, May 6, 2025

வேங்கை வயல் வாழ்க்கை

 



'வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை'

😭😭😭😭


அசிங்கத்தின் முகத்தை அடையாளம் காட்டுவது எளிது.

துரோகத்தின் கதையை அப்படியே எழுதுவதும் எளிது.

ஆனாலும் சில காலம்

என்னோடு வாழ்ந்த அதே முகம்.

என் கற்பனைக்கு எட்டாத 

அவள் காமக்கதைகள்

கிளுகிளுப்பு ஊட்டுபவை அல்ல.

வாழ்க்கையின் மீதும்

மனிதர்கள் மீதும்

உறவுகளின் நம்பிக்கை மீதும்

அவள் எறிந்த மலம்.

நான் சமைத்து ஊட்டிய

அன்னத்தின் கழிவு தான்,

என்றாலும்

அதை இனி பரிமாற முடியுமா?

வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை.

அதைக் குடித்த அவள் புதல்வர்களையேனும்

காப்பாற்றி ஆக வேண்டும்.

தேவி...

பிரத்யங்கார தேவி

நரசிம்மி

அதர்வண காளி

ஆயுதங்கள் வேண்டாம்.

கொலை வேண்டாம்.

பழிக்குப் பழி வேண்டாம்.

எங்கள் அனாதைப் பிள்ளைக்கு சப்த கன்னியாய்க் கூட

நீ வர வேண்டாம்.

உன் மீதும் என் மீதும்

நம் புதல்வர்கள் மீதும்

நிர்வாணப்படுத்தி

வாயில் திணிக்கப்பட்ட

மூத்திரமும் மலமும்

முழுதுமாக துடைத்து எடுக்க

பராசக்தி....

உன் சிவப்பு முந்தாணியைக்

கிழித்துக் கொடு.

அது போதும்..தேவி

அதுபோதும்.

🔥🔥🔥🔥🔥


It is easy

to point out the face of disgrace.

It is just as easy

to write the tale of betrayal as it is.

Yet, for a while,

it was the same face that lived with me.

Her tales of lust,

beyond the reach of my imagination,

are not titillating stories—

they are filth hurled

at life,

at humanity,

at the trust between relationships.

What she discarded

was the very rice I cooked and fed her.

Yet—

can it ever be served again?

Life now floats

in the sewage of Vaengaivayal.

At least,

her children who drank from it—

must be saved.

Devi...

Pratyangira Devi,

Narasimmi,

Atharvana Kali—

no weapons,

no killings,

no revenge for revenge.

Do not even come

as the chaste maiden

to our orphaned children.

Instead—

to wipe away entirely

the urine and feces

forced into our mouths,

into theirs—

yours, mine, and our children’s—

O Parasakthi,

just tear your red sari

and hand it to us.

That is enough, Devi.

That is enough.

#புதியமாதவி_30042025

#PuthiyamaadhaviPoems


இதையும் எழுதி புத்தகம் போடு

 "இதையும் எழுதி புத்தகம் போடு"


எழுத்துப் பயணத்தில்

மறுபிறவி.


ஃ உனக்கு கவிதை எழுதறது தவிர வேறு என்ன தெரியும்?


ஃ நீ ஒரு வேஸ்ட்.


ஃ நீ எழுதி கிழிச்சி என்னத்தைக் கண்ட?


இதெல்லாம்  பழகிப் போச்சு!

நேற்று நீ வாசலில் நின்று

என்னைக் கேட்ட கேள்வி..

"இதையும் எழுதி புத்தகம் போடு "


இதைச் சொன்ன நீயும் ஒரு பெண். ஒரு தாய். 

நான் எழுதியதும் போராடியதும்  உனக்காகவும் சேர்த்துதான்!


எனக்கு பூஜைகள் தெரியாது.

எவன் காலடியிலும் ஆன்மீகத்தின் பெயராலும் விழத்தெரியாது.

யார்க்குடியும்

கெடுத்ததில்லை.

இதெல்லாமே எளிதாகிப் போன உன் கூட்டத்திலிருந்து

வீசப்படும் கற்களை

சேமித்து வைக்கிறேன்.

என் அன்னை

சாவித்திரிபாய்

என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.


பிறவியின் கருப்பை சுமந்த அக்னிக்குஞ்சு.

வலியோடும்

நிர்வாணத்தின் அலறலோடும்

பனிக்குடம் உடையும் தருணம்.

எழுத்தின் உயிர்த்துளி

ஜனனம்.


தேவி..

ஆதிபராசக்தி

கடைக்கண் திறக்கட்டும்.

உன்னை மறப்பதும் மன்னிப்பதும்

என் வசமில்லை.

மனிதர்கள் எழுதிய சட்டங்களை விட  வலுவானது

இப்பிரபஞ்சத்தின் சூத்திரக்கயிறு.


#புதியமாதவி_03052025


#puthiyamaadhavipoem