Tuesday, June 13, 2017

மழைவாசனை






நீ வந்துவிட்டுப் போனதற்கான அடையாளம்
விடியலில் என்னைப் பரவசப்படுத்துகிறது.
தோட்டத்தின் புல்வெளிகளில் நெட்டிலிங்க மரத்தின்
இலைகளில் உன் அடையாளங்கள் அப்படியே இருக்கின்றன.
சாலையின் குழிகளில் தண்ணீர் கெட்டி
சளீர் சளீர் என்று வாகனச்சக்கரத்தில் பட்டுத் தெறிக்கிறது.
நீ வந்துவிட்டாய். வந்துவிட்டாய்.
சாளரக்கதவுகளை திறந்து என்னை எட்டிப்பார்த்திருப்பாய்.
எனக்குத் தெரியும்.
மெல்லிய இரவு வெளிச்சத்தில் என்னருகில் வந்து பார்த்தாயா?
அந்த மழைக்காலத்தில் உன் மழையில் ஆடியவளை
நீ தேடினாயா?
இவள் அவளில்லை என்று உள்ளம் மாறினாயா!
நேற்றைய மழையில் நீ இருந்தாயா..?
 மழைவாசனைக்காக சன்னல் கம்பிகளூடாக எட்டிப் பார்க்கிறேன்.
கூடுகள் களைக்கப்பட்ட ஜோடிப் புறாக்கள்
அங்கே ஒதுங்கி இருக்கின்றன.
புறாக்கள் அங்கேயே இருக்கட்டும்.
மழையில் நனைவதும் மழைக்கு ஒதுங்குவதும்
குடைகளின் ரகசிய மொழிகள் .
கம்பிகள் உடைந்த குடையை விரிக்கமுடியாமல்
தடுமாறுகிறேன். வேகமாகக் காற்றடிக்கிறது.
கண்ணாடிக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.
இருமல் துரத்துகிறது.
கொடியில் காய்ந்துக் கொண்டிருந்த புடவை
கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது.
நாளை அந்தப் புடவையை எடுத்து ..
உன் வாசனை இப்போதே என்னைச் சுற்றி..


 rainy-days.png (658×448)


3 comments:

  1. இரசித்தேன் வார்த்தை கோர்வைகளை...
    த.ம.பிறகு.

    ReplyDelete
  2. வாசனையைப் படிப்பவரும்
    உணரவைக்கிற அருமையான கவிதை
    இருமலின் துரத்தில் கவிதைக்கு
    கூடுதல் அர்த்தம் கொடுக்கிறது
    மனம் கவ்ர்ந்த கவிதை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete