Sunday, April 13, 2014

காந்தி , மகாத்மா அல்ல, ஓர் அரசியல்வாதி..






ஏப்ரல் 14. புரட்சியாளர் அம்பேத்கரின் 124 வது பிறந்தநாள்.

அம்பேத்கர் வெறும் பெயரல்ல;

கங்கையின் புனிதம் இந்த மகாநதியின் முன்னால் மண்டியிட்டது

கற்பனை அல்ல. நிஜம். கற்பனைகளை மட்டுமே நினைவில்  வைத்திருக்கும்

சமூகத்திற்கு நிஜங்களை அடிக்கடி நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

இந்த நாளில், அண்ணல் அம்பேத்கர் பி பி சி க்கு 1955ல்  கொடுத்த

நேர்காணலின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை...  



நான் எப்போதும் சொல்வேன், காந்தியை நான் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு எதிரி நிலையில் தான் எங்கள் சந்திப்பு. மற்றவர்களை விட காந்தியை நான் நன்றாக அறிவேன். ஏனேனில் என்னிடம் தான் காந்தி என்ற மனிதன்
தனக்குள் புதைந்திருக்கும் கோர முகத்தைக் காட்டினார்.
தொண்டர்களாக காந்தியை அணுகியவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும்
அறிந்திருக்கவில்லை. மகாத்மா என்ற பொய்த்தோற்றத்தை மட்டும் பார்த்தவர்கள் அவர்கள்.

எனக்கு வியப்பாக இருக்கிறது, வெளிநாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் காந்தியைப் பார்க்கும் விதம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, என் பார்வையில்
காந்தி இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம், அவ்வளவு தான்.
அவர் ஒரு சகாப்தம் அல்ல. காந்தி ஏற்கனவே மக்கள் நினைவிலிருந்து
மறைந்து கொண்டிருக்கிறார். காங்கிரசு கட்சி அவர் பிறந்தநாளுக்கோ
அவர் சம்பந்தப்பட்ட பிற நிகழ்வுக்கோ கொடுக்கும் விடுமுறை காரணமாகத்தான் அவர் நினைவு கூரப்படுகிறார். இவை இல்லை என்றால்
அவர் எப்போதோ மக்கள் நினைவிலிருந்து மறைந்திருப்பார்!

காந்தி எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்தவரில்லை. அவர் ஒரு
இரட்டை வேடதாரி. இரு மொழிகளில் அவர்  எழுதினார். ஹரிஜன் பத்திரிகையில் ஆங்கிலத்திலும் தீன் பந்து பத்திரிகையில் குஜராத்தியிலும்.
ஆங்கிலப் பத்திரிகையில் சாதிக்கு எதிராக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக
எழுதிய சமதர்மவாதி. குஜராத்தி பத்திரிகையில் அவர் ஒரு ஆசாரபுருஷர்.
சாதியை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பவர். யாராவது அவர் இரண்டு மொழிகளிலும் எழுதியிருப்பதை ஒப்பாய்வு செய்ய வேண்டும்! ஆனால்
மேற்கத்திய நாடுகளின் மக்கள் அவர் ஆங்கிலத்தில் எழுதியதை மட்டுமே
அறிவார்கள். குஜராத்தியில் எழுதியதை எவரும் கண்டு கொள்ளவில்லை.
அவருடைய வாழ்க்கை குறிப்புகள் அவர் ஆங்கிலத்தில்
ஹரிஜன், யங் இந்தியா பத்திரிகைகளில் எழுதியதன் அடிப்படையில் வந்தவைத்தான்.

காந்தி ஒரு சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு சானாதன இந்து.
அவர் தீண்டாமைப் பற்றி பேசியதெல்லாம் தீண்டத்தகாத மக்கள் காங்கிரசில்
இருக்க வேண்டும் என்பதால் தான். அவருடைய சுயராஜ்ய இயக்கத்தை க தீண்டத்தகாத மக்கள் எதிர்க்க கூடாது என்பதால் தான். அவர்களை முன்னேற்றும் எந்த நோக்கமும் அவருக்கு கிடையாது. நீக்ரோக்களுக்காக
அமெரிக்காவில் போராடிய கர்ரிசன் (வில்லியம் கர்ரிசன்) போன்றவர் அல்ல
காந்தி.


காந்தி இல்லை என்றாலும் இந்தியாவுக்கு அரசியல் விடுதலை கிடைத்திருக்கும், சற்று தாமதமாக. அதுவும் மக்களுக்கு நன்மையாகவே முடிந்திருக்கும். . அரசியல் அதிகாரம் பிரிட்டனிடமிருந்து கைமாறும் போது
அதற்கான தகுதியுடன் இந்திய மக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது
ஒரு வெள்ளத்தைப் போல வந்தது.(விடுதலை). மக்கள் அதற்குத் தயாராக இல்லை. நான் நினைக்கிறேன், இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு முட்டாள் கட்சி என்று.

(புனா ஒப்பந்தம் குறித்துப் பேசும்போது...)

காந்தி பேசினார், பேரம் பேசினார். நான் அவரிடம் நீங்கள் கடுமையான நிபந்தனைகளை விதிக்காவிட்டால், 'நான் உங்கள் உயிரைக் காப்பாற்ற .
தயாராக இருக்கிறேன். என் மக்களைப் பலி கொண்டு உங்கள் உயிரை நான்
காப்பாற்ற போவதில்லை. உங்கள் விருப்பத்திற்காக, (பைத்தியக்காரத்தனத்திற்காக) நான் என் மக்களின் நலனைத் தியாகம் செய்யப்போவதில்லை. ஒரு பொதுவான தேர்தல் எப்படி ஒரு சமூக நிலையை மாற்றும்? அது நடக்காது.

சீக்கியர்களைப் போல இசுலாமியர்களைப் போல தாழ்த்தப்பட்ட மக்களும்
தனிப்பிரிவாக மாறிவிடுவார்களோ என்று அவர் அச்சப்பட்டார். இந்த எண்ணம் தான் அவர் உள்ளத்தில் இருந்தது. அவர் ஓர் அரசியல்வாதி, மகாத்மா அல்ல.
நான் அவர் மகாத்மா என்பதை மறுக்கிறேன். அவரை மகாத்மா என்று நான்
அழைத்ததே இல்லை. நியாயப்படி பார்த்தால் 'மகாத்மா' என்ற அழைக்க
அவருக்கு எந்த தகுதியும் இல்லை.





the Interview can be heard at http://www.youtube.com/watch?v=ZJs-BJoSzbo

No comments:

Post a Comment