Tuesday, January 1, 2019

கொற்றவை விழித்துக்கொண்டாள்



Image may contain: 1 person


ஓம் ஓம் ஓம் தீம் தரிகட தீம் தரிகட
ஓம் ஓம் ஓம் ..
கொற்றவை விழித்துக்கொண்டாள்
இருள் சூழ்ந்தப் பொழுது..
கனமான தருணங்கள்..
கண்ணீர் விட முடியாத பெருமூச்சில்
காலச்சுமை ..
உன் தோள்களில் சரிந்து பிறவியின்
கடனைத் தீர்க்க துடித்த உயிரின் வலி..
கொற்றவை அழைத்தாள் என்னை. 
கண்களில் கண்ணீரைத் துடைக்கவில்லை
அவள்..
என்னை அழவிட்டாள்.
உப்புக்கரித்த கண்ணீரின் துளியில்
சமுத்திரம் பொங்கியது..
அலைகள் மலைகளை விழுங்கின.
என்னவாயிற்று என் சக்தியின் மகளுக்கு?
ஏன் கலங்குகிறாய் என் கொற்றவையே..
பாலை நிலத்தில் விடப்பட்டவள் நீ
கானல் நீருக்கு கலங்காத ஈரமல்லவா நீ
பாலைவனத்திலும் பசுஞ்சோலைகளை
பிரசவித்த உன் பனிக்குட த்தின் கருவறை..
இன்னும் மிச்சமிருக்கிறது..
பாலைவனத்தின் இரவுகள்..காத்திருக்கின்றன
மணல்வெளி எங்கும் புதைந்திருக்கிறது
இன்னும் எழுதாத உன் கவிதையின் மொழி..
முடியவில்லை.. 
இதுவரை நடந்த்தெல்லாம்
இனிமேல் நடக்கப்போவதற்கான 
ஒத்திகை மட்டும் தான்.
முடிந்துவிடவில்லை உன் ஆட்டம்
பஞ்சரப்பண் இசைக்கிறது.
நட த்து.. நடத்திக்காட்டு..
கொற்றவையைச் சீண்டியவனை
குல நாசம் செய்ய நினைத்தவனை..
ஏழுகடல்தாண்டி ஏழு கண்டம் தாண்டி
மூவுலகும் தாண்டி..முடித்திடுவேன்..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம் தரிகட..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம்தரிகட..
மாரம்பு அணிந்தவளை..
மல்லிகையின் மணம் மயக்குவதில்லை.
செங்கலும் சுவர்களும் கட்டி எழுப்பிய
உன் வீடுகளைத் துறக்கிறேன்.
ஆடை அணிகலன் ..துறந்தவள் நான்.
என்னை மயக்குவது எளிதல்ல,
கொற்றவையின் முகம் ..
பிரதியங்கதேவியின் விசுவரூபம்..
ஓம் ஓம் ஓம் தீம்தரிகட தீம்தரிகட..
கொற்றவை.. விழித்துக்கொண்டாள்..
உழிஞ மரத்தடியில் 
தூங்கிக்கொண்டிருந்த பெண்புலி..
தன் வேட்டைக்காக 
உன் எல்லைகளைத் தாண்டி 
எழுந்து வருகிறது.
நிலம் நடுங்கும் ஓசை..
ஓம் ஒம் ஒம்..

No comments:

Post a Comment