Sunday, March 27, 2022

வணக்கம், தலைவா .. ஹாஜிமஸ்தான் வரதாபாய் முதல் சந்திப்பு

 

 
 
“வணக்கம், தலைவா ” ஹாஜி மஸ்தான், வரதபாய் முதல் சந்திப்பு
இதை தமிழ் சினிமா டைரக்டர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். !
இவர்கள் இருவரையும் திரையில் காட்டிய எந்தப் படத்திலும் இந்த உண்மையான காட்சி இடம்பெறவில்லை!
 
பச்சைக்குதிரை நாவலிலிருந்து …
 
கஸ்டம்ஸ் கோடவுணிலிருந்து சமான்களைத் திருடி சோர்பஜாரில் வரதாபாய் விற்றுக்கொண்டிருந்தக் காலக்கட்டம் அது. அப்போது கஸ்டம்ஸின் கோடவுணில் வந்திருக்கும் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் தினக்கூலியாக வேலைப் பார்த்தவர் செல்வவிநாயகம். இந்த திருட்டுத்தொழிலில் இருக்கும் காலத்தில் தான் இருவருக்கும் பழக்கமானது.
ஒரு முறை யுனியன் மினிஸ்டருக்கு வந்த ஒரு கண்டெய்னரைத் திருடி ஒளித்து வைத்திருந்தார்கள். போலீசாருக்கு மேலிடத்திலிருந்து பிரஷ்ஷர் வந்ததால் வரதாபாயையும் செல்வவிநாயகத்தையும் அரெஷ்ட் செய்து அடித்து மிரட்டி கெஞ்சி எல்லாம் செய்து பார்த்துவிட்டார்கள். ம்கூம் நாங்கள் திருடவே இல்லை என்று அந்த திருடர்கள் இருவரும் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
போலீஸ் அந்தக் கேசை கையாள எடுத்துக் கொண்ட ஒரு அதிரடி நடவடிக்கை மும்பை அண்டர்கிரவுண்ட் சாம்ராஜ்யத்துக்கு ஓர் அடிக்கல் நாட்டிய நாள். என்றுதான் சொல்ல வேண்டும்.
‘என்ன தம்பி. ரொம்ப அடிச்சுப்புட்டானுகளா’ என்று அனுதாபத்துடனும் அன்புடனும் தன்னைவிட வயதில் இளைய செல்வவிநாயக்திடம் ஆறுதலாக வரதாபாய் பேசிக்கொண்டிருந்த அந்த இரவு, ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர்களைச் சந்திக்க ஒரு வெள்ளுடை அணிந்த கனவான் கம்பீரமாக வந்தார்.
எதிர்காலத்தில் மும்பையை ஆட்டிப்படைத்த அந்த இருவரின் சந்திப்பு அப்படித்தான் நடந்தது. வெள்ளைக் கலரில் மின்னும் பேண்ட் சர்ட், கையில் 555 சிகிரெட் புகை, நடையில் ஒரு பணக்கார மிடுக்கு.. அவர் ஹாஜி மஸ்தான். சிறை வளாகத்தில் நுழையும் அவரை யாரும் தடுக்கவில்லை. வரதபாயும் செல்வவிநாயகும் அவர் வருவதை அதிசயமாக கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க அவர் நேராக வரதாபாயிடம் வந்து "வணக்கம், தலைவா" என்றார்.
கசங்கிய வேட்டி., அழுக்கான தோற்றம்,காலில் தேயந்த சிலிப்பர் கோலத்தில் இருந்த தன்னிடம் வந்து "தலைவா "என்றதும் அதுவும் தமிழில் பேசியதும் ஆச்சரியமாக இருந்தது. எந்த வகையிலும் மஸ்தானின் அந்தஸ்த்துக்கு இணையாக நிற்க முடியாத மனிதரிடம் வந்து ‘வணக்கம், தலைவா’ என்று மஸ்தான் பேசியதில் திக்குமுக்காடிப் போனவர் செல்வவிநாயகம்.
அங்கே அந்தச் சிறையில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் தமிழில் இருந்தது. அவர்கள் தாய்மொழியே அவர்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்ள உதவியாக இருந்தது . அவர்கள் இருவரும் ரொம்பவும் நெருங்கி வந்துவிட்டார்கள். கோடவுணில் திருடுவதெல்லாம் ‘சும்மா, கள்ளன் போலீஸ் விளையாடும் சின்னப்பிள்ளை விளையாட்டு " என்பதை வரதாபாய் புரிந்து கொண்டார். 
அந்தக் கதை மர்மங்கள் நிறைந்தது. 
 
 ajay
 
(பிகு: என் பச்சைக்குதிரை நாவலில் இந்த உண்மை நிகழ்வை என் கதைக்கு அப்படியே எடுத்துக்கொண்டு எழுதினேன்! இதில் செல்வவிநாயகம் என் புதினத்திற்கான கதைப்பாத்திரம். மற்றபடி சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் நடந்த சம்பவங்கள்..)

 

No comments:

Post a Comment